இந்நிகழ்ச்சி நமது மனித சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் உரிமையானாலும், இந்த நிகழ்ச்சியானது நம்மிடையே இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறாக, சீர்திருத்த முறையில் இதனை நடத்தி வருகின்றோம்.

செல்வர்கள் வாசுதேவன் - பானுமதி வாழ்க்கை ஒப்பந்த விழாவானது இம்முறையில் நடத்தப்படுவது இவர்களுக்கு மட்டுமல்ல; மனித சமுதாய மாற்றத்திற்காக, சீர்திருத்தத்திற்காகச் செய்து வருகின்றோம்.

மனித ஜீவனானது குரங்கிலிருந்து காட்டாளாக இருந்து, இன்று மனிதர்களாக வாழுகின்றார்கள் என்பது விஞ்ஞான ஆராய்ச்சி என்றாலும் இன்றும் மனிதர்கள் நம் நாட்டில் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து கொண்டிருக்கின்றனர். காட்டுமிராண்டித் தன்மையென்றால் அறிவு பெறாத தன்மையிலிருக்கின்றார்கள். மிருக பிராயத் தன்மையிலிருக்கின்றார்கள் என்று பொருள்.

மற்ற உலக மக்கள் காட்டுமிராண்டித் தன்மை மாறி அறிவுபிராயத்திற்கு வந்து, தங்கள் அறிவின் மூலம் விஞ்ஞானத்தின் மூலம் பல அரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் போது, நம் நாட்டு மக்கள் மேலும் மேலும் காட்டு மிராண்டித் தன்மைக்குப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

இதனைத் திருத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல வழிகளில் இல்வாழ்க்கை ஒப்பந்த விழா என்பதும் ஒன்றாகும். மனிதன் திருமணம் என்பதை ஏற்பாடு செய்ததே பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்குவதற்கும், அவர்களை உரிமையற்ற ஜீவனாக்குவதற்காகவுமே ஆகும்.

இந்தியாவில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், தெய்வ சக்தி பொருந்தியவர்கள், ரிஷிகள் என்பதாகப் பலர் தோன்றியிருந்தாலும் ஒருவர் கூடப் பெண்ணடிமை நீங்க வேண்டுமென்று பாடுபட்டது கிடையாது.

மனித ஜீவன் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்கின்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது சுயமரியாதை இயக்கமானதால், மனித ஜீவன் சுயமரியாதையைப் பெறுவது பற்றிச் சிந்திக்கும்போது மனித ஜீவனில் ஒரு பகுதியான பெண்களின் அடிமையை விலக்க வேண்டுவது மிக அவசியம் என்று தோன்றியதாலும், பெண்ணடிமைக்கு அடிப்படையான திருமணம் - இல்லற அமைப்பு ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாயிற்று.

இந்திய சரித்திரம் தோன்றிய காலம் முதல் சுயமரியாதை இயக்கம் துவக்கப்படும் வரை இதற்காக எவரும் பாடுபட்டார்கள் என்பதைச் சொல்ல முடியாது.

சுமார் 40, 45 ஆண்டுகாலமாகச் சுயமரியாதை இயக்கம் தான் பார்ப்பனர்களின் எதிர்ப்பிற்கும், மூட நம்பிக்கை மக்கள் காட்டுமிராண்டி மக்களின் எதிர்ப்புக்கு மிடையிலே இம்முறையினை மக்களிடையே பரப்பிக் கொண்டு வருகின்றது. இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இப்போது வந்துள்ள அரசாங்கம் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகுமென்று சட்டமியற்றியுள்ளது.

இதுவரை சட்டம் எப்படி இருந்தது என்றால், இந்து மத சாஸ்திர சம்பிரதாயப்படி நடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்து மக்களிடையே பழக்க வழக்கத்திலிருந்த பழைய முறைப்படி நடத்தும் திருமணம் தான் சட்டப்படிச் செல்லுமென்றிருந்தது. இதன் காரணமாக பழைமையைப் பாதுகாத்ததன் காரணமாகவே இதற்கு முன்னிருந்த அரசாங்கமானது பதவியை இழக்கும்படியாயிற்று. இப்போது புதியதாக வந்திருக்கும் ஆட்சியானது பகுத்தறிவாளர்கள், பழைமை வெறுப்பாளர்கள், கடவுள் - மத - சாஸ்திரங்களில் நம்பிக்கையற்றவர்கள் ஆட்சியானதால் இப்புதிய முறை முறை திருமணமானது சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றியுள்ளது.

பழைய முறையில் பெண்ணடிமையானது வலியுறுத்தப்படுவதோடு, மனிதனின் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கை ஆகியவை பாதுகாக்கப்படவும், ஜாதி இழிவானது நிலை நிறுத்தப்படவுமான தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நமது பிரசாரம் புரட்சிகரமான பிரசாரம். மனித ஜீவனின் வாழ்வையே மாற்றக் கூடியதாகும். மனிதன் பகுத்தறிவுவாதி. மற்ற ஜீவன்களை விடச் சிந்தித்து ஆராய்ந்து காரியம் செய்யக் கூடியவன் அதைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு வினாடியும் மாறுதலுக்குரியவன்.

அந்த முறையில் நான் சொல்கிற விஷயங்கள் புதுமையாகவுமிருக்கலாம், புரட்சிகரமானவையாகவும் இருக்கலாம். இவற்றை நீங்கள் சிந்தித்து ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

உலகத்தில் மற்றவர்கள் மூட நம்பிக்கைக்காரர்கள், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்பவர்கள் யாவரும் தாங்கள் சொல்வதை நம்பச் சொல்பவர்களேயாவார்கள்.

இதனால் 3000, 4000- வருடங்களாக நம் நிலை என்னவாயிற்று என்றால், இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையில் தான் இருக்கிறோம். 3000, 4000- வருடங்களுக்கு முன் புகுத்தப்பட்ட கடவுளைத்தான், மதத்தைத்தான், சாஸ்திரத்தைத்தான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். சாஸ்திரம் சொன்னது பழமையானது என்று அதனையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். மனிதனைப் போல மற்ற ஜீவன்கள் வேஷ்டி கட்டிக் கொள்வதில்லை; உணவைச் சமைத்துச் சாப்பிடுவது இல்லை; இதற்கெல்லாம் அறிவைப் பயன்படுத்துகின்ற மனிதன் மற்றவற்றில் அறிவைப் பயன்படுத்துவது கிடையாது.

நான் மண்ணைக் கொடுத்து சர்க்கரை தின்னு என்று சொல்கின்றேன். நீ அதை வாயில் போட்டால் மண்ணாகத்தான் இருக்கும். அதை வாங்கி இது சர்க்கரையா, மண்ணா என்று உன் அறிவைக் கொண்டு சிந்தித்தால் தானே அது என்ன என்பது தெரியும். அப்படியில்லாமல் நான் சொல்கிறேன் என்று நம்பி அது என்ன என்று பார்க்காமல் நான் கொடுத்த மண்ணை வாயில் போட்டால், மண்ணாகத்தானே இருக்கும்.

அதுபோல் தான் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றெல்லாம் நம்பாமல் உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார். உன் அறிவிற்குச் சரி என்று தோன்றினால் ஏற்று கொள் என்கிறோம். எப்படி மண்ணைச் சர்க்கரையென்று நம்பினானோ, அதுபோல கடவுள் என்பதும் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையே தவிர, அறிவோடு சிந்தித்தால் அப்படியொன்றும் இல்லை என்பது தானாகவே விளங்கும்.

மனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா? பிறரால் புகுத்தப்பட்டதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே! மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே! உலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்.

கடவுள் என்றால் என்ன? அதன் சக்தி என்ன? அதன் பயன் என்ன? என்று எவனுமே சிந்திப்பது கிடையாது. ஒருவன் கடவுள் மனிதன் மாதிரி இருப்பான் என்கின்றான்; இன்னொருவன் பெண் உரு என்கின்றான்; மற்றொருவன் உருவமே கிடையாது என்கின்றான்; இப்படி ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தோன்றியபடி ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல்கின்றானே தவிர, இன்னதுதான் கடவுள் என்று எவனுமே சொன்னது கிடையாது. கேட்டால் உன் அறிவால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.

இப்படி மனித சமுதாயம் கடவுளால் குந்தகமாகி விட்டது. மனித சமுதாய வாழ்வு பாழாகிப் பேதமாகி விட்டது. கவலையற்று வாழ வேண்டிய மனித சமுதாயம் கவலைகளுக்கு ஆட்பட்டு, வாழ்நாள் பூராவும் துன்பத்திற்கு ஆளாகி விட்டது.

கடவுள் நம்பிக்கையுடைய முஸ்லிம்கள் அத்தனை பேருக்கும் உருவமற்ற ஒரே கடவுள் தான். கிறிஸ்தவர்களுக்கும் அப்படித் தான். ஆனால் நமக்குத்தான் 1,000-கடவுள்கள். அதற்குப் பதினாயிரக்கணக்கான உருவங்கள் இருக்கின்றன என்பதோடு, கடவுள்களிலேயே மேல் ஜாதி மக்களுக்குச் சில கடவுள்கள், இழி ஜாதி மக்களுக்குச் சில கடவுள்கள் என்றிருக்கின்றனர்!

நமக்கு இன்று "கடவுள்களாக" இருப்பவை இராமாயணத்தில் வரும் பாத்திரங்களும், பாரதத்தில் வரும் பாத்திரங்களும் கந்தபுராணத்தில் வினாயக புராணத்தில் வரும் பாத்திரங்களும் தான்.

இந்தப் பாத்திரங்கள் யார்? இவற்றின் தன்மை என்ன? இவற்றின் பிறப்பு என்ன என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? இராமன், கிருஷ்ணன், கந்தன், விநாகன் ஆகியோர் பிறப்பகளைப் பார்த்தாலே அவை ஆபாசமானவை என்பது புரியும்.

தமிழ்நாட்டில் அறிவாளி என்று சொல்லக்கூடிய ஒருவன் இல்லையே! பகுத்தறிவுவாதி என்று சொல்லக் கூடிய ஒருவன் தோன்றியதாக இல்லையே!

தமிழ்நாட்டில் ஒரு வீரன் யார் என்றால் கட்டபொம்மன் என்கின்றான். அவன் கதையைப் பார்த்தால் அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கின்றான். அந்தக் கொள்ளைக்காரனைத் தான் வீரன் என்று சொல்ல முடிகிறதே தவிர, உண்மையான வீரன் ஒருவனைச் சொல்ல முடியவில்லையே.

உயர்ந்த இலக்கியம் எது என்றால் திருக்குறள் என்கின்றான். திருவள்ளுவர் தான் உலகிலேயே சிறந்த அறிவாளி என்கின்றான். அந்த வள்ளுவன் என்ன சொல்கின்றான் என்றால், "பெண்கள் கணவனைத் தொழ வேண்டும்" என்கின்றான். எதற்காக ஒரு பெண் கணவனைத் தொழ வேண்டும்? மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்துகின்றானோ அதுபோலத் தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது? பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன்? இன்னும் எத்தனையோ முட்டாள்தன - மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன.

இன்றைய அறிவிற்கு அது ஏற்றதில்லை. இருக்கின்ற பழைய குப்பைகளில் அது ஓரளவுக்குத் தேவலாம் என்று தான் சொல்லலாமே தவிர, அதுதான் உயர்ந்தது என்று சொல்ல அதில் எதுவும் கிடையாது.

இந்தியாவிலிருக்கிற 50-கோடி மக்களில் 25-கோடி பெண்கள். அவர்கள் எதற்குப் பயன்படுகின்றார்கள் என்றால் ஆணுக்கு அடிமையாக இருக்கவும், குழந்தை பெறவும் தான் பயன்படுகின்றார்களே தவிர, மனித சமுதாயத்திற்கு அவர்களால் எந்தப் பயனும் கிடையாது. எதற்காக மனித ஜீவனில் ஒரு பகுதி சமுதாயத்திற்குப் பயன்படாமல் இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நம் இதிகாசம், நீதி இலக்கியம், புராணம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் போட்டுக் கொளுத்த வேண்டும். எதற்காகப் பெண்கள் அறிவற்ற மடையர்களாக, நாணமுடையவர்களாக, பயமுடையவர்களாக, அசிங்கமாகக் காட்சியளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்? நமது முறை அயோக்கியர்களால், காட்டுமிராண்டிகளால் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மக்களைப் போல இழிவற்று, மானத்தோடு, உரிமையோடு, அறிவோடு வாழ வேண்டும். நம் மடமைக்கும், அறிவற்ற தன்மைக்கும், முட்டாள்தனத்திற்கும் ஆதாரமான, அடிப்படையானவற்றையெல்லாம் அழித்தொழிக்க வேண்டும். நம் அறிவைத் தாராளமாக இயக்க விட்டுச் சிந்திக்க முன்வர வேண்டும்.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் இருவரும் சம அந்தஸ்துடைய நண்பர்களைப் போல் பழக வேண்டும். வரவுக்குள் செலவிட வேண்டும். ஆடம்பரமாக வாழக் கூடாது.

இந்தக் காலத்திற்கு வேண்டியது ஒழுக்கமும், நாணயமும் ஆகும். அதை உணர்ந்து நாணயத்தோடு, ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்குக் கவலையற்ற தன்மையும், மானமும் வேண்டும். இவை இருக்க வேண்டுமானால் பிள்ளை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முடியவில்லை, ஒன்று இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் மனிதன் வாழ்வு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

-----------------------------------

07.05.1969 அன்று காவாலக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை"13.05.1969

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It