"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" என்று சொல்லும் பெரும்புலவர் திருவள்ளுவர் இன்னொரு இடத்தில் "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு" என்று கூறுகிறார்.
முதலில் சொன்ன குறள் தமிழ்நாடு முதல்மைச்சருக்குப் பொருத்தமாகும். அவர் சொல்கிறார், அதைச் செய்து முடிக்கிறார்.
சொல்வது ஒன்று, செய்வது வேறு என்று செயல்படுபவரின் தொடர்பு, கனவில் வந்தாலும்கூடத் துன்பத்தைத் தரும் என்பது இரண்டாவதாகச் சுட்டிக்காட்டிய குறளின் பொருள். இது பிரதமர் மோடிக்காக எழுதப்பட்டது போல அமைந்து விட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு, நாடு கடத்தல் என்ற பெயரில் ஒன்றிய இந்திய மக்களைக் குற்றவாளிகள் போல விலங்கிட்டு விமானத்தில் அனுப்பியது.
பிரதமர் என்ற முறையில் அவர் அதைத் தட்டிக் கேட்கவில்லை மோடி. இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு அதிக வரிவிதித்தார், டிரம்ப். அப்போதும் ஒன்றும் பேசவில்லை பிரதமர்.
பெகல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ஒன்றியம் தாக்குதல் நடத்தியபோது "நான்தான் போரை நிறுத்தச் சொன்னேன்" என்று பலமுறை சொன்னார் டிரம்ப். இதுவரை அது குறித்து எந்த விளக்கமும் சொல்லவில்லை மோடி.
மணிப்பூர் பற்றிப் பேசுவதில்லை, முக்கிய பிரச்சனைகள் குறித்துப்பேச நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் கூட்டச் சொன்னால் கூட்டுவதில்லை, அவைக்கு வந்தாலும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை, பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை.
தேர்தல் வரும்போது மட்டும் நாட்டைக் கல்வியில் உயர்த்துவேன், பொருளாதாரத்தில் உயர்த்துவேன், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவேன், மதுரையில் எய்ம்ஸ் கட்டுவேன், ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுப்பேன் இத்தியாகி... இத்தியாதி என்று பேசுவார். தேர்தல் முடிந்ததும் நாட்டு மக்களைச் சந்திப்பதை விட்டுவிட்டு உலகத் தலைவர்களைச் சந்திக்கப் பறந்து விடுவார்.
சொல்வார், சொன்னதைச் செய்வார், ஸ்டாலின். இது நினைத்தாலே மகிழ்ச்சிதான். சொல்வார், செய்யமாட்டார் மோடி. இது கனவு என்றாலும் கஷ்டமாகத்தான் இருக்கும்.
இவர்களைப் பற்றி அன்றே சொன்ன திருவள்ளுவர் பெரிய 'தீர்க்கதரிசி' தான்!
- கருஞ்சட்டைத் தமிழர்