முனைவர். கோ. ஜெயக்குமார் அவர்கள் களஆய்வின் வழி தகவல்களைத் திரட்டி எழுதும் ஆய்வாளர். எந்த தரவுகளையும் அப்படியே பதிவு செய்யாமல் அதனை பலரிடம் கேட்டறிந்து தெளிவுபெற்று, அதன் உட்பொருளை உறுதிப்படுத்தியப் பின்னரே ஆய்வுக் கட்டுரையாக பதிவு செய்யும் வழக்கத்தைக் கொண்டவர். அனைவருக்கும் புரியும்படி எளிமையாக எடுத்துரைக்கும் திறன் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முனைவர்பட்டம் பெற்ற இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் கவனம் பெற்ற ஆய்வாளராவார். அச்சு - காட்சி ஊடகங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற இவர், வெளியிடும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதுபோல்; எடுத்துக் கொண்ட ஆய்விலும் உண்மையைத் தேடித் தேடி பயணிப்பவர். இதுவே இவரது ஆய்வின் பலம். இவர், நா. வா.வின் கதைப்பாடல்களைத் தொகுத்து முழுமையான பதிப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள் முதலான இடங்களில் சமூகவில் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். பேராசிரியர் நா. வானமாமலையின் வழியில் ஆய்வுக் களங்களைத் தேர்வு செய்து மார்க்சிய அணுகு முறையில் தனது கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

jayakumar book on vaanamaamalaiநா. வானமாமலையின் ஆராய்ச்சிப் பணிகள் என்ற தலைப்பில் முனைவர் கோ. ஜெயக்குமார் உருவாக்கிய இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். இந்நூலுக்கு மறைந்த தோழர். தா. பாண்டியன் வாழ்த்துரை வழங்கியுள்ளார் என்பதன் மூலம் இந்நூலின் தேவையை அறியலாம்.

தமிழ் ஆய்வு வரலாற்றில் மரபுவழிப்பட்ட ஆய்வு முறையும் இயக்கவியல் பார்வையிலான ஆய்வு முறையும் தொடரவே செய்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக நாடுகளிடையே விவாதிக்கப்பட்ட பொருள் முதல்வாத அடிப்படையிலான கருத்தாடல்கள் தமிழ் ஆய்வுலகிற்கு மெதுவாகவே அறிமுகமாயின.

காலனி ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் பெற்ற அரசியல் புரிதல் உணர்வும் காலனிய கல்வியின் வழி உருவான அறிவுப் பண்பும் தமிழ் மொழி குறித்தும் தமிழ்க் கல்வி குறித்தும் சிந்திக்கின்ற ஆய்வாளர்களை உருவாக்கியது. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் வெடித்த ரஷ்யப் புரட்சியானது உலக நாடுகளிடையே பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. சுரண்டலுக்கு எதிரான மாற்று சமூக அமைப்பு குறித்தும் அதனை கட்டமைக்க உதவும் மார்க்சியத்தின் தேவை குறித்தும் சிந்திக்க வைத்தது. அதன் தொடர்ச்சியாக உருவான இயக்கங்கள் மற்றும் அதன் கலை வடிவங்களும் அவற்றையே பேசு பொருளாகக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் 1920 களுக்குப் பின் உருவான சீர்திருத்த அரசியல் பண்பாட்டுச் சிந்தனைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான கருத்தியல்கள் மார்க்சியத்தின் தேவையை உணர வைத்தது. தமிழகத் தோழர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம், பாலதண்டாயுதம், பி. ராமமூர்த்தி, சிந்தன் முதலான பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் செயல்பாடுகள் தமிழக அரசியலின் கருத்தியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக தமிழில் வர்க்கப் போராட்ட இலக்கியங்களைப் படைப்பது மாற்று அரசியல் பேசும் பிரதிகளையும் ஆய்வுகளையும் உருவாக்குவது எனப் புதிய அறிவுப் புலச் செயல்பாட்டாளர்கள் தோற்றம் பெற்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினரின் கருத்தியல் களங்கள் ஓர் இழையாகவே ஒரு வழிப் பயணத்தைத் தொடங்கினாலும் பின்னாட்களில் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் தங்களுக்கான புதிய ஆய்வு உலகத்தினைக் கட்டமைத்தனர். பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஒவ்வொன்றையும் கேள்விக்கு உட்படுத்துவது, ஒரு பிரதி பேசும் வர்க்க அரசியலைக் கண்டறிவது எனப் புதிய ஆய்வு அணுகுமுறைகள் வளர்ந்தன. இத்தன்மைகளின் வழி உருவான ஆய்வாளர் தான் பேராசிரியர். நா. வானமாமலை. தொடர்ச்சியாக அவரின் ஆய்வுச் செயல்பாடானது மார்க்சிய ஆய்வு உலகிற்கு அளவிட முடியாத பங்களிப்பினைச் செய்தது.

பேரா. நா. வானமாமலை பயணப்பட்ட ஆய்வுக் களங்களை அறிவதும் அவரின் செயல்பாடுகளைத் தொகுப்பாகப் புரிந்து கொள்வதும் இன்றைய ஆய்வுலகத் தேவையாகும். இதனை நிறைவேற்றும் விதமாகமே இந்நூலை முனைவர் கோ. ஜெயக்குமார் உருவாக்கியுள்ளார். எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு ஏற்ப அவரின் பரந்துப்பட்டத் தேடலும், அதனைப் பதிவு செய்த முறைமையும் பாராட்டத் தக்கதாகும். நா. வா. எவ்வாறு இடதுசாரி அரசியலுக்குள் பயணப்பட்டார் என்பதையும், தொடர்ச்சியாக அவரது ஆய்வுப் பொருண்மைகள் குறித்தும் நூலாசிரியர் விளக்குகின்றார்.

இடதுசாரி அரசியல் பாதை

1917 ஆம் ஆண்டு பிறந்த நா. வானமாமலை வைதிக மையப்பட்ட குடும்பச் சூழலை மீறி வளர்ந்த ஒரு தோழராவார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியினை வாழிடமாகக் கொண்டு வளர்ந்த அவர் கல்லூரிக் காலத்தில் டால்ஸ்டாய், வால்ட்விட்மன், கீட்ஸ், பாரதி முதலானோர் பிரதிகளை வாசிக்கத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 1935 இல் இடதுசாரி இயக்கத் தலைவர்களான ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் ஆகியோரின் உரைகளைக் கேட்டு அதன் வழி பெற்ற புரிதல் அவரை மார்ச்சிய இயக்கத்தின்பால் நகர்த்தியது.

1937 ஆம் ஆண்டு நெல்லையில் தொடங்கப்பட்ட சோஷலிஸ்ட் இளைஞர் சங்கத்தின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டார் நா. வா. தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் நெருக்கடிகளையும், சாதி மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் மார்க்சியத்தின்வழி புரிந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக தோழர் டி. இராமன் கொடுத்த இடதுசாரி அரசியல் நூல்கள் நா. வானமாமலையை தீவிர இடதுசாரி தோழராக்கியது. மார்க்சியத்தின்வழி வர்க்க அரசியலை ஆழமாகப் புரிந்து கொண்ட அவர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பினை ஆராயத் தொடங்கினார். அவரது எழுத்துகளும் அதனையே பேசின. பல ஊர்களில் மார்க்சிய வகுப்புகளில் கலந்து கொண்ட நா. வா. மார்க்சிய தத்துவத்துடன் தமிழ் இலக்கியப் பரப்பினையும் ஆய்வுப் பொருளாக்கினார். நெல்லை சிந்துப்பூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளையின் தொடர்பு நா. வானமாமலையினை அரசியல், பொருளாதாரம், சமூகவியல் முதலானத் தளங்களை மார்ச்சிய அடிப்படையில் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது.

மார்க்சிய ஆய்வுகள்

நா. வானமாமலை மார்க்சிய வழிப்பட்ட ஆய்வாளராக எவ்வாறு உருப்பெற்றார் என்பதை இந்நூலின் ஆரம்பப்பகுதி பதிவு செய்கிறது. மேலும் அவரது எழுத்துகளை அதன் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று வகைமைகளில் பிரிக்கின்றது. முறையே அவை,

1.      மார்க்சியக் கொள்கையும் பண்பாட்டாய்வும்

2.      செவ்விலக்கிய ஆய்வுகள்

3.      நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்

மார்க்சிய நோக்கிலான ஆய்வு முறையில் நா. வானமாமலையின் எழுத்துகள் நூலாகவும் தனிக் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ள நிலையில், கிடைக்காத பல கட்டுரைகளைத் தேடிப் பிடித்து தொகுத்து அதனையும் ஆய்வுக்குட்படுத்துகிறது இந்நூல்.

மார்க்சியக் கொள்கைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் நா. வா. எழுதிய பின்வரும் நூல்கள் இன்றுவரை மார்க்சிய வகுப்புகள் எடுப்பவர்களுக்கு உதவியாக உள்ளன.

o       மார்க்சிய சமூகவியல் கொள்கை

o       மார்க்சிய அழகியல்

o       மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

o       இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்

o       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் கட்சியின் வரலாறு

நா.வா.வின் மார்க்சிய உரைகள் பற்றி அறிய முடியாத நிலையில் அவை குறித்தான எதிர்காலத் தேடல் மேலும் அவரது செயல்பாட்டினை அறிய உதவும்.

சாதி, சமய ஆய்வுகள்

இந்தியத் தத்துவ மரபு குறித்து தேவிபிரசாத் சட்டோபாத்தியாய ஆய்வுகள் அறிவுலகில் தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், நா. வா. முன்னெடுத்த இந்திய தத்துவங்கள் குறித்த ஆய்வுகளும் அதனை மேலும் விளக்கப்படுத்துவதாக இருந்தது. வேதத் தத்துவங்களையும் அதற்கு எதிரான வேத மறுப்பு பௌத்த மரபுகளைப் பற்றி நா. வா. எழுதிய நூலும் இன்றுவரை விவாதிக்கும் ஆய்வுப் பொருளாகவே உள்ளது.

  • மணிமேகலையில் பௌத்தம்
  • பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள்
  • பரபக்க லோகாயதம்

முதலான அவர் எழுதியக் கட்டுரைகள் தமிழரின் சமயக் கோட்பாடுகளை விளக்குவதாகும். சாதியம் மற்றும் தமிழக வர்க்கப் போக்குகளின் வரலாற்றை தத்துவ மரபுகளில் இருந்தும் பண்பாட்டு நடைமுறைகளில் இருந்து சுட்டிக் காட்டி நூல்களையும் கட்டுரைகளையும் நா. வா. தொடர்ச்சியாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள், தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும், சோழர் ஆட்சியில் நிலவுடைமை வளர்ச்சியும் உழவர் போராட்டங்களும், கோயில் நிலவுடைமை முதலான கட்டுரைகளை அதற்கான சான்றுகளாகப் பார்க்கலாம்.

வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை வேறுபடுத்திக் காட்டி அவர்கள் எவ்வாறு சாதிகளாகவும் வர்க்கங்களாகவும் பிரிந்துள்ளனர் என்பதையும், ஒவ்வொரு தொழில் பிரிவினரை அழைக்கும் பெயர்கள் பின்நாட்களில் சாதிப் பெயர்களாக மாற்றம் பெறுவதையும் ஆய்வு ரீதியாக நா. வா. விளக்கிச் சொல்வதை இந்த நூல் பதிவு செய்கின்றது.

தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூல் முருக வணக்கத்தின் வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கின்றது. இந்நூல் குறித்து ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி மதிப்பிடுகையில் ’ஆராய்ச்சி உலகில் இந்நூல் மிகப்பெரிய வரவேற்பையும் பயன்பாட்டையும் தரும்’ என்கிறார்.

படைப்புக் கதைகள், தாய்த்தெய்வ வணக்கம் மற்றும் நடுகல் வழிபாட்டு மரபு குறித்து விரிவான கட்டுரைகளை எழுதிய நா.வா. அவை கால வளர்ச்சியில் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளன என்பதை இயக்கவியல் பார்வையில் விளக்கிச் செல்கிறார்.

ஆராய்ச்சி இதழ் மற்றும் பிற இதழ்களில் நா. வா. எழுதிய பல கட்டுரைகளையும் இந்நூல் ஆசிரியர் தேடி எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது இந்நூலின் பலமாகும்.

தமிழர் பண்பாட்டு வரலாற்று எழுதும் ஆய்வாளர்களுக்கு நா. வா.வின் படைப்புகள் விரிவான தரவுகளை அளிக்கின்றன.

இலக்கிய ஆய்வுகள்

தமிழ் இலக்கியங்களை நா.வா. எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பதனை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:

  • புதுக்கவிதையில் உள்ள முற்போக்கு கருத்துகளையும் பிற்போக்கு கருத்துகளையும் கவிதையியல் ஆய்வில் விவரிக்கின்றார்.
  • இலக்கியம் என்றால் என்ன? இலக்கிய ஆராய்ச்சி என்றால் என்ன? என்பது குறித்து பதிவு செய்கின்றார்.
  • தமிழ் உரைநடையின் வரலாற்றை கால முறைப்படி விவரித்து அதன் வளர்ச்சிப் போக்கினை எடுத்துரைக்கின்றார்.
  • இலக்கியத்தின் உள்ளடக்கம் குறித்தும் அதன் உருவம் குறித்தும் தமிழில் முதன்மையான ஆய்வை இவர் மேற்கொண்டார்.

தமிழ் இலக்கியங்களைக் கோட்பாட்டு ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உட்பொருளை நா. வா. திறம்பட விளக்குகிறார்.

வள்ளலார், பாரதி, பாரதிதாசன் முதலானோர் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி விவாதிக்கும் நா. வா. பிற ஆய்வாளர்களின் நூல்களுக்கு முன்னுரைகளையும் எழுதியுள்ளார். அதனையும் மார்க்சிய அணுகுமுறையிலேயே விவாதிக்கின்றார்.

அறிவியல் தமிழ்

நா. வா. மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளை எளிய மொழிநடையில் கதை சொல்வது போன்று சில நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதில் எளிதாகப் புரிவதற்காகப் படங்களையும் சேர்த்துள்ளார். நா. வா. எழுதிய அறிவியல் நூல்களாவன,

1. இரும்பின் கதை. 2. விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி, 3. ரப்பரின் கதை,
4. காகிதத்தின் கதை முதலானவைகளும். 1. நிலக்கரி,
2. பெட்ரோலியம், 3. காலமும் தூரமும், 4. சூரியன் பேசுகிறது, 5. தமிழும் விஞ்ஞானமும் முதலானக் கட்டுரைகள் குறிப்பிடத் தக்கவையாகும். இவையெல்லாம் அறிவியல் தமிழுக்கு நா. வா.வின் பங்களிப்பாகும். மார்க்சிய ஆசான் மா. சிங்காரவேலரின் அறிவியல் நூல்களை அடியொற்றி நா. வா.வும் அறிவியல் தமிழ் நூல்களைப் படைத்துள்ளார் என ஒப்புமைப்படுத்தலாம்.

நாட்டார் இலக்கியப் பதிப்புகள்

நா. வா. நாட்டார் இலக்கியத்திற்கு ஆற்றியப் பங்களிப்பு பன்முகத் தன்மையுடையது. அவரின் செயல்பாட்டினை பின்வரும்படி புரிந்து கொள்ளலாம்:

  • வாய்மொழி மரபில் உள்ள நாட்டார் பாடல்களை களஆய்வின் வழி திரட்டித் தொகுத்து பதிப்பித்தல்
  • கதைப்பாடல்களைத் திரட்டி அதற்கு ஓர் ஆய்வுரை எழுதி தொகுப்புகளாக வெளியிடுதல்.
  • நாட்டார் இலக்கியங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அவற்றை அறிமுகப்படுத்துதல்.
  • நாட்டார் கதைகளைப் பிற கதைகளுடன் ஒப்பிட்டு ஆராய்தல்.

இன்று நாட்டார் இலக்கியம் என்பது ஒரு தனித்துறையாக வளர்ந்துள்ள நிலையில் அதற்கான கருவி நூல்களாக நா. வாவின் தொகுப்புகளே முதன்மையாக உள்ளன.

பள்ளுப் பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சமூகக் கதைப்பாடல்கள், நாட்டுக் கதைகள், அம்மானைப் பாத்திரங்களின் சமூகத் தன்மை, இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனை கதைகள், வில்லுப்பாட்டுக் கதையும் கதை மாந்தரும் முதலான கட்டுரைகள் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கவை. நா. வா.வின் நூல்களைப் போலவே அவரது சில பக்க கட்டுரைகள் மிக ஆழமானவையாகும்.

நா.வா.வின் இன்றையத் தேவை

ஆராய்ச்சி என்ற ஆய்விதழை நடத்தி வந்த நா. வா. அதன்வழி பல ஆய்வாளர்களை உருவாக்கியுள்ள வரலாற்றை ஒரு தனி ஆய்வாகவே நிகழ்த்தலாம். இதுபோன்றே அவரது அரசியல் இயக்கச் செயல்பாடுகளையும் அவரின் இதழியல் துறைச் செயல்பாட்டினையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

நா. வா. வின் படைப்புகள் மார்க்சிய அடிப்படையில் அமைந்திருந்தாலும் அவரது எழுத்துகள் ஆய்வு நூல்களாக, இதழ்களில் எழுதியக் கட்டுரைகளாக, பதிப்பித்த நூல்களாக, ஆய்வு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளாகக் கிடைக்கின்றன.

நா. வா. வின் எழுத்துகள் அனைத்தையும் தொகுப்பாக அறிமுகம் செய்யும் விதமாக இவ்வாய்வு நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நா. வா. மறைவுக்குப்பின் அவர் குறித்த மதிப்பீடுகளைப் படிக்கும் பொழுது அவரின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூல் ஒரு புள்ளியில் பேசுவது போல் உள்ளது. இந்நூலினை உருவாக்க ஆய்வாளர் திரட்டிய தகவல்கள், புகைப்படங்கள் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

மயிலை சீனி. வேங்கடசாமி, இராசமாணிக்கனார், வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, கல்கி முதலானோர் தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் பார்த்த பார்வைகளில் இருந்து நா. வா. எவ்வாறு வேறுபட்டுள்ளார் என்பதை இந்நூல் மூலம் அறியலாம்.

இந்த நூலை ஏன் வாசிக்க வேண்டும்? என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்நூலை ஆய்வாளர் ஏன் உருவாக்கினார்? என்பதில் இருந்தே அதற்கான விடையும் கிடைக்கின்றது.

தமிழ் ஆய்வுலகில் பல ஆய்வாளர்கள் தோன்றினாலும் சமூகத்திற்குப் பயன்படும் ஆய்வுகளே காலம் கடந்தும் ஆய்வாளர்களை வாழவைக்கின்றன. அதுபோன்ற ஆய்வாளர்தான் நா. வா. இவர் எதனையும் மார்க்சிய கண்கொண்டு ஆய்ந்து, காரணகாரிய அடிப்படையில் விளக்கிக் கூறுபவர். அவரது எழுத்துகள் சமூக வரலாற்றுப் போக்கின் உண்மையைப் பேசுவதாகும்.

நா. வானமாமலையின் நூல்கள் மற்றும் கட்டுரைகனைத் தேடிப் பிடித்து வாசிப்பது சற்று கடினமானப் பணிதான். இந்நூல் அதனை நிவர்த்தி செய்கிறது. நா. வா. எழுதிய நூல்கள் மற்றும் கட்டுரைகளைப் பற்றி சிறிய அறிமுகத்தினை இந்நூல் அளிக்கின்றது. மேலும், எந்தெந்தத் தலைப்புகளில் நா. வா நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதை ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி பதிவு செய்கின்றது. இதற்கு நூலாசிரியர் மேற்கொண்ட உழைப்பு கடுமையானதாகும். அவர் இதனைத் திரட்ட பயன்படுத்திய நூலகங்கள் இன்று புழக்கத்தில் இல்லை. பாரிமுனையில் இருந்த பழைய மறைமலையடிகள் நூலகம், தி.நகரில் இருந்த காரல்மார்க்ஸ் கண்ணன் நடத்தி வந்த மார்க்ஸ் நூலகம் ஆகியவற்றிலிருந்தே நூலாசிரியர் பல தரவுகளைத் திரட்டி இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்நூலினை உருவாக்க நா.வா.வுடன் தொடர்புடைய பல தோழர்களையும் ஆய்வாளர் களையும் அணுகி தகவல்களைச் சேகரித்து எழுதியுள்ளார். குறிப்பாக மார்க்சிய இயக்கத்தின் தலைமைத் தோழர்களாக விளங்கிய ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், முத்தரசன், சி.மகேந்திரன், ஆகியோரிடம் நூலாசிரியர் விரிவான நேர்காணலை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் காரல் மார்க்ஸ் கண்ணன் தோழர், ஆய்வாளர்கள் எஸ். தோத்தாத்திரி, ஆ.சிவசுப்பிரமணியன், மே.து. ராசுக்குமார். ந. முத்துமோகன், தி.சு. நடராசன், நா. இராமச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலைப் பெற்றது மட்டுமல்லாமல் அவர்களிடம் நிகழ்த்திய உரையாடல் வழி அறிந்த தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்நூலை எழுதியுள்ளார்.

ஆய்வர்கள் முதல் இயக்கத் தோழர்கள் வரை நா.வா. தமிழ் ஆய்வுலகிற்கு ஆற்றியப் பங்களிப்பினை இந்நூலை முழுமையாக வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

நா.வானமாமலையின் ஆராய்ச்சிப் பணிகள் | கோ.ஜெயக்குமார்
வெளியீடு: என்சிபிஎச், சென்னை | விலை: ரூ.400/-

- முனைவர் சி. இளங்கோ, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி. சென்னை.