ஜூன் முதல் நாளன்று கூடல் மாநகராம் மதுரையில் திமுகழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடாக இந்தப் பொதுக்குழு பிரமாண்டமாகக் கூட்டப்பட்டது என்றாலும், திமுக வெறும் தேர்தல் அரசியல் கட்சி மட்டுமல்ல, அது தமிழ் இனத்தின் விடியலுக்கான கொள்கைகளைக் கொண்ட கட்சி. என்பதை பொதுக்குழுத் தீர்மானங்கள் பறை சாற்றுகின்றன.

1949 ஆம் ஆண்டு பெரியாரோடு முரண்பட்டுத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அமைப்பை பேரறிஞர் அண்ணா தொடங்கினார் . ஆனால் அந்த முரண்பாடு பெரியார் என்கிற தத்துவத்தின் மீதான முரண்பாடு அல்ல என்பதை இன எதிரிகள் புரிந்து கொள்வதற்குத்தான் கொஞ்சம் காலம் பிடித்தது.

1952 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசின் முதல் பொதுத்தேர்தலை திமுக ழகம் எதிர்கொண்ட விதம் வித்தியாசமானது. அந்தத் தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. ஆனால் பங்கேற்ற வேட்பாளர்களை திமுக ஆதரித்தது. எப்படித் தெரியுமா? திமுகவின் திராவிட நாடு கோரிக்கை உள்ளிட்ட இனம், மொழி சார்ந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்த வேட்பாளர்களை ஆதரிப்பதாக அண்ணா அறிவித்தார். அப்படி ஒப்புக்கொண்டு திமுகவின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் வெற்றி பெற்றார்கள். சட்டமன்றத்தில் திமுகவின் குரலை ஒலிக்கவும் செய்தார்கள்.

தேர்தலுக்குள் போகாமலேயே தனது கருத்துக்கும் கொள்கைக்கும் தேர்தல் அரசியலில் பெரும்பான்மையை உறுதிசெய்த அண்ணா, தான் கண்டதும் கொண்டதுமான ஒரே தலைவர் தந்தை பெரியாரின் தத்துவங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கக் கையாண்ட மாற்றுத் திட்டம் தான் திமுக என்பதை நாட்டு மக்களுக்கும், இனப் பகைவர்களுக்கும் உரக்கக் கூறிய ஆண்டு 1967.

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கால் நூற்றாண்டைக் கடந்தும் மக்களின் பேராதரவோடு இன்றைக்கும் அதிகாரத்திலிருக்கிற ஒரே ஒரு மாநில கட்சி திமுகழகம் மட்டும் தான். அதுமட்டுமல்ல, கடந்த எழுபதாண்டுகளாக தேர்தல் அரசியலில் இனமான அறிவு விடுதலையை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்து அதில் ஆறுமுறை ஆட்சியில் அமர்ந்து தமது கொள்கைகளை எல்லாம் சட்டமாக்கி நடைமுறைப் படுத்தி வருகிற கட்சி என்கிற பெருமையும் திமுகழகத்திற்கு மட்டுமே உண்டு.

இதில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த 50 ஆண்டுகளாக கட்சியின் தலைவராகவும் 19 ஆண்டுகளாக ஆட்சியின் தலைவராகவும் இருந்து கொள்கைவழி ஆட்சியையும், கட்சியையும் கட்டுக்குலையாமல் வழிநடத்தியவர் கலைஞர்.

கலைஞரால் வளர்க்கப்பட்டு, கலைஞரின் விரல்பிடித்து நடந்து அரசியல் பயின்றவர் தளபதி மு க ஸ்டாலின். நான் கலைஞரைப் போல எழுத்தாளரில்லை, பேச்சாளரில்லை என்று தன்னடக்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலைஞருக்குப் பின் கட்சியையும் ஆட்சியையும் தலைமைதாங்கி நடத்திவருகிற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்சியையும், ஆட்சியையும் கூடுதல் வலுவோடு செயல்படுத்தி வருகிறார்.

அதேநேரம், கலைஞரே எதிர்கொள்ளாத அளவிற்கு மிக மோசமான எதிரிகளை, சட்டத்தையே மதிக்காமல் செயல்படுகிற கொள்கை எதிரிகளை ஒருபுறமும், அவர்களின் வஞ்சக சூழ்ச்சி அரசியலையும், அந்த இனப்பகைவருக்குத் துணைநின்று சேவகம் புரிந்துவரும் சுக்ரீவன் விபீஷணன் போன்ற துரோகிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு நிற்கிறார் திராவிடமாடல் முதலமைச்சர்.

2026 தேர்தல் களத்தில் வாகை சூடி ஏழாவது முறையாக திமுகழகத்தின் ஆட்சியையும் திராவிடமாடல் 2.0 இரண்டாம் பாகத்தையும் நிறுவிட வேண்டும் என்கிற முதலமைச்சரின் கோரிக்கைக்கு, முழக்கத்திற்குப் பின்னால் இருப்பது வெறும் அதிகாரப் பிரச்சினை அல்ல. மீட்கப்பட்டிருக்கிற விடுதலை வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையின் கவலையே மேலோங்கி நிற்கிறது.

1909 ஆம் ஆண்டு தொடங்கிய பார்ப்பனரல்லாதார் நலன் காக்கும் போராட்டம் 1912 இல் தொடங்கிய திராவிட சங்கத்தின் நோக்கம், 1916 ஆம் ஆண்டு அடிகோலிய நீதிக்கட்சியின் இலட்சியம், 1920 ஆம் ஆண்டு அமைந்து 17 ஆண்டுகள் தொடர்ந்த நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் 1967 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இடையிடையே 21 ஆண்டுகால திமுகழக ஆட்சியின் முன்னேற்றத் திட்டங்கள் என நூற்றாண்டில் நாம் பெற்ற வெற்றிகளை எல்லாம் டில்லியின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்த கூட்டம் இப்போது தமிழ்நாட்டையும் தாய்த் தமிழையும், தமிழர் உரிமைகளையும் பற்றிய கவலை கிஞ்சித்தும் இன்றி தங்கள் சொந்தக் கட்சியையும் கொண்டு போய் அடகு வைத்திருக்கிறார்கள்.

இந்த வஞ்சக விபீஷணன் கும்பலின் துரோகத்தைத் தோலுரித்து, நம்முடைய இன, மொழி, நாடு காக்கும் உரிமைப் போரில் தமிழர்கள் ஓரணியில் திரண்டிட வேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கிறது மதுரைப் பொதுக்குழு. அதாவது, "ஓரணியில் தமிழ்நாடு" என்கிற முழக்கத்தோடுத் தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று திராவிடமாடல் ஆட்சியின் திட்டங்களையும் அதன் தேவைகளையும் சொல்வதோடு இனத் துரோகிகள் , வஞ்சகர்களின் கூட்டுச் சதியையும் தமிழ்நாட்டு இளைஞர்களிடம், மாணவர்களிடம் எடுத்துக் கூறி எல்லோரையும் ஒன்று திரட்டுங்கள் என்பதே இதன் கோரிக்கை.

1916 ஆம் ஆண்டு சென்னை ஸ்பர்டாங் சாலையில் நமது நீதிக்கட்சியின் தலைவர் டாக்டர் தரவாட்டு மாதவனார் முழங்கிய "திராவிட இளைஞனே, விழி! எழு! இன்றேல் வீழ்ந்து படுவாய்!" என்ற எச்சரிக்கை முழக்கமே நமக்கு இப்போது திராவிடமாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் "ஓரணியில் தமிழ்நாடு " என்று வடிவமைத்து வழங்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு நமது பணிகளில் வெற்றி பெறுவோம்!!

- காசு. நாகராசன்