ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்க வந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
தேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில்,
பொன் முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
சின்ன மணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்;
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும் வைதீகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீ தென்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்
காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்