முதல்வர் வீடு முற்றுகை: 2000 பேர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல்க ட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வின் பினாமியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17.6.2017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர் களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாது காப்பு சட்டம், UAPA என அடக்கு முறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் தோழர்கள் முழக்கமிட்டனர்.

kolathurmani 600தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னி அரசு, SDPI (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்  கே.எம்.ஷெரீஃப், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர்கள் அரங்க குணசேகரன், பொழிலன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வெ.பொன்னையன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமார், ஆதித் தமிழர் கட்சியின் வென்மணி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழர் விடியல் கட்சி நவீன், தமிழர் தேசிய முன்னணியின் இறை எழிலன், தமிழர் விடுதலைக் கழகம் சுந்தரமூர்த்தி, காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முகிலன், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் செந்தமிழ்வாணன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், டிசம்பர் 3 இயக்கம், சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர் பாவேந்தன், வழக்கறிஞர் ராமராஜ், நெடுவாசல் போராட்டக் குழு திருமுருகன், குமுக விடுதலை இயக்கம் சேகர், சமூக நீதி மாணவர் இயக்கம், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், கி.த.பச்சையப்பன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள்

இந்த முற்றுகைப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டு பல்வேறு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

 

Pin It