மேலாண்மை பொன்னுச்சாமி எதிர்வினைக்கு மறுவினை

தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி நல்ல படைப்பாளி; ஆனால் அவரது மார்க்சியப் புரிதல் இவ்வளவு பின்தங்கி யிருப்பது வியப்பளிக்கிறது!

 மகா பீட்டரைப்பற்றி மேதை லெனின் புகழ்ந்துரைத்தால் ஏற்றுக் கொள்ளுகிற மார்க்சியர்கள், ராஜராஜசோழன் குறித்த தோழர் பெ.ம.வின் மதிப்பீட்டை மறுதலிப்பது முரண்பாடானது. இப்பிரச்சினை பற்றி முப்பதாண்டு களுக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைமை தோழர். பெ.ம.விடம் வாதாடி, அதிகாரப் பூர்வமாகப் பின் வாங்கியதை "மேலாண்மை' அறியார் போலும்.

 வங்காளதேச விடுதலைப் போரை யொட்டி அங்கிருந்து மேற்கு வங்கத்திற்குள் அகதிகள் தொகை தொகையாக வந்தார்கள். அவர்களில் பீகாரிகளும் உண்டு. அப்போது ஜோதிபாசு மேற்குவங்க முதலமைச்சர். ஜோதிபாசு என்ன சொன்னார் தெரியுமா? “வந்த அகதிகளில் வங்காளிகள் மட்டும் இருங்கள். பீகாரிகள் பீகாருக்குப் போய் விடுங்கள்''. இதையும் மனித நேயம் தொலைத்த இனவெறி என்பாரா மேலாண்மை?

 தேசிய இனம் தாயக உரிமை குறித்து மார்க்சியம் என்ன கூறுகிறது என்பதைக்கூட மேலாண்மை இன்னும் புரிந்து கொள்ள வில்லை. பாரதமாதா படிமம் இவரைப் போன்றவர்களது கண்களை மறைக்கிறது!

பிரம்மாண்டங்கள் மக்களை மலைக்க வைப்பது மட்டுமன்று; ஊழலோடும் தொடர்புடையதுதான்!

- சி.அறிவுறுவோன், அம்மையகரம்

 தோழர் மணியரசன் அவர்கள் வழங்கிய நீண்ட நெடிய நேர்காணலைப் படித்து முடித்துவிட்டுத் தோழர் மேலாண்மை அவர்களது கடிதத்தைப் படித்தேன். அதில் காணப்பட்ட பின்குறிப்புத்தான் என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. சோவியத் ஒன்றியம் சுரண்டலுக்கு எதிராக அடிமைத் தனத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மாந்தக் குமுகத்துக்கும் முன்னோடியாக அமைந்து வளர்ந்தது. அது சோசலிசக் குமுகத்தில் கால் பதித்துத் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பண்பாட்டுத் தளத்தைத் தகவாக உருவாக்கிக் கொள்ளாததால் குமுக அடித்தளத்தின்மீது தனது ஆளுகையை செலுத்த முடியாத நிலையில் சீரழிந்து சிதைந்து போன அவலம் நேர்ந்தது. இதனால் உலகம் அமெரிக்க வல்லாண்மைக்கு முன்னால் திக்கித் திணறி கூனிக் குறுகி நிற்கிறது என்னும் உண்மை பளிச்செனத் தெரிகிறது. இந்தியா, சோவியத் ஒன்றியம் போன்றதா?

 இந்தியா பன்னாட்டு நிறுவனங்களின் காப்பாளனாகவும், தன்னாட்டு மக்களின் எதிரியாகவும் மாறியுள்ளது. சுரண்டல் கூட்டத்தை ஊட்டி வளர்க்கும் தாயாக உள்ளது. அமெரிக்க வல்லாண்மைக்கு முன் கவட்டிக்குள் வாலை நுழைத்துக் கொண்டு குழையும் நாயாகவும் உள்ளது. இந்தியப் பெரு முதலாளிகளின் வேட்டைக் காடாக இலங்கையை மாற்ற எண்ணி, அதற்காக அங்கு வாழும் தமிழ்மக்களின் உரிமைக் குரலை இலங்கை மத இனவெறி அரசோடு சேர்ந்துகொண்டு நசுக்க முயல்கிறது இந்தியா. மாந்த உரிமைக்கு எதிரான கொலைத் தாண்டவங்களுக்கு உதவி, தானே ஒரு வல்லாண்மைமிக்க அயலகச் சுரண்டலை அரங்கேற்றும் எண்ணத்தில்தான் தெற்காசியக் கூட்டமைப்பை ஏற்படுத்தியுமுள்ளது. இது பெரும்பான்மை மக்களுக்கான அரசு அன்று. சிறுபான்மையான சுரண்டும் கூட்டத்துக்கான அரசு. ஆகவேதான் மாநில உரிமைகள் பறிக்கப் படுகின்றன. மாநிலமொழிகள் புறக்கணிக்கப் படுகின்றன. இந்த நிலையில் இந்தியா சிதையுமானால், சோவியத் ஒன்றியம் சிதைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் நேர வாய்ப்பில்லை. இரண்டும் வெவ்வேறு வகையானதும் நேர்மாறானதுமான அமைப்புகள். ஆகவே இந்தியா சிதைந்தால் மாறுபட்ட விளைவுகளே தோன்றும். அந்த நேர்மாறான விளைவுகள் அப்போது முன்னெடுக்கப்படும் அரசியலைச் சார்ந்தே இருக்கும்.

 மேலாண்மைக்குத் தனித்தமிழ் கிண்டலுக்குரிய செய்தியாகவுள்ளது. தனித் தமிழ் பிராமணியத்துக்கும் சமற்கிருதத்துக்கும் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் எதிராகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்னும் செய்தி அவருக்குப் புரியாது என்று கருதுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு செம்மலரில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு பதிவாகியிருந்தது. அதில் தமிழகத்தில் தமிழ்ப் பேச வராத தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதற்குக் கல்வியும் ஊடகங்களும் ஆங்கிலத் தாக்கமும்தான் கரணியமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ் அழிவை சந்திக்கப் போகிறது எனும் ஆதங்கம் அதில் வெளிப்பட்டிருந்தது. தோழர் மார்க்சுகூட பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற செருமானியச் சொற்களைக் கண்டறிந்து எழுதியுள்ளார். சில நேரங்களில் அச்சொற் பொருளுக்கான வேர் மூலம் செருமானிய மொழியில் கண்டறிய முடிந்தால் அந்த வேர் மூலத்திலிருந்தே செருமானியத்தில் புதிய சொற்களை உருவாக்கி எழுதியுமுள்ளார். இது மார்க்சு அவர்கள் செருமானிய மொழிக்கு வழங்கிய கொடை. இதை இப்படிப் பார்க்கத் தவறுவது மொழியின் பயன்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதிலிருந்தே வருவதாகும்.

 பிரமாண்டங்கள் மக்களை மலைக்க வைப்பது மட்டுமன்று; ஊழலோடும் தொடர் புடையதுதான். ஊழலும்கூட பிரமாண்டம் தான்! ஊழலின் ஊற்றுக் கண்ணை அடைப் பதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் வளர்சிதைவு களாக அவற்றைப் பார்ப்பதுதான் மார்க்சிய அறிவியலோ என்று எண்ணும்படி மேலாண்மைப் பார்வை அமைந்துள்ளது.

 காவிரிக்காக இங்கே போராடினால் கர்நாடகத் தமிழன்மீது கொலைத் தாக்குதல் நிகழும். அது மாந்தநேயச் செயலாக மேலாண்மைக்குத் தோன்றும். இங்கே யாராவது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் "இனவாதம்' "பிரிவினைவாதம்' "தீவிரவாதம்' "மனுதர்மசிந்தனை' இப்படியெல்லாம் மேலாண்மை பெயர் சூட்டிவிடுவார்.

 முல்லைப்பெரியாறு தொடர்பாகவும் அவர் பார்வை அப்படியே உள்ளது. அச்சுதானந்தனும் பிரணாயி விசயனும் செய்தது எந்த வகையில் மார்க்சியம் என்பதை மேலாண்மை விளக்குவாரே யானால் கேரளாவுக்கு எதிராகப் போராடும் தமிழர்கள் மார்க்சியத்தின் எதிரிகள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

 மொழி வாரி மாநிலம் மக்கள் கோரிக்கையாக வந்தபோது கே.எம். பணிக்கர் எனும் தேயிலைத் தோட்ட முதலாளியின் கோரிக்கையைத்தான் அரசு ஏற்றுக் கொண்டு 80 விழுக்காடு தமிழர் வாழும் இடுக்கி மாவட்டத்தை கேரளாவோடு இணைத்தது.

 இந்திய மார்க்சியர்கள் முதலாளி யத்தை எதிர்ப்பது உண்மையாயின், இடுக்கி மாவட்டத்தைத் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் எனக் குரல்கொடுக்க முன் வருவார்களா? மொழிவாரி மாநிலம் என்றாலே மாநில எல்லை எதிர்காலத்தில் மாற வாய்ப்புண்டு என்றுதான் பொருள். எனவே, மொழிவாரி மாநிலத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்பது தவறாகப்படவில்லை.

 மொழிவழி மாநிலமும் வேலை யில்லாத் திண்டாட்டமும் சுரண்டல் அமைப்பும் நீடிக்கும் வரை வெளி மாநிலத்தவர் சிக்கல் நீடிக்கும். அப்போது வாட்டாள் நாகராசு, மணியரசன் போன்றோர் தோன்றுவதை தவிர்க்க முடியாது. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

 இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளையும் இந்திய ஆட்சிமொழியாக்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்தது போன்று தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வுகாண இந்திய அரசு முன்வருமானால் அதை ஏற்கலாம்.

 இந்தி பேசும் பகுதியில் வாழும் 38 மொழிப் பிரிவினர் தங்கள் மொழி நலனுக்காகப் போராடிவரும் செய்தியை இணையதளம் வழியாக அறிய முடிகிறதே! அதன் பொருள் என்னவென்று மேலாண்மைக்குத் தெரியுமா? இந்தியைக் கொலைகார மொழி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

 பிரமாண்டங்களையும் ஊழலையும் வளர்சிதைவுகளாகப் பார்க்கும் பார்வை இந்திய ஆளும் வர்க்கப் பார்வை என்பதை மட்டுமாவது மேலாண்மை புரிந்து கொள்ளட்டும்!

ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் தற்காத்துக் கொள்ளப் போராடுவது உலக நியதி!

- த.கவித்துவன், திருச்சி

 போலியாய்க் கட்டி எழுப்பப்பட்ட இந்திய தேசிய ஆலயத்தின் கெட்டியான சாந்துக் கலவையாய் மாறிவிட்ட மேலாண்மை போன்றவர்களின் மனம் தமிழ்த் தேசியத்தை ஏற்க மறுப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

 தோழர் மணியரசன் அவர்களின் நேர்காணலை நீள் நேர்காணல் என்று தோழர் மேலாண்மை கூறுவதிலிருந்து அவரது எதிர் மனக் கொதிப்பை நம்மால் உணர முடிகிறது. அடுத்த வரிகள் இன்னும் மோசமானவை. “ஊடகப் பரப்புகளில் வெளிப்படுத்தப்படாத அவரது கருத்துக்களை, சிந்தனைப் போக்குகளை கருக்கல் வெளிச்சப் படுத்தி யிருக்கிறது''. மேலாண்மை அவர்கள் கூறும் இக்கூற்றில் வெறும் எள்ளல் மட்டுமே மேலோங்கி நிற்கிறது. ஊடகப் பரப்புகளில் வெளிப்படுத்தப்படாத அவரது கருத்துக்கள் என்ற கூற்று முதலாளிய, மற்றும் இந்திய தேசியக் கட்டமைப்பின் ஊடகப் போக்குகளை உணராத தன்மையாகும். இந்திய தேசியத்திற்கு இடையூரான மாற்றுச் சிந்தனைகளை இந்திய தேசியத்திற்கு ஆதரவாய் நிற்கும் ஊடகங்கள் (குறிப்பாய் வெகுமக்கள் ஊடகங்கள்) மனமுவந்து வெளியிடவா விரும்பும்? “கருக்கல்'' பெ.ம.வின் நேர்காணலை முழுமையான பரிமாணத்தில் வெளியிடுகிறது என்றால் அது ஊடக அறத்தோடும், சிறந்த நோக்கும் கொண்டு செயல்படுவதால் சாத்தியமாகிறது. கருக்கல் இதழுக்கு நம் மனம் திறந்த பாராட்டுக்கள்.

 மனித நேயம் என்பது தமிழர் மரபில் அவர்களின் அறவாழ்வில் பின்னிப் பிணைந்தது. இதனைக் கையில் எடுத்துக் கொண்டுதான் தமிழர்களின் வயிற்றிலேயே செருகி விடுவார்கள் பகைவர்கள். தமிழினத்திற்குப் பாதிப்பு நேரும்போது தமிழினம் தற்காப்பு உணர்ச்சியுடன் செயல்பட்டு அந்த பாதிப்பு நேர்ந்துவிடாமல் அதனை முறியடிக்க முயலும் போது பகைவர்கள் மனித நேயம் என்ற சங்கிலி கொண்டு தமிழினத்தைக் கட்டி விடுவது ஒருவகை உத்தி. தோழர் மேலாண்மை இந்த உத்தியைப் பயன்படுத்தும் போதுதான் நமக்கு வேதனையாக உள்ளது.

 தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மண்ணில் சிக்கலாகி வரும் வெளியார் ஆக்கிரமிப்பையும் பற்றிப் பேசுவது மனுநீதிக் குணம் என்கிறார். அப்படியென்றால் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை வழங்கிய மா மேதை லெனினின் உயர்ந்த நோக்கத்தை இவர் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்? பெரும்பான்மை தேசியம் சிறுபான்மை தேசியங்களை ஒடுக்குவதை அனுமதிக் காதவர் லெனின். ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வு காண விரும்புபவர்கள் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனத்தை ஒடுக்குவதை, இனப்படுகொலை செய்வதைக் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் என்பதை (சி.பி.எம்) அண்மைக் கால வரலாறு மெய்ப்பித்துள்ளது. இவர்கள்தான் மனிதநேயம் குறித்து டன் கணக்கில் கவலைப்படுகிறார்கள்.

 ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்குப் போராடுவது உலக நியதி. தமிழினம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் அடிமைப்படுத்தப் பட்டு வந்த இனம். தமிழினத்தின் பெரும் பகுதி இயற்கை ஊழியால் அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய இனத்திலும் ஆரியக் கலப்பு நேர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மாறிப்போய்விட்டது. இயற்கையாலும், பகை இனத்தாலும் பெருந் தாக்குதலுக்கு அதிகம் ஆளான இனம் தமிழினமாகத்தான் இருக்கும். அத்தகைய ஓர் இனம் எஞ்சிய பரப்பையும் இழந்து அடையாளமற்றுப் போக விரும்பாது. இது தற்காப்பு உணர்ச்சி. உயிர்களிடத்தில் தற்காப்பு உணர்ச்சி இருப்பது போல் இனத்திற்கும் இருக்கவே செய்யும். இதில் மனு நீதிக்குணம் எங்கே இருக்கிறது?

 இந்தியா பல மொழி, பல தேசங்களைக் கொண்டது. பல்வேறு பட்ட மொழிகளையும், தேசங்களையும், தனித்தனி பண்பாடுகளையும் கொண்ட இந்திய அதிகாரக் கட்டமைப்பை இந்திய தேசியம் என்று அறிவியலுக்குப் பொருந்தாத சொல்லாக மேலாண்மை போன்ற மார்க்சியர் களால் எப்படிச் சொல்ல முடிகிறது என்பது விளங்க வில்லை.

 தேசியம் என்பதற்கான வரையறுப்பு தோழர் ஸ்டாலின் அவர்களால் சொல்லப் பட்டதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்டாலின் வரையறையை மறுத்து புதிய தேசிய இனத்திற்கான வரையறுப்பு இதுவரை யாராலும் உருவாக்கப் படவில்லை. இந்த வரையறுப்பிற்குப் புறம்பாய் மேலாண்மை இந்திய தேசியம் என்கிறார். இதுதான் மனுநீதிக் குணம். ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தனை. அவர்கள்தான் பரந்த பாரதம் என இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 அடுத்து மேலாண்மை ஒரு விஷயத்தை வேண்டுமென்றே தெளிவாகக் குழப்புகிறார். சாதியத்தையும், தலித்தி யத்தையும் அவர் தேசியம் என்கிறார். யார் கண்டுபிடித்தது இவற்றைத் தேசியம் என்று?

 குஜராத்தி சேட்டுக்களை எதிர்ப் பதிலாவது ஒரு வர்க்கத்தன்மை தெரிகிறது. பஞ்சம் பிழைக்க, வியர்வை வடிக்க வருகிற வட இந்தியக் கூலி மக்களை எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிறார் மேலாண்மை.

 நியாயமாகப் பார்த்தால் வடஇந்திய உழைக்கும் மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டத்தை அங்கே உள்ள மார்க்சிஸ்டுகள் அவர்களைத் திரட்டி நடத்தி இருக்க வேண்டும். அந்தந்த மாநில மக்களுக்குரிய வளர்ச்சித் திட்டங்களையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத் தந்திருக்கவேண்டும். வட மாநிலங்களில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணுரிமையையும் நிலைநாட்ட உண்மையில் மாவோயிஸ்டுகள் அந்த மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.

 காவிரியிலும் முல்லைப் பெரியாற் றிலும் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீர் உரிமையைப் பெற்றுத்தராமல் கன்னடர் களோடும், மலையாளிகளோடும், அங்குள்ள மார்க்சிஸ்டுகள் கைகோர்த்து நிற்கிறார்கள். இங்குள்ள மார்க்சிஸ்டுகள் கண்ணை மூடிக் கொண்டு மௌனமாகி விடுகிறார்கள். தமிழக மக்களின் நீர் உரிமைக்காக இவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் எத்தனை? ஒன்றுமே இல்லை.

 ஒரு மொழி வழித் தாயகத்தை (தமிழகத்தை) அதிகாரத் துய்ப்பிற்காக தெற்கு வடக்கு என பிரிக்க விரும்புபவர் மருத்துவர் ராமதாசு அவர்கள். அது கருக்கொண்டு வருகிறது என்று பீதி கிளப்புகிறார் மேலாண்மை.

 அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். ஒரு தேசிய இனம் அளவுக்கு மீறிய வெளிமாநிலத்தவர் குவிவு காரணமாக கலப்பு இனமாக மாறி தன் அடையாளத் தையே இழந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவான மனித நேயம் என்பது தேசிய இனத்தின் இருத்தலுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

 2009ல் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள இன வெறியரால் இந்தியாவின் உதவியுடன் இரக்கமற்ற முறையில் கொத்து, பாஸ்பரஸ் குண்டுகளால் (இவை அய்.நாவால் தடை செய்யப் பட்டவை) கொன்றொழிக்கப்பட்டார்கள். அப்போது செயல்பட்டிருக்க வேண்டிய மனித நேயம் வெகு மக்களைக் கொண்டிருக்கும் கட்சிகளிடம் காணாமல் போனது போல் மார்க்சிஸ்டு கட்சியிடமும் காணாமல் போனது. (இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி உண்ணாவிரதம் மேற்கொண்டு இப்படுகொலையை கண்டித்தது).

 உண்மை இவ்வாறிருக்க மார்க்சிஸ்டுக் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலாண்மை அவர்கள் தோழர் பெ.மணியரசனிடம் மனிதநேயம் இல்லை யென்று கவலைப்படுவது வேடிக்கையானது. விந்தையானது.

 தோழர் பெ.ம. அவர்கள் மலையாளிகள் இனவெறியுடன் தமிழகத்தி லிருந்து சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கியபோது தான், அதனைக் கண்டித்து எதிர்வினையாற்ற ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தை நடத்தினார். அப்போதுகூட மலையாளிகளின் பெட்டிக்கடை, தேநீர்க் கடைகள் முன்பு மறியலில் ஈடுபட வில்லை. அதே வேளை என்று மில்லாத அளவிற்கு மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத் தவர்கள் தமிழகம் வந்து குவிகிறார்கள் என்பது கவலைக்குரிய செய்தியே. எனவேதான் வெளியாரை வெளியேற்று வோம் என்ற அடையாளப் போராட்டத்தை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தி வருகிறது. இது இனவெறியோ, இனப்பகையோ அல்ல; மாறாக தமது இனம், தமது மண் குறித்த தற்காப்பு உணர்ச்சி. அவரவர் தேசத்தில் அவரவர் வாழ்க என்பதே இதன் பொருள். (ஒரு தேசிய இனத்தாயகத்தில்) குறிப்பிட்ட விகிதங்களில் மட்டுமே வெளியார் நுழைவு தேவைக்கேற்ப இருக்க முடியும் என்பது உலகம் அறிந்த நியதி.

 மொழி இனம் குறித்தும் சொந்த மண் குறித்தும் பற்றுக் கோடுள்ள ஒவ்வொருவரும் மெய்யாகக் கவலை கொள்ள வேண்டிய செய்தி தமிழினம் கலப்பினமாக மாறிவிடக் கூடாதே என்பது தான். தன்மொழி, தன் இனம், தனது தேசம் என்ற பற்றில்லாதவர்கள் நாம் அடையாளம் இழந்து போவோமே என்று கவலை கொள்ள மாட்டார்கள். போலி அடையாளத்தை சூட்டிக் கொண்டு பொய்முகம் தரித்துத் திரிவார்கள்.

 தோழர் மேலாண்மை அவர்களுக்கு இந்திய தேசியப்பற்று இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்த அடையாளங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று நிறுவப் பட்டிருக்கிறது. தமிழர்கள் இப்படி தற்காப்பு உணர்ச்சியின்றி வெறும் மனித நேயம் மட்டும் பேசித்தான், தங்களின் பரந்து விரிந்த மண்ணை கோட்டை விட்டிருப்பார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

தமிழனை மனிதனாகப் பார்க்காத மனித நேயத்திற்காக நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

- த.ரெ.தமிழ்மணி, திருவாரூர்

 மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய கடிதத்தின் மூலம் அவரைப்பற்றி "நன்கு' உணர்ந்து கொள்ள முடிந்தது.

 "பா.ஜெயப்பிரகாசம், பா.செயப் பிரகாசமானது போதாது; வெற்றியொளியாகி யிருக்கலாம்' என கிரந்த எழுத்தைத் தவிர்த் தமையை நையாண்டி செய்கிறார். செயப்பிரகாசம் என்று எழுதியது சரியே.

 உலகெங்கும் சொற்களைக் கடன் வாங்கிய ஆங்கிலேயன் எழுத்துக்களைக் கடன் வாங்கியதில்லை. அவன் மொழியில் "ழ்' என்று எழுத்தில்லை. அதற்காகத் தமிழில் கடன்வாங்கி பஅஙஐழ் என்று எழுதுவ தில்லை. ஜ உள்ளிட்ட எழுத்துகள் தமிழில் இல்லை; தமிழும் இல்லை. அதனால் கடன் வாங்க வேண்டும் என்கிறாரோ? கிரந்த எழுத்தை தவிர்த்து எழுதினால் பொத்துக் கொண்டு வருவதேன்?

வடசொற் கிளவி வடவெழுத் தொர்இ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

 - என பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஆளும் விதம் கூறுகிறது தொல் காப்பியம். அதன்படி, ஜெய என்ற வடசொற்கிளவி செய என்ற சொல்லாகிறது. இலக்கணப்படி எழுதுவது கூடாது என்கிறாரா மேலாண்மை?

 அதைப்போல "ஜனநாயகம், சனநாயகமான போது, நாயகம் என்ற பிறமொழிச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல் கண்டுபிடித்து பிரயோகித்து, தமிழ்ப்பற்றை நிரூபித்திருக்கலாம்' என்கிறார்.

 நாயகம் என்பது தமிழ்ச்சொல்லே. இப்போது தமிழ் மொழி குறித்து வரலாற்றைப் புரட்டிப் போடும் அளவிற்கு ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சொல்லாய்வு கடலாக விரிந்து நிற்கிறது. அதை, அறிந்திருப்பார் எனினும், தான் சார்ந்திருக்கும் தமிழருக்கு எதிரான அரசியல் அவரை இப்படி எழுத வைத்திருக்கிறது.

 "ஞாய்' என்பதற்கு "நடு' என்று பொருள். நடுவு நிலைமையை அடியொற்றி வந்ததே ஞாயம். மக்களுக்கு ஞாயம் செய்வது ஞாயகம். அச்சொல் பிற்கால வழக்கில் நாயகம் என மாறியது. ஞெண்டு பிற்காலத்தில் நண்டு என்றானது.  பாவாணர், நயத்தல் என்ற வினையடி யாகப் பிறந்தது நாயகம் என கண்டதாக முனைவர் இ.இராவணன் குறிப்பிடுவார். இப்படி வேர்ச்சொல் ஆய்வறிஞர்கள் பலர் நாயகம் என்பது தமிழ்ச்சொல்லே என கூறியுள்ளனர். அதைச் சான்றுகளோடு மறுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து பொத்தாம் பொதுவாகக் கூறுவது தவறானது.

 அதைப்போல தோழர் பெ.ம.வை மொழியின் பெயரால் பகை மூட்டுகிறவர் என்கிறார். நிறமோ, சாதியோ, இனமோ, மொழியோ எந்த வடிவத்தின் பேரில் ஒடுக்கினாலும், ஒடுக்கப்படுபவருக்காக நிற்பது தான் மனிதநேயம் என்பார் காசி ஆனந்தன். இந்தியமும் சிங்களமும் இன்னபிற உலகநாடுகளும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட இனமாகத் தமிழினம் இருக்கிறது. எனவே, தோழர் பெ.ம. தமிழினத்திற்காகக் குரல் கொடுக்கிறார்.

 தமது கூட்டத்திற்கு வராமல்போன இளையராசாவைத் திட்டியபோது தோழர் பெ.ம.வை புரட்சிக்கனல், மாவீரர் என்கிறார். இனத்தின் தலையில் கொத்துக்குண்டு போட்டவர்களைத் திட்டினால், பகை மூட்டுகிறவராம்.

 தனக்காகப் பேச வேண்டும். தனக்குப் பரிசும் பாராட்டும் தருகிற இந்தியாவிற்காகப் பேச வேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்காகப் பேசக்கூடாது அப்படித் தானே?

 பிஜித்தீவு பெண்களுக்காக அழுதால் தேசப்பற்று! கம்பம் பெண்களுக்காக அழுதால் மனித நேயம் தொலைத்த தமிழ்ப்பற்று என்கிறார் மேலாண்மைப் பொன்னுச்சாமி.

 அடடா! மனித நேயத்திற்குப் புது இலக்கணம் வரையறுத்திருக்கிறார். ஆக... தமிழனைத் தவிர எவன் அடிபட்டாலும் அழ வேண்டும்! தமிழன் அடிபட்டால் சிரிக்க வேண்டும். அதுதான் இந்தியப்பற்று! அப்படிப்பட்ட இந்தியப்பற்று எங்களுக்குத் தேவையில்லை. தமிழனை மனிதனாகப் பார்க்காத மனித நேயத்திற்காக நாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்? அதை, பிணந்தின்னி அரசபக்சேக்களும் அவனின் இந்தியப் பங்காளிகளும் படுகொலையை ஆதரித்து கைதூக்கிய கியூப, ரசிய எடுபிடிகளும் கட்டிக்கொண்டு அழட்டும்!

Pin It