man 3யாருமற்ற என் அறையில் என்ன செய்வது
ஏதாவது புத்தகம் வாசிக்கலாம்
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம்
வெறுமனே புத்தக அலமாரியை சற்று நேரம் வெறிக்கிறேன்

கண்ணாடியின் முன் நின்று
என்னைப் பார்க்கும் என்னை எனக்குப் பிடிக்கவில்லை

ஒழுங்கற்ற அறையின் ஒழுங்கின்மையாக என்னை
உணர்ந்த நொடியில்
என்னை வரையத் தொடங்கியது எதிர் சுவர் நிழல்

சிந்திக்கவோ எழுதவோ எதுவுமில்லாக் கணத்தை
நழுவச் செய்து விரல்களிடையே நெருடும் பேனாவைத்
தூக்கியெறிகிறேன்
பிளவுபட்ட பேனாவின் நாக்கு அர்த்தமற்ற சொற்களை
பிதற்றிக் கொண்டே இருக்கிறது

தனிமை என்னைத் துண்டுத் துண்டாக
வெட்டுகிறதா

அசையும் ஜன்னல் திரைச்சீலைகள் வெயிலைத் தடுக்கிறது
குறைந்த வெளிச்சத்தில் சுழலும் இவ்வறையில்
வேறென்ன ரகசியங்கள் மிச்சமிருக்கக் கூடும்

அவைகளைப் புரட்டிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை
பாதுகாத்து வைக்க விரும்பாத கடிகார முட்கள் சப்தமின்றி
நொண்டியபடி
கால் வலிக்க இந்த அறையிலிருந்து வெளியேறத் துடித்து
பூட்டிய வாசல் கதவை முட்டுகிறது

துணை வராத நினைவுத் தொடர்களின் காரைப் பெயர்தலை
மனச்சுவர் இடையறாமல் பூசிக் கொண்டிருக்கும்
இந்த
யாருமற்ற அறை
இது நானுமற்ற அறை தானோ

தரையில் மல்லாந்து படுத்தபடி அண்ணாந்து பார்க்கிறேன்
சிலந்தி ஒன்று என்னையே பார்த்தபடி
வலையில் ஆடிக் கொண்டிருக்கிறது வெகுநேரமாய்

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.