தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர்மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி...

திராவிட நாடு என்பது சிலர் சொல்வதைப் போல கர்நாடக, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்ததல்ல என்பதை பெரியார், எப்போதும் தெளிவாக புரிந்திருக்கிறார். தெளிவற்றவர்கள்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரே அரசியல் அலகாக இருந்த சென்னை மாகாணத்தில் தன்னோடு அரசியல் பணி ஆற்றிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதாருடைய நலனுக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை உடன் இணைத்துக் கொண்டு பெரியார் சொன்னார், ‘எப்போது அவர்கள் மொழி வழி மாநிலமாக தனியாகப் பிரிந்து போனார்களோ அப்போது தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் சொல்லி விட்டார். 1956 இல் மொழிவழி மாநிலம் பிரிந்தது. ‘பிரிஞ்சு போனதை விட்டுவிடு. மீதியெல்லாம் நம்ம நாடு’ என்றார் பெரியார். ஆனால் இவர்களெல்லாம் பெரியார், ஆந்திராவை, கேரளாவை, கர்நாடகாவை இணைத்த ஒரு நாடு கேட்டதைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா, திராவிட நாடு கேட்டார். உண்மை தான். அண்ணாகூட ஒரே நாடு என்று கூட கேட்கவில்லை. அவர் சொன்னது, ‘மொழி வழி பிரிந்து இனவழி கூடியிருக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய திராவிடநாடு’தான் கேட்டார். எல்லோரும் எப்ப வேண்டுமானாலும் பிரிந்து போகலாம். அதைத்தான் அண்ணா கேட்டார். ‘மொழிவழியாகப் பிரிந்து தனி மாநிலமாக இருப்போம். இனவழியாக கூடி திராவிட நாடாக இருப்போம். எப்ப வேண்டுமானாலும் பிரிந்து போகலாம்’. சம உரிமை யுடன் கூடிய சம தர்ம திராவிட குடியரசு நாடுதான் கேட்டார். அது கூட இவர்கள் சொல்வதைப் போல தென் மாநிலங்களை ஒன்றாக இணைக்கக் கூடிய திராவிட நாடு கேட்கவில்லை. ஆனால் இவர்கள் அதை ஏதோ பெரிய குற்றத்தைக் கண்டு பிடித்ததைப் போன்று பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.

நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு செய்தியை குறிப்பிட வேண்டும். கலியன் என்ற ஒரு தாழ்த்தப்பட்டவர் இறந்து விட்டார். அவர் உடலைக் கொண்டு போய் வழக்கமான இடுகாட்டில் புதைத்து விட்டார்கள். உடனே ஒரு உயர் ஜாதிக்காரன் மறுப்புத் தெரிவிக்கிறான். அது இந்துக்களுக்கான இடம். தாழ்த்தப்பட்டவனை இங்கு புதைத்து விட்டாயே என்று கூறி, புதைத்த உடலை எடுத்துக் கொண்டு போய் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடத்தில் புதைக்கிறார்கள். இதை எதிர்த்து மலாயா திராவிடர் கழகம் வழக்கு போடுகிறது. தன்னை பார்க்க வந்த ஒருவரிடம் பெரியார் கேட்கிறார், அவர், ‘கலியன் வழக்கில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்கிறார். அதைக் கேட்டவுடன் ‘எனக்கு நூறு வருசம் வாழவேண்டும் என்ற தெம்பு வந்து விட்டதய்யா’ என்கிறார் பெரியார்.

‘அம்பேத்கர் என்றால் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர். பெரியார் என்றால் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர்’ என்று பிரித்துவிட்டார்கள். ஆனால் அவர்களின் சிந்தனை எப்படி இருந்தது என்பதற்கு வரலாற்றைப் பார்க்க வேண்டும். மகர் குளப் போராட்டத்தை மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் நடத்தினார். அதற்கு முன்னால் அவர் தனது மூக் நாயக்’ (ஊமைகளின் தலைவன்) கில் எழுதுகிறார். அதில், தென்னாட்டில் நடந்த செய்திகளைப் பற்றி எழுதிவிட்டு, ‘தென்னாட்டில் பார்ப்பனரல்லாத மக்களின் தலைவரான ஈ.வெ.இராமசாமி நாயக்கர் வைக்கத்தில் நடத்திய போராட்டம் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது’ என்று எழுதுகிறார் அம்பேத்கர். இந்தப் போராட்டத்தைப் பார்த்துதான் மகர்க் குளப் போராட்டத்தை நடத்துகிறார்.

அடுத்து அம்பேத்கர், இன்னொன்றையும் எழுதுகிறார். ‘இன்னொரு போராட்டம் என் நெஞ்சை உலுக்கியது’ என்கிறார். இங்கிருந்து சென்னையிலுள்ள புரசைவாக்கத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர் சித்தூருக்கு போகிறார். திருப்பதிக்குப் பக்கத்தில் உள்ள கோயிலுக்குள் போகிறார். எல்லோரும் சாமியை கும்பிட்டு விட்டு ‘கோவிந்தா கோவிந்தா’ன்னு உள்ளே போயிடுறாங்க. அவரும் பக்தி பரவச உணர்ச்சியில் உள்ளே போயிடுறார். போனதற்கு பின்னால்தான் தெரிகிறது இவர் தாழ்த்தப்பட்டவர் என்று. உடனே அவரைப் பிடித்து வழக்கு மன்றத்தில் நிறுத்தி தண்டனை கொடுத்தார்கள். அவருக்கு 75 ருபாய் அபராதம். ஒரு வருடம் சிறை தண்டனை அளிக்கிறார்கள். ‘தவறிப் போய் கோயிலுக்குள் நுழைந்தவனுக்குத் தண்டனைக் கொடுத்து விட்டார்கள்’ என்று அம்பேத்கர் எழுதுகிறார். 1927 இல் எழுதுகிறார். தண்டனை கொடுத்தது உண்மை தான். ஆனால் அந்த மாதமே டிசம்பர் மாதம் வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில். மேல்
முறையீடு செய்யப்பட்டது. அப்போது பெரியார் காங்கிரசிலிருந்து வெளி வந்து விட்டார். ஆனால் இராஜாஜியை வைத்து எதிர்த்து வழக்காடச் சொல்கிறார். சரியாக ஒரு மாதத்தில், 22.11.1925 இல் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியே வருகிறார். 22.12.1925 இல் அங்கு வழக்கு வருகிறது. இராஜாஜி போய் வாதாடி விடுதலை பெற்று வருகிறார். இது பற்றி குடிஅரசில் மூன்று பக்கம் பெரியார் எழுதுகிறார். பெரிய செய்தியாக அந்த முருகேசன் வழக்கைப் பற்றி எழுதுகிறார். ‘ஆதிதிராவிடர் கோயில் பிரவேச வழக்கு. எதிரி விடுதலை பெற்றார். சீமான் இராஜகோபாலாச்சாரி வாதம்’ என்று பெரியதாக செய்தி போட்டு பெரியார் எழுதியிருக்கிறார்.

ஒரு தலித் உடலை, தாழ்த்தப்பட்டவரின் உடலைபுதைத்த இடத்திலிருந்து எடுப்பது எவ்வளவு பெரிய அவமானம். அதற்காக வழக்கு போட்டு, அதில் வெற்றி பெற்ற செய்தி கிடைத்தபோது பெரியார் சொல்கிறார், ‘நான் இன்னும் நூறு வருசம் வாழ்வதற்கு தெம்பு வந்துருச்சு’ அப்படின்னு சொன்னாருன்னா, பெரியார் எந்த உணர்விலிருந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

மற்றொரு செய்தியும் இதில் இடம் பெற்றுள்ளது. பெரியார் மலாயாவில், தோட்டப் பகுதிக்குப் போகிறார். தொழிலாளர் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்ப பெரியார் சொல்கிறார், ‘நான் இந்த நாட்டிற்கு வந்து முக்கியமானவர்களைச் சந்திக்காமல் போய் விடுவோமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த வருத்தம் எனக்குத் தீர்ந்து விட்டது, இன்று உங்களை பார்த்ததுமே’ என்கிறார். அவர் யாரைப் பார்க்க வேண்டும் என்று கருதுகிறார் என்பதைதான் நான் சொல்ல வர்றேன், ‘மலாயாவில் நான் கால் வைத்தப் பிறகு பெரிய அதிகாரிகளைப் பார்த்தேன். செல்வர்களைப் பார்த்தேன். நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் இப்போது உங்களைக் காணும் போது ஏற்படும் திருப்தி மகிழ்ச்சியெல்லாம் அப்போது ஏற்படவில்லை’ என்கிறார். தோட்டத் தொழிலாளர்களைப் பார்த்துப் பேசுகிறார்.

இதே பெரியார்தான் காங்கிரஸ்காராக இருந்த போது காங்கிரசு மாநாட்டில் பேசினார். பெரியார், ‘குடிஅரசு’ இதழை 1925இலேயே தொடங்கி விட்டார். 5 ஆம் மாதம் தொடங்கிவிட்டார். ஆனால் 11ஆம் மாதம் தான் கட்சியை விட்டு வெளியே போறார். 6 மாதம் காங்கிரசு கட்சிக்காகத்தான் பத்திரிக்கை நடந்தது. காங்கிரசு மாநாட்டில் பெரியார் பேசிய பேச்சுகளெல்லாம் ‘குடிஅரசி’ல் வருகிறது. அதில் காரைக்குடியில் ஒரு மாநாடு நடக்கிறது. பள்ளத்தூர் அருகில். இராமநாதபுரம் ஜில்லா மாநாடு. பெரியார்தான் காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளர். தலைமையுரையில் அவர் பேசுகிறார். உலகமே தொழிலாளர்களுடையதுதான். அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். நியாயமாக காங்கிரசு தொழிலாளர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். இப்போது பணக்காரர்களுடையதாகவும் படித்தவர்களுடையதாகவும் பார்ப்பனருடையதாகவும் கட்சி இருக்கிறது. இது எப்போது தொழிலாளர்களுடையதாக ஆகிறதோ அப்போதுதான் இது
உண்மையான கட்சியாக இருக்குமென்று காங்கிரசுகாரன் கிட்ட காங்கிரசு மாநாட்டுல பேசுறார்.

வேடிக்கையான மனிதராகத்தான் பெரியார் இருந்திருக்கிறார். ஆதரித்தவர்களை இப்படியா ஆதரிப்பார் என்பது போல பலர் பேசித் திரிகிறார்கள். இவை சரியான பார்வையல்ல என்பதை படித்தால் தான் தெரியும். அண்ணாவை ஆதரித்தார். காமராஜரை ஆதரித்தார். காமராஜரைக் காப்பாற்றினால் போதும் என்றுதான் சொன்னார். அண்ணாவை ஆதரிப்பேன் என்று சொன்னார். சொன்னது மட்டும்தான். ஆனால், தேவையானபோது கடுமையான விமர்சனங்களை எதிர்ப்புகளை தெரிவித்தே வந்திருக்கிறார். ‘மதப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடக்கூடாது’ என்று பெரியார் பேசிவிட்டார். ‘முன்பெல்லாம் எவனோ விடுமுறை விட்டுகிட்டு இருந்தான். இப்ப பகுத்தறிவுவாதிகள் நீங்களெல்லாம் வந்துவிட்டீர்கள். மதப்பண்டிகைகளுக்கு விடுமுறை விடாதீர்கள்’ என்று எழுதினார். பெரியார் அறிக்கை வந்தது. விடுமுறைப் பட்டியலும் வந்தது. அதில் மீண்டும் மத விடுமுறைகள் இருந்தன. ஆவணி அவிட்டத்திலிருந்து எல்லாம் இருந்தது. பெரியார் தலையங்கம் ஒன்று எழுதினார். ‘உனக்கும் பே...பே... உங்கப்பனுக்கும் பே... பே...’ தலைப்பு. கீழே எழுதினார், ‘அண்ணாதுரை நமக்கும் பே... பே... என்று சொல்லி விட்டார்’ என்று எழுதினார். அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. நாம் ஆதரிக்கிறோம் என்பதற்காக விமர்சனம் செய்யக் கூடாது என்பதெல்லாம் கிடையாது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது எழுதினார் பெரியார், “ஆராய்ச்சி மாநாடு என்றால் அறிஞர்கள் இருப்பார்கள். ஆராய்ச்சி செய்வார்கள், ஆய்வுக் கருத்துக்களை வெளியிடுவார்கள். அதைப் படித்துப் பார்த்து எங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்வோம். ஆனால் அண்ணாதுரை மகாமகத் திருவிழா நடத்திக் கொண்டிருக்கிறார். ஊர்வலம் விட்டுகிட்டு, சிலைகளை திறந்துகிட்டு, என்னய்யா இதெல்லாம் வேலை என்று. அரசாங்க கஜானாவைக் காலி செய்வதற்கு அண்ணாது ரைக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என்றார். ஆதரிப்பவர்களை கண்டிப்பது பற்றி கவலைப்பட்டதில்லை பெரியார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கலைஞர் தமிழுக்கு ஆபத்தென்றால் உயிரை விட்டுவிடுவேன் என்றார். ‘கடவுளுக்காக உயிரைக் கொடுக்கும் முட்டாள் பக்தனுக்கும் இந்த மந்திரிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறேன்’ என்று பெரியார் எழுதினார். ‘நீ, நான் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றாவிட்டால் பதவியைத் துறப்பேன் என்று கப்சா விட்டுக் கொள்ளலாம்’. ‘உயிரை விட்டுக் கொள்வேன் என்று கூட கப்சா விட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்த முட்டாள் பக்தனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு’ என்று அறிக்கை விட்டவர்தான் பெரியார்.

இப்போது மட்டுமல்ல, நீதிக்கட்சியை ஆதரிக்கும்போதும், பெரியார் இப்படித்தான் 1925இல் காங்கிரசிலிருந்து வெளியே போய் 1927 நீதிக்கட்சியை ஆதரிக்கிறார். கோயமுத்தூரில் ஒரு தொழிலாளர் போராட்டம். அதில் பெரியார் பேசுகிற போது சொல்கிறார், “தொழிலாளர்களே! தொழிலாளர்கள் இல்லாமல் இந்நாட்டில் உற்பத்தியில்லை. பணம் இருந்தால் சாப்பிட முடியாது. உற்பத்தி இருந்தால் தான் சாப்பிட முடியும். ஆனால் இந்த நாட்டினுடைய கேட்டைப் பாருங்கள். யார் இந்த நாட்டிற்கு முதலமைச்சர் என்று பாருங்கள். அப்ப பொப்லி ராஜா இருக்கிறார். ஒரு ஜமீன்தார் இந்த நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். கேவலம் நடந்து கொண்டிருக்கிறது” என்று பெரியார் பேசுகிறார். ‘நீதிக்கட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். சென்னைக்கு மேயர் யாரென்று பாருங்கள், ஒரு கந்துவட்டிக்காரர் முத்தையா செட்டியார் இருக்கிறார், இதுதான் இந்த நாட்டிற்கு வந்த கேடா?’ என்று எழுதுகிறார். யாரை, ஆதரிக்கிறவர்களைப் பற்றி எழுதுகிறார்.
இப்படி தொழிலாளர்கள் பற்றிய பார்வை, தொழிலாளர்களுக்கான இயக்கம்தான் திராவிடர் கழகம். அவர் சொல்றார், “உண்மையான தொழிலாளர் இயக்கம் தான் திராவிடர் கழகம். வேலை செய்றவங்கதான் எங்ககிட்ட இருக்காங்க. அவங்களுக்காகத்தான் நாங்க. வேலை செய்யாத பார்ப்பானுக்கு வேற இயக்கம் இருக்கு. உழைப்பாளிகள் கட்சிதான் எங்க கட்சி” என்று பேசுகிறார்.
அதே போல் இன்னொரு செய்தியைப் பார்க்கலாம். 1947 இல் பெரியார் மலாயா வருவார் என்பதற்காக ‘தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பின் சார்பாக நிதித் திரட்டுகிறார்கள். பெரியாருக்கு கொடுக்க வேண்டுமென்று நிதி திரட்டுகிறார்கள். 214 வெள்ளி 15 காசு வசூலாகியிருக்கிறது. ஆனால் பெரியார் பயணம் வரவில்லை. பின் 1954 இல்தான் வருகிறார். 54 இல் வந்த போது, அதில் சொல்லி, அதில் பதிவு செய்கிறார்கள், 1947 இல் தங்கள் பயணம் நிறுத்தப்பட்டதையொட்டி, நாங்கள் வசூல் செய்த பணத்தை இப்போது அளிக்கிறோம். எவ்வளவு, ஏழு ஆண்டுகள் கழித்து இது நடைபெறுகிறது. நம்ம ஆளு மறந்துவிடுவான். அப்ப வசூல் செய்து கொள்ளலாம் என்று, ஆனால் அவர்கள் அதைத் தனியாக வைத்திருந்து அதைக் கொடுக்கிற பல நெறிமுறைகளை காட்டியிருக்கிறார். அவர் (பரமசிவம்) மலேசியத் திராவிடர் கழகம் இயங்குகிற முறையைப் பற்றியெல்லாம் சொன்னார். தோழர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம். அங்குதான் 5 மாடிக் கட்டிடத்தில் திராவிடர் கழகம் தலைமையகம் இருக்கிறது. திருமணம் பதிவு செய்கிற உரிமையை மலேசிய திராவிடர் கழகம் பெற்றிருக்கிறது. திருமணத்தை ரிஜிஸ்டர் ஆபிசில் பதிவு செய்ய வேண்டியதில்லை. திராவிடர் கழக அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் போதும் என்ற உரிமை திராவிடர் கழகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி சிறப்புமிக்க கழகமாக முறையாக இயங்குகிறது. பல நெறிப்பாடுகளை நாம் பார்க்கிறோம். இன்னொன்றும் பெரியார் சொல்கிறார். “தயவு செய்து நீங்கள் மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிடாதீர்கள். நீங்க போனீங்க. அங்க நன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் ஜாதி இல்லாமல் இருங்கள். எங்கள் நாட்டில் இருக்கிற மாதிரி அந்த அளவில் இங்க ஜாதி இல்லை. ஒரு முறை மலாயா நாட்டுக்குப் போயிட்டு வந்து இரண்டாவது முறை போனபோது ஜாதி இல்லாத நாட்டை பார்க்கிறார். ஜாதி இல்லாத நாடல்ல, ஜாதிக் கொடுமைகள் குறைந்த நாட்டை, ஜாதி வேறுபாடு இல்லாத நாட்டைப் பார்க்கிறேன்” என்கிறார். அதைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைகிறார். பெருமையோடு சொல்றார். ‘நீங்கள் இந்த நாட்டிலிலேயே இருங்கள். திரும்பி தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதீர்கள்’ என்று பேசுகிறார்கள். இதில் தேசப்பற்றெல்லாம் போயிடும் என்றெல்லாம் எப்போதும் பெரியார் பார்க்கவில்லை.

அவர் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி வருகிறார். “எனக்கு மொழிப்பற்று இல்லை. நாட்டுப்பற்று இல்லை. இனப்பற்று இல்லை. ஒன்றும் இல்லை. ஒரே பற்று இருக்கிறது. மாந்தப் பற்று மட்டும்தான். மனித நேயம்தான் எனது கொள்கை. அது போதும் எனக்கு. வேறு ஒன்றும் வேண்டாம். எதுபோனாலும் கவலையில்லை” என்பதாகத்தான் பெரியார் எழுதுகிறார். அதை அங்கிருந்த தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். பெரியாருக்கு உடன் பணியாற்றியவர்கள் கிடைத்ததைவிட அங்கிருந்தவர்களெல்லாம் பெரியாருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

ஏ.ஜி.கே. பற்றிய நூல் நூலைத் தொகுத்துள்ள தோழருடைய (கவி) பணிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட வேண்டும். இதில் பழைய துண்டறிக்கைள், எப்போதோ போட்ட துண்டறிக் கைகள், அதையெல்லாம் எடுத்து படியெடுத்து பதிவு செய்திருக்கிறார். அடுத்து தோழர் பசு.கவுதமன் இருக்கிறார். ஓர் அரிய நூலை படைத்திருக்கிறார். ஏ.ஜி.கே. வாழ்வைப் பற்றி எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக வெண்மணி பற்றிய உண்மைகளைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது நோக்கம். வெண்மணியில் திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்பது மறைக்கப்பட்டுவிட்டதே என்பதுதான். கோபால கிருட்டிண நாயுடு என்பவர் பின்னால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். பின்னர் கொல்லப்பட்டார் என்று. ஆனால் அதில் கைதானவர்கள் யாரென்றால் 11 பேர் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஒருவர் கம்யூனிஸ்ட். கொலையை செய்தவர்கள். மார்க்சிய லெனினிய அமைப்பைச் சார்ந்தவர்கள். உண்மைதான். ஆனால், இதில் கைது செய்யப்பட்டவர்கள் திராவிடர் கழகத்தினர். அவர்கள் எல்லாம் ஆயுள் தண்டனைப் பெற்றார்கள். மேல் முறையீட்டிற்கு போய் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. அதற்கான ஆவணத்தை தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், தோழர் (கவி) எப்போதோ நடந்த 30 களில் 40 களில் 29 களில் நடந்ததையெல்லாம் எடுத்து இன்றைக்கு கொடுத்திருக்கிறார். தமிழரின் வரலாற்றை சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றை பல செய்திகளை பார்க்க முடிகிறது. பள்ளிகளின் பெயர்களை எல்லாம் பார்க்க முடிகிறது. ஈ.வெ.ரா. பள்ளி, தாலமுத்து தொடக்கப்பள்ளி, பாரதிதாசன் தொடக்கப் பள்ளி, இராவணன் தொடக்கப் பள்ளி. அப்படித்தான் பெயர் இருக்கு.

அங்கிருக்கிற தொடக்கப் பள்ளிகளின் பெயர், தமிழர் வாழ்வியலுக்காக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களை வைத்துதான் பள்ளிகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். வெறும் தமிழ்ப்பள்ளி மட்டும் அவர்கள் நடத்திட வில்லை. அங்கிருந்த மாணவர்களாக இருந்தவர்கள், ஆசிரியராக இருந்தவர்கள் பாடினார் என்பது போன்ற பதிவுகளெல் லாம் மகிழ்ச்சியாக நாம் அங்கே போய் இருந்துவிடக் கூடாதா என்ற வண்ணம் பதிவுகளை தோழர் கவி திரட்டிக் கொடுத்திருக்கிறார்.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It