“America Is Finally Taking Extraterrestrials Seriously” — அமெரிக்காவின் புகழ்பெற்ற TIME இதழில் 2026 ஆகஸ்ட் 6 அன்று வெளியான இந்தத் தலைப்பு, வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆர்வம் கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியது.
என்னைப் போன்ற “வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம்” என்று நம்புகிறவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது என்பதல்ல இந்தச் செய்தியின் பொருள்.
அப்படியானால் உண்மையில் என்ன நடக்கிறது?
அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் குறித்து முன்பைவிட அதிகமான தரவுகளைச் சேகரித்து, அவற்றை அறிவியல் முறையிலும், தேசியப் பாதுகாப்பு கோணத்திலும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவில் வலுப்பெற்று வருகிறது.
முன்பு பொதுவாக UFO (Unidentified Flying Object) என்று அழைக்கப்பட்டவற்றை, தற்போது UAP (Unidentified Anomalous Phenomena) — அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் — என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
வேற்றுகிரகவாசிகள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இந்தக் கேள்விக்கான பதில், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவதைக் கடந்தும் செல்கிறது.
நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா?
நீண்ட நெடுங்காலமாகவே வானியல் விஞ்ஞானிகளைத் தொடர்ந்து வரும் கேள்வி:
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தானா?
நாம் வாழும் பூமி, அளவிட முடியாத அளவுக்கு விரிந்துள்ள பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி மட்டுமே. நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்; அவற்றைச் சுற்றி எண்ணற்ற கோள்கள். அப்படியிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தில் சிந்திக்கக்கூடிய உயிர்கள் பூமியில் மட்டுமே இருக்கின்றனவா?
நமக்குத் துணையாக வேறு அறிவார்ந்த உயிர்கள் எங்காவது இருக்கிறார்களா? இந்த ஆதங்கம்தான் வேற்றுகிரகவாசிகள் தேடலின் அடிப்படைக் கேள்வி.
மனித இனத்தின் எதிர்காலம் என்ன?
பூமிக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறது. அதைவிடக் கவலைக்குரியது, நாம் வாழும் இந்தப் பூமியையே மாசு, கழிவு, அளவுக்கு மீறிய வளச் சுரண்டல் ஆகியவற்றால் சீரழித்து வருகிறோம். எதிர்காலத்தில் மனித இனம் வேறு ஒரு உலகில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகுமா?
அதனால்தான் செவ்வாய், சனியின் டைட்டன், வியாழனின் யூரோப்பா போன்ற உலகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
மனிதர்கள் வாழத் தகுந்த உலகைத் தேடுவது வேறு; வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது வேறு.
ஆனால் இரண்டு தேடல்களும் ஒரே பெரிய கேள்விக்குள் வந்து சேர்கின்றன:
பூமிக்கு வெளியே உயிர் அல்லது அறிவார்ந்த வாழ்க்கை இருக்கிறதா?
வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மட்டுமல்ல...
வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடுதல், “அவர்கள் இருக்கிறார்களா?” என்ற கேள்வியோடு முடிந்துவிடுவதில்லை.
“வேறு எங்காவது அறிவார்ந்த வாழ்க்கை இருக்கிறதா?”
“அந்த வாழ்க்கையின் தொழில்நுட்பச் சுவடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா?”
“நமது வான்வெளியில் இதுவரை அடையாளம் காண முடியாத நிகழ்வுகள் என்ன?”
என்ற கேள்விகளும் இணைந்துள்ளன. இதனால்தான் SETI (Search for Extraterrestrial Intelligence) போன்ற முயற்சிகள் வேறு நட்சத்திரங்களில் இருந்து வரும் சாத்தியமான தொழில்நுட்பச் சமிக்ஞைகளைத் தேடுகின்றன. அதே நேரத்தில் பூமியின் வான்வெளியில் தோன்றும் UAP நிகழ்வுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
சில சுவாரஸ்யமான தடயங்கள்
வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான நேரடி ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் சில சுவாரஸ்யமான அறிவியல் கருத்துகளும் மர்மமான சம்பவங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
டிரேக் சமன்பாடு
அமெரிக்க வானியலாளர் ஃபிராங்க் டிரேக் 1961-இல் உருவாக்கிய Drake Equation, நமது பால்வீதியில் தொடர்புகொள்ளக்கூடிய அறிவார்ந்த நாகரிகங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான ஒரு முயற்சி.
நட்சத்திரங்கள் எத்தனை, அவற்றில் எத்தனை நட்சத்திரங்களுக்குக் கோள்கள் உள்ளன, அந்தக் கோள்களில் உயிர் தோன்றுவதற்கான வாய்ப்பு என்ன, உயிரிலிருந்து அறிவார்ந்த வாழ்க்கை உருவாகும் வாய்ப்பு என்ன போன்ற பல காரணிகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் எச்சரிக்கை
புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரக நாகரிகங்கள் இருந்தால் அவற்றுடன் தொடர்புகொள்வதில் மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதாவது, வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது ஒரு சுவாரஸ்யமான அறிவியல் முயற்சி என்றாலும், அவர்கள் நம்மைவிட மேம்பட்ட நாகரிகமாக இருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஜில் டார்டரின் “கடல்–கோப்பை” ஒப்பீடு
வேற்றுகிரக நாகரிகங்களைத் தேடும் முயற்சியில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான ஜில் டார்டர் (Jill Tarter) ஒரு அழகான ஒப்பீட்டை முன்வைத்துள்ளார். பிரபஞ்சத்தில் நாம் இதுவரை தேடிய பகுதி, மிகப்பெரிய கடலில் இருந்து ஒரு சிறிய கண்ணாடிக் கோப்பை அளவு தண்ணீரை எடுத்து அதில் மீன் இல்லை என்று பார்த்துவிட்டு, “கடலில் மீன்களே இல்லை” என்று முடிவு செய்வதைப் போன்றது.
அதாவது, நாம் தேடியது பிரபஞ்சத்தின் மிகச் சிறிய பகுதி மட்டுமே.
அதனால், “இதுவரை எதுவும் கிடைக்கவில்லை” என்பது “எங்குமே எதுவும் இல்லை” என்பதற்கான நிரூபணம் அல்ல.
சில மர்மமான சம்பவங்கள்
1977 — “Wow!” Signal
1977-இல் அமெரிக்காவின் ஓஹியோவில் செயல்பட்ட Big Ear ரேடியோ தொலைநோக்கி, வானிலிருந்து வந்த ஒரு வலுவான, குறுகிய கால ரேடியோ சமிக்ஞையைப் பதிவு செய்தது. அதன் பதிவைக் கண்ட வானியலாளர் ஜெர்ரி எஹ்மான் அருகில் “Wow!” என்று எழுதினார். அதுவே பின்னர் “Wow! Signal” என்று புகழ்பெற்றது. அந்தச் சமிக்ஞை சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அது வேற்றுகிரக நாகரிகத்திலிருந்து வந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. அதே வகையான சமிக்ஞையும் மீண்டும் உறுதியாகப் பெறப்படவில்லை.
2004 — “Tic Tac” சம்பவம்
2004-இல் அமெரிக்கக் கடற்படை விமானிகள் வானில் வெள்ளை நிற “Tic Tac” வடிவத்தை ஒத்த ஒரு மர்மப் பொருளைக் கண்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ராணுவ விமானிகள், விமான உணர்கருவிகள் மற்றும் பின்னர் வெளியான வீடியோ பதிவுகள் காரணமாகப் பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இன்றுவரை அந்தப் பொருள் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்று நிரூபிக்கப்படவில்லை.
சென்னை சம்பவம்
2023 ஜூலை 26 அன்று சென்னை அருகிலுள்ள முட்டுக்காடு கடல் பகுதியில் ஓய்வுபெற்ற சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி. பிலிப், வானில் நான்கு ஒளிரும் மர்மப் பொருட்களைக் கண்டதாகவும், அவற்றைப் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார். அவை சுமார் 20 முதல் 25 விநாடிகள் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டது. அவை பறக்கும் தட்டுகளா, ட்ரோன்களா அல்லது வேறு ஏதேனும் வானியல் நிகழ்வா என்ற விவாதம் எழுந்தது. ஆனால் அவை வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்கள் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
இம்பால் சம்பவம்
2023 நவம்பர் 19 அன்று மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தின் வானில் அடையாளம் காணப்படாத வெள்ளை நிறப் பொருள் ஒன்று தென்பட்டதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இந்திய விமானப்படை இரண்டு Rafale போர் விமானங்களைத் தேட அனுப்பியது. ஆனால் அந்தப் பொருளைக் கண்டறிய முடியவில்லை. பின்னர் வான்வெளி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டதும் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அந்தப் பொருள் என்ன என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. அது வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
பழங்காலத்திலிருந்தே வேற்றுகிரகவாசிகளா?
இன்றைய UAP சம்பவங்கள் ஒருபுறம் இருக்கட்டும். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் கதைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. எகிப்திய பிரமிடுகள், துட்டன்காமனின் கத்தி, இந்தியாவின் பஸ்தார் பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள் போன்ற பல விஷயங்களும் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இவற்றில் பெரும்பாலான விளக்கங்களுக்கு நேரடி அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே மர்மம் இருப்பது உண்மை என்றாலும், மர்மத்துக்கு நாம் விரும்பிய விளக்கத்தை உடனடியாகக் கொடுப்பது அறிவியல் அல்ல.
வேற்றுகிரகவாசிகள் இல்லை என்று கருதுவதற்கான காரணங்கள்
மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். விஞ்ஞானிகள் “வேற்றுகிரகவாசிகள் இல்லை” என்று நிரூபித்துவிட்டதாகக் கூறவில்லை. அவர்கள் கூறுவது:
“இதுவரை நம்பகமான, மீண்டும் சரிபார்க்கக்கூடிய அறிவியல் ஆதாரம் கிடைக்கவில்லை.” என்பதுதான். மற்றொரு கோளில் உயிரினம் அல்லது அறிவார்ந்த நாகரிகம் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக SETI போன்ற முயற்சிகள் ரேடியோ அலைகள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சுவடுகளைத் தேடியும், வேற்றுகிரக நாகரிகத்திலிருந்து வந்தது என்று உறுதிப்படுத்தக்கூடிய செய்தி கிடைக்கவில்லை.
இதனுடன் தொடர்புடைய முக்கியமான கேள்விதான் Fermi Paradox — ஃபெர்மி முரண்பாடு.
பிரபஞ்சத்தில் அறிவார்ந்த நாகரிகங்கள் ஏராளமாக இருந்தால், அவற்றில் சில நமது ஆகாயகங்கையிலும் இருந்திருக்க வேண்டாமா? அவற்றின் தடயங்கள் எங்கே? இதுவரை தெளிவான பதில் இல்லை. மேலும், பூமியில் உயிர் தோன்றியுள்ளது என்பதால், பொருத்தமான சூழல் இருக்கும் ஒவ்வொரு கோளிலும் உயிர் தோன்றும் என்று கூற முடியாது. அதைவிட, நுண்ணுயிரிலிருந்து அறிவார்ந்த, தொழில்நுட்ப நாகரிகம் உருவாகுவது இன்னும் மிகப்பெரிய கேள்வி.
எனவே இன்றைய அறிவியல் நிலை மிகவும் எளிமையானது:
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்படவில்லை.
அவர்கள் இல்லை என்றும் நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் புதிய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
2026-இல் TIME சொல்லும் புதிய செய்தி
இந்தப் பின்னணியில்தான் 2026 ஆகஸ்ட் 6-ஆம் தேதி TIME இதழ், “America Is Finally Taking Extraterrestrials Seriously” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் செய்தி “அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டது” என்பதல்ல.
பல ஆண்டுகளாகக் கேலி, கற்பனை, சதிக்கோட்பாடுகள் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட்ட UFO சம்பவங்களை, இப்போது தேசியப் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு, தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கோணங்களில் தீவிரமாக ஆராய வேண்டிய விஷயமாக அமெரிக்கா பார்க்கத் தொடங்கியுள்ளது என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கியச் செய்தி.
இதனால் கேள்வியும் சற்று மாறுகிறது.
“வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா?” என்பது மட்டுமல்ல, “வானில் நாம் காணும் இந்த அடையாளம் காணப்படாத நிகழ்வுகள் உண்மையில் என்ன?” என்பதும் முக்கியமான அறிவியல் கேள்வியாகிறது. TIME கட்டுரையின் ஆச்சரியம் இதுதான்:
அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக TIME சொல்லவில்லை. ஆனால், “அவர்கள் இருக்கிறார்களா?” என்ற கேள்வியை இனி கேலியாக ஒதுக்காமல், ஆதாரங்களுடனும் அறிவியல் கருவிகளுடனும் ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது.
நான் வேற்றுகிரகவாசிகளைச் சந்திப்பேன்...
அமெரிக்காவின் தற்போதைய முயற்சிகள், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கு ஒருநாள் தெளிவான விடையைத் தரும் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; இந்த விவாதம் மனிதர்களுக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்த வேண்டும்.
இந்தப் பூமியின் மதிப்பை.
“அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.
அதேபோல நான் சொல்வேன்:
“அரிது... அரிது... பூமியைப் போல இன்னொரு கிரகம் இருப்பது அரிது.”
வேறு எங்காவது உயிர் இருக்கலாம். ஒருநாள் அவர்களை நாம் சந்திக்கவும் கூடும். மனித பரிணாமம் தொடர்ந்து செல்ல ஒருநாள் வேறு ஒரு பூமி நமக்குத் தேவைப்படலாம். அதேபோல, பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் உயிர்களுடன் நட்பு பாராட்டும் நாளும் வரலாம்.
அந்த நாளை எதிர்பார்த்தபடியே, இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஒரே பூமியைப் பாதுகாப்போம்.
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
நான் வேற்றுகிரகவாசிகளைச் சந்திப்பேன் என்று.
உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா, நண்பர்களே?
- அ.தமிழ்ச்செல்வன்