படைப்பிலிருந்து அந்தப் படைப்பின் ஆசிரியரை வெளியேற்றியதில் நவீனக் கோட்பாடுகளுக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு படைப்பின்மீது வெவ்வேறு வாசிப்புகள் நிகழ இக்கோட்பாடுகளே துணை நிற்கின்றன. நவீன இலக்கியங்களைப் பொறுத்தவரை வாசகரும் படைப்பும் தனித்து விடப்படுகின்றனர். வாசகர் தன் வாசிப்புப் பின்புலத்திலிருந்து அந்தப் பிரதிக்கு ஓர் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறார். வாசகர் உருவாக்கிக்கொள்ளும் அர்த்தத்தைப் படைப்பாளர் விமர்சனம் செய்ய முடியாது. ஏனெனில், நவீன இலக்கியப் பிரதிகளில் அர்த்தம் என்பது ஒன்றாக இருப்பதில்லை. அர்த்தம் தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. படைப்பாளர் கருதிய அர்த்தமும் வாசகர்கள் உருவாக்கிக்கொள்ளும் சுயாதீன அர்த்தமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில், படைப்பின் மீதான அர்த்தத்தை உருவாக்குவதில் காலமும் வாசகரின் அரசியலும் பின்னணியாகச் செயல்படுகின்றன. மேலும், கோட்பாடுகள் மையமான வாசிப்பை நிராகரிக்கின்றன; தட்டையான வாசிப்பிலிருந்து படைப்பை விடுவித்திருக்கின்றன. ‘ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம் நம்புவதற்கேற்ப விநியோகிக்கப்படும் உண்மைகள்தான் கோட்பாடுகள்’ (அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே) என்கிறார் எம்.ஜி.சுரேஷ். கோட்பாடுகள் நிறுவப்பட்ட உண்மைகளின் தொகுப்பாக உள்ளது. இக்கோட்பாடுகளில் இருத்தலியமும் ஒன்று.

thaayaithinniமனிதத் தோற்றத்தின்மீதான இருப்பை இருத்தலியம் விசாரணை செய்கிறது. மனித சமூகம் இரு உலகப்போர்களின் ஊடாகப் பெரும் அழிவைச் சந்தித்தது. இந்தச் சூழலில்தான் மனிதன் படைக்கப்பட்டதன் சாரம் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பினர். தொழில் வளர்ச்சி மனித இருப்பின்மீது பெரும் இடையீட்டை நிகழ்த்தியது. இயந்திர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த சமூகம், அந்த வளர்ச்சியை மனித அழிவுக்கே பயன்படுத்தியது. இயந்திரங்கள் வானத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன; மனிதன் புழுதியில் புரண்டு கிடக்கிறான். பெரும் ஆயுதங்களைக் கொண்டு எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மனிதர்களே சக மனிதர்களை அழிக்கும் நிலையை இருத்தலியவாதிகள் கண்டனர். இந்தச் சூழலில்தான் மனிதன் யார்? அவன் எந்த நோக்கத்திற்காக இந்தப் பூமிக்கு வந்தான்? என்பது போன்ற மனித இருப்பு சார்ந்த அடிப்படையான கேள்விகளை இருத்தலியவாதிகள் கேட்டனர்.

இருத்தலியம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்களுள் ஒருவரான சார்த்தர், ‘அர்த்தமற்ற உலகில் ஓர் அந்நியனாக வந்து சேர்ந்தவன் மனிதன். தன்னை அந்நியனாக உணரும் மனிதனுக்கு இந்த உலகம் மனக்கசப்பு, சலிப்பு, ஓங்கரிப்பு, அபத்தத் தன்மைகளையே வழங்குகிறது’ (இஸங்கள் ஆயிரம்) என்கிறார். வாழ்க்கையின்மீது பெரும் கசப்புடன் இருந்தவர்களுக்கு இருத்தலியம் பெரும் ஆறுதல் அளித்தது. மனிதப் பிறப்பில் உன்னத நோக்கங்கள் ஏதுமில்லை என்று இவர்கள் கூறினர். மனிதர்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்கள் என்ற கருத்தை பிரெட்ரிக் நீட்சேவிடம் இருந்து இருத்தலியம் கடன் வாங்கிக்கொண்டது. ‘கடவுள் இறந்து விட்டார்’ என்று அறிவித்த நீட்சேவை சார்த்தரின் ஆசிரியராகக் கருதுகின்றனர். ஜெர்மன் தத்துவஞானி மார்ட்டின் ஹைடெக்கர், சோரன் கீர்க்கேகார்ட் ஆகியோர் இருத்தலியவாதத்தின் முன்னோடிகளாவர். மனிதன் எவ்வித சாராம்சமும் இன்றிதான் பிறந்திருக்கிறான்; அவனுக்கான இருப்பை அவன்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தை இருத்தலியம் முன்வைத்தது. மனித இருப்பின்மீது நம்பிக்கையற்று இருந்தவர்களுக்கு இந்தக் கோட்பாட்டு நம்பிக்கையை அளித்தது. நவீனத்துவத்தின் கடைசி கோட்பாடாகக் கருதப்பட்ட இருத்தலியம், கைவிடப்பட்டவர்களின் இருப்பிடமாக இருந்தது. இருத்தலியம் நவீன இலக்கியங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டி.எஸ். எலியட், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ஃபிரான்ஸ் காஃப்கா, ஆல்பெர் காம்யு உள்ளிட்ட படைப்பாளர்கள் இருத்தலியம் சார்ந்து எழுதினர். தமிழில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன், நாஞ்சில் நாடன் போன்றோரின் படைப்புகளிலும் இருத்தலியக் கோட்பாடு பின்னணியாகச் செயல்படுகிறது.

ஈழத்தைச் சார்ந்த எழுத்தாளர் தில்லை எழுதிய ‘தாயைத்தின்னி’ நாவலை இருத்தலியம் கோட்பாடு சார்ந்து வாசிக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு ஈழத்தை நிலமாகக்கொண்டு எழுதப்படும் நாவல்களில், ஏதோவொரு வகையில் அந்நிலத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் ஊடாடிக்கொண்டே இருந்தது. ‘போர் தின்ற நிலம்’ என்ற படிமம் படைப்பின் எல்லா வகைமைகளிலும் வெளிப்பட்டது. ஈழத்தின் இத்தகைய படிமம் அந்நிலத்தின் ஒட்டுமொத்தப் படைப்பின் தன்மையையும் மாற்றியமைத்து விட்டன. ஆனால், ‘தாயைத்தின்னி’ நாவல் அனாதையாக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்தலுக்கான போராட்டத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘விடுதலைக்காக ஏங்கும் ஒரு சமூகமும் தனக்குள்ளே இத்தனை அடக்குமுறைகளைக் கொண்டிருக்கிறது. என்னைப் போன்று எத்தனையோ சிறுமிகள், பெண்கள், எந்த ஆதரவுமற்ற மனிதர்கள் இந்தச் சமூகத்தோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று தில்லை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இன்னோர் இனத்துக்கு எதிராகப் போராடும் ஒரு சமூகத்திற்குள்ளேயே எவ்வளவு ஒடுக்குமுறைகள் உள்ளன என்ற கேள்வியைப் புனைவு வலிமையாக எழுப்பியிருக்கிறது. இந்தக் கேள்வி ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வியாகவே கருத வாய்ப்பிருக்கிறது.

‘தாயைத்தின்னி’ ஒரு தன்வரலாற்றுத் தன்மையில் எழுதப்பட்ட நாவல். அனாதையாக்கப்பட்ட தாயைத்தின்னி என்ற பெண்ணின் வலிதான் நாவல் முழுக்கச் சொல்லப்பட்டுள்ளது. ‘தாயைத்தின்னி’ ஒரு காரணப்பெயர். இவள் குழந்தையாக இருக்கும்போது அவள் அம்மா ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதனால் அவ்வூரார் அளித்த பெயர், ‘தாயைத்தின்னி.’ இந்தச் சிறுமியின் கதையாடலில் இருந்து, ‘வாழ்க்கை ஏன் இவ்வளவு துயரம் நிரம்பியதாக இருக்கிறது?’ என்ற இருத்தலியம் சார்ந்த கேள்வியைப் பிரதி கட்டமைக்கிறது. அல்லது பிரதியை வாசிக்கும் வாசகர் இக்கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். ‘இந்த உலக இயக்கமே மனிதர்களுக்கு எதிராக உள்ளது’ என்ற சிந்தனையை இருத்தலியவாதிகள் முன்வைத்தனர். வாழ்க்கை பொருளற்றது; அபத்தமானது; ஒவ்வொரு மனிதரும் அவர் உருவாக்கத்திற்கான காரணத்தை அவர்தான் கண்டடைய வேண்டும் என்பது போன்ற தத்துவச் சரடுகளை இருத்தலியம் முன்வைத்தது. ‘தேர்வு செய்தல் என்பதே சுதந்திரம், பொருள்கள் பொருள்களாகவும் மனிதர்கள் மனிதர்களாகவும் உருவாகி எழுவதே சுதந்திரம்’ (இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்) என்றார் சார்த்தர். தாயைத்தின்னி தன் வாழ்க்கையில் சார்த்தரின் சுதந்திரம் குறித்த இந்தக் கருத்தைத்தான் கண்டடைய முயல்கிறாள்.

தாயைத்தின்னி தன் பிறப்பையே கேள்விக்கு உட்படுத்துகிறாள். இந்தப் பிறப்பே அர்த்தமற்றது. இவ்வளவு துயரங்களுடன் இப்படியொரு பிறப்பு ஏன் அமைய வேண்டும்? இதற்கான காரணங்கள் என்ன? என்பது போன்ற தத்துவார்த்த கேள்விகள் அவளுக்குள் எழுகின்றன. இருத்தலியம், ‘நம்மீது விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும்’ என்கிறது. தாயைத்தின்னியின் அம்மா தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்தச் மூகம் காரணமாக இருந்திருக்கிறது. தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்துகொண்டவளைச் சூழ்ச்சிசெய்து சாகடிக்கின்றனர். வாழ்தலுக்கான போராட்டத்தில் தாயைத்தின்னியின் அம்மா தோற்றுப்போகிறாள். ஆனால், தாயைத்தின்னி போராடிக்கொண்டே இருக்கிறாள். தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உருவாக்க நினைக்கிறாள். தன் சித்திக் கொடுமையைவிட வதை முகாம்கள் மேலானதாக இருக்கும் என்பது அவள் கருத்து. அம்மாவின் சொந்தத் தங்கையான பாதகத்தி (சித்தியின் காரணப்பெயர்) தாயைத்தின்னியின்மீது ஏன் இவ்வளவு வன்மத்துடன் நடந்துகொள்கிறாள் என்ற கேள்வி பிரதியை வாசிப்பவர்களுக்கு எழும். இக்கேள்வி முட்டாள்தனமானது. மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய அதிகாரத்தையும் எளிமையானவர்கள்மீது செலுத்தத் தவற மாட்டார்கள் என்பதுதான் பிரதி உருவாக்கும் பதில். பிறகு இவர்கள் எப்படி இன்னோர் இனத்தின் அதிகாரத்திற்கு எதிராகப் போராடத் தகுதியுடையவர்களாகத் தங்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த முரணையும் நாவல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறது.

தாயைத்தின்னி தன்னுடைய கதையை எழுதி, ஒரு டிரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறாள். இதனை தில்லை படித்துப் பார்க்கிறார். இந்தப் பிரதியைத்தான் வாசகர்கள் வாசிக்கிறார்கள். ஒரு பெண்ணின் உண்மைக்கதை என்ற பாணியில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ‘இருத்தலியம் என்பது மானிடப் பிரச்சினை பற்றிய தத்துவம்’ (எக்சிஸ்டென்ஷியலிசம்) என்கிறார் எஸ்.வி.ராஜதுரை. மானிடர் என்ற பொதுத்தன்மையிலிருந்து இந்தப் பிரதி தன்னை விலக்கிக்கொள்கிறது. பெண் என்ற சிறப்புத்தன்மையிலிருந்து மானிடப் பிரச்சினையை அணுகக் கோருகிறது. ஏனெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இங்கு ஒரேமாதிரியான வாழ்க்கைச் சூழல் இல்லை. தன் உடலே அவளுக்குப் பலவீனமானதாக இருக்கிறது. பெண் என்றவுடன் அவளது முலைகளும் யோனியும்தான் ஆண்களின் நினைவுக்கு வருகின்றன. அதனைக் கைப்பற்றித் தம் அதிகாரத்தை நிறுவிக்கொள்வதற்கான சடங்குகளாகக் காதலும் திருமணமும் அவர்களுக்குப் பயன்படுகின்றன. எனவே, இருத்தலியம் பொதுவான மானிடப் பிரச்சினைகளைப் பற்றித்தான் பேசுகிறது. பெண்களின் இருப்பு என்பது ஆண்களின் இருப்பிலிருந்து இன்னும் மோசமானதாக இருக்கிறது. தன் இருப்புக்கான அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள சக மனிதர்களிடமே கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இதனையும் நாவல் கவனப்படுத்துகிறது.

ஓர் இனம் மற்றோர் இனத்தின் மீதான பகையைத் தீர்த்துக்கொள்ள அந்த இனத்தின் பெண்களையே தேர்ந்தெடுக்கிறது. அதுதான் அவர்களுக்கு எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பகை நாட்டின்மீது போர் தொடுத்த மன்னர்கள், முதலில் பசுக்களைக் கவர்ந்து வந்தனர்; வெற்றியின் முடிவில் அந்நாட்டிலுள்ள பெண்களைக் கவர்ந்துவந்து தம் அந்தப்புரங்களில் அடைத்தனர். பகை அரசனின் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள பெண்களைக் கவர்ந்து வருதல் போரின் தன்மைகளுள் ஒன்றாகவே மாறிப்போனது. பகை அரசிடமிருந்து கவர்ந்துவரப்பட்ட பெண்களை கொண்டிமகளிர் என்று அழைத்தனர். ‘கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி’ (பட்டினப்பாலை) என்ற அடிக்கு, ‘தோற்றார்பால் பிடித்துவந்த மகளிர்’ என்று உரையாசிரியர்கள் விளக்கம் கூறுகின்றனர். இப்பெண்களுள் அழகானவர்கள் அந்தப்புரத்தை அலங்கரித்தனர். பிறர் உதிரிகளாக்கப்பட்டு, பரத்தையராகவும் தேவதாசியராகவும் மாறினர். அரசனின் புகழ்பாடும் மெய்கீர்த்திகளிலும் இவர்களைப் பற்றிய பதிவுகள் உள்ளன. அண்மைக் காலம்வரை ஈழத்தில் இந்தப் பிரச்சினை தொடர்வதை இந்நாவல் கவனப்படுத்துகிறது.

தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒருவகை வெறுப்பும் நம்பிக்கையின்மையும் வெளிப்பட்டதைத் தாயைத்தின்னி ஒரு கள ஆய்வில் அறிகிறாள். இரு மதத்தினரும் பேசக்கூடிய தமிழ்மொழி அவர்களை ஒன்றிணைக்கவில்லை. மதம் மொழியைக் கடந்து வினையாற்றுவதைக் கேத்தி என்ற பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்கிறாள். கேத்தியைக் காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞன் ஒருவன், ‘நீங்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு எங்களைத் தாக்குகிறீர்கள். நாங்கள் இப்படித்தான் பதிலுக்குத் தாக்க வேண்டும். எங்களிடம் வேறு வழிமுறைகளில்லை’ என்கிறான். தாயைத்தின்னியும் இரண்டு ஆண்களால் பாலியல் மீறல்களை எதிர்கொள்கிறாள். ஒருவர் தந்தையைப் போன்று பழகிய ஆதம் காக்கா; இன்னொருவர் கவிஞர் திண்டான் பாஞ்சான். அனாதையான தாயைத்தின்னிக்கு அன்பு காட்டி தன் பாலியல் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள நினைத்த ஆதம் காக்காவும், திரைப்பட வாய்ப்பை வழங்கி வன்புணர்ந்த திண்டான் பாஞ்சானும் வெவ்வேறானவர்கள் இல்லை என்பதைப் பிரதி நினைவூட்டுகிறது. ‘அன்பும் இரக்கமும் மத நம்பிக்கைகளும் நிறைந்திருக்கும் மனமாக இருந்தபோதும் அதற்குள்ளும் ஒரு வக்கிரம் இருக்கத்தான் செய்கிறது’ என்பதைத் தாயைத்தின்னி புரிந்துகொள்கிறாள்.

திண்டான் பாஞ்சான் தாயைத்தின்னிமீது நிகழ்த்திய பாலியல் மீறலுக்கு, அவள் பெண் என்பது மட்டுமே காரணம் இல்லை. அதாவது, ‘திண்டான் பாஞ்சானின் ஊரில் விடுதலைப் புலிகளால் நிகழ்ந்தேறிய கொலைகளுக்குப் பழிவாங்கும் ஒரு செயலாகவே அவன் என்னைப் பழிதீர்த்துக் கொண்டான்’ என்று தாயைத்தின்னி எண்ணுகிறாள். கேத்திக்கு நடந்ததுதான் தனக்கும் நடந்திருக்கிறது என்பதை அவள் புரிந்து கொள்கிறாள். சிறியதொரு சிவன் பளிங்குசிலையைக் கொடுத்துத் தன் அம்மாவை ஏமாற்றிய ஆணின் முகமும் அவள் மனதில் வந்துபோகிறது. அன்பு என்பது வன்முறையை நிகழ்த்துவதற்குப் பாவிக்கப்படும் ஒரு கருவியாக இருக்கிறது என்பதைத் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளினூடாக விளங்கிக் கொள்கிறாள். ‘வாழ்க்கை என்பது பரவசங்களாலும் இன்பங்களாலும் ஆனதல்ல. அவை பிரச்சினைகளாலும் துயரங்களாலும் மட்டுமே உருவானது’ என்ற இருத்தலியச் சிந்தனையைத் தாயைத்தின்னி வெளிப்படுத்துகிறாள். “வறுமையும் நெருக்கடியும் போர்களும் அழிவும் பெருநாசமும் ஒரு சமுதாயத்தில் ஊடுருவும்போது, மனிதன் இயற்கையிடமிருந்தும் தன் உழைப்பிலிருந்தும் தன்னிடமிருந்தும் தன் இனத்திடமிருந்தும் அயலானாகிவிட்டபோது, உலகம் முழுவதும் அவனுக்கு எதிரானதாக, வாழ்க்கை பொருளிழந்து போனதாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இந்தச் சமுதாயத்தில் அவன் எதிர்கொள்கிற ஒவ்வொரு சூழ்நிலையும் அபத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. பொருளியல் காரணங்களால் வெறுக்கத்தக்கதாக மாறிவிட்ட சமுதாயச் சூழ்நிலையுடன் மரபுவழிப்பட்ட சமய நம்பிக்கைகளின் சீர்குலைவும் சேர்ந்துகொள்ளும்போது மனித வாழ்க்கையின் இலக்குக்கான விளக்கங்கள் திடீரென மறைந்துவிடுகின்றன. மரபு வழிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கு மாற்றாக ஒரு புதிய நம்பிக்கை உருவாக்கப்படாமல் இருக்குமானால் ஆல்பெர்ட் காம்யு (Albert Camus) முடிவுக்கு வந்ததுபோல் தற்கொலைதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்” (எக்சிஸ்டென்ஷியலிசம், பக்.12) என்று
எஸ்.வி.ராஜதுரை குறிப்பிட்டிருக்கிறார். தாயைத்தின்னி தற்கொலை முடிவையும் எடுக்கிறாள்.

இருத்தலியம் மனித வாழ்க்கையின் மோசமான நிலைமையை ஆராய்ந்தது; அதற்கான தீர்வுகளையும் தேட முயன்றது. மனிதனின் மோசமான செயல்பாடுகளுக்குப் பின்னால் அச்சம் ஒரு காரணமாக இருந்ததை இருத்தலியவாதிகள் கண்டனர். அச்சத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கே அதிகாரத்தைக் கையில் எடுத்தனர். தாயைத்தின்னியின் சித்தி, பள்ளி ஆசிரியை, விடுதிக் காப்பாளர் என ஒவ்வொருவருமே தங்களது இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதிலுள்ள அச்சத்தின் காரணமாகவே தாயைத்தின்னியின்மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினர். ‘தனி மனிதனின் சுதந்திரம் சமுதாய உறவுகளில் இருந்து துண்டித்துக் கொள்வது என்கிறார்’ சார்த்தர். அதேநேரத்தில், ஒருவர் மற்றொருவரின் சுதந்திரத்தை மதிக்கும் உறவில்தான் விடுதலை இருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறார். இந்தச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்தைத்தான் தாயைத்தின்னி தொடர்ச்சியாக எதிர்கொள்கிறாள். தாயைத்தின்னியின் டிரங்குப் பெட்டியில் நிறைய கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையைத்தான் தில்லை நமக்கு வாசிக்கக் கொடுத்தார். எதிர்காலத்தில் தன்னைப் பழிவாங்கிய இந்தச் சமூகத்தைப் பழி தீர்த்துக் கொள்ள தாயைத்தின்னி மீதிக் கதைகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பயன்பட்ட நூல்கள்

1)     அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே, எம்.ஜி.சுரேஷ், அடையாளம், புத்தாநத்தம், முதல் பதிப்பு, 2022.

2)     இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம், எம்.வேதசகாயகுமார், அடையாளம், புத்தாநத்தம், முதல் பதிப்பு, 2021.

3)     இஸங்கள் ஆயிரம், எம்.ஜி.சுரேஷ், மருதா, சென்னை, முதல் பதிப்பு, 2005.

4)     எக்சிஸ்டென்ஷியலிசம், எஸ்.வி.ராஜதுரை, க்ரியா, சென்னை, இரண்டாம் பதிப்பு, 1983.

5)     தாயைத்தின்னி, தில்லை, பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு, 2024.

- சுப்பிரமணி இரமேஷ், தமிழ் உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. சென்னை.