தமிழ்ச் சமூக அடையாளத்தை மறுவாசிப்பு செய்து மீள்கட்டமைப்பு செய்வதற்கான தரவுகளைத் தேடித் தொடர்ந்து பயணித்து வரும் தமிழியல் ஆய்வாளர்களின் வரிசையில் முன்வைத்து எண்ணத்தக்கவர்; பொற்காலங்களையும் இருண்ட காலங்களையும் பற்றிய முழுமையான புரிதலைத் தமிழ்ச்சமூகத்துக்குத் தந்த இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கோவில்களும் நிலங்களும் சாதியக் கட்டுமானத்தின் வேர்களாக இடைக்காலத்தில் செயல்பட்டதைத் தோலுரித்துக் காட்டியவர்; ஊகங்களின் அடிப்படையில் கற்பனையாகப் புனையப்பட்ட, புனையப்படுகிற வரலாறுகள் பற்றிய அறிவார்ந்த கேள்விகளை எழுப்பிக் கொண்டு மாற்று வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருபவர் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி.தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் ஆக்கங்கள் பிற்காலச் சமூகத்திற்குக் கையளிக்கப்பட்டமை பற்றிய உரையாடலைப் பதிப்பு வரலாறு என்கிற வகையில் ஆய்வறிஞர் பேசி வருகிறார். பதிப்பு வரலாறும் அது சார்ந்த இயங்கும் அரசியலும் தமிழியலில் தவிர்க்க இயலாதது. தமிழை இற்றைப்படுத்தல் (Update) முயற்சியில் முதலில் ஈடுபட்டவர்கள் மேலைநாட்டு ஆய்வாளர்கள். மொழியைக் கற்றல்-கற்பித்தல் சார்ந்து இயங்கிய அவர்கள் சமகால சமூகத்தினருக்கும் தமிழைக் கொண்டு செல்லும் பணியைச் சில நோக்கங்களை முன்வைத்துச் செயல்படுத்தினார்கள். தமிழ் பிராமி எழுத்துகள், சிந்துவெளிக் குறியீடுகள், லெமூரியா கண்டம் முதலான முக்கியமான கருத்தியல் தொடர்பாக நிலவும் பொய்யையும் வழுவையும் வெளிச்சமிட்டுக் காட்டிய இவரது நூல்கள் தமிழியல் ஆய்வு வெளியில் புதிய அசைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
12 ஆண்டுகளாக ஆய்வறிஞர் பொ.வேல்சாமி முகநூலில் அவரது நண்பர்களோடு நிகழ்த்திய உரையாடல்களின் அச்சுவடிவமாக மூன்று நூல்கள் தமிழியலுக்குப் புதுவரவாக வந்துள்ளன. இந்த முயற்சியை அவரது ஏற்புடன் தமிழ்மாணவன் கா.விக்னேஷ் செய்துள்ளார். பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு, சோழர் ஆட்சியிலும் அடிமைகளா? இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும் என ஆய்வறிஞரின் உரையாடல்களுக்கு வடிவம் தந்திருக்கிறார் பதிப்பாசிரியர் விக்னேஷ். முதல் நூலில் மொழி, இலக்கியம் குறித்த பதிவுகளும், இரண்டாம் நூலில் வரலாறு பற்றியனவும் மூன்றாம் நூலில் அரசியல், பண்பாடு, தத்துவம், இரங்கல் மடல்கள், பிற ஆகிய பகுதிகளுமாக எட்டு பகுதிகளில் 348 பதிவுகளை வகைப்பாடு செய்து தந்திருக்கிறார் விக்னேஷ்.
இந்த மூன்று நூல்களில் உள்ள பதிவுகளின் அடிப்படையைக் கீழ்வருமாறு தொகைப்படுத்தலாம்.
- தமிழ்ச்சமூகத்தின் நினைவுவெளியிலிருந்து கரைந்து, மறைந்து போன நூல்களை, வழக்கங்களை, போக்கை மீண்டும் ஆய்வு வெளிச்சத்திற்கும் பொதுவெளிக்கும் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ளுதல்.
- சமகாலத்தோடு தொடர்புடைய ஒரு பொருண்மை அல்லது நிகழ்வோடு ஒப்பிடத்தக்க அதன் இறப்பு- நிகழ்வு- எதிர்வுகளைப் பற்றிப் பேசுதல்.
- புரிதலின்றி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் சில ஆளுமைகள் அல்லது செயல்பாடுகள் பற்றிய விளக்கங்கள் தருதல்.
- வலுப்பெற்றுவிட்ட பொய்களைத் தனது ஆய்வுநிலைப்பட்ட அவதானிப்புகள் மூலம் மறுவாசிப்புக்கு உட்படுத்தி நுட்பமான வினாக்கள் மூலம் பொதுக் கவனத்திற்கு உட்படுத்துதல்.
- சமகால அரசியலைச் சமய, மத, மொழி, இன அரசியல் குறித்த உரையாடல் மூலம் சமூக இயங்கியலை மக்களின் புரிதலுக்குக் கொண்டு செல்லுதல்.
மேற்குறிப்பிட்ட இம்மூன்று நூல்களும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை மட்டுமல்ல நூலின் அகப்பொருள் சார்ந்த அதன் தரவுகளைச் நோக்கி நம்மைத் தேடிப் பயணிக்க வைக்கும் அரிய ஆய்வுக் கருவூலங்களாக இருக்கின்றன. ‘A well- judging man will open his trunk-line of study in such a direction that while habitually adhering to it, he may enjoy a ready access to such other fields of knowledge as are most nearly related to it’ என்ற டேவிட் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீபன் (James Fitzjames Stephen) கூற்றின்படி நூலின் வாசகர்களை இயங்கச் செய்பவை ஒவ்வொரு பகுதிகளும்.
பொ.வே. அவர்களின் நூல்வழி அறிமுகம் முதுகலைக் கல்வியிலேயே எனக்குக் கிட்டியது. ஆனால் கிறிஸ்து மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் (1857) என்கிற பவர்துரை என்று அறியப்படும் ஹென்றி பவர் நூலின் பதிப்பு தொடர்பாக எழுத்தாளர் பிரதீபா ஜெயசந்திரன் மூலமாக ஆய்வறிஞரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. லௌகீக வாழ்க்கை ஆய்வின் நோக்கத்தையும் அதை மையப்படுத்திய ஆய்வுப் பரப்பையும் எவ்வளவு குறுக்கிவிடும் என்பதைப் பலரது முனைவர்பட்ட ஆய்வுப்பொருள் யானை இளைத்து எறும்பானதைப் போலச் சுருக்கம் பெற்றதை வைத்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த வெளிக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழியல் சார்ந்த தொடர்ச்சியான உரையாடல்களை ஆய்வுகளை ஒரு முதுபெரும் ஆய்வாளராகத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். அவரது அறிவின் பன்முகத்தன்மையை அவரது எழுத்துகளில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பகுதிகளும் வரலாற்றைப் புரட்டிப் போடுகின்ற பல கேள்விகளை மையமாகக் கொண்டமைகின்றன.
- சிற்பக் கலையின் நுட்பங்களைக் கொண்ட கலைவடிவங்களின் இருப்பிடமாகத் தமிழகம் இருக்க அதன் இலக்கணத்தைக் கூறும் நூல் வடமொழியில் இருப்பது ஏன்?
- பரதம் என்னும் நிகழ்த்துக்கலை வடிவம் தமிழகம், ஆந்திரப்பகுதிகளில் உயிர்ப்புடன் இன்றும் உள்ளது. ஆனால் அதன் இலக்கணம் வடமொழியில் இருக்கிறது?
- ஆயிரம் ஆண்டு காலம் கல்வியில் சிறந்த தமிழர்கள் கைநாட்டுகளாக மாறியது எப்படி?
தமிழ் இலக்கிய வரலாற்று எழுதியலில் அதிகமாக கவனம் செலுத்தப்படாத இத்தகைய புள்ளிகளைச் சிந்தனையில் கொள்வது பல நூல் உருவாக்கத்திற்கும் கட்டுரைகளுக்கும் களம் அமைக்கும்.
வரலாறுகள் என்றும் பயனுடையவை. ஏனென்றால் தமது முந்தைய தலைமுறை பற்றிய செய்திகளை அவை நமக்கு அறியத் தருகின்றன. ஆனால் அவற்றுள் சில சுவையும் கொண்டவையாக அமைவது உண்டு. இன்றைய ‘மக்கள் குழுக்களின் பண்பாட்டு மாளிகைகளுக்கு’ முட்டுக்கொடுத்து உருவாக்கப்பட்ட பல கற்பிதங்களை இத்தகைய சுவையான வரலாறுகள் சில நொடிகளில் தகர்த்தெரிந்துவிடுவதுண்டு. சொந்த மகள், வைப்பாட்டியின் மகள், மனைவியின் சகோதரி உள்ளிட்டவர்களை கிரயம் பேசி விற்றுக் கோயில் தாசியாகவும் விபசாரிகளாகவும் மாற்றியதை காட்டுகின்ற ஒரு பகுதி சோழர் ஆட்சியிலும் அடிமைகளா? நூலின் முதல் பகுதி. தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிரா மாநிலத்தின் செஜூரியில் உள்ள கண்டோபா எனும் சைவக் கோயிலோடு 250 ஆடல் மகளிர் இணைக்கப்பட்ட செய்தியை ஒரு காலனிய ஆவணம் கூறுகின்றது. அதற்காகச் சில நேரங்களில் பெண்கள் விலைகொடுத்து வாங்கப்பட்ட செய்தியையும் அந்த நூல் கூறுகின்றது (Indian Ancient and Modern, David O Allen, 1856:390). மோடி ஆவணங்களில் பயன்படாது என்று தவிர்க்கப்பட்டனவற்றிலிருந்து இத்தகைய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன என்கிற செய்தி பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. வரலாறு பற்றிய புரிதல் இல்லாத விளக்கெண்ணை அதிகாரிகளை நினைத்து வேதனை ஏற்படுகிறது.
இலக்கியத்தில் அறிவுப்புலத்திற்கும் பண்பாட்டைப் பேணிக் காப்பவர்களின் ‘கவனத்திற்கும்’ வராத பகுதிகள் பல உண்டு. உண்மையில் கவனம் பெறத்தக்கவை என்று சொல்வதைக் காட்டிலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவை என்றுதான் இத்தகைய பகுதிகளைச் சொல்ல வேண்டும். அப்படியான ஒரு பகுதி ஏலாதி 30, 31ஆம் பாடல்கள் பற்றிய பதிவு. இது நமது மரபா? என்றால் உடனே இடைச்செருகல்கள் என்பார்கள் ‘பண்பாட்டின் பாதுகாவலர்கள்’; அல்லது பிறமொழியாளர்கள் தொடர்பால் வந்த கலப்பு என்பார்கள். இதுபோன்ற சில தமிழிலக்கியப் பகுதிகள் விமர்சனங்களுக்கு ஏன் உட்படுத்தப்படவில்லை? அறியப்பட்ட வரலாற்றில் இருக்கும் இத்தகைய இடைவெளியின் தூரத்தைச் சுட்டிக்காட்டுகிற பகுதிகள் பல இந்நூலில் உள்ளன. விஜயநகரப் பேரரசைக் கட்டி எழுப்பிய புக்கரும் ஹரிஹரரும் இந்துக்களாக மதம் மாறிய இஸ்லாமியர்கள்; ஐரோப்பிய வேதப்புரிதலின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய பாராசீக மொழிபெயர்ப்புகள் ஔரங்கசீப்பின் உடன்பிறந்த அண்ணனான தாராசுகோவின் மொழிபெயர்ப்புகள் என்பது புதிய செய்தி. பேரரசுகளின் காலங்களை வரலாற்றுப் பாடநூல்கள் வழிக் கற்று அறிந்த என்னையொத்தவர்களுக்கு அதன் போதாமையை விளக்கும் பகுதிகள் இப்படிப்பல.
பாடத்திட்டம் என்ற சொல் ஒற்றைப் பொருள் கொண்ட வெற்று மொழி அல்ல. இச்சொல் பல்வேறு பரிணாமத்தையும் பரிமாணத்தையும் நோக்கி அந்தப் பிரதியை நகர்த்துகிற ஒரு செயல்பாடு. பதிப்பு-வாசிப்பு-ஆய்வு-வெளிப்பாடு என்று பல முனைகளில் அந்தப் பிரதி அகத்திலும் புறத்திலும் பல்வேறு வளர்ச்சியைக் கண்டடைவதற்கான வழியை அது ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இன்றைய நமது பாட புத்தகங்களை விடப் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடப்பகுதிகள் மிகுந்த நுட்பத்தோடும் கவனத்தோடும் உருவாக்கப்பட்டிருப்பதை ஆய்வறிஞரின் பதிவுகள் சில எடுத்துக்காட்டுகின்றன. ‘தமிழ் மொழியை வளர்த்தவர்கள் பாதிரியார்களும் ஆங்கில அரசாங்கமும் தான்’ என்ற இவரது கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது. நொபிலி, வீரமாமுனிவர், சீகன்பால்கு, ராட்லர், மெக்கன்சி, எல்லீஸ், மெக்காலே, பவர்துரை முர்டாக், ஜி.யு. போப் உள்ளிட்டவர்கள் பற்றிய இவரது பதிவுகள் அதற்குக் கட்டியமாகின்றன.
அந்த வரிசையில் 1717 இல் வெளிவந்த ஒரு நூலைப் பற்றி 2017இல் ஒரு பதிவை இட்டுள்ளார் பொ.வே. தரங்கம்பாடியில் இருந்த டச்சுப் பாதிரியார்களின் தமிழகம் பற்றிய எடுத்துரைப்புகளைக் கொண்டுள்ளது அந்நூல். மக்களின் பழக்கங்கள், நீதி முறைமை, பண்பாடு, சாதி, இந்தியப் பகுதிகளின் இயற்கை அமைப்பு முதலானவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் ஆவணங்கள், (Malabar -1891, History of the Madras Army -1889, A compendium of the caste and tribes found in India from the census reports for the various provinces (excluding Burmah) and the native states of the empire -1885), பயண நூல்கள் (A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar -1807, Notes of a journey across the peninsula of India, from Madras to Bombay, in 1834- 1836), நினைவுக் குறிப்புகள், அகராதிகள், அடைவுகள் (Memoirs of the Right Rev. Daniel Corrier, LL D., first bishop of Madras/compiled chiefly from his own letters and journal by his brothers- 1847, A Comparative dictionary of the Non Aryan Languages of India and high Asia -1868, Personal narrative of a mission to the south of India from 1820 to 1828- 1829) பல ஆண்டு அறிக்கைகள் என 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆவணங்கள் பல இணையத்தில் காணக்கிடைக்கின்றன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தகைய நூல்கள் மிக அருகியே கிடைக்கின்றன. 2017இல் இந்தப் பதிவை பொ.வெ. வெளியிட்ட போது எல்லோரும் பயன்படுத்துமாறு இந்தநூல் இல்லை. 2023இல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த நூலை ஆர்கைவ்ஸ்.காம் (https://archives.com/) தளத்தில் ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இப்போது உள்ளது.
அறிவைப் பரவலாக்கம் செய்வதுதான் ஒரு சமூகம் வளர்ச்சியடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைத் தீர்மானிக்கிறது. இத்தகைய அறிவுத்தளச் செயல்பாடுகளைத் தூண்டும் வேலையைச் சிலரால் மட்டுமே நுட்பமாகச் செய்ய முடியும். தனது கருத்தை எதிரில் உள்ளவர்மீது திணிக்காமல், சமூக இயக்கம் இப்படி இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி அது சார்ந்து அவதானித்து இயங்கும் ஆற்றல் உடையவர்களாக வெகுமக்களே தங்களைத் பழக்கப்படுத்திக்கொள்ளும்படிச் செய்யும் மறுபடைப்பு முயற்சி அது. அதனை பொ.வே. இந்நூல் பதிவுகளின் வழிச் செய்துள்ளார். ‘எந்த விதமான செய்தியையும் உங்கள் சுய சிந்தனையால் சீர்தூக்குங்கள்’ என்கிற அவரின் வரிகள் முக்கியமானது. இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் முன்பைவிட மிகப் பெரிய அறிவியல் வளர்ச்சிகளை எல்லாம் நாம் சந்தித்து வருகிறோம். இணைய நூலகங்களின் பெருக்கம் இன்றைய கல்வியியலாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளை எல்லாம் உருவாக்கிவருகிறது. ஜேஸ்டர், ஏசிஎம், பிரிட்டிஷ் கவுன்சில், மின்ட்புக் (JSTOR, ACM digital library, British council online library, Mintbook) போன்ற கட்டண இணைய நூலகங்களை விடக் கட்டணமில்லா இணையநூலகங்கள் பல இலட்சக்கணக்கான தரவுகளைப் பயன்கொள்ளும் வாய்ப்புகளை நமக்குத் தருகின்றன. பதிவிறக்கம் செய்து கணினியின் இடவசதியை முடக்க வேண்டிய அவசியம் கூடத் தற்போது இல்லாமல் போய்விட்டது. கூகுள் சேமிப்பகம், தொலைதூரத் தரவு மையங்கள் (Google drive, Cloud service providers) உள்ளிட்ட முன்னேறிய அறிவியல் வளர்ச்சி இதற்கு விடையாக உள்ளது இன்று. இப்போது கூடத் தான் படிக்கும் நூல்களை அட்டை போட்டுப் படிக்கும் பேராசிரியர்கள் பலரைப் பார்க்கிறோம்; அது நூல் பாதுகாப்பு கருதிய செயலல்ல என்பது வருந்தற்குரியது. ஆனால் தன்னிடம் உள்ள அரிய நூல்களைப் படியெடுத்துக்கொள்ள விரும்புவோர்களை வரவேற்று அறிவைப் பகிரும் தன்மை முக்கியமானது (ப.68).
‘I have taken off my caste and left it with the port officer. I want to put it on again till I come back (சோ.ஆ.அ, 2024:153)’.
தமிழகத்தின் மக்கள் கணக்கெடுப்பு பற்றிய ஆவணத்தில் இடம்பெற்றுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த இரு வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான நுட்பமான உரையாடல் இது.
சாதியை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்ததில் மக்கள்தொர்புப் போக்குவரத்துச் சாதனங்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இரயில் அறிமுகம் உள்நாட்டில் இத்தகைய நிலையைச் செயல்படுத்தியது. கீழ் மேல் என்ற வேறுபாடின்றிப் போக்குவரத்துச் சாதனங்களை யார் அருகிலும் யாவரும் அமர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பை* அது வெகு மக்களுக்குத் தந்தது. அதேபோல தங்கள் வாழ்நில எல்லையைக் கடந்து பல்வேறு தேவைகளுக்காகப் புலம் பெயர்ந்து இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் பயணங்களில் தங்கள் சாதிக் கட்டுகளை உடைத்து அதிலிருந்து விடுபட்டதை, அதனை மிகுந்த மனத்திடத்துடன் எடுத்துரைத்ததை வெளிப்படையாக எடுத்துச் செல்லும் முக்கியமான பகுதி இது. இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளின் வழி அதனை நாம் புரிந்து கொள்வதற்கு இடையில் புதியதாகப் பெறப்படுகின்ற இத்தகைய தரவுகளையும் நிரப்பிக் கொண்டு சிந்திப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வறிஞரின் இத்தகைய பகுதிகள் நமக்குத் தருகின்றன.
தமிழ்ப்பணி செய்தவர்கள் மறக்க இயலாதவர்கள். வ.உ.சி. போன்ற தமிழ்ப் பற்றாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு வரலாற்றில் இளம்பூரணர் உரையை முதன் முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி. என்பதை சான்றுகளுடன் விளக்கிக்காட்டுகிறார். முதுபெரும் ஆய்வாளர்களும் ஆய்வுப் புலத்தில் சருக்கிவிடும் ஆபத்தையும் சுட்டிக்காட்டும் பகுதிகள் கருத்துகளைக் கவனமாக கையாள வேண்டும் என்கிற அனுபவத்தை இளம் ஆய்வாளர்களுக்கு நிச்சயமாகத் தரும். பதிப்பகங்களின் அக்கறையின்மை - பதிப்பு நேர்மை – மறைப்புகள் – முன்னோடிப் பதிப்பாளர்களின் பணிகள் – பிரபலமாக அறியப்பட்டவர்களின் அறிவுத் திருட்டு முதலானவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டும் பகுதிகள், இலக்கியம் சார்ந்து அறியப்படாத வியக்கவைக்கும் நூல்கள் (3000 பக்கங்கள் கொண்ட கம்பராமாயண இலக்கணக் குறிப்பு நூல்) இப்படிப் பல தரவுகள், தரவுத்தளங்கள் இந்நூல்களில் உள்ளன.
பிற மதத்தைச் சார்ந்த ஆளுமைகள், தமிழியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய எந்த ஓர்மையும் இல்லாதவர்களால் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாக்கப்படுவதை வலிமையான சான்றுகளை எடுத்துக்காட்டிப் பொய்யாக்குகிறார். இப்படி நினைவுகூறப்படவேண்டியவர்களின் படைப்புகள் ‘போலியானது’ என்று பொய்மாளிகை கட்டிப் புதிய பிம்பங்களை உருவாக்கும் மலினமான செயல்கள் அரசியல் பின்புலத்தோடு இன்றும் தொடர்கிறது. பொருளாதாரச் சிக்கல்களைத் திறமாகக் கையாள இயலாத அரசியலாளர்கள் மக்களைத் திசை திருப்பப் பண்பாட்டுப் போர்களை மக்கள் தங்களுக்குள் தாமே நடத்தி விடும்படியாகத் தூண்டி அவர்களைத் துண்டாடுவது உலக நாடுகளின் அரசியல் வரலாற்றில் நிகழும் தொடர்கதைதான். இந்தியா போன்ற பன்மீயப் பண்பாட்டைக் கொண்ட இனங்கள் வாழுகின்ற பகுதியில் பெரிய எதிர்ப்புகளை இத்தகைய போக்கு உருவாக்கும். மண்ணின் மைந்தர்களாக ஒரு இனத்தை/ சாதியைத் தூக்கி பிடிப்பதோடு மற்ற சில இனங்களை இனத்தூய்மைவாதம் பேசி வெளியேற்றும் போலிக் கூச்சல்களுக்கும் அது இடம் கொடுக்கிறது. சிறுபான்மை இனங்களாக வாழ்ந்து வரும் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு எதிரான இத்தகைய சண்டைகளை மக்கள் உணர வேண்டும் எனச் சமூக பிரக்ஞையுடன் வெளியிடப்பட்ட பல அரசியல் பதிவுகள் இந்தியத் தத்துவமும் தமிழ்த்தத்துவ மரபும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இலக்கியப் பயிற்சி இல்லாத வெகு மக்களையும் இலக்கியங்களை நோக்கி நகர்த்த வேண்டுமென்றால் அதற்கு சில விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது பற்றிப் பதிப்புத் துறையைச் சார்ந்த நண்பர் ஒருவர் அடிக்கடிக் கூறுவார். ‘எளிமை’ தான் அந்தத் தத்துவத்தின் மூல மந்திரம். ஆய்வு செய்வோரை அத்துறையில் ஆழப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் சொற்பயன்பாட்டில் ஒரு வசீகரத்தோடு ஒரு கருத்தை எடுத்துச்சொல்லும்போது எளிமையானவர்களையும் இலக்கியம் விடாது பற்றிக்கொள்ளும். ஒரு எள்ளலும், பகடியும், கோபமும் கலந்து படிப்பவரை ஈர்க்கும்படியான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் இந்த மூன்று தொகுதிகளும் அமைந்துள்ளன.
சமூக ஊடகத்தின் வழிப் பகிரப்பட்ட பதிவுகளுக்குப் பயன்பாட்டு எளிமை, இன்றியமையாமை கருதி அச்சுவடிவிலான அடையாளத்தை விக்னேஷ் கொடுத்துள்ளார். ஆய்வறிஞர் எடுத்துப் பகிர்ந்த எண்ணிம வடிவிலான நூல் இணைப்புகள் (link) அவற்றின் விரைவுப் பதில் குறியீடு (QR code) வடிவில் புத்தகங்களில் தரப்பட்டுள்ளன. விக்னேஷ் அவரது கல்விப் பின்புலத்தில் சரியாக வழிகாட்டப்பட்டிருக்கிறார். அவர் சார்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் தற்போது புலப்படுத்திவரும் ஆய்வுச் செயல்பாடுகள் போற்றுதலுக்குரியது. இத்தகைய பயனுள்ள பதிவுகள் தமிழுக்கு எப்போதும் தேவை. தமிழியல் ஆய்வு நீர்த்துப் போய்விடாமல் மிகுந்த பாய்ச்சலுடன் வேகமெடுப்பதற்கு இத்தகைய ஆய்வுத் தொகுப்புகள் ஊக்கச் சக்தியாக உதவும். தொடர்ந்து தனது உரையாடலோடு கூடிய ஆய்வுப் பதிவுகளைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஆய்வறிஞர் பொ. வேல்சாமி கையளிப்பார் என்ற நம்பிக்கை அவரது வாசகர்களைப் போலவே எனக்கும் உண்டு.
- சுஜா சுயம்பு