இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது.

தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

kolathoor mani 215குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும் விளக்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் - 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்தி விட்டார்கள் என்பதைப்போல - இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும்.

பல நேரங்களில் சங்கிகள் உண்மையைச் சொல்லி விடுவார்கள். அசாம் மாநிலத்தின் பாஜகவின் முன்னணித் தலைவரும், நிதி அமைச்சராகவும் இருக்கும் கிமாந்தா பிஸ்வாஸ்சர்மா, அசாமில் உள்ள ஜி-பிளஸ் என்ற தொலைக்காட்சிக்கு 2019 ஜனவரியில் பேட்டியளித்துள்ளார். ‘நாங்கள் பெரும்பான்மையான இடங்களில் 10.000 அளவிலான வாக்குகளில் தான் இழந்து கொண்டிருக்கிறோம் இப்போது நாங்கள் இங்கிருக்கும் இந்துக்கள் வாக்குகளையும் இழந்து விடுவோமேயானால், நாங்கள் கட்டாயமாக 17 தொகுதிகளை இழந்து விடுவோம். ஆனால், வரவுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால், குறைந்தது 17 தொகுதிகள் கட்டாயம் எங்களுக்கு எப்போதும் உறுதியாகி விடும்’ என்று அந்த பேட்டியில் கூறுகிறார்.

ஏனென்றால் அசாமில்தான் இந்த சட்டம் முதன் முதலில் வேறு காரணத்திற்காக கொண்டு வரப் பட்டது. இன்றைக்கும் கூட அசாமில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை மூன்று கோடியே 15 இலட்சம். அதில் அசாம் மொழி பேசக்கூட அசாமியர்கள் 1 கோடியே 50 இலட்சம் பேர்தான். அவ்வளவு மக்கள் வங்க தேசத்திலிருந்து அண்டை நாடான இந்தியாவில், அசாமில் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் மொத்த வங்காளிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறார்கள். அசாமிலிருக்கிற மொத்த உயர் பதவிகளையும், வணிகத்தையும் அவர்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பண்பாடு, மொழி சிதைந்து விடும் என்ற அச்சத்தாலும், தங்கள் வாழ்வுரிமையே மறுக்கப்படலாம் என்ற அச்சத்தினால்தான் அசாம் மக்கள் இங்கு வந்து குடியேறியவர்களை வெளியேற்றுங்கள் என்று போராடத் தொடங்கினார்கள். அதற்காக பலமுறை பேசப்பட்டு அதற்காக 1985இல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு சில சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன் 1987 வரை இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் குடிமக்கள் என்று சட்டம் சொல்லி வந்தது. நான்கு வழிகளில் அதை சொன்னார்கள்; ஒன்று இங்கே பிறந்தவர்களுக்கு, இரண்டு பெற்றோர் வழி வந்தவர்களுக்கு, தொடர்ந்து இங்கு வாழ்ந்து வந்தவர்களுக்கு இயல்புரிமை (Naturalisation) என்ற அடிப்படையில், இந்தியா தம்மோடு இணைத்துக் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்திய குடிமக்கள், இவ்வளவு தான் சட்டம்.

 1987ஆம் ஆண்டுதான் அசாம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக, ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார்கள், ‘பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும்; இல்லை யென்றால் குடியுரிமை இல்லை’ என்பது தான் அந்த சட்டத் திருத்தம். அதில் ஒரு நியாயம் இருந்தது.

சில பேரை நல்லவர்கள் என்று கூறுவார்கள், பாம்பில்கூட நல்ல பாம்பு உண்டல்லவா? அப்படி பாஜகவில் இருந்த நல்லவர் வாஜ்பாய் . அப்படித்தான் அவரைக் கூறுவார்கள். 2003 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த அவர் அமெரிக்காவில் உள்ள சிலேட்டன் தீவிற்குச் சென்றார். அங்கு அதிகம் இருப்பது பார்ப்பன பனியாக்கள் தான்; எளிமையாக கூறினால் இந்துத்துவவாதிகள். அவர்கள் வாஜ்பாயிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள், “நீங்கள் ஆட்சிக்கு வந்தது 1999 இல் 2004 இல் ஆட்சி முடியப் போகிறது; இன்னும் இந்துத்துவ அஜென்டா எதையும் நிறைவேற்றவில்லையே?” என்று கேட்கிறார்கள்.

 அதற்கு வாஜ்பாய் கூறுகிறார், “இப்போது மற்ற கட்சிகளின் ஆதரவோடு நாங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்; எங்களுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்குமேயானால் இத்தனை ஆண்டுகள் பொறுத்திருக்க மாட்டோம்; சில மாதங்களிலேயே நிறைவேற்றியிருப்போம்” என்று அப்போது 2003இல் கூறினார். தற்போது 2019இல் அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் வேகவேகமாக செய்யத் தொடங்கி யிருக்கிறார்கள். வாஜ்பாயி ஆட்சியில் இருந்தபோது 2003இல்தான் குடியுரிமைச் சட்டத்தில் மேலும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார், ‘பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்பதோடு மற்றொருவரும் சட்ட விரோதமாகக் குடியேறியவராக இருக்க கூடாது’ என்பதே அந்தத் திருத்தம். அதோடு இணைந்து தேசிய மக்கள் பதிவேடும், குடிமக்கள் பதிவேடும் உருவாக்கப்பட்டன. அதுதான் இப்போதுவரை நடைமுறையில் இருக்கிறது.

எனவே, 1987க்கும் 2003க்கும் இடையில் பிறந்த வர்கள், அவர்கள் இஸ்லாமியராக மட்டுமில்லை, இந்துவாக, கிறித்துவராக, சீக்கியராக யாராக இருந்தாலும் தங்கள் பெற்றோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்; 2004க்கும் பின்னர் பிறந்தவர்கள் தங்களின் தாய், தந்தை இருவரும் பற்றிய ஆவணங்களைக் காட்டி நிரூபித்தாக வேண்டும். அப்படியெனில் இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. சட்டவிரோதக் குடியேறிகளை அரசாங்கம் தனது துறைகளின் வழியாக செய்ய வேண்டிய ஒன்றை எளிய குடிமக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறது. ஒரு ஊரில் திருட்டு ஒன்று நடந்தால், காவல் துறை, உளவுத் துறையினர் கண்டுபிடிப்பதா? அல்லது எல்லா மக்களும் தாங்கள் திருடவில்லை என்பதை நிரூபியுங்கள் என்று மக்களை அலைக்கழிப்பதா? என்று எழுப்பப்படும் கேள்விகள் எவ்வளவு சரியானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எதற்கெடுத்தாலும் முன்னால் இருந்த ஆட்சியை இவர்கள் காரணம் காட்டிச் சொல்வார்கள். காங்கிரஸ்தான் தேசிய மக்கள் பதிவேட்டுக் கணக்கெடுத்தது; காங்கிரஸ்தான் குடிமக்கள் பதிவேட்டில் கணக்கெடுத்தது என்று. ஒரு பகுதி உண்மைதான்; காங்கிரஸ்தான் கணக்கெடுத்தது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கணக்கெடுக்கவில்லை. 2004இல் எல்லையோரத்தில் இருக்கிற மக்களுக்குக் குடியுரிமை பதிவேடு செய்தார்கள். எல்லையோரத்தில் இருக்கிறவர்கள் இந்த நாட்டுக்காரர்களா? இந்தியர்களா? என்று தெரியாது என்பதற்காக. மும்பையில் தாக்குதல் நடந்த பின்னால் 2009இல் கடலோரங்களில் இருந்தவர் களுக்கும் குடியுரிமைப் பதிவு செய்தார்கள். மொத்தம் 0.65% மக்களுக்கு மட்டும் தான் காங்கிரஸ் பதிவேடு செய்தது. அதற்குக் காரணம் இருந்தது.

பாகிஸ்தான் பிரிவினை: யார் காரணம்?

இப்போதும் சங்கிகள் சொல்கிறார்கள் பாகிஸ்தானைப் பிரித்துத்தான் பகைமையை உண்டாக்கி விட்டது காங்கிரசு என்று. பாகிஸ்தானைக் காங்கிரசா பிரித்தது? பாரதிய ஜனதா கட்சிக்கு முன்னர் ஜனசங்கம்; அதற்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ்; அதற்கும் முன்னால் இருந்த இந்து மகாசபை அவர்கள் தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தார்கள். “இரண்டு பகைமை கொண்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன; ஒன்று இந்துக்கள் தேசம், மற்றொன்று முஸ்லிம்கள் தேசம்; இரண்டும் ஒரே தேசமாக முடியாது” என அகமதாபாத்தில் 1937இல் நடந்த இந்து மகாசபைக் கூட்டத்தில் சாவர்க்கர் பேசினார். 1923இல் வெளியிட்ட இந்துத்துவ பேரறிக்கையிலும் (Hindutva Manifesto) இதே கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு தத்துவத்தை வகுத்தளித்த அதன் நீண்டகாலத் தலைவர் கோல்வாக்கர், 1938இல் எழுதிய தனது ‘நாம் அல்லது நமது தேசத்தின் வரையறை’ என்ற நூலில் “இந்து அல்லாதவர்கள் இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இந்து தேசத்துக்கு அடிமைப் பட்டவராக (Sub-Ordinates) எதையும் கோராதவர்களாக, எந்த சிறப்புரிமையும் இல்லாதவர்களாக, குடியுரிமையைக்கூட எதிர்பார்க்காதவர்களாக, (Not even Citizen’s rights) இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் பிரிவினையைக் கொண்டுவந்ததாகக் கூறு கிறார்கள். ஜின்னா 1940களில் பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசத் தொடங்கினார்; 1940 மார்ச்சில்தான் முஸ்லிம் லீக் தலைமைக் குழு பாகிஸ்தான் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இவர்களெல் லாம் 1908லியே ஆரம்பித்துவிட்டார்கள். பாய் பரமானந்தா என்ற ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர், கோல்வாக்கர், சாவர்க்கர் என இவர்களெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்கள். இவர்கள் சொல் கிறார்கள் 2014 டிசம்பர் 31 வரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்த வந்தவர்களுக்கு குடியுரிமை உண்டு என்று. அவ்வாறு வந்தவர்கள் வெறும் 31,313 பேர்தான். இவ்வளவு குறைந்த பேருக்கா நாடாளுமன்றத்தைக் கூட்டி திருத்தச் சட்டத்தை கொண்டு வருவார்கள்? இல்லை.

அசாமில் சட்டம் கொண்டு வரப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு குடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் 40 இலட்சம் பேர். இந்தக் கணக்கெடுப்பின் யோக்கியதையை நாம் பார்க்க வேண்டும் 2018 கணக்கெடுப்பின்படி சட்டவிரோதக் குடியேறிகள் 40 இலட்சம்; மீண்டுமொருமுறை கணக்கெடுங்கள் என்றார்கள். இரண்டாவதாக கணக்கெடுத்தால் 19 இலட்சம் என்று கூறுகிறார்கள். 19 இலட்சத்தில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். இப்போது பிஸ்வாஸ்சர்மா என்ற பா.ஜ.க. நிதியமைச்சர் 2019 ஜனவரியிலேயே அளித்திருந்த தொலைக்காட்சிப் பேட்டியைப் பொருத்திப் பாருங்கள். அந்த 12 இலட்சம் பேருக்குக் குடியுரிமை கொடுக்க வேண்டும், அது தான் அவர்களின் நோக்கம். எனவே திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.

 சரி இப்போது நாம் இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் ஆபத்து என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் பாஜக இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்து மதத்தவர் என்று சொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் என்போருக்கும், நாத்திகர்களுக்கும்கூட எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோலம் போட்டால் கூட கைது செய்கிறார்கள். வட மாநிலங்களில் அல்ல; இங்கே பழனிச்சாமிஜி ஆட்சியிலும். இந்நிலையில் தேசிய மக்கள், குடியுரிமைப் பதிவேடுகளால் நாம் எப்படி பாதிப்படையப் போகிறோம் என்பன பற்றி மட்டும் சிலவற்றை கூறிவிடுகிறேன். குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றியல்ல, நான் கூறுவது தேசிய மக்கள் பதிவேடு சட்டம் பற்றி. நமக்கு மக்கள் பதிவேட்டிற்குத் தனியாக சட்டம் வேண்டுமா? பதிவேடு எடுக்க வேண்டுமா என்றால், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (census) நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைத்து மக்களைப் பற்றிய பதிவும் இருக்கிறது. பின் எதற்கு மற்றொரு பதிவு? தேவையில்லையே! ஆனால் ஏன் எடுக்கிறார்கள்?

(தொடரும்)

Pin It