'பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்’ என்ற நூலின் மூலம் ந. முருகேசபாண்டியன் நிகழ்த்துகின்ற விசாரணைகள் ஆய்வுலகில் கவனம் கொள்ள வேண்டியதாகும். அவர், பழந்தமிழ் இலக்கியத்தில் கட்டமைக்கப்பட்ட அறமும் விதிகளும் என்ற கட்டுரையின் மூலம் அரசியல் சார்ந்ததாகச் செய்துள்ள விசாரணை முக்கியமானது. இலக்கியப் படைப்புகளில் ஒடுக்கப்பட்டோர் பற்றிய பதிவுகள் நிராகரிக்கப்படுவது என்பது நுண்ணரசியலாக இயங்குவதை, தமிழ் இலக்கிய வரலாற்றில் காணமுடிகிறது. குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளில் வருணப் பாகுப்பாட்டின் வரம்பிற்குள் உட்படாத, தீண்டத்தகாதவர்கள், ஆண், பெண் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட உடல்களாக புறக்கணிக்கப்பட்டனர். ‘பாலினம், பிறப்பு குறித்த கற்பிதங்களைத் தகர்க்கின்ற ஆவேசமான மொழியில் சித்தர்களின் சொல்லாடல்கள்’ அமைகின்றன என்கிற நூலாசிரியரின் மதிப்பீடு, சமூக அக்கறை சார்ந்தது.

Pazhanthamizh Ilakkiyathil Vilimbunilaiyinerமனித உடல் ஆன்மீகத் தேடலுக்கானது. உடலைப் புனிதமாகச் சித்தரிக்கின்ற சமயம், ஆணுடல் பெண்ணுடல் அல்லது அரவாணி உடல் ஆகியவற்றை இலக்கியங்களில் கீழானதாக் கட்டமைத்திருக்கிறது. அரவாணி உடல் இறைவனின் அம்சமாகவும் உருவாக்கம் செய்யப்படுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. கடவுள், சமயம், மன்னன் என்று இலக்கியப் போக்காக கட்டமைக்கப்பட்ட சிற்றிலக்கியம் தமிழகத்தில் நிலவிய அரசியல் பொருளாதார நிலைமையை எடுத்துரைக்கின்றது. ஆனால் இங்கு விசாரணை செய்யப்பட வேண்டியது விளிம்புநிலையினரின் வாழ்க்கை, சமய சமரசத்திற்குட்பட்ட நிலை, மொழி, அரசியல் ஆகியவையாகும். தூது, பள்ளு போன்ற இலக்கிய உரையாடல்களின் வழி சமயம், மொழி, மன்னன் ஆகிய கருத்தியல்கள் எதிர் விசாரணை செய்யப்பட வேண்டியவை என்ற கருத்து கவனத்திற்குரியது.

சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகளை விசாரணைக்குட்படுத்திய பட்டினத்தார், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை எழுத முன்வராத பெண்கள் நிலை, குறித்த வைதீக சமய அரசியல் அடிப்படையில் ஒற்றைத்தன்மையைச் செலுத்தி அதிகாரம் செய்வதை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்கிறார் முருகேசபாண்டியன்.

இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான இடம்

செய்யுள் வடிவத்திற்கும் அதிகாரத்திற்குமானத் தொடர்பைக் கூறும்போது, “தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் என்பதை வறையறுக்கும் போது, சாதி, பாலினம், பொருளாதாரம் முக்கிய இடம் வகிக்கின்றன. பிறப்பு அடிப்படையில் மனித உடல்கள் பேதப்படுத்தப்பட்டிருப்பது அனிச்சைச் செயல்போல் சமூகத்தில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பால் அடிப்படையில் பெண் உடல் தீட்டு என்று பெண் சமூகம் நம்புமளவிற்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. மலை, காடு போன்ற பகுதிகளில் வாழ்ந்த சித்தர் மரபினர், மருத்துவம், சோதிடம், சிற்பக்கலை போன்ற கருத்தியலைச் செய்யுள் வடிவில் கட்டமைத்தனர். செய்யுள் வடிவம் என்பதே அறிவு சார்ந்த அதிகார மையமாக உருவானது. இந்தப் போக்குச் சோழர் காலத்தில் உச்சம் பெற்றது. பின்னர் வந்த மராட்டியர், நாயக்கர் காலத்தில் வலுவடைந்தது” என்கிறார் முருகேசபாண்டியன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம், சிற்றிலக்கிய காலம் என்ற பகுப்பு முழுமையும் வைதீக சமயம் சார்ந்த குரல்களாக ஒலிப்பதை அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்டோர்க்கான வாழ்வியலை விதிகளாக வரையறுக்கப்பட்டதன் வழி, வைதீக சமயம் மேல்தட்டு மக்களுக்கான இலக்கியப் பதிவு அரசியலை முன்வைத்தது. சங்ககாலம் தொட்டு குடும்ப, போர் மற்றும் பொருளுக்காகப் பிரிந்த தலைவன் வருகைக்காகப் பெண் காத்திருத்தல் மேன்மையாக கருத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் “கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன் கண்படுமே” என்ற எதிர்ச் சொல்லாடலை முன்வைக்கிறார். சாதி, பால் என்ற ஏற்றத்தாழ்வுகளைக் கல்வியால் மட்டும் மாற்ற முடியும் என்ற கூற்று சங்க காலத்திலேயே எழுந்தது.

இளங்கோவடிகள் பொற்கொல்லனைப் பற்றி கூறும்போது, 'விலங்கு நடை செலவின்' என்கிறார். அரச மாபினரான இளங்கோவடிகளுக்கு, உடல் உழைப்பினரான பொற்கொல்லர் விலங்கிற்கு நிகராகவே கருதப்படுகிறார். மணிமேகலையில் சுடுகாட்டைப் பற்றி கூறும்போது வேறுபாடுகள் நிறைந்த சுடுகாட்டைக் காணமுடிகிறது. சித்தர்கள், சமய இலக்கியங்கள் முன் வைக்கும் கருத்தின் வழி ஒடுக்கப்பட்ட இடம் இலக்கியங்களில் மறைந்து கிடைப்பதை அறிய முடிகின்றது.

தமிழ் இலக்கண நூல்களுள் திவாகர நிகண்டு முன்வைக்கும் அரவாணியின் தோற்றம், இயல்பு, பேச்சு போன்றவற்றின் மீது கூறப்பட்டுள்ள பதிவுகள் முக்கியமானவை.

1.      பெண்டகன் - பெண் தன்மை மிக்கவன்

2.      பேடி - ஆண் தன்மையற்று பெண்ணுருவம் மிக்கவள்

3.      நபுஞ்சகன் - ஆண், பெண் அல்லாதது

4.      சண்டன் - பால் உணர்வற்றவன்

பொருள் தருவது மட்டுமின்றி, நச்சுப் பேச்சும் நல்லுரை ஓர்தலும், வார் அணி கொங்கையை வலிய நலிந்தும், இரங்கியும், அழுதும், அயர்ந்தும், அருவருத்தும் போன்ற குணங்களை நிகண்டு நூல் முன்வைப்பதன் வழி அக்காலச் சமூக அமைப்பில் அரவாணிகள் குறித்த பார்வையை அறியமுடிகிறது.

“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்” என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஆண், பெண், அலி மூவரும் சமம். இந்தக் கருத்தின் வழி அரவாணிகளின் அங்கீகாரம் வளர்ச்சியடைந்தமையக் காணமுடிகிறது. எனவே, கால மாற்றத்தில் அரவாணிகள் பற்றிய புரிதல் விரிவடைந்துள்ளமையை அறிய முடிகிறது. நடப்புக் காலத்தில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரவாணிகளுக்கான இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு என்று முன்னுரிமை கொடுத்தது கவனத்தில்கொள்ள வேண்டியதாகும். தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரவாணிகளுக்குக் கல்விக்கடன், அரவாணிகளில் சிறந்த எழுத்தாளருக்கு விருது, வீட்டாரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு ‘அரண்’ என்ற இல்லம் என்று அரவாணிகள் நலன்களுக்கான செயல்பாடுகளைக் காணமுடிகிறது. அரவாணிகள் என்பதற்கு மாற்றாகக் கலைஞர் அறிமுகம் செய்த திருநங்கை, திருநம்பி போன்ற சொற்கள் பின்னர் புழக்கத்திற்கு வந்துள்ளன.

பொருளாதாரக் கட்டுமான பின்புலத்தில் தான் ஒரு சமுதாயமும் வலுவான அரசியல் ஆதிக்கம் பெறுகின்றது. சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் ஆள்வோர்க்கும் ஆளப்படுவோர்க்கும் இடையிலான உறவுகளைத் தீர்மானிக்கின்றன. இப்பொருண்மைகளின் பின்னணியில் சங்ககால மூவேந்தர்கள், களப்பிரர், பல்லவர், சோழர், நாயக்கர், ஐரோப்பியர், டச்சுக்காரர், பிரஞ்சுக்காரர், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆகிய அதிகார மையங்களின் வழி இலக்கியங்களின் வடிவங்களும், வகைமையும், பாடுபொருளும் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதை உய்த்துணர வேண்டும்.

அதிகார மையங்களின் வழி உருவான உடல்கள், பாரி, பேகன், அதியமான், அவ்வையார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்பன போன்றவர்கள் சமூக விழுமிய உருவாக்கத்தின் கூறுகள். சமகாலத்தில் கதைகளின் வழியாக அறத்தின் ஆதிக்க சக்தியாக சமயங்கள் ஊடுருவதைக் காணலாம். உலா, பரணி, பிள்ளைத்தமிழ், பள்ளு, கலம்பகம், தூது, குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தனக்கான அதிகார உடல்களையும் அடிமைக் கருத்தியலையும் முன்னெடுத்து நகர்ந்தன. அதிகார உடல் புனிதமாக்கப்படுவதும் அதற்கு இணங்க மறுக்கும் உடல் அல்லது அதிகார எதிர் நிலை உடல்கள் அடிமையாக்குவதும் சமய சங்கிலிகளால் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளன.

சமயங்கள், உற்பத்தி உறவுகளின் தாய்மையாகக் கற்பிக்கப்பட்டன. அதனால் தான் நானூறு ஆண்டுகளுக்கு மேல் செல்வாக்குப் பெற்றிருந்த சிற்றிலக்கியம், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பிடித்தது. தமிழ்விடு தூது இலக்கியக் கட்டமைப்பின் வழி தமிழ் மொழிக்கான அதிகார உடல் தேவைப்பட்டது என்பதை உணரவேண்டும். வேற்று மொழி அரசியல் சூழலில் சமஸ்கிருதம், தெலுங்கு ஆதிக்கம் பெற்றது. ‘விறலிவிடு தூது’ மூலம் நாயக்கர்கள் பெற விழைந்த பொருளியல் வளத்தை அறிய முடிகிறது. இதே காலத்தில் கிறித்தவர்கள் காட்டிய பொருளாதரப் பின்புலத்தில் மக்கள் மதம் மாற்றம் அடைந்ததையும் காணமுடிகிறது. இந்தச் சூழலில்தான் மொழிக்கான அதிகார உடல் தேவைப்பட்டது. புலவர் யார் என்று தெரியாத ‘தமிழ் விடு தூது’ மூலம் தமிழ் மொழிக்கான அதிகாரப் பேச்சுக் கட்டமைக்கப்பட்டது. நாயக்கர் கால அரசு அதிகாரத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு, வரி வசூலால் மக்கள் பட்ட அவதி, தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை போன்ற காரணங்களால் மக்கள் தன்னெழுச்சியாகத் தமிழ் மொழி குறித்த அரசியலைத் தமிழ்விடு தூது படைப்பின் வழி முன்னெடுத்தனர்.

சமூக உறவுகளையும் உற்பத்திகளையும் அதிகார மையங்கள் உருவாக்க முனைந்தாலும் சில நேரங்களில் மக்களின் எழுச்சியே வெற்றி பெறும் என்பதை வரலாறு பல இடங்களில் உணர்த்திச் செல்கின்றது. இந்த வகையில் சிற்றிலக்கியத்தின் மொழி, சமய அரசியல், பொருளாதார நிலை போன்றவற்றை இலக்கிய நுண் வாசிப்பின் வழி உய்த்துணர வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் ஆணின் துய்ப்பு நிலமானப் பெண்ணுடல்

மதங்களின் பிடியில் சிக்கியிருந்த தமிழக நிலப்பரப்பு, பதினொன்றாம் நூற்றாண்டு அளவில் அரசியல் மேலாதிக்கப் போர்களில் சிதலைமடைந்து கிடந்தது. இக்கால கட்டத்தில் வைதீக சமயம் பெண்ணுடலைத் தீட்டு என ஒதுக்கியது. சோழப்பேரரசு, தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆடலில் சிறந்த நானூறு பெண்களைத் தேவரடியார்களாக உருவாக்கியிருந்தது.

குடும்பப் பெண்கள் கல்வி கற்காத சூழலில், தேவரடியார்கள் தமிழுடன் சமஸ்கிருதமும் கற்றிருந்தனர். இவர்களே சொந்தமாகப் பாடல் எழுதி பாடியும் வந்தனர். நுண்கலைகளில் வல்லவராகத் தேவரடியார் பெண்கள் சிறந்து விளங்கினர். ஏனைய பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழலில், “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற பாடல் மூலம், நாவினாலும் மனதினாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் கல்வியைக் கற்றுக்கொள்ளலாம் என்ற அவ்வையின் கூற்று மொழித் திணிப்பிற்குச் சவுக்கடி போன்றது. தேவையான இடங்களில் தேவையான மொழியைப் பயிற்சி செய்தல் போதுமானது. இதற்காகக் கல்விப்புலங்களில் கட்டாயமாக அதிக மொழிகளைப் பெருக்க வேண்டிய அவசியமில்லை. பெண் கல்வி மறுக்கப்பட்ட அன்றையச் சமூகத்தில் சமயங்களின் உள் அரசியலை கட்டுடைத்த பெண் அவ்வையார் ஆவார்.

கி.பி. பதினைந்தாம் நூற்றண்டில் உத்தரநல்லூர் நங்கை என்ற பெண் கவிஞர் பாய்ச்சலூர் பதிகம் என்னும் நங்கை பதிகத்தில், ‘ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே’ என்ற கருத்தை முன்வைக்கிறார். வைதீக சமயங்கள் கட்டமைத்த அனைத்து ஆகமங்களும் சமூகத்தில் நிலவிய நோய் என்பதை நங்கையாரின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. பிறப்பின் அடிப்படையில் உடல்களுக்கு ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்த வைதீக சமயத்திற்கு எதிராகப் பெண்களும் சாதியும் என்ற எதிர்நிலை வாதத்தைச் சமகாலத்தில் நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை ஆண்களின் துய்ப்பு நிலமாக பெண்ணுடலைக் கட்டமைத்தது வைதீக சமயம். இரண்டு முக்கியமான கருத்தியலைச் வைதீக சமயம் சமூதாயத்தில் முன்வைத்தது.

1.    பெண்ணுடல் தீட்டு; ஆணின் பாலியல் துய்ப்புக்கானவள் பெண்.

2.    சாதி ஏற்றத்தாழ்வுகள்; ஆணுடல், பெண்ணுடல் இரண்டும் அதிகார மையங்களுக்கு அடிபணிய வேண்டும்.

சமூக அமைப்பில் கல்வி பெண்களுக்குப் பெரிதும் மறுக்கப்பட்டது. எனவே, பெண்ணுடல் ஆணின் துய்ப்பு நிலமாக மாறிய கருத்தியல், ஒருவகையான கட்டமைப்பு .இதனடிப்படையில், பெண்களின் குரல் எதார்த்தலிருந்து தொடங்கிக் கவிதை மொழிவரை பெண்கள் வெளியில் வர இயலயவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருப்பத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண்மொழிப் புனைவாக்கம் செய்யப்பட்டது. நவீன மொழி வளர்ச்சியில் பெண் சமய அரசியலில் இருந்து விடுபட முடியவில்லை. பெண்ணுடல் ஆணின் துய்ப்பு நிலமாகச் சமகாலத்திலும் நிலவுவது மட்டுமின்றிப் பெண் குரல் நசுக்கப்படுவதையும் காணமுடிகிறது. பெண் கவிஞர்களின் மொழி, நவீன வாசிப்பில் உயித்தெழும் சூழலில்கூடப் பெண்ணுடல் ஆணின் துய்ப்பு நிலமாகப் பரவிக்கிடப்பதைப் பார்க்க வேண்டும். பல நூறாண்டுகாலமாகக் ‘கணவனின் கால்களைப் பெண் தொழுது வணங்கி, பெய் என்றால் மழை பெய்யும்’ என்ற சிந்தனை மரபில் தொடங்கி, ‘ஒளவையின் மகள் நான், எனது மொழியை நானே பிரசவித்துக் கொண்டு வெளியே வருகிறேன்’ என்ற பெண் மொழி வரை வளர்ந்தாலும் பெண்ணுடல் நசுக்கப்படுவது, சமூக அமைப்பில் தொடர்கின்றது.

நிறைவாக

ந.முருகேசபாண்டியன் விளிம்பு நிலை குறித்த விசாரணையில், ‘தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட அறங்களும் விதிகளும் பாகுபாடுடைய சமூகத்தை உருவாக்கியது’ என்ற கருத்தை முன்வைக்கிறார். பெண், சாதியினால் நசுக்கப்பட்டோர், கல்வியற்றோர் போன்றோர் ஒடுக்கப்பட்டவர்களாகச் சமூகத்தில் பரவியிருந்தனர். அரவாணிகள் சமூகத்தில் ஆரம்பத்தில் சிறப்புப் பெற்று, சமயங்களுக்குள் நசிவு பெற்று, பின்னர் வளர்ச்சி பெறுகிற நிலையை இலக்கியத்தில் காணமுடிகிறது. மொழி, சமயம், சமூக மதிப்பீடு, சித்தர் மரபு போன்றவை விளிம்புநிலை மீட்டுருவாக்கத்தின் காரணிகளாக அமைந்தன. ஆணுடல், பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட சமய அரசியல், விளிம்பு நிலை உருவாக்கத்தில் முக்கியக் காரணிகள் என்ற முருகேசபாண்டியனின் மதிப்பீடு, ஆய்விற்குரியது. சமணம், வைதீகம், உருவாக்கிய மக்கள் வாழ்வியல் முறை போன்றன விளிம்பு நிலையின் உச்சபட்ச வளர்ச்சிக்கு வழிவகுத்திட்டவை. விளிம்பு நிலை என்பது சமூக அமைப்பில் காலந்தோறும் உருவாகிக்கொண்டே இருக்கும். இவற்றின் ஊடாக மக்கள் வாழ முயற்சிக்கின்றனர். விளிம்புகளற்ற சமூக அமைப்பை உருவாக்குவதில் அரசியல் அதிகாரம், சமய அதிகாரம் எதிரெதிர் நிலையில் இருந்தால் மட்டும் சாத்தியமாகும். தற்காலத் தமிழ்நாட்டு அரசியலில் சமய அதிகாரத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இருக்கும் எதிர் நிலை வாதங்கள் இருப்பதுபோல் உலகம் முழுவதும் சாத்தியமானால் விளிம்புகளற்ற சமூக உருவாக்கம், குறைய வாய்ப்புண்டு; விளிம்புநிலையினரின் வலி குறைவாக வாய்ப்புள்ளது. விளிம்புநிலையினர் குறித்து கண்டறிந்திட ’பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்’ என்ற நூல் அடிப்படையானதாக விளங்குகிறது; தமிழாய்வுக் களத்தில் புதிய பேச்சுகளை உருவாக்கிட முயலுகின்றது.

- முனைவர் சீ. சரவணஜோதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி மதுரை.