வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர், ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ், ‘புக்கர்’ விருதுபெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், ஜெர்ரி பிரின்டோ, ஆனந்த் டெல்டும்டே, நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், பி. சிவகாமி, விஜயலட்சுமி, விஜய்பிரசாத் முதலான 200 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு, இந்தி, ஆங்கிலம், தமிழ், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, காஷ்மீரி உள்ளிட்ட மொழிகளில் தங்களின் வேண்டுகோளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. தாங்கள் விரும்பியபடி சாப்பிடுவதற்கான உரிமை, வழிபடுவதற்கான உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமையை அனைவருக்கும் சமமாக வழங்கியிருக்கிறது. அதேபோன்று ஆட்சியிலிருப்போரின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான பேச்சுரிமையையும் வழங்கியிருக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பேராலும், சாதியின் பேராலும், வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று பாகுபாடு ஏற்படுத்தியும், குடிமக்கள் தாக்கப்படும் மற்றும் கொல்லப்படும் கொடூரமான நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களைப் பிரித்தாள்வதற்கும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் பெரும்பகுதியினரை- அவர்களை முழுமையான பிரஜைகளாக வாழ முடியாத வகையில் ஒதுக்கிவைப்பதற்கும் இந்த வெறுப்பு அரசியல் விதைக்கப்பட்டு வருகிறது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசைஞர்கள் மற்றும் பண்பாட்டு அறிஞர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். மிரட்டப்படுகின்றனர். தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆட்சியிலிருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்கள், எவராக இருந்தாலும், அவர்கள் பொய்யான அல்லது கேலிக்கூத்தான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இவை அனைத்தும் மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள், செயற் பாட்டாளர்கள் வேட்டையாடப் படக்கூடாது அல்லது படுகொலை செய்யப் படக்கூடாது; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று நாங்கள் விரும்புகிறோம்.

வேலை, கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறோம்.

எனவேதான், நடைபெறவிருக்கும் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல்என்பதை உணர்ந்து, நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக வாக்களிப்போம்; வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக வாக்களிப்போம்; நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க, சமத்துவத்தைப் பாதுகாக்க வாக்களிப்போம் என்று மக்கள் முன்பு எங்களின் அறைகூவலை முன்வைக்கிறோம்.

நம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இது ஒன்றே வழியாகும்.

இவ்வாறு எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

Pin It