கானகங்களின் வலசையிலே
கேளிக்கையாய் வாழ்வதற்கு
கட்டடங்கள் கட்டிவிட்டு
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதல் என்றோம்.

நிலத்தில் உள்ள கனிம வளங்களை
கணக்கின்றி நேர்மையற்ற வழியிலே
தோண்டி எடுத்து
வனத்தின் மைந்தர்களை
மனச்சான்று இன்றி கொன்றழித்தோம்.

நதிக்கரையில் நாகரிகம் பிறந்ததென
நாணயம் ஏதுமின்றி நயத்துடனேபேசி
ஆறுகளைத் தொலைத்தோம்.

அதிகமழை பொழிந்து இயற்கை கொடை கொடுத்தும்
அன்னியர் வழங்கும் குப்பிகளிலே பானங்களை அருந்தி
குடிநீருக்காக தெருவெங்கும் அலைகின்றோம்

செல்வக் கருவூலத்தை சொந்தமாக கொண்டிருந்தும்
கையேந்தும் யாசகன் போல
மானம் ஏதுமின்றி மண்ணில் திரிகின்றோம்

கல்லறை மேட்டினை காலம் பரிசளிக்கு முன்னே
கண் விழித்தால் நலமென நாம் அறிவோம்.

ரவி குமாரசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.