காசாவில் இன்று ஒரு சிறுவன் பேசுகிறான், “உணவுப் பொட்டலங்களைத் தருவதாகச் சொல்லி, அவர்கள் எங்களுக்கு வில்லைகளைக் கொடுத்தார்கள். நாங்கள் முகாமில் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் இசுரேலியப் படைகள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். என் கண்ணெதிரே என் தாயை அவர்கள் கொன்றார்கள். என் அண்ணனைக் கொன்றார்கள். யாருடைய உயிருக்கும் இங்கே உத்தரவாதமில்லை. நாங்கள் சிறுவர்கள். சாதாரண பொதுமக்கள். எங்கள் யாரிடமும் ஆயுதங்கள் இல்லை. நாங்கள் யாரும் யூதர்களைத் தாக்கவில்லை. 50 ஷெக்கெல்கள் கூட பெறுமானமில்லாத அந்த வில்லைகளுக்காக யாரும் முகாம்களுக்குப் போகாதீர்கள். உங்கள் சொந்தங்களை இழந்து விடுவீர்கள். எங்கள் உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானதா? எங்களுக்கு தண்ணீர் இல்லை. உணவு இல்லை. பிறரைப் போல எங்களுக்கு வாழ உரிமை இல்லையா?” என அவன் கேட்கும் கேள்விகள் உலக மாந்தரின் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளன.
அப்படி அவர்கள் செய்த தவறு என்ன?
1882 இல் தொடங்கங்கப்பட்ட யூத மத இயக்கம் அப்போது ஒட்டோமன் பேரரசாக இருந்த பாலஸ்தீன நிலப்பரப்பின் மீது அவாக் கொண்டு, அங்கே தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள காலனியாதிக்க நாடுகளின் உதவியை நாடின.
1917இல் பால்ஃபோர் பிரகடனம் செய்து, பிரிட்டன் அவர்களுக்கு ஒட்டோமன் பேரரசின் கிழக்குப் பகுதியில் ஒரு தேசம் உண்டாக்க உறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகத் தஞ்சம் புகுந்த யூதர்கள் தங்களுக்கென்று வரையறுக்கபட்ட நிலப்பரப்பில் தங்கள் பரவலை நிறுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் மேற்கே பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அதன்பின்னர் 1962இல் அங்கே பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோன்றி, அதன் தலைவர் யாசர் அராபத் உலக நாடுகளுக்குச் சென்று பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கக் கோருகிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் வெற்றி அடையவில்லை.
ஹிட்லரின் வதை முகாம்களிலிருந்து தப்பியவர்களும், உலகெங்கிலும் இருந்த பிற யூதர்களும், இசுரேலுக்குத் திரும்புமாறு அங்கே இருந்த அரசால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அழைக்கப் படுவதும், அங்கே அவர்கள் தங்கள் நிலப்பரப்பை பாலஸ்தீன எல்லைகளுக்கு அப்பால் நகர்த்துவதும், கடந்த ஒரு நூறாண்டாக நடைபெறுகிறது. அது அக்டோபர் 2023 முதல் பாலஸ்தீன இன அழிப்பை மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியைத் தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள் என்பது போல இசுரேல், சிறிது இடம் கேட்டு தங்க வந்து, தற்போது அங்கு இருக்கும் இசுலாமியர்களை விரட்டி அடித்தும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரைக் கொன்று குவித்தும், இதுவரை 60,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆதங்கப்பட்டிருக்கிறார். பல லட்சக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயும், அகதிகளாகப் புலம்பெயர்ந்தும் இருக்கிறார்கள்.
இந்த மனிதப் பேரழிவில் நம் ஒன்றிய அரசின் நிலை என்ன? உலக அமைதிக்கும், போரில்லா உலகத்திற்கும் உறுதி ஏற்றுக்கொண்ட இந்திய வெளியுறவுக் கொள்கையை, இந்திய மௌனத்தால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. சென்ற வாரம் நடந்த ஐ.நா வில் இசுரேலை போர் நிறுத்தம் செய்யக் கொண்டு வந்த தீர்மானத்தில் தன்னை விலக்கிக் கொண்டுள்ளது இந்தியா. எனில் அதன் பொருள் என்ன? இசுரேலுக்குத் துணை நிற்கும் அமெரிக்காவின் தயவுக்காக, அல்லது இவர்களின் தனிப்பட்ட முதலாளித்துவ நலன்களுக்காக, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை, உலகளாவிய மனிதாபிமான பார்வையைக் கூடக் கைவிடத் துணிந்து விட்டார்களா?
ஈரான் அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி, இசுரேலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்தது. இசுரேல், ஈரானின் அணு ஆய்த விஞ்ஞானிகளை சுட்டு வீழ்த்தியது. இசுரேல் தாக்கப்பட்டால் அமெரிக்க அரசும் களம் இறங்கும். வட கொரிய அரசு இரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. ஒரு வட்டாரப் போர் உருவாகும் எல்லா வாய்ப்புகளும் உருவாகி உள்ள சூழலில், பாலஸ்தீன மக்களின் எல்லையற்ற துயரங்களை நிறுத்தும் விதமாக உலக நாடுகளில் மக்கள் இயக்கங்கள் இந்த இன அழிப்புப் போரைக் கைவிடுமாறு இசுரேல் அரசையும் ஐக்கிய நாடுகளையும் வலியுறுத்துகின்றன.
கடந்த வாரம் பிரிட்டனில் பாலஸ்தீனத்தை விட்டு விலகுமாறு இசுரேலைக் கண்டித்து பொதுமக்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. 17.06.2025 அன்று இடதுசாரிகள் தலைமையில் இந்தியத் தலை நகர் புதுதில்லியில் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளார்கள். இன்று 21.06.2025 தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் பாலஸ்தீன ஆதரவு குழு ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் அதில் கலந்து கொள்வதென முடிவு செய்துள்ளது.
1980களில் உலக நாடுகள் ஐக்கிய நாடுகளின் துணையுடன், 1967இல் எட்டப்பட்ட எல்லை முடிவுகளை ஒட்டி இசுரேல், பாலஸ்தீனம் என இருதேச தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன. அதையே இதுவரை ஆதரித்தும் வருகின்றன. அதன் அடிப்படையில் இசுரேலின் ஆக்கிரமிப்புகளையும், இன அழிப்புப் போரையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும் பாலஸ்தீன மக்கள் அச்சமின்றியும் மாண்புடனும் வாழ உலக அரங்கில் மனித நேயச் செயல்பாடுகளை அடர்த்தியாக்குவோம்!
- சாரதாதேவி