எழுத்தாளர் மலையரசி சீனிவாசன் சிங்கப்பூரிலேயே பிறந்து வாழ்ந்து வருபவர். இவரது தந்தையார் திருமிகு முருகு. சீனிவாசன் பெரியார் பெருந்தொண்டர். தமிழவேள் சாரங்கபாணி போன்றவர்களுடன் தமிழ்ப் பணியாற்றியவர். இவரது துணைவர் திருமிகு வீ.கலைச்செல்வம் பெரியாரியர். இப் பின்னணியில் குடும்பத் தலைவியாக இருந்து எழுத வந்தவர் மலையரசி. ஏற்கெனவே ‘முகில்’, ‘கலர் பென்சில்’ ஆகிய இரண்டு கதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தற்போது ‘நினைவோவியம்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

malaiarasi seenivasan bookமலையரசியின் முன்னையத் தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் அளவில் குறுங்கதைகளாக அமைந்திருந்தன. ஆனால் இத்தொகுப்பில் சிறுகதைகளாக மலர்ச்சி பெற்றுள்ளன.

சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் வளர்முகநிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரபும், புதுமையும் போற்றும் பல இலக்கிய அமைப்புகள் எழுத்தையும் பேச்சையும் போட்டி போட்டுக்கொண்டு முன்னெடுக்கின்றன. சிங்கப்பூர் அரசும் தமிழ்மொழி மாதம், இலக்கியத் திருவிழா, விருதுகள்.. என ஊக்கம் தருகிறது.

அண்மைக்கால சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் போக்குகளைப் பார்க்கும் எவருக்கும் இரண்டு முகங்கள் எளிதில் தென்படும். ஒன்று சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்து வாழும் மக்கள் பிரிவினரின் இலக்கிய முயற்சிகள். மற்றொண்டு பணி நிமித்தமாக சிங்கப்பூரில் குடியேறியிருக்கும் தமிழ் மக்களின் எழுத்துக்கள். இந்தச் சூழல், பின்னணி பற்றிய புரிதலே இவ்விலக்கிய நோக்குகளை அறிய உதவும்.

இக்கதைகளின் தோற்றுவாய் குறித்து, “சிங்கப்பூரில் பிறந்து, இங்கேயே வளர்ந்த பொழுதுகளில், சந்தித்த மனிதர்களையும், கண்டு உணர்ந்த நிகழ்வுகளின் மூலம் கிடைத்த இனிமையான அனுபவங்களையும் கதைகளாக எழுதுவது பெருமகிழ்ச்சியைத் தருகின்றது” என ஆசிரியர் முன்னுரையில் கூறுகிறார்.

 தாய்த் தமிழகத்தில் குழந்தைகளின் பெயர்களை நோக்க இக்கதைகளில் இடம்பெறும் மாந்தர்களின் தமிழ்ப் பெயர்கள் குதூகலம் தருகின்றன.பொன்னி, சங்கவி, கைலாசம், மரகதம், கன்னல், ஆவணி, இளவரசன், ரதி, தாமரை, கீர்த்தனா, ஆறுமுகம், மணிமேகலை, சித்தார்த்தன், பூர்ணிமா, அமுதநாயகம், சாவித்திரி, ஆசைத்தம்பி, மீனாட்சிசிந்தரம், குகன், பாலகுமரன், தங்கவேலு, கோவிந்தன், வனிதா, கனகசபை, சுந்தரலிங்கம், கீதா, காமாட்சியம்மன், ஆதி…. இப்படி

புலம்பெயர்ச் சூழலில் மொழிக்காப்பில் சிறிய செய்கைகள் கூட முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து விடுகின்றன. அப்படித்தான் இந்தத் தமிழ்ப் பெயர்களும் என்பதைக் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.

இக்கதைகளில் சிங்கப்பூரின் நிலவியலும் மக்களின் வாழ்வியலும் பதிவாவது இவற்றைச் ‘சிங்கப்பூர் இலக்கியம்’ என்ற வகைமைக்குள் வைத்து எண்ணத் தூண்டுகிறது. இத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் உள்ளன. தலைப்புக்கு ஏற்ப இவை ‘நினைவு எழுத்தோவியங்களாக’ அமைந்துள்ளன.

சிங்கப்பூர் எனும் சிறிய நாட்டின் தோற்றம், வளர்ச்சி, மாற்றங்கள், மக்கள் வாழ்க்கை, பல்தேசிய நிலைமைகள் ஆகியவற்றின் நினைவுகூருகையாக இக்கதைகள் அமைகின்றன. முதியவர்களும் குழந்தைகளுமே இக்கதைகளை ஆள்கிறார்கள். தமிழர், சீனர், மலாயர் ஆகிய மூவின மக்களும் இந்து, இசுலாம், கிறித்தவம், பெளத்தம் ஆகிய பல்சமயக் கூறுகளும் இக்கதைகளில் விரவிக் கிடக்கின்றன. சிங்கப்பூர் உருவான 1965 தொடங்கி ஐம்பது ஆண்டுகளின் வாழ்வும், வளர்ச்சியும், வரலாற்றுத் தெறிப்புகளும் இக்கதைகளில் இடம் பெற்றுள்ளன.

கதைகளின் வடிவமும், சொல்முறையும் மரபானவைதான். ஆனால் எல்லாக் கதைகளிலும் ஊடும் பாவுமாக மனித நேயமே விரவிக்கிடக்கின்றன. இளையோருக்கு நடத்தைகளைப் பயிற்றும் இலக்கியக் கையேடாக இக்கதைகள் விளங்குகின்றன.

போகிறப் போக்கில் காலச்சக்கரத்தின் தடங்களை ஆங்காங்கே கதைகளில் பதிவுசெய்துவிடுவது ஆசிரியரின் சிறப்பு எனலாம்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிவதை 1965 ஆகஸ்ட் 09 ல் லீக்வான்யூ கண்ணீர் மல்க அறிவிப்பது, மக்களின் இடப்பெயர்ச்சி, 1937இல் இந்திய வர்த்தகர் சங்கம் அமைவது, 1954இல் பெரியார் சிங்கப்பூர் வருவது, 1924 ல் மறுசீரமைப்பு செய்யப்பட்ட சுல்தான் பள்ளி வாசல், சீனப் பெருநாளில் பட்டாசு வெடிக்கத் தடைவருவது, பின்னர் ஓரிடத்தில் ஒரு சில மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி தருவது, 1955இல் விகாச தினத்திற்கு விடுமுறை அறிவிப்பது, 2015 ல் சிங்கப்பூர் சுதந்திர நாளின் 50 ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது, 1975 ல் முதல் முதலாக தேசிய நாள் அணிவகுப்பு நடைபெறுவது, சிங்கப்பூரின் ஆசிரியர்தினம், தமிழவேள் சாரங்கபாணி – தமிழர் சீர்திருத்தச் சங்கம், சிங்கப்பூர் குடியுரிமை விண்ணப்பம்… எனப் பல நிகழ்வுகள் கதைகளில் இடம் பெறுகின்றன.

ஓர் ஊரின், நகரின் அடையாளங்களாக நிற்பவை வீதிகளும் கட்டடங்களும் தான். மலையரசியின் சிறுகதைகளில் சிங்கப்பூரின் வீதிகளும் கடைத்தொகுதிகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் காட்சிப் படுத்தப்படுவது சிறப்பு.

புக்கிட் ஹோஸ்வீ, காமன் வெல்த் சாலை, கேலாங்பாரு, சிரம்பான், சாங்கி, தஞ்சாங்பகார், பாசிர் பாஞ்சங், சிராங்கூன்சாலை, ஊட்ரம் சாலை, சிலிகி சாலை, கார்டன்ஸ் பைதபே, ரேஸ்கோர்ஸ் சாலை, சுங்காய் தெங்கா சாலை, அவ்லோக், மார்கெட் ஸ்திரீட், சவுத் பிரிஜ் சாலை, ராஃபிஸ்ள் எம்.ஆர்.டி., காண்டோமினியம், பாட்லிசாலை, இராமகிருஷ்ணாமிஷன், ஃபேரர் பார்க் திடல், ஒஃபியர் சாலை, லூர்துமாதா தேவாலயம், புக்கிட்ஹோசுவீ, அப்பர் டிக்சன் சாலை, பப்ளோ சாலை.. என சாலைகள், குடியிருப்புகள், வட்டாரங்கள், கடைத் தொகுதிகளின் பெயர்கள் மிக இயல்பாக கதைக் களங்களோடு இயைந்து வருவது பாராட்டத்தக்கது.

தமிழர்களின் பொங்கல், கிறித்தவர்களின் கிறிஸ்துமஸ், இசுலாமியர்களின் பெருநாள், பெளத்தர்களின் விசாக நாள் ஆகியவற்றின் அடிப்படைகளாக விளங்கும் அன்பும், நேயமும், பகிர்வும் மிக நேர்த்தியாக நெருடல் இல்லாமல் ஆசிரியரால் முன் வைக்கப்படுகின்றன.

தமிழர்களும் சீனர்களும் மலாயர்களும் இசுலாமியர்களும் கிறித்தவர்களும் அவரவர் நெறியில் நின்றும், அதே வேளை பிறரை அரவணைத்தும் (Inclusive) வாழும் முறைமை மிக அழகாகப் பல கதைகளில் வெளிப்படுகின்றன.

முதியோரின் மன நிலை, உணர்வுகள், மறதி முதலியச் சிக்கல்கள், அதீத அன்பு, எதிர்பார்ப்பு, முதியோர்களைக் கையாளும் வழிகள், மனநிறைவுகொள்ளும் முதியோர்கள், மரபை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது, இணையராகவும், நண்பர்களாகவும் முதியோர் நேசம் ஆகிய பல கூறுகளும் கதைகளில் கவனம் பெறுகின்றன.

அடுத்து, கதைகளில் குழந்தைகள் அதிகம் இடம் பெறுகிறார்கள். நேரடியாக இன்றைய குழந்தைகளும், குழந்தைப்பருவ நினைவு மீட்டலாகக் குழந்தைகளும் பல கதைகளில் இடம் பெறுகிறார்கள். சமச்சீர் வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளின் ஆற்றல்களும், அவர்தம் நேசமும்சுட்டி, அவர்கள் குறித்தப் பொதுசமூகப் புரிதலின் அவசியத்தையும் சில கதைகள் வெளிப்படுத்துகின்றன.

நாய், பூனை போன்ற வளர்ப்பு விலங்குகள் வழி உயிர் நேயம் குறித்த அக்கறை தூண்டப்படுகிறது.

சர்க்கரைப் பொங்கல், காய்கறிச் சாம்பார், சிவப்பு உறையுடன் மாண்டரின் ஆரஞ்சு, அகர் அகர் வட்லப்பம், நோன்புக்கஞ்சி, பிரியாணி, தென்காசி சாப்பாடு, மீன் தலைக் குழம்பு, Hot Cross Buns… என உணவுப் பண்பாடு பல கதைகளில் மிளிர்கிறது.

இந்திய தொழில் வழி சாதி முறை எப்படி அயல் மண்ணில் மாறிப் போகிறது என்பதை ‘சுழல் நாற்காலி’ அற்புதமாகச் சித்தரிக்கிறது. வேளாண்மை தொழிலில் இருந்து கப்பலேறி சிங்கப்பூர் சென்ற தங்கவேலு, முடிதிருத்தும் கடையில் சேர்ந்து தொழில் பழகி ‘கோவிந்தன் முடி திருத்தகம்’ அமைத்து மேன்மை உறுவது, ‘சாதி’ எனும் கற்பிதத்தை உடைக்கிறது. இக்கதையில் இன்று காணாமல் போன கத்தியைச் சுனைத்தீட்டும் ‘லெதர் வார்’ வருவது அருமை. இது தமிழ்நாட்டிலும் அருகிவிட்டப் புழங்கு பொருள்.

அதே போல ‘அவர்களின் மாலைப்பொழுது’ கதையில் வயது கடந்து விட்ட ஆணும் பெண்ணும் வாழ்விணையராக எண்ணும் போது, தமிழ், சீனரென்ற பாகுபாடு நினைவுக்கு வருகிறது.

“நீங்கள் சீனர் நான்…” என்றாள் கவலையுடன்.

“நீங்கள் பெண். நான் ஆண். அவ்வளவுதான்” என்றான்.

 “அடுத்த நொடியே டேவிட் கையிலிருந்த மலர்க் கொத்தை நாணத்துடன் பெற்றுக் கொண்டாள்”

என ஆசிரியர் முடித்து வைப்பது மனித நேயத்தின் ஒளிக்கீற்று.

 ‘ஆவணி’ கதையில் ‘குடும்பமாக சாப்பிடுவது’ எனும் ஆசிரியர் தரும் செய்கையை (Task) நிறைவேற்ற ‘ஆவணி’ எனும் சிறுமி படும்பாடு கவித்துவப் பிணைப்பு. பொருள் தேடும் உலகில் பல குடும்பங்களின் நிலை இதுதான். ஒரு பெற்றோர் குழந்தைகள், பெற்றோர் இல்லா பிள்ளைகள், பெற்றோர் பிரிந்த பிள்ளைகள்.. ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நாடிப்பிடித்துப் பார்க்கும் கதை.

       எழுத்தாளர் மலையரசி சீனிவாசன் கதைகள் சமூகச் சார்புமிக்கவை. யதார்த்த அழகு மிக்கவை. எதிர்காலத்துக்கானவை. மொழிச் சிதைவில்லாமல் இலக்கியம் வழி மொழிப்பயிற்சித் தருபவை. சிங்கப்பூரின் இன்றையத் தமிழ் வாழ்வின் ஒரு சோற்றுப்பதம். மலையரசி அருமையான தாய்! தாயின் மனமும், முகமும் நல்லவை தானே நாடும்? இக்கதைகளும் நேர் நடத்தைக் கோரும் நேயமிக்கவையாகவே மலர்ந்துள்ளன.

- முனைவர் இரா.காமராசு பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்