கீற்றில் தேட...

ஒரு சமூகத்தின் வரலாற்றை, அந்தச் சமூகத்தை ஆண்டவர்களின் வரலாறாக மட்டுமன்றி அந்தச் சமூகத்தின் பண்பாட்டு வரலாறாகவும் அச்சமூகத்தில் வெளிப்பட்டிருந்த கலைகளின் வரலாறாகவும், பயன்படுத்திய மொழியின் வரலாறாகவும் காணும்போதுதான் அது பல பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்து, பல்வேறு தரப்பட்ட மக்களின் உண்மையான வரலாறாகிறது. வரலாற்றுப் பக்கங்களில் இன்னும் எத்தனையோ ஏடுகள் படிக்கப்படாமல் புதைந்து கிடக்கின்றன. இப்பக்கங்கள் வரலாற்றையே திருத்தி எழுதவும் உதவக்கூடும். தமிழகத்தை ஆண்ட, பிற மொழி பேசிய ஆட்சியாளர்கள் தமிழ் மொழியை எவ்வகையில் கையாண்டார்கள்? தங்கள் தாய்மொழியல்லாத பிரிதொரு மொழியைப் பேசும் சமூகத்தைத் தங்களது ஆட்சி ஆளுகைக்குள் கொண்டுவரும் அதிகார வர்க்கத்தினர் அந்த மொழியை எப்படிக் கற்றுக் கொண்டார்கள்? எவ்வாறு பயன்படுத்தினார்கள்? தங்கள் மொழியை அந்த மக்கள் மீது திணித்தார்களா என்பதெல்லாம் அடிப்படையான கேள்விகள். பிறமொழி பேசிய ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கை, மொழிப்பயன்பாடு பற்றிய விரிவான பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 n govindarajan bookதமிழ் நிலப்பரப்பிற்குள் அந்நியர்களாக வந்த ஆங்கிலேயர்கள் இந்த பெரும் மக்கட் கூட்டத்தை அடக்கி ஆள முடிந்ததில் மொழியின் பங்கு என்ன? அவர்கள் தமிழ் மொழியை நிர்வாகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் எனும் கேள்விகளுக்கான விடைகளில் தமிழச் சமூக வரலாற்றின் சில பக்கங்கள் துலக்கம் பெறும்; தமிழ் மொழியின் மற்றுமொரு பரிமாணத்தையும் காண இயலும். காலனியக் காலகட்டத்தில் தமிழை முன்னிலைப் படுத்தி அதிகாரமும் தமிழ்ப் புலமையும், மொழியாகிய தமிழ் எனும் இரு ஆய்வு நூல்களைத் தமிழ் ஆய்வுலகிற்குப் பங்களித்திருக்கும் ந. கோவிந்தராஜன், வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்- மொழியில் உதித்த பேரரசு எனும் நூலில் மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு உதவும் வகையில் காலனியத்திற்கும் தமிழுக்குமான உறவை ஆய்ந்து இதுவரை எழுதப்படாத வகையில் மொழி அரசியலையும் சில விளிம்புநிலை சமூகத்தின் அடையாள உருவாக்கத்தையும் வெளிக்கொண்டுவந்துள்ளார்.

மொழியைக் காலனியப் படுத்தல்

19-ஆம் நூற்றாண்டில் சென்னை ராஜதானியின் தமிழ் புழங்கிய பகுதிகளில் கோலோச்சிய அதிகாரிகளும் (துரைகள்) அவர்களது இல்லத்தரசிகளும் (துரைசானிகளும்) தங்களது பணியாளர்களிடம் தமிழ் எனும் ‘மொழி ஆயுதத்தை’ எப்படிக் கையாண்டனர், அதை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதை நாடக இலக்கியம் போல சுவைபட வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும். எனும், 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களுக்கு மாதிரியாக அமைந்த சம்பாஷணை நூல்கள் எனும் மாதிரி உரையாடல் நூல்களை (11 நூல்கள்) எடுத்துக்கொண்டு அவற்றை உள்ளடக்கப் பகுப்பாய்வு செய்து ‘ஒரு வெள்ளை நாடகம்’, ‘வெள்ளைக் கறுப்புக் காட்சிகள்’ ஆகிய முதல் இரண்டு இயல்களும் எழுதப்பட்டுள்ளன. காலனியம் ’தனக்குச் சொந்தமில்லாத ஒரு நிலப்பரப்பின்’ மொழி எனும் வளத்தை தனதாக்கிக் கொண்டதன் மூலம் ‘தமிழ் மொழியைக் காலனியப்படுத்திக் கொண்டுவிட்டது’ (ப.30) என்பது ஆசிரியர் எடுத்துக்கொண்ட ஒரு கருதுகோள் எனலாம். அப்படிக் காலனியப் படுத்திய மொழி, ஒரு மொழிக்கான சொற்பட்டியலைத் தயாரிப்பதன்வழி அம்மொழியை ஒரு சரக்காக மாற்றிக்கொள்கிறது’ என்றும் இதற்கு விலை மதிப்போ, பரிமாற்ற மதிப்போ இல்லையெனினும் லாபம் தரும் சரக்கு எனும் கொள்கையை முன்னிறுத்துகிறார் (ப.31).

தாய்மொழிக்குப் பிறகு ஒருவர் தேவை கருதி மட்டும் கற்றுக்கொள்ளும் எந்தவொரு மொழிக்கும் இது பொருந்தும். காலனியப்படுத்தி, சரக்காகக் கருதிய மொழியறிவை விரிவுபடுத்திக்கொண்டு அம்மொழியைப் பேசும் மக்கட் கூட்டத்திடம் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும்போது அம்மொழி அதிகாரத்தின் மொழியாக மாறிவிடுகிறது. ஒரு அதிகார அமைப்பு தனக்கான அதிகாரத்தைப் படிநிலை உறவுகள், அவ்வுறவுகளுக்குள் இயங்கும் விதிகளின் வழியாக ஏற்படுத்தும் ஒழுக்க நடவடிக்கைகள் ஆகியனவற்றின் மூலமாக மேலாதிக்கம் செலுத்தி நிறுவிக்கொள்கின்றன. இங்கு மொழியதிகாரம் உரையாடல்கள் வழியாகக் கட்டமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, துரையும் துரைசானியும் கேள்வி கேட்பவர்களாகவே இருப்பதைக் கவனிக்கலாம். உரையாடலில் ஏவல் செய்யத் தகுதி உள்ளவர்களும் குறுக்கீடு செய்பவர்களும் அதிகாரம் உள்ளவர்களே. அதேவேளை கீழ்ப்படிநிலையில் உள்ளவர்கள் எப்பொழுதும் ’பணிதல்’ எனும் செயல்பாட்டிலேயே இருப்பர்.

 சம்பாஷணை நூல்கள் ஆங்கிலேயர்களாலும் சுதேசிகளாலும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து எழுதப்பட்டவை. இவை ‘உரையாடல்கள் வழி மொழி கற்றலுக்கான’ கருவி நூல்களாகப் பயன்பட்டுள்ளன. கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக் கல்லூரியில் (1800-1854) சம்பாஷணை நூல்களும் பாடநூல்களாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இருப்பினும் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸால் (1777-1819) சென்னையில் தொடங்கப்பட்ட புனித ஜார்ஜ் கல்லூரியில் (1812-1854) சம்பாஷணை நூல்களுக்கு அவர் இருந்தவரை இலக்கண நூல்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளார் என்பதும் சம்பாஷணை நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லலை என்பதும் கவனிக்கத்தக்க செய்தி. அவ்வகை நூல்களில் முக்கியமானவையாக 20-க்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ’சம்பாஷணை நூல்கள் அதிகாரிகளின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்களுக்குப் பணிவிடை செய்தவர்களின் வாழ்க்கையையும் சொல்கின்றன. சுரண்டல்களும், லாபமும், அங்கீகாரமும் அவற்றில் படிந்து இருக்கின்றன. போர்களில் மட்டுமல்ல மொழியிலும் ஒரு பேரரசு உதிக்கத் தொடங்கியது(ப.39).

சம்பாஷணை நூல்கள், “பெரும்பாலும் ஓர் அதிகாரி தன் பணியாளர்களிடம் பேசுவதற்கான ’உடனடி வாக்கியங்களைக் கொண்டிருக்கும்…………… துரையுடன் சம்பாஷணையில் பங்குபெறும் பணியாளர்களின் தகுதிகளுக்கேற்ப அவர்களது பேச்சு அமைந்திருக்கிறது. துரையும் தன் எதிரில் இருப்பவர் தகுதிக்கேற்பவே சம்பாஷணைகளில் சொற்களைப் பயன்படுத்துகிறார்…… ஒரு வேலையாளை அமர்த்திக் கொள்ளும் போது அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், பேசும் முறைகள் குறித்த சம்பாஷணை, ஊர் கணக்குப்பிள்ளையிடம் சம்பாஷணை, நிலத்தை பற்றி விவசாயியிடம் சம்பாஷணை, ஒரு முன்ஷியோடு (ஆசிரியர்) சம்பாஷணை என பலவகை சம்பாஷணைகள் பயிற்சிக்காக இந்த நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரியும் சுதேசியும் பேசிக் கொள்வது மட்டுமல்ல; இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுதேசிகள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதையும் 1845-இல் சென்னை புனித ஜார்ஜ் கல்லூரியிலில்ருந்து வெளிவந்த சம்பாஷணை நூல் பதிவு செய்துள்ளது. கடன் கொடுத்தவனுக்கும் கடன் வாங்கியவனுக்குமிடையில்; இரண்டு கூலிக்காரர்களுக்கிடையில்; வியாபாரிக்கும் கடன்காரரருக்குமிடையில், நடக்கும் உரையாடல்கள் மாதிரிகள் தரப்பட்டுள்ளன என்று எடுத்துக்காட்டுவது, துரைகளும் துரைசானிகளும் மக்களுடன் பேசிய அல்லது உறவாடிய களங்களைக் (domains) காட்டுகிறது. இலங்கையில் புழக்கத்தில் ’கூலித் தமிழ்’ என்று ஒன்று இருந்ததையும் அந்நூலில் ’அதிகாரத்தின் தொனி’ தூக்கலாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.

நாடகக் காட்சிகள் காட்டும் அதிகாரம்

கோவிந்தராஜன் இந்த சம்பாசணை நூல்களின் உரையாடல்களைப் பல நாடகக் காட்சிகளாகக் கண்டு அவற்றை நம் கண்முன் கொண்டுவந்துள்ளார் என்பதை நூலுக்கு வைத்துள்ள தலைப்பு முதல், இயல்களின் தலைப்பு வரை அனைத்திலும் உணர முடியும். ’ஒரு வெள்ளை நாடகம்’, ’வெள்ளைக் கறுப்புக் காட்சிகள்’, ’மிகைவெள்ளைக் காட்சிகள்’, ஒரு (பின்) காலனியக் கருத்து (மறுத்து)ரைத்தல் எனும் பெருந்தலைப்புகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள இயல்கள் ஒவ்வொன்றும் நாடகக் காட்சிகளை நினைவூட்டுவனவே. எடுத்துக்காட்டுகள்: துரையும் துரைசானியும் பங்களாவில் இருக்கிறார்கள் ; துரை தமிழ் படிக்கிறார்; துரை உணவு மேசையில் அமர்கிறார்; துரைசானி ஆயாவுடன் பேசுகிறாள்; துரை கச்சேரிக்குப் போகிறார்.

நாடகக் காட்சிகளை இவ்வாறு விவரிக்கிறார்: “இந்த வெள்ளை நாடகம் துரைகளுடைய பங்களாக்களிலும் அவர்களுடைய உணவு மேஜைகளிலும் கச்சேரிகள் என்றும் கோட்டுகள் என்றும் அழைக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் நடக்கின்றன. நாடகத்தில் பல காட்சிகள் வருகின்றன. எல்லா காட்சிகளிலும் துரைகளும் துரைசானிகளும்தான் முதன்மை மாந்தர்கள். அவர்கள் எப்போதும் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் எதையாவது ஏவிக் கொண்டே இருக்கிறார்கள். அதட்டலான தொனியிலேயே பேசுகிறார்கள்……… இந்த வெள்ளை நாடகத்தில் துணை மாந்தர்களும் பலர் உள்ளனர். ……..காட்சிகளுக்குத் தகுந்தார் போல் வந்து துரைகளிடமும் துரைசானிகளிடமும் கட்டளைகளை ஏற்றுச் செல்கின்றார்கள். கொஞ்சமாக பேசுகின்றார்கள். எப்போதும் பணிந்தே இயங்குகின்றனர். குனிந்தே பேசுகின்றனர். அவர்கள் பேசும் வசனங்களே அவர்களுடைய உடல் மொழியை மனதில் திரையிடுகின்றன…. இந்த வெள்ளை நாடகம் இந்திய நாடக மரபு காத்திரமாகப் பின்பற்றிய புனித மொழியில் நிகழவில்லை. உயர்ந்தவருக்கு ஒரு மொழியும் தாழ்ந்தவருக்கு ஒரு மொழியும் கொடுக்கவில்லை. சுதேசிகளும் தமிழில் பேசினர். துரைகளும் துரைசானிகளும் தமிழிலேயே பேசினர் (ப.81).

துரைகள் பேசுவதாகக் காட்டும் ’துரைத் தமிழ்’ கேள்வி வாக்கியங்களும் கட்டளை வாக்கியங்களுமாகவே உள்ளன; பணியாளர்களின் வாக்கியங்கள் உடன்பாட்டு வாக்கியங்களே. அதிகாரிகளின் மொழி ஆங்கிலமாக இருந்தும் இங்கு தமிழே அதிகாரம் செலுத்துவதற்குப் பயன்பட்டுள்ளது. யார், எவரிடம், எப்போது, எப்படிப் பேசுகிறார் என்பதில்தான் அதிகாரம் வெளிப்படுகிறதே ஒழிய ‘அதிகார மொழி’ என்று ஒன்றில்லை எனும் மொழியியல் உண்மை தெளிவாகிறது. சிவிலிகைத்(பல்லக்கு) தூக்கிகளுடனான உரையாடல் மாதிரிகள் குறைவாக உள்ளதைச் சுட்டிக்காடும் ஆசிரியர் ‘லேசாகத் தலை காட்டும் இவர்கள் ஒருவேளை காலனிய ஆவணங்களில் உறங்கிக் கொண்டிருக்கலாம்’ என்று கூறுவதிலிருந்து விளிம்பு நிலையிலும் விளிம்பானவர்களின் இல்லாமையைக்’ கவனப்படுத்துகிறார். இந்நாடகக் காட்சிகளுக்குச் சில அரிய படங்களையும் உட்படுத்தியிருப்பது காட்சிகளை மேலும் தெளிவு படுத்துகிறது. நூலில் எடுத்தாளப்பட்டுள்ள உரையாடல்கள் நூலைப் படிப்பதில் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

உண்ணுதல் எனும் காலனிய நிகழ்த்துதல்

கோவிந்தராஜன், ’உணவு மேஜையில் உண்ணுதல் என்பது ஒரு காலனிய நிகழ்த்துதல். காலனியத்தை நிகழ்த்துதலும் கூட. உணவும் உண்ணுதலும் வெள்ளை நாடகத்தின் மையக்காட்சிகள்’ (ப.169) என்று வரையறுக்கிறார். உணவு தயாரிப்பதற்கான குறிப்புகள் அடங்கிய “சமையற்காரனுக்குச் சொல்லத்தகுவது” எனும் நூலில் சமையலர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கில உணவு வகைகளும் தமிழில் ஒலிபெயர்த்து, தமிழ் எண்களைப் பின்பற்றி கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து சமையற்காரர் மொழி ஒன்று உருவாகி உள்ளது என்பது ஆசிரியரின் கருத்து. அக்காலத்தில் தேநீர் அருந்துவது துரைகளாலும், துரைசானிகளாலும் ஒரு கௌரவக் குறியீடாகக் கருதப்பட்டிருந்ததைப் படிக்கும்போது இப்போது தேநீர் வெகுஜனப் படுத்தப்பட்டிருப்பதையும் அது ஏழைகளின், உழைப்பாளிகளின் பெரு விருப்பத்திற்குரிய சிக்கனமான பானமாக விளங்கும் கால மாற்றத்தையும் எண்ணிப்பார்க்காமல் இருக்க இயலவில்லை.

’குசினி’ என்று அழைக்கப்பட்ட சமையற்கட்டையும், சமையற்காரர்களையும் பற்றி விரிவாக விளக்கும் கோவிந்தராஜன் சமையலர்களைக் குறித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “தென்னிந்தியாவில் சமையற்காரர்களை மைஸ்திரி (maistry) என்று அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை குசினிக்காரர்கள் ’ராமசாமி’ என்று அழைக்கப்பட்டனர். இலங்கையில் குசினிக்காரர்கள் ’அப்பு’ என்று அழைக்கப்பட்டனர். வேறு பெயர்களில் இருந்தவர்களை அழைப்பதற்குக் கடினமாக இருந்ததால் பொதுப் பெயராக ’ராமசாமி’ என்று அழைத்து அதற்கு ’சமையற்காரர்’ பொருளை ஏற்றி விட்டார்களோ என்னவோ? அல்லது ஒரு வர்த்தக நிறுவனத்தின் பெயரான ஜெராக்ஸ் என்பது நகலெடுப்பதற்குப் பொதுப் பெயராக மாறியது போல ’ராமசாமி’ என்ற பெயரில் ஒரு பிரபலமான சமையற்காரர் இருந்திருப்பாரோ என்னவோ? அவரது பெயரில் சமையற்காரர்கள் எல்லோரும் ராமசாமி என்று அழைக்கப்பட்டிருக்கலாமோ? இன்றைக்கு ’ராம(ர்)சாமி’ இந்திய அளவில் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறார்; ராமசாமி(பெரியார்) தமிழ்நாட்டில் எதற்கான அடையாளமாக அறியப்பட்டிருக்கிறார் என்பதையும் இங்கே எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

வெள்ளைக்காரர்களின் சமையற்காரர்கள் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதற்கு உரையாடல்களையும், கேப்டன் சார்லஸ் கோல்டு என்பவர் 1791, 1798 ஆகிய ஆண்டுகளில் வரைந்த ஓவியங்களுக்கு எழுதிய குறிப்புகளையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார் ஆசிரியர், “மாட்டிறைச்சியைத் தொடுவதன் மூலம் மற்றவர்கள் யாரும் கைகளை அசுத்தப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இவர்களைத் தவிர ஆங்கிலேயர்களின் சமையல்காரர்களாக இருப்பதற்கு நிச்சயமாக வேறு யாரும் பொருத்தப்பட மாட்டார்கள்” (ப.193) என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிரார் ஆசிரியர். தமிழின் இரட்டை வழக்கின் -எழுத்துத் தமிழை உள்ளடக்கிய உயர் வழக்கு ஒன்று; பேச்சுத்தமிழ் மற்றொன்று- பேச்சுதமிழை ஜி.யு. போப் ’கொச்சைத் தமிழ்’ என வகைபடுத்தி அதற்கு எடுத்துக்காட்டுகளாக அரிச்சந்திர விலாசம் எனும் நூலில் வரும் வெட்டியான் பேச்சைத் தந்திருப்பதையும் கவனப்படுத்தியுள்ளார். இந்தியச் சாதிய வேறுபாடுகளையும் தீண்டாமையையும் ஆங்கிலேயர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வகையிலும் புகுத்திக்கொள்ளவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

பண்பாட்டு மூலதனச் சுரண்டல்

’நாடகத்தின் வரலாற்றுப் பக்கங்கள்’ எனும் துணைத் தலைப்பில் கோவிந்தராஜன் ஆங்கிலேயர்களால் ஆவணப்படுத்தப்பட்ட மொழிக் கணக்கெடுப்பு, சேகரிக்கப்பட்ட வாய்மொழிக்கதைகள், பழமொழிகள், மொழிபெயர்ப்புகள், சங்கேதச் செயல்பாடுகள் முதலானவற்றைக் கட்டுடைத்து காலனியத்தின் வெவ்வேறு முகங்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

லிங்காயத் சமுதாயத்திலிருந்து கிருத்துவராக மாறிய அன்னா லிபிரேட்டா டி சௌசா எனும் ஆயா கூறிய கதைகளை (மரபு வழியில் கேட்ட கதைகள்) அன்னாவின் உடைந்த (அரைகுறை) ஆங்கிலத்திலிருந்து ‘நல்ல ஆங்கிலத்தில்’ மாற்றி எழுதி, தனதாக்கிக்கொண்டு புகழ்பெற்று, அதற்கான உரிமைத் தொகையையும்(royalty) தான் மட்டுமே பெற்றுக்கொண்ட துரைசானி, மேரி ஃபிரிர். தென்னிந்திய வாய்மொழிக்கதைகளை முதலில் தொகுத்து வெளியிட்டவர் எனும் ‘பெருமைக்குரியவராகக்’ பெயரெடுத்துக் கொண்டவரும் இவரே. மேய்வ் ஸ்டோக்ஸ் எனும் துரைசானியும் ‘துங்குனி’ ‘முனியா’ எனும் இரு ஆயாக்களிடமிருந்து சேகரித்த கதைகளை அந்த ஆயாக்களின் பெயர்களைக் கூட குறிப்பிடாமல் விட்டுவிட்டதையும் பதிவு செய்துள்ளார். உரிய அங்கீகாரமோ, உரிமைத்தொகையோ கொடுக்காமல் ‘தங்களுடையதாக்கிக்’ கொண்ட இச்செயல்பாட்டைப் பண்பாட்டு மூலதனச் சுரண்டல் என்று கோவிந்தராஜன் அடையாளப் படுத்துவது முற்றிலும் சரியே.

கிரியர்சனின் இந்திய மொழிகளின் கணக்கெடுப்பு - பேராசை?

முதன்முதலாக இந்திய மொழிகளை கணக்கெடுக்கும் மிகப்பெரிய பணியை ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (1851-1941) மேற்கொண்டார். இவரது பங்களிப்பைக் குறித்து ’காலனிய அறிவாக்கம்’ எனும் பொருண்மையில் ஜாவீத் மஸ்ஜித் 2019-இல் எழுதிய இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு, கோவிந்தராஜன் “கற்றலின் கேட்டலே நன்று” என்று தலைப்பிட்டு மிக விரிவாக அலசியுள்ளார். வினா நிரல், கதையை மொழிபெயர்த்தல், புதுமையான கிராமபோனைப் பயன்படுத்தி ஒலிகளைப் பதிவுசெய்தல் ஆகிய முறைகளைக் கையாண்டு, இந்திய மொழிகளைக் கணக்கெடுத்து 11 தொகுதிகளை (19 பிரிவுகளாக) வெளியிட்டதையும் விளக்கியுள்ளார். இந்திய மொழிகளைக் குறித்த அறிவாக்கத்தில் இந்தியர்கள் பலர் பங்கெடுத்துள்ளனர் என்பதும் குறிக்க்கப்படுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதிலும் , மொழி மற்றும் நாட்டுப்புறக் கதைகளைப் பதிவு செய்தலிலும், பிற தரவுகளைச் சேகரித்தலிலும் கிராமபோன்களின் தாக்கத்தை மிக விரிவாகப் பேசும் ஆசிரியர் “ (காலனியம்)எந்த மொழியை (அல்லது மொழிகளை) ஆதாரமாக வைத்துக் கொண்டு வளர்ந்ததோ அந்த ஆதாரத்தையும் வெறுமையாக்கியது”(ப்.313) என்று சுட்டிக்காட்டுகிறார். ’இந்தத் தொகுதிகள் கிட்டத்தட்ட எழுநூற்று இருபத்து மூன்று தென்னாசிய மொழி வகைகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இருநூற்று அறுபத்து எட்டு மொழி வகைகளுக்கு அகராதி விவரங்களையும் இலக்கணக் குறிப்புகளையும் இந்தத் தொகுதிகளில் காண முடியும்” என்று பட்டியலிடும் கோவிந்தராஜன் ‘அவரது (கிரியர்சன்) கணக்கெடுப்புத் திட்டம் பேராராய்ச்சித் திட்டம் என்றல்ல, ஒரு பேராசைத் திட்டம் என்றே கூற வேண்டும். ஆனால் அந்த பேராசையையும் பிரிட்டிஷ் அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டது. காலனியப் பேராசையின் இன்றளவும் நின்று வாழும் அடையாளமாக அவை திகழ்கின்றன” (ப.266) என்று கருத்துரைத்துள்ளார்.

காலனியம், அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டுடன் ஆள்வதற்கு அம்மக்கட் கூட்டத்தின் மொழி(கள்), பண்பாட்டு வேறுபாடுகள், வரலாறு, நம்பிக்கைகள், மக்கட் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் புரிந்து கொள்ள பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தியது என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அத்திட்டங்களில் முழு ஈடுபாட்டுடனும், கண்பார்வை மங்கி வந்த நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றிய கிரியர்சன் போன்றவர்களைப் “பேராசைக்காரர்கள்” என்று முத்திரை குத்துவது சற்றே நெருடலாக உள்ளது.

முன்ஷி எனும் தமிழாசிரியர்கள்

’முன்ஷி’, ’முனிஷி’, ’மூன்ஷி’ என்று காலனியர்களால் அழைக்கப்பட்ட முதல்நிலைப் பணியாளர்களான தமிழாசிரியர்கள் குறித்து சம்பாஷணைகள் தாராளமாக உள்ளதாகத் தெரிகிறது. துரை தமிழ் படிப்பதைப் பற்றி விரிவாக விளக்கும் கோவிந்தராஜன், புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ் கற்பித்த நடவடிக்கைகளையும் விளக்குகிறார். ஜூலியா மைட்லெண்ட் எனும் துரைசானியின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, தமிழ் கற்பித்த முன்ஷிகள் அவ்வளவு மதிக்கத் தக்கவர்களாக இருந்திருக்கவில்லை என்பதையும் ஊகிக்கிறார். ஒருபுறம் தமிழை விரும்பிக் கற்றுக்கொண்டு, தமிழின்மீது காதல் கொண்டு பெயரையே தமிழில் மாற்றிக்கொண்ட வீரமாமுனிவர் போன்றவர்களை அறிந்த நமக்கு ஜூலியா போன்றவர்களுக்குத் ’தமிழ் அச்சமூட்டும் மொழியாகவும் தமிழ் ஒலிகள் இனிமையற்றனவாகவும்’ இருந்திருக்கின்றன எனும் உண்மையும் தெரியவருகிறது. முற்றிலும் வேறுபட்ட ஒரு மொழிக் குடும்பத்தின் மொழியை, மொழி கற்றுக்கொள்வதில் விருப்பமே இல்லாத ஒருவர் கற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்படும்போது அம்மொழிமீது வெறுப்பு ஏற்படுவது இயல்பே.

எல்லீஸ், போப் முதலானவர்கள் தங்களது தமிழாசிரியர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தனர்; இருப்பினும் தமிழாசிரியர்கள் ஒரு கட்டத்திற்கு மேல், குறிப்பாக கிராமபோனின் வரவுக்குப் பிறகு, கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஹாமில்டன் ஜட்கின் என்பவர் தமிழாசிரியர்களை மூன்று வகையாகப் பிரித்திருப்பது ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தலின் படிநிலை வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. முதல் வகையினர்- பண்டிதர்களாகவும் தமிழ் கற்பிப்பவர்களாகவும் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் புனித ஜார்ஜ் கோட்டைக்கல்லூரி ஆசிரியர்கள். இவர்களுக்கு நல்ல மதிப்பிருந்தது. இரண்டாம் வகையினர்- பண்டிதர்களாக இருந்து தமிழ் மட்டும் கற்பிப்பவர்களாக மாறியவர்கள். கற்பிக்கும் ஆசிரியர்கள். இவர்கள் கற்றுக்கொள்பவருக்குக் கீழ்ப்படியும் நிலையே இருந்துள்ளது. மூன்றாம் வகையினர்- இளைஞர்கள்; ஆங்கிலம் கற்றவர்கள்; மரியாதையை விரும்புவர்கள். 'அவர்களைப் (ஆங்கிலேயர்களை) போலவே நன்றாக ஆங்கிலம் பேசி அவர்களையே சற்று அச்சப்பட வைத்தவர்கள் இவர்கள். ’வெள்ளை அதிகார’த்தின் விளைவால் உருவான ’கருப்பு அதிகாரம்’ இவர்கள்.

விளிம்புநிலை மனிதர்களின் வரலாறு

’மொழியும் காலனிய உறவுகளும்’ என்னும் இயலில் கோவிந்தராஜன் இந்த சம்பாஷணைகள் பற்றிய தனது பார்வைகளைத் தொகுத்துக் கூறுகிறார். ”சம்பாஷணை நூல்களின் அதிக வரவு, மொழி வரலாற்றில் மட்டுமல்ல பிரிட்டிஷாரின் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இன்னும் நிறைய பக்கங்களை எழுதக் கூறுகின்றன அப்படி எழுதுவதில் சிக்கல் இல்லாமல் இல்லை. ஓர் ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ளைத் துரைமார்களின் ஏடுகள் அல்ல இவை. தகவல்களைத் திரட்டியும் கோர்த்தும் எழுதுவதற்கு. இவை அனைத்தும் ஒரு நாடகம். துரைகள் அன்றாடம் நிகழ்த்திய வெள்ளை நாடகம். நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் (சம்பாஷணையிலும்) ஒரு வரலாறு மறைந்து இருக்கிறது. இந்த நாடகத்தில்தான் மறைந்து (மறந்தும்) விட்ட வரலாற்றைத் தேட வேண்டியிருக்கிறது. வரலாறே தன்னை நாடகப் பக்கங்களாய் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தின் பிரதிகளாய்தான் சம்பாஷணை நூல்கள் தெரிகின்றன. அவற்றை இப்போது வாசிக்கும் போதும் அந்த நாடகம் மீண்டும் உயிர் பெற்று நம்முன் நிகழ்கிறது. எழுத வேண்டிய வரலாற்றுக்கான தரவுகளை அந்த வெள்ளை நாடகம் நிறையவே கொண்டிருக்கிறது. இதைக் காலனியப் பணியாளர்களின் வரலாறு என்றும் கூறலாம்(ப.390-91)

துரையின் சமையல்காரர்கள் பெரும்பாலும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் கோவிந்தராஜன், "பழைய வரலாறுகள் அழுத்தி வந்த பிறப்பின் தீட்டை வைத்து துரைகள் அவர்களைப் புறக்கணித்துவிடவில்லை. இதுவே ஒரு சமநிலை (ப.395…

காலனியப்படுத்தப்பட்டவன் தனது சுயத்தையும் அடையாளத்தையும் காலனியப்படுத்தியவனிடம் இருந்து பெறுகிறான்(ப.395).

கோவிந்தராஜன், காலனி நீக்கம் (de-colonization) தேவையா எனும் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பி, தான் அதற்கு எதிரானவன் அல்ல என்று கூறுவதோடு, வரலாற்றுப்பக்கங்களில் எந்த இடமும் கொடுக்கப்படாமல் இருந்த விளிம்புநிலை மனிதர்களுக்குக் காலனியக் காலகட்டத்தில் கிடைத்த அடையாளமும் அங்கீகாரமும் இல்லாததாகி ஒன்றுமில்லாததாகி விடக்கூடுமே எனும் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்.

காலனி நீக்கம் செய்தால் சிலர் அடையாளம் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ’முன்ஷி’ எனும் தமிழ் ஆசிரியர்களைக் காட்டுகிறார். "தமிழ் கற்பித்தல் என்னும் தொழில் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் எப்படி பார்க்கப்பட்டது? அப்படி ஒரு தொழில் அரசர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டிருந்ததா? வடமொழி வல்லுநர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களும் நிவந்துகளும் எந்தத் தமிழ் வல்லுநர்களுக்கும் (வல்லுநர்க்கும்) கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை… இக்கல்வெட்டுகளும் இலக்கியங்களும் இவை பற்றி மௌனம் காக்கின்றன... தமிழ் அரசர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கான வெளியைக் கொடுக்கவில்லை… காலனி நீக்கம் செய்யப்படாத போதே தமிழாசிரியர் வரலாற்றை அறிய முடிகிறது. அது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருந்தாலும் அந்தக் கேலியும் கிண்டலும்தான் தமிழாசிரியர்களுக்கான ’வைராக்கியத்தை’யும் கொடுத்திருக்கிறது” ப.401.

காலனிய அதிகாரிகளின்(துரைகளின்) தமிழ்ப் பயன்பாடு குறித்து, தரவுகளையும், தக்க சான்றாதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு விமர்சனப் பார்வையுடன் கூடிய ஆய்வு நூலாக, ஆற்றொழுக்கான நடையில் எழுதப்பட்டுள்ள வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும் நூலில் முத்தாய்ப்பாக, “(காலனியம்) வன்முறையும் மாயக்கவர்ச்சியும் ஒரு சேர உடையது. போர்களும் கொலைகளும் கொள்ளைகளும் ஒருபுறமும் சுயத்தின் எழுச்சியும் அடையாள உருவாக்கமும் அங்கீகாரமும் புதைக்கப்பட்ட அறிவு மரபுகளின் வெளிப்படலும் நவீனமும் நவீனத்தால் வரலாற்றில் ஓரங்கட்டப்பட்ட குரல்களின் ஒலிப்புகளும் இன்னொரு புறமும் காலனியத்தில் உள்ளன” என கோவிந்தராஜன் முடித்திருப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒரு முன்வைப்பு. வரலாறு ஒவ்வொரு கட்டத்திலும் சில பல வடுக்களையும், ஒரு சில படிப்பினைகளையும், புதிய புரிதல்களையும் விட்டுச்செல்கிறது. வரலாற்றின் எந்தப் பக்கத்தையும் புறக்கணித்துவிட முடியாது. சமத்துவமான, ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் ‘அந்நியர்களாக’வே இருப்பினும் நல்லதை ஏற்று அல்லதை ‘நீக்கி’ முன்செல்வதே நம்முன் உள்ள பாதை.

- கோ.பாலசுப்ரமணியன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்