பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் மார்க்சியர்; இந்திய – தமிழ் மெய்யியல் அறிஞர். பேராசிரியர் நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தைச் சேர்ந்தவர். முதுகலையில் வேதியியல் பயின்று, சோவியத் ருஷ்யாவில் மாஸ்கோ லுமும்பா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார். ஐரோப்பியத் தத்துவங்கள், இந்தியத் தத்துவங்கள், தமிழகத் தத்துவங்கள் குறித்து எழுதிய 120 கட்டுரைகள் ‘மார்க்சியக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் 2007ஆம் ஆண்டு பெருந்தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. வேதாந்தத்தின் கலாச்சார அரசியல், மார்க்ஸ் – அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை, மார்க்சியம் பயில்வோம், தொடரும் மார்க்சிய விவாதங்கள், வர்க்க அரசியலும் அடையாள அரசியலும், இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் முதலான மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
அய்யா வைகுண்டர் பற்றிய ந.முத்துமோகன் அவர்களின் முன்னுரை:
பேராசிரியர் ந. முத்துமோகன் அவர்களின் நெறியாள்கையில் ஆய்வு செய்த த. கிருஷ்ணநாதன் என்பவர் ‘அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளார் (2000). இந்த நூலுக்கு பேராசிரியர் ந. முத்துமோகன் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். இம்முன்னுரை “அய்யா வைகுண்டரின் சிந்தனை” என்கிற தலைப்பிலான கட்டுரையாக ‘மார்க்சியக் கட்டுரைகள்’ தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மெய்யியல் சிந்தனைகள், மதச் சிந்தனைகள் ஆகியவற்றின் தத்துவ வலுவையும் அவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகளையும் பற்றி ஆராய்ந்து ந. முத்துமோகன் தொடர்ந்து எழுதிவருகின்றார். நவீன காலத்தில் தமிழ்நாட்டின் மதச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் அய்யா வைகுண்டர். அவர் பிறந்து வளர்ந்த நிலப்பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியர் ந.முத்துமோகன். அதனால் அவருடைய சிறுவயது முதல் அய்யாவழி பற்றிய அறிமுகம் உள்ளவர். சிறுவயதில் அய்யா வழி பனையேறும் நாடார்களின் வழிபாட்டுநெறி என்று உணர்ந்துகொண்டவர், அதன் பிறகு நா.வா. ஆய்வு வட்டத்தின் மூலம் அய்யா வழி, ‘சீர்திருத்த இயக்கம்’ என்று அறிந்துகொண்டார். மேற்கூறிய ‘அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்’ என்கிற ஆராய்ச்சியை நெறிப்படுத்தும் போது அய்யா வழி குருமரபு சமயம், சாதி எதிர்ப்பு சிந்தனை, மாற்று சமய மரபு, அறிவொளி மரபு ஆகிய அம்சங்களை உள்ளடக்கி இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், அய்யா வழியின் சமகாலத் தன்மையையும் எதிர்காலத்தில் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.
இந்தியச் சமயங்களின் பண்புகள்
இந்தியச் சமயங்கள் இருவகையானவை. சங்கரர், ராமானுஜர், மாதவர் போன்ற ஆச்சாரியர்களைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கிய சம்பிரதாயங்கள் ஒருவகையானவை. புத்தர், மகாவீரர், கபீர், குருநானக், வள்ளலார் முதலான குருக்கள் உருவாக்கிய நெறிகள் மற்றொரு வகையானவை.
ஆச்சாரிய மரபு வைதீகம்; ஆதிக்கச் சமயங்கள். குரு மரபு அவைதீகம். மாற்று மரபு சமயங்கள். அதாவது ஆதிக்க எதிர்ப்பு சமயங்கள். இந்திய சமயங்களின் இத்தகைய பண்பு வேறுபாட்டை மார்க்ஸ் வெப்பர் என்னும் சமூகவியல் அறிஞர் பிரித்து நோக்கியுள்ளதை பேராசிரியர் ந. முத்துமோகன் எடுத்துக்காட்டுகின்றார். இத்துடன் நிற்காமல், ‘‘குரு என்ற சொல்லையே வைதீகம் தனது எல்லைகளுக்கு வெளியிலுள்ள ஒன்றாகத்தான் கொண்டிருந்தது. ஆச்சாரியார் என்ற சொல் வைதீகத்தின் சொல். ‘தெய்வத்தின் குரல்’ நூலில் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆச்சாரியாரையும் குருவையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்” என்று கூறி, அவருடைய பின்வரும் கூற்றையும் எடுத்துக்காட்டுகின்றார்: “பொதுவாக ‘குரு’ என்கிற பதம் ஸம்ப்ரதாயக் கட்டில் அதிகம் வராமல் அருளினால் எவருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பவரைக் குறிப்பதாகவும், ‘ஆச்சார்ய’ மதம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் கட்டுத் திட்டமுள்ளதாக போதனையை வித்வத்தினால் கொடுப்பவரைக் குறிப்பதாகவும் நினைக்கும் வழக்கமிருக்கிறது” (ப.எண்: 495, 496).
ஆச்சார்ய மரபு சாஸ்திரங்களின் அறிவை முறையாகப் பெறுவதன் வழி செயல்படுகின்றது. ஆனால், குரு மரபு அருள்நிலை நின்ற தன் அனுபவங்களை முதன்மையாகக் கொண்டு உருப்பெறுகின்றது. இவ்வாறு, குரு மரபு சம்பிரதாயக் கட்டுக்குள் வராது; அருள் நெறியில் நிற்பது. அதாவது, வைதீகத்தில் சம்பிரதாயக் கட்டு என்கிற சாதிக் கட்டுக்குள் நிற்காது, சாதிக் கட்டை அவிழ்க்க முனையும் அருள் நெறியே குரு மரபு.
இவ்வாறு இந்தியச் சமயங்களின் மற்றொரு பண்பு வெளிப்படுகின்றது. அதாவது, ஆச்சார்ய மரபு சமயங்கள் சாதிக் கட்டைப் போற்றிப் பேணுகின்றவையாகவும், குரு மரபைச் சேர்ந்த சமயங்கள் சாதிக் கட்டை எதிர்ப்பவையாகவும் உள்ளது.
குருமார்கள் என்பவர்கள் வைதீக சமயம் கட்டிவைத்துள்ள சாதியத்திற்கு எதிரானவர்கள். வைதீக சடங்குமுறைக்கு எதிரானவர்கள். இவர்கள் வேதம் பயிலாதவர்கள். எளிய மக்களிடம் பணிசெய்பவர்கள். ந.முத்துமோகன் அவர்கள் மாக்ஸ்வேபர் என்ற சமூகவியலாளர் குரு மரபுகளைப் பற்றி கூறியதை நினைவு கூருகிறார். “உறைந்து, மாற்றங்களுக்கு இடம் தராமல் தேங்கிக் கிடக்கும் சமூகங்களில் சீர்திருத்தம் செய்ய விழையும் சில மனிதர்கள் குருமார்களாக உருவாக்கம் பெறுவார்கள். இவர்கள் ஊர்ஊராக அலைந்து திரிந்து வாழ்க்கையைத் தெரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு அமோகமான வெகுசன செல்வாக்கு இருக்கும். இறை உத்தரவின்பேரில் இவர்கள் சீர்திருத்தங்களை முன்மொழிவார்கள். மக்களைத் திரட்டிப் போராடுவார்கள். சமய மற்றும் சமூக வரலாற்றில் இவர்கள் தனித்துச் சொல்லத்தக்க தகுதி பெற்றவர்கள். சனாதன மதங்களின் பழமையை எதிர்ப்பதற்காக இவர்கள் இறை அனுபவமும், இறை அனுமதியும் பெற்று வருவார்கள். உண்மையில் இவர்கள் எதிர்ப்பாளர்கள், சீர்திருத்தவாதிகள். மாற்று மரபுகளை உருவாக்குபவர்கள்”.(ப.238) இவ்வாறாக மாக்ஸ்வேபர் சொன்ன கருத்துகளை ந.முத்துமோகன் அவர்கள் பதிவு செய்கிறார். இதனால் குரு மரபில் தோன்றுகிறவர்கள் மக்களிடையே புதிய அறிவு ஒளியைப் பரப்புகின்றவர்களாகவும் உள்ளார்கள்.
ஆதிக்க எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, அறிவு ஒளி முதலான பண்புகளைக் கொண்ட குரு மரபினைச் சேர்ந்தவராக அய்யா வைகுண்டரும், அவருடைய சிந்தனையும் வெளிப்படுவதை பேராசிரியர் ந. முத்துமோகன் விளக்கியுள்ளார்.
வைகுண்டரின் வாழ்க்கைச் சூழல்
தமிழகத்தில் தோன்றிய ஒரு மாபெரும் சீர்திருத்தவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்ட சுவாமிகள். இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சாதி தலைவிரித்தாடியது. திருவிதாங்கூரில் சாதி வேறுபாடுகள் மனு தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களுக்கான பெயர் வைக்கக் கூட உரிமை மறுக்கப்பட்ட நிலையில் அக்கால மக்கள் வாழ்ந்தனர். வைகுண்டருக்கு அவர்கள் வீட்டார் முடிசூடும் பெருமாள் என்று பெயர் வைத்தனர். ஆனால் பெருமாள் என்ற பெயர் உயர் வகுப்பாருக்கு உரியது என்றும் பெயரை மாற்றும்படியும் அரசாங்க உத்தரவு வந்ததன் பேரில் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் பெற்றது. அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குட்டி, குட்டன், மூக்கன் என்பதாகத் தான் இருக்கும். இப்போதும் ஆங்காங்கே இத்தகைய பெயர் விடும் மரபு தொடர்வதைக் காணமுடியும். மேலும் அக்கால ஒடுக்கப்பட்ட மக்களின் மீது சுமத்தப்பட்ட வரிக்கொடுமைகளும் ஏராளம். தலைவரி, முலைவரி போன்ற எண்ணற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. வரி சுமத்த இயலாதவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் வைகுண்டர் வாழ்ந்த காரணத்தினால் இளமையிலேயே வைகுண்டர் முற்போக்கு எண்ணம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார்.
எளிய மனிதன் என்பதிலிருந்து குருவாக பரிணாமம் பெறுதல்
வைகுண்டர் தனது 17 ஆவது வயதில் திருமாலம்மை என்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை மணந்து கொண்டார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு மனமுடைந்து இருந்த முத்துக்குட்டிக்கு தீராத நோய் ஏற்பட்டது. அதனால் முத்துக்குட்டி தாயும் அவரது சொந்தங்கள் அனைவரும் அவரை திருச்செந்தூர் அழைத்துச் சென்றால் நோய் குணமடையும் என்று நம்பிக்கை கொண்டு அவரை தொட்டில் கட்டி திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் முத்துக்குட்டி பலவாறாக சிந்தித்திருக்கக் கூடும். ஒடுக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு உட்பட்டு கொண்டிருக்கும் தன் மக்களின் நிலையை எப்படியேனும் மாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கக்கூடும். இவ்விடத்தில் ந.முத்துமோகன் அவர்கள் குறிப்பிட்டது போல ‘உறைந்து மாற்றத்திற்கு இடம் தராமல் தேங்கிக் கிடக்கும் சமூகங்களில் சீர்த்திருத்தம் செய்ய’ முத்துக்குட்டி வைகுண்டராகப் பரிணமித்து இருக்கக்கூடும். ஒடுக்கப்பட்ட சமூகங்களில் சாதாரண ஒடுக்கப்பட்ட மனிதன் சென்று சீர்திருத்தம் செய்ய முயலும் போது அவன் பலவாறாக விமர்சிக்கக்கூடும். அதனால் முத்துக்குட்டி தன்னை திருமாலின் அவதாரமாக மக்கள் முன் நிலைநிறுத்தியிருக்க வேண்டும். முத்துக்குட்டி திருச்செந்தூர் கடலுக்குள் சென்று மூன்று நாட்கள் கடலுக்குள் இருந்து திருமாலிடம் இறை உபதேசம் பெற்று திரும்ப வைகுண்டராக வெளி வந்ததாக மக்கள் அனைவராலும் நம்பப்படுகிறது. இத்தகைய நிலையை ந.முத்துமோகன் அவர்கள் கூறும்போது ‘‘இவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடிகளுக்குப் பழமை ஆதரவு தராதபோது இப்படி நேரடியாக இறை ஆதரவை அவர்கள் திரட்டிக் கொள்வார்கள். பண்பாட்டை ஜனநாயகப்படுத்த இறையனுபவங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்’’ (ப. 237) என்று கூறியுள்ளார். இந்த வகையில் வைகுண்டரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சீர்திருத்தம் செய்ய தன்னை இறை ஆசி உள்ள ஒருவனாக நிலைநிறுத்தியிருக்க வேண்டும்.
வைகுண்டர் அன்பு வழி இயக்கம்
அய்யா வைகுண்டர் இயக்கம் எந்த மதத்தையும், எந்த சாதியையும் சாராத இயக்கம். இதனை ந.முத்துமோகன் அவர்கள் குறிப்பிடும் போது “இந்த நாட்டில் ஜாதி அமைப்பிற்கு எதிரான இயக்கங்கள் எல்லாமே வைதீக மதத்தை விமர்சிப்பதை முதல் பிரச்சினையாகக் கையாண்டு உள்ளன” (ப.237) என்று கூறுகிறார். வைகுண்டர் இயக்கமும் வைதீக சடங்கு ஆச்சாரங்களை எதிர்த்த இயக்கம். சாதிய வேற்றுமையை எதிர்த்த இயக்கம். வைகுண்டர் கடவுள் என்று ஓர் உருவத்தை வைத்து வழிபட விரும்பவில்லை. மாறாக ஒரு கண்ணாடியை வைத்து அதில் தெரியும் உருவம் ‘நீயே கடவுள்’ உன்னைத் தாண்டி ஒரு சக்தியும் இல்லை என்று மக்களுக்கு விளக்கினார். ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்படாத மக்கள், சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் என்று அனைத்து மக்களையும் ஒன்று திரட்டினார். அவர்களுக்கு பல்வேறு வகையான உபதேசங்கள் செய்தார். அவர் மக்களுக்கு செய்த உபதேசங்களில் சில.
“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்”
"தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே"
“காணிக்கையிடாதீங்கோ காவடி தூக்காதீங்கோ
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ”
“கோவில்கள் வைத்து குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டு போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய் கோழி அறுத்துப் பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்” (அகிலத்திரட்டு)
சாதிய வேற்றுமையை கலைய மக்கள் அனைவரும் ஒன்றாக அன்னம், தண்ணீர் புழங்க வேண்டும் என்று முத்திரி கிணறு, ஆங்காங்கே நிழல்தாங்கல் அமைத்தல், அனைவரும் ஒன்றாக ஒரே மாதிரியான உணவை சமைத்து ஒரே இடத்தில் அமர்ந்து சமமாக உண்ணுதல் போன்ற பல்வேறு செயல்களை நிறுவினார். தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று சாதிய வேற்றுமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன்னிடம் வரும் அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியை தொட்டு திருநாமம் இட்டார். அக்காலத்தில் சாதிய வேற்றுமையை காட்டுவதற்காக மேல்சாதிக்காரர்கள் வரும் போது ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் தனது துண்டை இடுப்பிலோ, அல்லது கை இடுக்கிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை இப்போது வரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தொடர்வதைக் காணலாம். அதே போல் அக்காலத்தில் பெண்களும் தோள்சீலை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போதும் ஆண்கள் வைதீக கோயிலுக்குள் செல்லும் போது தனது துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ளும் வழக்கம்தான் நிலவி வருகிறது. ஆனால் வைகுண்டர் தன்முன் வரும் ஆண்கள் அனைவரும் துண்டை தலையில் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், தன்முன் வரும் பெண்கள் அனைவரும் கட்டாயமாகத் தோள்சீலை போட்டுத் தான் வர வேண்டும் என்றும் கூறினார்.
ந.முத்துமோகன் அவர்கள் சிறு வயதில் இருக்கும் போது வைகுண்டரைப் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் ஊர் அய்யா வைகுண்டர்ப் தேர் திருவிழாவைப் பற்றியும், அனைத்து மக்களுக்கும் சமமாக வழங்கும் உம்பாஞ்சோறு பற்றியும் நினைவு கூர்கிறார். பிறகு பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவனான பிறகு வைகுண்டர் மரபு சீர்திருத்த மரபு என்று நா.வானமாமலை கூறக் கேட்டும், வைகுண்டர் பற்றி பல கதைகளை கேள்வியுற்றும் அதனை சீர்திருத்த மரபாகப் பார்க்க முயல்கிறார்.
ந.முத்துமோகன் அவர்கள் வைகுண்டர் இயக்கம் பற்றிக் கூறும்போது ‘‘அய்யா வைகுண்டர் இயக்கம் நேற்றைய தலித் மக்களின் இயக்கம், நேற்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கம்’’ (ப.எண்.240) என்று கூறுகிறார். அக்காலத்தில் நாடார் சாதி உட்பட கிட்டத்தட்ட 18 சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வரிசையில் இருந்தது. வைகுண்டர் அனைத்து சாதி மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் புரட்சி செய்தார். அந்த மக்களுக்கு அறிவு உணர்ச்சியூட்டி மக்கள் சுதந்திரமாக இருக்கவும் அவர்களின் சமூக மாற்றத்திற்கும் வித்திட்டார். மேலும் வைகுண்டர் இயக்கம் பற்றி கூறும்போது “இந்த இயக்கம் ஒரு நிறுவனமாக இறுகிவிடாமல் தொடர்ந்து அது ஓர் இயக்கமாக வளரவேண்டும். இன்றையச் சூழல்களில் இன்னும் ஒடுக்கப்பட்டோராக உள்ள மக்கள் பகுதியினரின் போராட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் இயக்கத்தார் பகிரங்கமாக தமது ஆதரவைத் தெரிவிக்கவேண்டும். தொடர்ந்து நடைபெற்றுவரும் அடித்தள மக்கள் எழுச்சிகளுக்கு இவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உம்பாஞ்சோறு வழங்கி அவர்களோடு ஒன்றுபட வேண்டும். தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” (ப.எண் 240) என்று முத்துமோகன் அவர்கள் விளக்கிக் கூறுகிறார்.
முடிவுரை
மேலே எடுத்துக் காட்டியவற்றின் வழியாகப் பேராசிரியர் ந. முத்துமோகன், வைகுண்டர் இயக்கம் என்பது அனைத்து மக்களுக்கான அன்புவழி இயக்கம்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய சாதாரண மனிதன் குருவாகப் பரிணமித்து அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டிய அன்புவழி இயக்கம் என்று தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால், இப்போது அய்யா வைகுண்டரையும் அவரது வழியையும் சனாதன வைதீக மரபைச் சேர்ந்தது என்று கட்டமைத்து மக்கள் மத்தியில் தவறான செய்திகளை இந்துத்துவ இயக்கங்கள் பரப்பி வருகின்றன. இதனை களைந்து பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் குறிப்பிட்டது போல, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கான இயக்கமாக அய்யா வைகுண்டர் சிந்தனையும் வழியும் புத்துணர்ச்சி பெறவேண்டும்.
பார்வை நூல்கள்:
1. அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்; தா.கிருஷ்ணநாதன்
2. மார்க்சியக் கட்டுரைகள்; ந.முத்துமோகன்
- சே. கலைவாணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை