சிறைகளைப் பற்றி இதற்கு முன்பும் பல திரைகள் பேசி இருக்கின்றன! இப்போது மீண்டும் திரையில் ஒரு சிறை வந்திருக்கிறது!
படத்தின் இறுதியில் பாத்திரங்கள் விடுதலை ஆகிவிடுகின்றன!
ஆனால் பார்த்தவர்கள் சிறைப் படுகின்றனர்!
சிறை கொடியதுதான்... ஆனால் வெளியில் இருக்கும் மத வெறியும் மது வெறியும் அதனினும் கொடியவை என்பதை இந்தத் திரைப்படம் எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறது!
கதாநாயகன் பெயர் அப்துல் ரவூப்! காரணத்தோடு தான் அது வைக்கப்பட்டிருக்கிறது!
எரியும் ஈழத்தைக் காப்பதற்காக எரிந்து போன இன உணர்வுத் தீப்பந்தம் அவன் என்பதையும் ஒரு காட்சி உரத்துச் சொல்கிறது!
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதி என்னும் பாசிசச் சிந்தனையை இன்னொரு காட்சி இடுப்பொடித்துப் போடுகிறது!
இது இயக்குனரின் முதல் படமென்று இனியும் சொல்லாதீர்கள். எவனும் நம்பமாட்டான்!
கதையின் அழகை, நடிப்பின் திறனை, ஒளிப்பட நேர்த்தியை இசையின் இனிமையை.... ஒவ்வொன்றாய்ப் பாராட்ட இன்னொரு திரைப்படம் எடுக்க வேண்டி வரும்!
சந்தை இரைச்சலிலே சங்கீதம் கேட்காது! நல்ல படங்கள் நாட்டில் ஓடாது என்று சொல்வார்கள். பொருளாதார அடிப்படையிலும் இப்படம் பெற்றிருக்கும் வெற்றியைப் பார்த்தால், இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான் ஓடும்போல் தெரிகிறது!
- சுப. வீரபாண்டியன்