periyar 600 copy copyசுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப் பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்தி பொது ரோடுகளில், மலையாளத்து ஈழவ சகோதரர்களும் தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் ஐகோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும் சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இது போல மலையாளத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 27.11.1927)

***

ஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)

Pin It