பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடு கடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர்.

வனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள். பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

எஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.

இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

வகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர்.

இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.

Pin It