சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 19, 20-தேதிகளில் ராசிபுரத்தில் நடைபெற்றதின் நடவடிக்கை விபரங்களும், மகா நாட்டுத் தலைவர், வரவேற்புத் தலைவர் முதலியவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் காணலாம்.

சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்குமுன் ராசிபுரத்தில் நடந்த முதலாவது தாலூக்கா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட இரண்டொரு அசௌகரியங்களும், இடையூறுகளும் மற்றும் எதிர்ப்பிரசாரங்கள் முதலியவைகளும், இந்த மகாநாட்டில் சிறிதுகூட தலைகாட்டுவதற்கில்லாமல் மறைந்து போனதும் இச் ஜில்லாவாசிகளுடைய பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் தாராளமாய்க் கொண்டிருந்ததல்லாமல் சுமார் 2000 பேர்களுக்கு மேற்பட்ட பிரதி நிதிகள் ஜில்லாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஜயம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றுதும் இச் ஜில்லாவில் இந்த இரண்டு வருஷத்திற்குள் பகுத்தறிவு வளர்ச்சியும், சமதர்ம உணர்ச்சியும் மிகத் தாராளமாய் பரவியிருப்பதற்குத் தக்கதோர் சான்றாகும். நிற்க, மற் றொரு விசேஷம் என்ன வென்று பார்ப்போமானால் ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று அங்கு கூட்டப் பட்டதேயாகும். இம்மகாநாடு கூட்டப்பட்டதும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கமென்ன? அதன் கொள்கை என்ன? அதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? என்பனவைகளை விளக்குவதாகும்.

periyar 350சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்கள், கொள்கைகள் ஆகியவை களைப் பற்றி, யார் பழித்த போதிலும், யார் திரித்துக் கூறிய போதிலும், யார் அதை தூஷித்து விஷமப் பிரசாரம் செய்த போதிலும், யார் அதை வெளியில் பரவவொட்டாமல் தடுத்த போதிலும், யார் அதை வெகு சிறு-அற்ப லக்ஷியம் என்று கூறிய போதிலும், யார் அதை காரியத்தில் செய்ய முடியாத ஒரு அசாத்தியமான லக்ஷியம் என்று சொன்ன போதிலும் அவைகளை யெல்லாம் ஒரு சிறிதும் லக்ஷியம் செய்யாமல் தனது முடிவான லக்ஷியத்திற்கு ஏற்றபடி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வந்திருப்பதுடன் அதற்கு ஏற்ற கொள்கைகளையும், திட்டங்களையும் அமைத்துப் பரப்புவதில் தீவிரமாய் சென்று கொண்டுதான் இருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாகும்.

சாதாரணமாய் ஒரு லக்ஷியம் கைகூடிற்று அல்லது செல்வாக்கும் பெற்று விட்டது என்று சொல்லப்பட வேண்டுமானால் அந்த லட்சியத்தின் எதிரிகளால் செய்யப்படும் சூழ்ச்சிகள் என்னும் பல தத்துவங்களையும் தடை களையும் சமாளித்துத் தாண்டியாக வேண்டும்.

அவையாவன:-

1. ஒரு லக்ஷியத்தை அதன் எதிரிகள் ஒழிக்க வேண்டுமானால் அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை தாங்கள் உணராதவர்கள் போலவும், உணர நேர்ந்தாலும் அதை வெகு அலட்சியமாய் கருதுகின்றவர்கள் போலவும் காட்டிக் கொள்வதன் மூலம் அதை ஒழிக்கப் பார்ப்பது.

2. அந்த லக்ஷியம் மேற்கண்ட அலட்சிய நிலையை தாண்டி விடுமானால் பிறகு அதை வெகுகடினமாய் வெறுப்பது போல் காட்டுவதன் மூலம் ஒழிக்கப் பார்ப்பது.

3. பிறகு அதை திரித்துக்கூறி விஷமப்பிரசாரம் செய்வதன் மூலம் ஒழிக்கப் பார்ப்பது.

4. பிறகு கலகங்களாலும், கலவரங்களாலும் பிரசாரத்தை தடுப்பதன் மூலம் ஒழிக்கப் பார்ப்பது.

5. இவ்வளவையும் தாண்டி விட்டால் பிறகு அக்கொள்கைகளுக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதன் மூலம் அதை ஒழிக்கப் பார்ப்பது.

இப்படியாக பல தத்துவங்களையும் (தொல்லைகளையும் துன்பங் களையும், எதிர்ப்புகளையும்) தாண்டி விட்டால்தான் குறைந்த அளவு ஒரு இயக்கம் சொல்வாக்குப் பெற்று விட்டது என்றாகிலும் சொல்லலாம்.

ஆகவே நமது சுயமரியாதை இயக்கம் இந்த தத்துக்களில் எதின் தொல்லைகளுக்கும் ஆளாகாமல் இருந்து தப்பித்துக் கொள்ளாமல், ஒவ் வொன்றிற்கும் ஆளாகி எவ்வளவோ கஷ்டங்கள் நஷ்டங்கள் அடைந்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. அவை ஒவ்வொன்றையும் பற்றி விளக்க முயற்சிப்பது பழைய குப்பைகளைக் கிளறுவதேயாகும்.

எது எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணமே ஏழை மக்களுடையவும், பாமர மக்களுடையவும் தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கஷ்டப்படும் மக்களுடையவும் பெரிதும் அவர் களுடைய நன்மைக்கும், சமத்துவத்துக்கும் என்று இருந்தாலும் இப்போது அது எல்லா மக்களுடைய சமத்துவத்துக்கும் சாந்திக்கும் திருப்திக்கும் கவலையற்ற தன்மைக்குமே பாடுபட வேண்டும் என்கின்ற லக்ஷியத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த லக்ஷியம் உலகத்துக்கு-மனித சமூகத்துக்குக் கேடானதானாலும், அற்பமானதானாலும் அசாத்தியமானதானாலும் அதை பற்றிய கவலை யில்லாமல் சுயமரியாதை இயக்கமானது தனது கருத்திலேயே கவலை கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் தான் ஒருகாரியத்தைச் சாதித்துவிட்டுப் போக வேண்டும் என்பதற்காக உயிர் வாழ வேண்டும் என்கின்ற அவசியத்தைச் சுயமரியாதை இயக்கம் ஒப்புக் கொள்ளுவதில்லை. ஆனால் மற்றென்ன வென்றால் ஒரு மனிதன் உயிர் வாழ்ந்திருப்பதினால் அவ்வுயிர் உள்ள வரையில் காரியம் செய்ய வேண்டியது கடமை என்பதற்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கக்காரர்களின் வாழ்வின் லக்ஷியமாகும். அதாவது:

சுயமரியாதைக்காரர்களின் லக்ஷியம் எல்லாம் அவர்களது வாழ்வு ஒரு நல்லகாரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்களது உயிர் (சரீரம் இயங்கும் தன்மை) ஒரு அனாவசியமானதும், அறியாததுமான ஒரு நோய்க்கோ, (அபாய) எதிர்பாராதது சம்பவத்துக்கோ ஆளாகி முடிவ டைந்துவிடாமல் ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் பயன்பட்டு முடிவடைந்துவிட வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.

காரியம் நல்லதா? கெட்டதா என்பதற்குச் சுயமரியாதைக்காரர்களின் அளவு கருவியெல்லாம் அவர்களது பகுத்தறிவேயல்லாமல் “ஆண்டவன்” கட்டளையோ, “பெரியோர் வாக்கோ” “ரிஷிகள் மகாத்மாக்கள்” என்பவர் கள் எழுதிவைத்த வேத சாஸ்திர புராண நீதிகளோ அல்ல என்பதும் அவர் களது அபிப்பிராயம்.

ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் வாழ்வு அவர்களது அறிவுக்குச் சரியென்று பட்டகாரியத்தில் செலவிடப்பட வேண்டியது என்பதைத் தவிர வேறில்லை. சுயமரியாதைக்காரர்கள் மனிதன் செத்து விட்டானேயானால் (சரீர அசைவு புலன் உணர்ச்சி அடங்கி விடுமேயானால்) பிறகு அவனுக்கு வேறு எவ்வித சம்மந்தமும், தொடர்பும் உலகிலோ வேறெங்கிலுமோ கிடையா தென்பதாக கருதி இருக்கின்றவர்கள். சுருங்கக்கூறில் ஆத்மா என்றோ ஜீவன் என்றோ ஒன்று இருப்பதாகவும் மற்றும் சரீரத்துக்கும், சரீரத் துள்ள உருப்புகள் உருப்புகளின் அமைப்புகள் அமைப்புகளினால் ஏற் படும் செய்கைகள் ஆகியவற்றிற்கு அன்னியதான ஒருவஸ்து இருக்கிறது என்பதாகவும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆகையால் சரீரம் இயங்கும் தன்மையில் இருக்கும் போது அத்தன்மைக்கு ஏற்ற காரியங்களைச் சாத்தியப்படக்கூடிய அளவு, அவ்வளவையும் பிரயோகித்துச் செய்துவிடுவது என்கின்ற முடிவில் இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு கடமையைத் தவிர வேறொன்றையும் பற்றிய லக்ஷியமும் கவலையும் இல்லை. இந்நிலையில்தான் மனிதசமூக நன்மைக்கு மாறான காரியங்களை அழிக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலில் ஜமீன்தார்கள் தன்மையும் முறையும் ஒழிய வேண்டும் என்பது (முக்கியமானவைகளில்) ஒன்றாகும்.

மனிதசமூக வாழ்வுக்கு ஜமீன்தார்தன்மை ஒரு விஷ ஜந்துக்கு ஒப்பானதாகும். மனிதர்கள் தரித்திரம், பசி முதலிய கஷ்டங்களுக்கு ஆளாகி சுகவாழ்வு இல்லாமல் அடிமை நிலையில் இருப்பதற்கு இந்த ஜமீன்தார்கள் என்னும் விஷ ஜெந்துக்களே காரணமாகும்.

இந்த ஜமீன் முறையானது உலக வாழ்க்கைக்கு அல்லாது எந்த விதத்தில் அவசியமானது என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்களால் மனித சமூகத்திற்கு என்ன நன்மை என்பதும் விளங்கவில்லை. பெரும் பெரும் பரப்புள்ள பூமிகளை தங்களுடையது என்று செய்து கொள்ளவும் அவற்றை பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் பாடுபட்டு உழுது பயிர்செய்து பாதுகாத்துத் தானியமாக்கி, ஜமீன்தாரர்களுக்குக் கொடுக்கவும், அவர்கள் “தயவு செய்து” “கருணை வைத்து” விளைவில் ஒரு பாகத்தை பயிரிட்ட குடியானவர்களுக்குக் கொடுப்பதும், அது எந்த விதமான காரியத்துக்கும் பிரதிப் பிரயோஜனமாய் இல்லாமல் வெள்ளாமைக்கு அடுத்த பட்டம் வரும்வரை அந்தக் குடியானவன் செத்துப் போகாமல் உயிர் வைத்து இருந்து மறுபடியும் உழுது பயிர் செய்து தானியமாக்கித் தனது குதிரில் கொண்டு வந்து கொட்டுவதற்காக வேண்டிமாத்திரம் எவ்வளவு அவசியமோ அவர்களுக்குத் ‘தருமம்’ செய்யவுமாயிருக்கிறார்கள்.

மற்றபடி இந்தப்படியாக இவர்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மற்றொரு சிறு பாகம் சர்க்காருக்கு “தருமம்” செய்கிறார்கள். அதாவது இந்த செல்வத்தில் பாடு பட்டு உழைத்த குடியானவர்கள் பங்கு கேட்காமல் இருக்கவும், இந்த குடியானவர்கள் இந்த ஜமீன்தாரர்களின் அக்கிரமங்களுக்கு எவ்வித பரிகாரமும் தேடாமலிருக்கவும் லஞ்சம் என்று சொல்லுவதற்குப் பதிலாக சர்க்கார் கிஸ்து என்ற சொல்லின் பேரால் ஒரு அளவு கொடுக்கிறார் கள். மற்றபடி ஒவ்வொரு ஜமீன்தாரர்களுக்கும் மீதியாகும் 10 லக்ஷம் 20 லக்ஷக்கணக்கான ரூபாய்கள் என்ன கதி ஆகின்றன என்று பார்த்தால் அதன் உண்மை நன்கு விளங்கும்.

மற்றும் இதுபோலவே இன்னும் இரண்டொரு கூட்டம் உண்டு - அதாவது லேவாதேவிக்காரர்கள், மில் முதலாளிகள் முதலாகியவர்களாவார்கள்.

லேவாதேவி என்பது ஒரு கொடுமையான தொழிலாகும். அதற்கு வேறுபெயர் சொல்லவேண்டுமானால் சட்டப்படி கொடுமைப்படுத்திக் கொள்ளை யடிப்பதேயாகும். ஜமீன் தன்மையின் பயனாய் எப்படி உலக நிலங்கள் எல்லாம் நாளாவட்டத்தில் சிலருக்கே சொந்தமாகிவிடுகின்றதோ அதே போல் லேவாதேவி யென்பதும் உலக செல்வங்களையெல்லாம் சிலருக்கே சொந்தமாக்கும் சூட்சியே யாகும். இவர்களாலும் உலகத்திற்கு யாதொரு பயனும் கிடையாது. கேடே அதிகமாகும்.

மற்றும் மில் (யந்திரசாலை) முதலாளிகள் என்பவர்களும் பாடுப்பட்டு உழைக்கும் மக்கள் பயனை அனுபவித்துக் கொண்டு பெரும்பான்மை மக்களை என்றும் ஏழைகளாக-தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருப்ப வர்கள். இந்தக்கூட்டத்தாரும் நாட்டுக்கு அவசியமில்லாதவர்களே யாவார்கள்.

இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட “சுயராஜ்யம்” “குடியரசு” “குடி ஆட்சி” கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியவே முடியாது. ஏனெனில் மேல்கண்ட கூட்டம் எப்பொழுதும் செல்வம் பெருக்கிக் கொண்ட கூட்டமாகவும், மற்ற கூட்டம் என்றும் ஏழைக் கூட்ட மாகவும் தான் இருக்கும். ஆகவே செல்வவான்கள் ஏழைகளின் வாக்கை (ஓட்டுகளை) விலைக்கு வாங்கி தாங்களே ஆட்சிக்காரர்களாய் வந்து விடக்கூடும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் சென்னை அரசாங்க நிர்வாகத்தையும் சென்னை மாகாண ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தையும் பார்த் தால் நன்றாய் விளங்கும். சென்னை மாகாண முதல் மந்திரி ஒரு ஜமீன்தார், சென்னை (நகர) ஸ்தலஸ்தாபன சபைத் தலைவர் ஒரு லேவாதேவிக்காரர் என்பதும் பிரத்தியட்ச உண்மையாகும். வெளி ஜில்லாக்களிலும் இது போலவேதான் ஒரு பெரிய முதலாளியோ, அல்லது லேவாதேவிக்காரரோ, அல்லது ஜமீன்தாரரோதான் தலைவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் அந்தப் பதவிகளை அடைந்ததற்கு காரணம் எல்லாம் அவர்கள் பண (க்கொழுப்பு) விசேஷமேயொழிய புத்தி (க்கொழுப்பு) விசேஷமல்ல என்பது எந்த மனிதனுக்கும் தெள்ளென விளங்கும் சேதியாகும்.

ஆதலால் இந்தக் கூட்டங்கள்தான் மனிதசமூக நீதிக்கும், சமத்துவத் துக்கும், சகோதரத்துவ உரிமைக்கும் நரையான் போன்றவர்கள் ஆவார்கள். இந்த உண்மைகளை யெல்லாம் உணர்ந்த சேலம் ஜில்லாக்காரர்கள் சுயமரியாதை மகாநாடுடன் ஜமீன்தாரல்லாதார் மகாநாடு கூட்டினது பாராட்டத்தக்கதாகும். இனி அடுத்து கூடும் மகாநாடுகளில் லேவாதேவிக் காரர் அல்லாதார் மகாநாடு முதலியவைகளும் கூட்டி இக்கூட்டத்தார்களை பொதுவாழ்வில் தலைகாட்டாமல் செய்ய வேண்டியது சுயமரியாதை இயக்கத்தார்களின் முக்கியக் கடமைகளில் முதன்மையானதென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றும் சேலம் ஜில்லா 2 வது சுயமரியாதை மகாநாட்டை நடத்திக் கொடுத்த வேளுக்குரிச்சி மிட்டாதார் தோழர் சோம சுந்திரம் அவர்களையும் தோழர் காவேரி அவர்களையும், தோழர் எஸ். வி. லிங்கம் அவர்களையும், மற்றும் சேலம், ராசிபுரம் வாலிப தோழர்களையும், பெரியோர்களையும் பாராட்டுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 27.08.1933)

Pin It