1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாடது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டது.

தமிழ்நாடு தமிழருக்கே!

“தமிழ்நாடு தமிழருக்கே” என்று, இப்போது நடைபெற்று வரும் பிரசாரத்தைப் பற்றித் தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுய நலத்திற்கு ஆகவே, நம் கூட்டத்தில் இருக்கும் சில வேஷதாரிகளும் இதைத் திரித்துக் கூறுவதும் இதைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கச் சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைப்பற்றி நாம் கேள்விப்படுவதோடு சில விஷயங்களை நேரிலும் பார்க்கிறோம்.

இது விஷயமாய்ப் பெரியார் தூத்துக்குடியில் பேசிய பேச்சை வைத்து, மெயில் பத்திரிகை எழுதிய ஒரு கண்டனத்திற்குப் பெரியார் சென்னை, மெமோரியல் ஆலில் சொன்ன சமாதானம் சமீபத்தில் நம் பத்திரிகை யில் வரக்கூடும். ஆனாலும், மெயில் பத்திரிகைக்கு பெரியார் எழுதி அனுப்பிய விளக்கம் 20ஆந் தேதி மெயிலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தமிழ்க் கருத்து பின்னால் அநுபந்தமாய்ப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

என்றாலும், இனி அப்பிரசாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறபடியால், அதைப் பற்றிய விளக் கத்தைத் தொடர்ந்து தலையங்கமாக எழுதுகிறோம்.

குறிச்சொல் தோற்றம்

“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற அபிப்பிராயம் சென்ற வருஷம் டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க (ஜஸ்டிஸ் கட்சி) மாநாட்டிலே வாசிக்கப்பட்ட பெரியார் தலைமைப் பிரசங்கத்திலேயே குறிப்புக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றும் அதற்கு முதல்நாள் வேலூரில் நடந்த தமிழர் மாநாட்டில் தலைமை வகித்த தோழர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களும் தமது  தலைமைப் பேருரையில் விளக்கி இருக்கிறார்கள்.

மற்றும் அதுபற்றியே பெரிதும் ‘தமிழ்நாடு தமிழ ருக்கே’ என்னும் சொல் இன்று தமிழ்நாடெங்கும் தமிழ் மக்களது இலட்சியக் குறிச்சொல் லாக தமிழ் மக்களால் ஒலிக்கப் படுகிறது. அன்றியும் தமிழ்நாடு தமிழருக்கு என்பதில் யாருக் காவது அதிருப்தியோ, அபிப்பிராய பேதமோ இருப்பதாக இதுவரை யும் நமக்கு எவ்விதத் தகவலோ, மறுப்போ வந்ததும் கிடையாது.

விஷமிகள் கூச்சல்

பார்ப்பனப் பத்திரிகைகள் சிலவற்றிலும், அவர்கள் கூலிகளது வாய்கள் சிலவற்றிலும ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும், கேட்கவும் நேர்ந்தது என்றாலும் அதுவும் எங்கும் மறுமுறை கிளம்பினதாகத் தெரியவில்லை.

ஒரு பார்ப்பனப் பத்திரிகை மாத்திரம் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்றால், `எலி வளை எலிகளுக்கே’ என்று எழுதிற்று. மற்றொரு பார்ப்பனக் கூலியின் வாய் தமிழ்நாடு தமிழருக்கே என்றால், கர்நாடகனுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கூவிற்று. உள்ளே இருந்தே உலை வைக்கக் கருதி இருக்கும் ஒரு தோழர் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றால் ஆந்திரர் மலையாளி கதி என்ன ஆவது என்று விஷமப் பிரசாரம் செய்தார். இவை தவிர, வேறு விதமான எதிர்பார்ப்புகளோ, அதிருப்திகளோ வந்ததாக நமக்குத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சரி. அந்த இலட்சியமே இன்று தமிழ்மக்களின் குறிக் கோளாய் இருப்பதால் அதை விளக்கக் கடமைப்பட்டுள் ளோம்.

நாத்திகமல்ல

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நாத்திகமோ, மதமொழிப்போ, வகுப்புத் துவேஷமோ தொக்கி இருக்கிறது என்று யாராவது சொல்ல வருவார்களே யானால், அவர்கள் ஒன்று விஷயம் அறியாதவர்கள் அல்லது வேண்டுமென்றே விஷமப்பிரசாரம் செய்யும் அயோக்கியர்களேயாவார்கள். ஏன் என்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லும் தோழர்கள் சர். பன்னீர் செல்வம், குமார ராஜா அவர்கள் முதலாகிய தலைவர்கள் நாத்திர்களோ மதமொழிக்கும் உணர்ச்சி உடையவர் களோ அல்ல. மேலே குறிப்பிட்ட ஜஸ்டிஸ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாருடைய தமிழ் தலைமைப் பிரசங்கத்தில் 12ஆவது பக்கத்தில் 2ஆவது பாராவில் 15ஆவது வரியில் இருந்து,

“வங்காளிகளிடமிருந்து, குஜராத்திகளிடமிருந்து, காஷ்மீரிகளிடமிருந்து, சிந்தியர்களிடமிருந்து தமிழ் நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலையாள கன்னட நாட்டினர் பிரிந்துபோக வேண்டுமென்று எண்ணுவது தேசியத்திற்கு விரோதமாகுமா? அதேபோல் ஆரியர் களிடமிருந்து திராவிடர்கள் பிரிந்து போக நினைப்பது தேசியத்திற்கு விரோதமாகுமா? `வெள்ளையர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டால் நம்மைக் காத்துக் கொள்ள முடியாது’ என்றால், சிலோன் பர்மா இவைகளைப் போலவோ ஆஸ்ட்டிரேலியா, கனடா இவைகளைப் போலவோ தமிழ்நாடோ - திராவிட நாடோ பிரிந்திருக்கலாமல்லவா” என்று இருக்கிறது.

இந்தப் பிரசங்கம் படித்த பிறகே பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவரது தலைமையை ஒப்புக்கொண்டு ஆரவாரம் செய்து பதினாயிரக் கணக்கான மக்கள் அதைப் பின்பற்றுவதாய் உறுதி கூறி அமர்ந்தார்கள். ஆதலால் அக்கருத்து ஜஸ்டிஸ் கட்சி யினருக்கோ, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களுக்கோ திடீரென்று புகுத்தப்பட்டதென்று சொல்ல முடியாததால் அதைப்பற்றி யாரும் எவ்வித விஷமப் பிரசாரமும் செய்வதற்கு இடமில்லை என்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறோம். மற்றும் அதே பிரசங்கத்தில் இக்கருத்துக்கு அவசியமான காரணங்களும் மிகமிக விளக்கமாகக் கூறப்பட்டிருப்பதால் தமிழ்மக்கள் மற்றொரு முறையும் அப்பிரசங்க முழுமையும் படித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழ்நாடு என்றால் திராவிடமே!

தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும், எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்கு திராவிடநாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்நாடு பிரிவினை யையே கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில் தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிடநாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில் லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும் “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாக குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.

உதாரணமாக 1926-ல் டி.ஏ. சுவாமிநாதய்யரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் (Gem) டிக்ஷனரியில் 340ஆம் பக்கம் 5ஆவது வரியில் (Draveda) “திராவிட” என்பதற்கு “தமிழ்நாடு” என்று தமிழில் அருத்தம் போட்டிருக்கிறது.

சேம்பர்ஸ் 20ஆவது நூற்றாண்டு டிக்ஷனரியில் 282ஆவது பக்கம் 2ஆவது கலம் 5ஆவது வார்த்தை.

“திராவிடன் (Dravedan) என்ற பதத்திற்கு ஆரியர் கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தென் இந்திய மக்கள்” என்றும் “திராவிடம்  என்பதற்கு தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம்” என்றும் பொருள் சொல்லப் பட்டிருக்கிறது.

1904இல் லண்டனில் பெயர்போன ஒரு ஆசிரியரால் பிரசுரிக்கப்பட்ட டிக்ஷனரியாக, டிக்ஷனரி ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ் என்ற பெரிய டிக்ஷனரி - அதாவது இப்போது உலகிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புஸ்தகத்தின் 257ஆவது பக்கம் முதல்கலம் 4ஆவது வார்த்தையாக இருக்கும் திராவிடன் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் எழுதும்போது “திராவிடம் - ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு பழமையான மாகாணம் என்றும், தமிழன் (தமிழகம்) - ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய பாஷை அல்லாததைப் பேசுபவர்கள்” என்றும் எழுதியிருப்பதோ டல்லாமல் இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.

மற்றும் அநேக அகராதிகளும், ஆராய்ச்சி நூல்களும் தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை. இதில் தமிழ்நாடு என்பதும் தமிழர் என்பதும் காங்கிரஸ்காரர்கள் பிரித்திருப்பதுபோல் ஒரு தனி இடத்தையும் ஒரு தனி பாஷையையும்தான் குறிக்கின்றது என்று யாராவது கருதுவார்களேயானால் அல்லது அந்தப்படிதான் கருத நேரிடும் என்று சொல்லப்படுமேயானாலும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்குப் பதிலாக திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று இலட்சியக் குறிக்கோள் வைத்துக் கொள்வதில் ஆnக்ஷபணை இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இனி அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விலகட்டும்; இன்றேல் வாதம் புரியட்டும்

ஆந்திர நாட்டில் சில ஜமீன்தாரர்கள் தங்களைத் திராவிடர் என்று ஒப்புக்கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றும் தன்னைப் பொறுத்தவரை திராவிடனே என்றும் ஒரு ஆந்திரப் பெரியார் தெரிவித்திருக்கிறார். இதில் நமக்கு அதிசயம் தோன்றவில்லை. ஏனெனில், இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரே சதா சர்வ காலம் தமிழன், ஆரியன் என்ற விவகாரம் பேசி தமிழ் மக்களுக்குள் விளம்பரம் பெற்றுக் கொண்டவர்களே ஆரிய புராணங்களை ஆரியக் கடவுள்களின் புராணக் கதைகளை அதிலும் இழிவும், அவமானமும் ஆன ஆபாசக் கதையைப் பற்றி ஏதாவது கூறினால், கடவுளுக்குப் பெண்டுபிள்ளை, தாசி வேசி ஏதய்யா என்று கேட்டால் கோபித்துக்கொண்டு, ஆரியக் கதை களுக்கும் கூத்துகளுக்கும் தத்துவார்த்தம் பேசவரும் போது, இவற்றை அறியாத ஒரு மனிதன் தன்னைத் திராவிடன் அல்லன் என்று சொல்வதில் அதிசயமிருக்கக் காரணம் இல்லை.

ஆகவே, அப்படிப்பட்ட விவகாரக்காரர்கள் ஒன்று விலகிக் கொள்ளட்டும்; அல்லது ஆண்மையுடன் வெளியில் வந்து வாதப்பிரதிவாதம் செய்யட்டும். இரண்டும் கெட்ட விதமாய் தங்கள் பிழைப்பும் வாழ்வும் இதில் சிக்கிக் கொண்டு விட்டதே என்பதற்கு ஆக விஷமப் பிரசாரம் வேண்டாம் என்றுதான் பணிவோடு வேண்டிக் கொள்ளு கிறோம்.

நிற்க. இந்தத் தேவைக்கு இப்போது என்ன அவசியம் என்று சிலர் கேட்கலாம். அதை விளக்க வேண்டியது மிகவும் அவசரமான காரியம் என்பதை நாம் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அடிமை வாழ்வு அகல!

இந்தத் தேவையை நாம் வெறும் அரசியல் ஆதிக்கத்தை குறிவைத்தே குறிப்பிடவில்லை. திராவிட மக்களின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், விஞ்ஞான இயல், தற்காப்பு இயல், பொது முன்னேற்ற இயல் ஆகியவைகளைக் கருதியே குறிப்பிடு கிறோம். ஏனெனில் உலகத்திலேயே தொன்றுதொட்டு சிறப்பாக இருந்துவந்த திராவிடநாடு இன்று அடியோடு மறைந்து போய், அது ஆரியத்திற்கு ஆக்கமளித்தும் ஒரு அடிமை நாடாக ஆரியர் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு, திராவிட மக்கள் என்றால் உலகினோர் காட்டுமிராண்டி கள் என்று மதிக்கும்படியாகவும் இருந்து திராவிடர்கள் அரசியல், பொருளாதாரம் சமுதாயம், சமயம் முதலிய துறைகளில் அடிமைகளாய்-அதாவது ஆரியர்கள் நன்மைக்கும், மேன்மைக்கும் மாத்திரமே வாழுகிறவர் களாய் இருப்பதாலேயே அதை மாற்றவேண்டும் என்பதற்காகவே இப்போது இது மிகவும் அவசரமான காரியம் என்று சொல்லுகிறோம்.

இன்றைய நிலை

இன்று திராவிடத்தில் உள்ள திராவிடர் சற்றேறக் குறைய 5 கோடி மக்களாவார்கள். ஆனால் அவர்களது நிலை என்ன? தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி, தொளுவன், இலங்கையன், கிறித்துவன், துருக்கன், ஆதிதிராவிட, ஆதி ஆந்திர, ஆதிகர்னாடக அதிக்கிரதஜாதி என்பவனாகிய பல ஜாதி வகுப்பு சமயங்களாகப் பிரிந்து ஆரியனுக்குப் பயந்து, பாது காப்பும் கேட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். அரசியல், சமய இயல், சமுதாய இயல் முதலியவற்றில் திராவிடர்கள் ஆரியர்களையே எஜமானர்களாக, தலைவர்களாக, குருக்களாக, மேல் வகுப்பாராகக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவுதான் ஆராய்ச்சி அறிவு-மான உணர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாலும், ஆரியன் கடவுளையே, ஆரியன் சமயத்தையே, ஆரியன் ஆதிக்க புராணங்களையே பிரதானமாய்க் கொண்டு அவற்றின் பயனாய் அவன் அனுபவித்து மீந்த எச்சிலையைக் கொண்டு பயனடைய ஆசைப்படுறோம்.

ஆரிய சமயத்தால் இலாபம் யாருக்கு?

ஆரியர் சமயம், ஆரியர் கடவுள் என்று ஏன் சொல்ல வேண்டுமென்று சிலர் கருதலாம். ஆனால், அக்கடவுள் களால் யார் பிழைக்கிறார்கள்? யார் மேன்மையடை கிறார்கள்? யார் மேன்மையை விளக்க அக்கடவுள்கள் உருவம் பெற்று இருக்கின்றன? அக்கடவுள்கள் சம்பந்த மான கதைகளில் யாருடைய ஆதிக்கமும், பெருமையும் பிரசாரம் செய்து நிலை நிறுத்தப்படுகிறது? என்பனவாகிய வைகளை கவனித்தால், நாம் ஏன் அவற்றைப் பிரித்துக் காட்டுகிறோம் என்பதோடு, அவைகளை பகிஷ்கரிக்கச் சொல்லுவதன் உட்கருத்தும் விளங்காமல் போகாது.

ஒருவன் “நான் மனுதர்ம சாஸ்திரத்தில் பண்டிதனாகி மனுதர்ம சாஸ்திரத்திற்கு விரிவுரை வியாக்கியானம் எழுதி பதினாயிரம் புத்தகம் அச்சுப் போட்டுவிட்டேன்; இப்பொழுது மனுதர்ம சாஸ்திரத்தையும் அதில் கற்பிக்கப் பட்டிருக்கும் கடவுள்களையும் குற்றம் சொல்லுகிறார்களே என் கதி என்னாவது? நான் இதை எதிர்த்து ஒருகை பார்க்காமல் இருக்கமாட்டேன்” என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு நம்மோடு வாதாடினால், நாம் இந்த சாஸ்திரப் பிரசார வயிறு வளர்ப்புக் கூட்டத்திற்குப் பயந்து கொள்வதா என்று சிந்தித்துப் பார்ப்போமானால் அப்படிப்பட்டவர்களின் எதிர்ப்பை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்பது நன்றாய் விளங்கிவிடும்.

ஆரியரே தலைவராயினர்

மனுதர்ம சாஸ்திரத்திற்கும், இராமாயணம் முதலிய ஆரிய புராண இதிகாசங்களுக்கும் இன்று எவ்விதத்தில் பேதம் கற்பிக்க முடியும்?

இதைப்பற்றிய விவகாரத்தை மற்றொரு சமயம் வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் இந்தியா பூராவும் ஒரு நாடு என்றும், நம்மை இந்தியன் என்றும் அதனால் இந்து சமயத்தவன் என்றும் சொல்லிக்கொண்டு பெரும் பரப்பில் இதுவரை இருந்து அரசியல் கிளர்ச்சியும், சமயக் கிளர்ச்சியும் செய்து வந்ததில் என்ன பலனடைந் திருக்கிறோம்?

இன்று நம்முடைய எல்லா இந்திய அரசியல் தலை வர்கள் காந்தியாரும் - ஜவஹர்லால் பண்டிதரும் - நம் மாகாணத்திற்கு தோழர்கள் ராஜகோபாலாச் சாரியாரும் சத்தியமூர்த்தி சாஸ்திரியாருமாய் இருக்கிறார்கள் - ஆச்சாரியார் சாஸ்திரியார்கள் அரசியல் தலைமை வகித்து இந்த 30 மாத காலத்தில் நமக்குச் செய்த காரியங்கள் என்ன என்பதை அனுபவத்தில் பார்த்ததோடு அனுபவித் தும் வந்திருக்கிறோம்.

ஆச்சாரியார் நமக்கு இம்மாதிரி சுய நிர்ணய முயற்சி என்றென்றும் வரமுடியாமல் இருக்கும்படி செய்ய, நமது கலைகளையும் பாஷைகளையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆரிய பாஷையை திராவிட மக்களுக்குள் குழந்தைப் பருவத்தில் கட்டாயமாகப் புகுத்தினார். எதிர்த்தவர்களை ஆண், பெண் அடங்கலும் தமிழர்களின் ஸ்தாபனங் களின் தலைவர்கள் உள்பட அடக்குமுறைச் சட்டத்தினால் பல வருஷணக்கணக்காய்த் தண்டித்து பல ஆயிரக் கணக்கான ரூபாய்கள் அபராதம் போட்டு சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்.

திருப்பதியில் ஆரியப்பள்ளி

ஆரியப் புராணக் கதைகளை ஆதாரமாய்க் கொண்ட கல்விகளைக் கற்பிக்க, திருப்பதியில் பன்னிரண்டு லட்ச ரூபாய் செலவில் கல்லூரி வைத்து ஆரியர்களையே உபாத்தியாயர்களாய்ப் போட்டு, திராவிடம்-ஆரியன் என்கின்ற உணர்ச்சியே அற்று ஆரியமயமாக வேலை செய்துவிட்டார்.

பள்ளிகூடப் புத்தகங்களில் ஆரியர் - திராவிடர் என்கின்ற வார்த்தைகளே வரக்கூடாதென்று தடுத்துப் புதிய முறையில் புத்தகங்கள் எழுதச் செய்தார். அது போலவே இப்போது புதிய இந்துதேச சரித்திரங்கள் எழுதப்பட்டு, அதில் ஆரியன் எப்போது இந்தியாவிற்கு வந்தான் என்கின்ற விஷயங்களையே மறைத்து, அலக்சாந்தர் வந்த காலத்திலிருந்தே சரித்திரங்கள், பாடங்கள் துவக்கி எழுதப்படுகின்றன.

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சமற் கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கத் திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்.

படிப்பை வருணாச்சிரம முறையாக்கி, 4ஆம் வகுப்பாருக்கு கைத்தொழிலில் மாத்திரம் ஜீவனமும், அறிவும் இருக்க வேண்டுமே ஒழிய மற்றவை தேவையில்லை என்று வார்தாத் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறையில் வந்துகொண்டிருக்கிறது.

அரசியல் பதவியில், உத்தியோகத்தில் ஆரியரல்லாத அதாவது திராவிட மக்கள் அமர்ந்திருந்ததை ஒழிக்கச் சூழ்ச்சி செய்து இன்னும் ஐந்து வருஷகாலத்தில் சகல இலாக்காக்களிலும் ஆரியர்களே மாகாண, ஜில்லா தலைமை உத்தியோகத்தில் இருக்கும்படியாகச் செய்யப் பட்டாய் விட்டது.

இந்திய அரசியல் தலைவர் காந்தியாரே, இராமராஜ்யத்திற்காகவும் வர்ணாச்சிரமப் புனருத்தாரணத்திற்காகவும் பாடுபடுகின்றார். அதுதான் காங்கிரஸ் கேட்கும் சுயராஜ்யத்தின் தத்துவமென்று பச்சையாய்ச் சொல்லி விட்டார்.

எந்தக் காரணத்தைக்கொண்டும் சுயபுத்தியோ சுயமரியாதையோ உள்ள திராவிட மகன் எந்தத் துறை யிலும் தலைவராக இருக்க யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டாய்விட்டது. ஆரியர்களைக் கண்டால் திராவிட மக்கள் நடுங்கிச் சரணடையும்படியான கொடுங் கோன்மை முறையே நல்லாட்சி என்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ஆச்சாரி கேட்டவரம்

காங்கிரசின் சார்பாகப் பல தலைவர்களை வைசிராய் கூப்பிட்டார். ஒரு திராவிடனையாவது கூப்பிட்டுப் பேசினாரா? கூப்பிடத் தகுந்த தகுதி உண்டாக்கப்பட்டதா என்று பார்த்தால் அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்பது விளங்கும். ஆனால், வைஸ்சிராய்க்கு காங்கிரஸ் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்து மறுபடியும் பதவி ஏற்று, சண்டைக்கு காங்கிரஸ் உதவி செய்வதானால் பணம் கொடுப்பவர்கள் யார்? ஏராளமாகச் சண்டைக்குப் பதிவு செய்து கொண்டுபோய் உயிர் கொடுப்பவர்கள் யார் என்று பார்த்தால், அத்தனை பேரும் திராவிட மக்களாகவே இருப்பார்கள் என்பது விளங்கும். தோழர் ஆச்சாரியார் சண்டைக்கு உதவி செய்ய வைசிராயை ஒரு நிபந்தனை கேட்டார். அதாவது, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினால் பிறகு சுக்ரீவன் உதவி செய்வான் என்று கூறினார். இதில் வாலி என்று தோழர் ஆச்சாரியார் குறிப்பிட்டிருப்பது திராவிடர்களை-அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரையும்- அதோடுகூட அநாரியர்களான `மிலேச்சர்’ என்று அவர்களால் சொல்லப்படும் முஸ்லிம்களையும் கொன்று, சுக்ரீவர்களான அதாவது சகோதரத் துரோகிகளான- எப்படியெனில் தங்களது நாட்டிலேயே தங்களுக்கு முன்பே ஆட்சியில் இருந்துவந்தவர்களான சகோதரர்களைக் கொல்வதற்காக எதிரிகளுடன் சேர நிபந்தனை கேட்கும் துரோகியான காங்கிரசுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை கேட்கிறார். இதிலிருந்தே ஆரியருடன் கூடவோ, அல்லது ஆரியருக்குப் பூரணமாய் அடிமைப்பட்ட மாகாணத்தார்களுடன் கூடவோ திராவிடரும் சேர்ந்திருந்தால் முன்னுக்குவர முடியுமா? மானத்துடன் வாழமுடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வாசகர்களை வேண்டுகிறோம்.

(விடுதலை: 21-11-1939)

தொடரும்     

Pin It