இராணுவ வெறியாட்டம் எல்லை மீறுகிறது

ஈழத்தில் அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றான ஊர்க் காவல்துறை எனும் பகுதி முழுமையாக சிங்கள கப்பல் படைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்க் குடும்பத்தினர் 16 பேரை கப்பல்படை குடி போதையில் வீட்டுக்குள் சென்று சுட்டுக் கொன்றுள்ளது.

பெண்கள், குழந்தைகளை உறக்கத்திலே கொன்றுவிட்டு, ராணுவத்தின் மீது குண்டு வீச முயன்றதாக, பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. அண்மையில், தமிழர் கடல் பகுதியில், சிங்களக் கப்பல்படை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 700 ராணுவத்தினரை, விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய கடல் பகுதிக்கு தப்பிச் சென்று, இந்திய கப்பல் படை உதவியுடன், ராணுவத்தினர் தப்பித்தனர்.

இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக, அப்பாவித் தமிழர்களை, ஒவ்வொரு நாளும் சிங்கள ராணுவம் பிணமாக்கி வருகிறது. சர்வதேச சமூகம் இந்தப் படுகொலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பார்ப்பன சக்திகளின் மிரட்டல்களை அர்ஜுன்சிங் புறக்கணித்தார்

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி மய்யங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைத் தடுக்க நினைக்கும் ‘மண்டல் எதிர்ப்பு சக்திகளின்’ நடவடிக்கைகள் சட்டத்துக்கு எதிரானவை. இந்தப் பிரச்சினையில் மறு பரிசிலனைக்கே இடமில்லை என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுங் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் ‘மண்டல்-2 போராட்டம் துவங்கிவிட்டது’ என்று கூறப்படுவதை புறந்தள்ளிய அர்ஜுன் சிங், இவை எல்லாம் ‘சுமூகமான சூழ்நிலைகளைக் கெடுக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் பிரச்சாரம்’ என்று குறிப்பிட்டார்.

சாம்பிட்ரோடா தலைமையிலான ‘தேசிய அறிவுக்குழு’ இந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது பற்றி கேட்டதற்கு, “இது அரசியல் சட்டரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. ‘தேசிய அறிவுக் குழு’வை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவர்கள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக் கொண்டால், அவர்களே எல்லாவற்றையும் முடிவு செய்யட்டும். இந்த நாடு அவர்களின் பின்னால் வரத் தயாராக இருக்கிறது. நாடாளுமன்றம் என்ற ஒன்று நாட்டில் இருக்கிறது. அங்கே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமும் இருக்கிறது என்பது இந்த தேசிய அறிவுக் குழுவுக்கு தெரியவில்லை” என்றார் அர்ஜுன் சிங்.

இந்தப் பிரச்சினையில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் நியாயமான கருத்துகள் உள்ளன என்று ராகுல்காந்தி கூறியது பற்றி கேட்டதற்கு, ‘இரண்டுக்குமிடையே ஒரு சமரசமான முடிவை எடுக்க முதலில், அமைதியான சூழல் உருவாக வேண்டும்” என்றார் அர்ஜுன் சிங். இதுபற்றி மேலும் விளக்கங்களை என்னால் நாடாளுமன்றத்தில் தான் கூற முடியும். அவைக்கு வெளியே பேச இயலாது என்றும் அர்ஜுன் சிங் கூறினார்.

பார்ப்பனருக்கு காந்தியார் தந்த முதல் சூடு

1. வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் முதல் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. 15.8.1922-ல் இரண்டாவது வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

2. ஆதித் திராவிடரின் குழந்தைகளைக் கட்டடத்திற்குள் அனுமதிக்காத பொதுப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிக்காது என 16.1.1923-ல் தனி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

3. பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையினை 21.11. 1947-ல் காங்கிரஸ் ஆட்சி அமுல்படுத்தியது.

பார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர்.

காந்தியாரை நேரில் அணுகி, ‘எங்கள் மாகாண பிரதமரான ஒ.பி.இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார். கதர் சட்டைக்குள் கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்.

காந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமந்தூரார் கல்வித் துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம் இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டுபோய் காந்தியாரிடம் நேரில் காண்பித்தார்.

காலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்குத் தனிச் சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் நான் செய்த காரியம் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார். இது பிராமண துவேஷ காரியமன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அது தானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்ச காலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியார் தந்த முதல் சூடு இதுதான்.

வகுப்புரிமைப் போராட்டம் ஏன்?

2. 9.12.1946-ல் தொடங்கி 26.11.1949-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26.1.1950-ல் அமுலுக்கு வந்தது. 1950ல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டைய வகுப்புரிமை ஆணைப் படி கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டன.

அச்சமயம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காமற் போன ஓர் பார்ப்பன மாணவனும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெறாமற் போன சண்முகம் துரைராஜன் என்கிற ஓர் பார்ப்பன மாணவியும் வகுப்புவாரி ஆணை காரணமாகத்தான் எங்கட்கு இடம் கிடைக்கவில்லை. அந்த ஆணை அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு முரணானதாகும்.

எனவே அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களுக்காக உயர்நீதி மன்றத்தில் வழக்குரைத்த வழக்குரைஞர் ஆந்திரப் பார்ப்பனரான அல்லாடி எ.கிருஷ்ணசாமி அய்யர், அரசியல் அமைப்பு சட்ட வரைவியல் குழுவில், ஓர் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர் அவர். அன்றைய பார்ப்பன ஆதிக்க உயர்நீதிமன்றம் பார்ப்பானின் கோரிக்கையை ஏற்றது, வகுப்புவாரி ஆணையானது அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு விரோதமானது எனவும் தீர்ப்பளித்தது.

பார்ப்பனரல்லாதார் அதிர்ச்சி அடைந்தனர். பெரியார் தொண்டர்கள், காங்கிரஸ், திராவிடர், தி.மு.க. ஆகிய அனைத்து பிரிவினரும் கொதித்தெழுந்தனர்.

இந்திய அரசியல் சட்டம் ஒழிக என்கிற இலட்சிய ஒலியை எழுப்பிக் கொண்ட கருஞ்சட்டைத் தொண்டர்கள் பட்டி தொட்டியெங்கும் சென்று மக்களைத் தட்டி எழுப்பினர். பெரியார் 3.12.1950 திருச்சியில் பெரியார் மாளிகைத் திடலில் அனைத்துக் கட்சி திராவிடர்களையும் உள்ளிட்ட வகுப்புரிமை மாநாடு ஒன்றைக் கூட்டினார்.

பாராளுமன்றத்தில் இந்த விசயம் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்றது. ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்பதை நிர்ணயிக்க ‘கல்வியிலும் சமூகத்திலும்’ என்கிற அடிப்படைகளோடு கூட மூன்றாவதாக ‘பொருளாதாரத்திலும்’ என்கிற அடிப்படையும் கொள்ளப்பட வேண்டும் என 5 உறுப்பினர்கள் இறுதிவரை அங்கு வாதாடினர்.

இவர்களில் சர்தார் ஹீக்கும்சிங், டாக்டர் எஸ்.பி. முகர்ஜி இருவரும் முதன்மையானவர்கள். இறுதியில் வாக்கெடுப்பு, 1.6.1951-ல் நடைபெற்றது. நேரு கொணர்ந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும் எதிராக 5 வாக்குளும் பதிவாயின. பெரியாரின் வகுப்புரிமை பாதுகாப்பு இலட்சியம் கை கூடிற்று.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு வந்த முதலாவது திருத்தமே இதுதான் என்பது உண்மை வரலாறு. இந்த வரலாற்றைப் படைத்த பெருமை பெரியாரையே சாரும். அப்படி அவர் பெற்றுத் தந்த வகுப்புரிமைப் பாதுகாப்பு ஏற்பாடு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 15வது விதிக்கு 4வது உட்பிரிவாகச் சேர்க்கப் பெற்றது. மூலச் சட்டத்தில் விதி 15-ல் 3 உட் பிரிவுகள் மட்டுமே இருந்தன என்பது நினைவில் நிறுத்தத்தக்கது.

மூலச் சட்டத்தில் ஏற்கனவேயே இருந்த விதி 16(4) அம்பேத்கர் அவர்கள் அமைத்து அளித்தது என்பதையும் நாம் மறத்தல் கூடாது.

வே.ஆனைமுத்து எழுதிய ‘வகுப்புரிமைப் போராட்டம் ஏன்?’ என்ற நூலிலிருந்து.

Pin It