தர்மமாம்! வெல்லுமாம்!
பொய்களால்
நிரம்பியுள்ளது
பூமி!
உண்மைதான்
உண்மை
உயிரோடிருப்பதே.

நீதியின்
நிர்வாணத்தில்தான்
அநீதி
ஆடையுடுத்திக்கொள்ளும்போலும்.

நல்லவர்களும்
நேர்மையானவர்களும்
தலைநிமிர்ந்து
தெருவில்
நடக்கவே
வெட்கப்படுகிறார்கள்.

"தர்மத்தின்...
தர்மம் நின்று"...
தர்மம் ஓடினாலும்
சூதுதான் வெல்லும்
மர்மமாய் ஆசிர்வதிக்கும்
சாத்தான்கள்.

குற்றம்
பார்க்கின்
சுற்றமே இல்லை
அம்மா !

திருடர்களும்
வழிப்பறிக்காரர்களுக்கும் மட்டுந்தான்
நிழல் தர வேண்டுமாம்
சாலையோர மரங்களுக்கு
சர்க்காரின் உத்தரவு.

கொடை
கொற்றம்
சிம்மாசனம்
சிறைச்சாலையையும் சேர்த்துக்கொள்!

Pin It