பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் எல்லாம், பொறுப்பற்றுப் பேசும் தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தில்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆங்கில மொழி பற்றிப் பேசி இருக்கிறார். ஆங்கிலம் கற்பதும், பேசுவதும் அவமானம் என்று கருதும் நிலை விரைவில் இந்தியாவில் வரும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இதனை ஏதோ ஆங்கிலத்திற்கு எதிரான கூற்று என்று மட்டும் நாம் எடுத்துக் கொள்வோமானால், நாம் நம் எதிரிகளை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று பொருள்! இந்தக் கூற்று, எதிர்காலத்தில் அவர்கள் ஏற்படுத்த விரும்பும் பல ஆபத்துகளை மிகச் சுருக்கமாகவும், மறைமுகமாகவும் சுட்டிக்காட்டுகிறது!
அவர்களின் முதன்மையான நோக்கம் எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வருவது! குறிப்பாக, மொழி பற்றிய பல திருத்தங்களை அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும் என்று நாம் இதனை எளிதில் புறந்தள்ளி விடக்கூடாது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டு, ராமர் கோயிலையும் கட்டி விட்டனர். அரசமைப்புச் சட்டத்திலிருந்து 370 ஆவது பிரிவை நீக்கி விட்டனர். தங்களை மிக உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொண்டே, 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் பெற்று விட்டனர். இவ்வாறாக இன்னும் பல செய்திகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்!
இப்போது ஆங்கிலத்தில் கை வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். நீதிமன்றங்களில் மொழிகளின் பயன்பாடு குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை நாம் அறிவோம்! ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளலாம் .....
"Article 348 (1)(a) of the constitution of India States that all proceedings in the supreme court and in every High court Shell be in English language".
என்பதே இன்று வரையில் சட்டமாக உள்ளது. அதாவது, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும், அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்பது அந்த விதி!
அதனுடைய உட்பிரிவாக, உயர் நீதிமன்றங்களில் மட்டும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று, இந்தி அல்லது வேறு ஒரு மொழியை, அந்த மாநில ஆளுநர் பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறது!
இதனை எல்லாம் அடியோடு மாற்றிவிட்டு, இந்தியை மட்டுமே இந்தியா முழுவதும் வழக்காடு மன்ற மொழியாக, அலுவலக மொழியாக ஆக்குவதற்கு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதே அமித்ஷா பேச்சின் உட்பொருள்!
ஆங்கிலம் என்னும் அந்நிய மொழியை அகற்றிவிட்டு, இந்திய மொழிகளில் ஒன்றான இந்தியைக் கொண்டு வருவதில் என்ன பிழை என்று சிலர் கேட்கின்றனர். மொழிகளில் இரண்டு வகைகள்தாம் உண்டு! ஒன்று தாய் மொழி, இன்னொன்று அந்நிய மொழி! இந்த அந்நிய மொழிகளுக்குள், அருகில் உள்ள அந்நிய மொழி, தொலைவில் உள்ள அந்நிய மொழி என்கிற வேறுபாடெல்லாம் இருக்க முடியாது!
இந்தியைத் திணிப்பது என்பது கூட, எதிர்காலத்தில் சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்காகத்தான். எனவே ஆங்கிலம், சமஸ்கிருதம் என்னும் இரண்டு மொழிகளில், எது நமக்குப் பயன்படும், எது நம்மைப் பயன்படுத்தும் என்று அறிந்து கொள்ள வேண்டும்!
சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமன்று! அது ஒரு பண்பாட்டு வல்லான்மை! அந்த மொழி நம் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. ஆனால் ஆங்கிலமோ நமக்குப் பயன்படுகிறது.
உலக நாடுகளோடு தொடர்பு கொள்வதற்கு, உலக வரலாற்று, அறிவியல் செய்திகளை அறிந்து கொள்வதற்கு, உலகெங்கும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு என்று பல்வேறு வகைகளில் ஆங்கிலம் நமக்கு உதவுகின்றது! ஆனால் சமஸ்கிருதமோ, தான் தேவபாஷை என்றும், தமிழை நீசபாஷை என்றும் சொல்லி இழிவு படுத்துகின்றது!
நம்மை ஏற்றி விடுகிறது ஆங்கிலம்! நம் மீது ஏறி மிதிக்கிறது சமஸ்கிருதம்!
எனவே ஆங்கிலத்தில் பேசுவது அவமானம் இல்லை! அமித்ஷா போன்றவர்கள் இந்த நாட்டை ஆள்வதுதான் அவமானம்!
- சுப. வீரபாண்டியன்