கீற்றில் தேட...

*
வழியனுப்ப யாரும் வரவில்லை

இரவின் தனித்த சாலையில்
விளக்கு வெளிச்சங்களைக் குடித்தபடி
இருள் துணைக்கு வருகிறது

முணுமுணுக்கும்
இலைகளின் மஞ்சள் தீண்டிய நிறத்தை
தின்கிறது காற்றின் நாவு

சில்வண்டுகள்
அவசர அவசரமாய் குறிப்புகளை வாசிக்கின்றன
கண நேரம்
எனக்கது போதுமாயிருக்கிறது

பிழை திருத்தும் மனமற்று
என் நடையை
மொழிபெயர்த்து அலறுகிறது
கிளையின் நிழலில் அமர்ந்தபடி ஒரு கூகை

இத் தனித்த சாலை இரவில்

கொஞ்சம் அணுக்கமாய்
கொஞ்சம் வெப்பமாய்
கொஞ்சம் பரிதவிப்பாய் இருக்கிறது
இந்த இருளின் சலனம்

எனவே
வழியனுப்ப யாரும் வரவில்லை

****
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )