ambedkar and his wife savitha

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு II, மார்ச், 1943, பக்கம் 1649-51)

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட மசோதாவை முன்மொழிகிறேன்:

‘போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும் இந்தச் சுமையை ஈடுசெய்ய முதலாளிகள் காப்பீட்டிற்கு வகை செய்யவுமான மசோதா கீழ்க்கண்டவர்கள் கொண்ட தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. சர் வித்தல் என்.சந்தவர்க்கர், திரு.எம்.என்.ஜோஷி, திரு.ஜம்னாதாஸ் மேத்தா, திரு.டி.எல்.ஜோஷி, திரு.காதிர் முகமது சபன், திரு.ஸி.ஸி.மில்லர், திரு.இ.ஐ.சி.குவில்ட் மௌலானா ஜாபர் அலிகான், திரு.யூசுப் அப்துல்லா ஹருன், ஹாஜி சௌதுரி முகமது இஸ்மாயில் கான், திரு.எச்.ஏ.சத்தார் எச்.எஸ்ஸாக்சேட், திரு.அமேந்திர நாத் சட்டோபாத்யாயா, திரு.ஆர்.ஆர்.குப்தா, மற்றும் தீர்மானத்தை முன்மொழிபவர்; இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற, அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்க வேண்டும். இக்குழு சிம்லாவில் கூடுவதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.”

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல்ரஹீம்): மாண்புமிகு உறுப்பினர் பெயர்களைக் கொடுத்துள்ளாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, பட்டியலை இப்பொழுது அளிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல்ரஹீம்): பெயர்கள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு இந்த மசோதாவை சிபாரிசு செய்ய அவையின் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள எனக்கு அவசியம் எற்படும் என நான் நினைக்கவில்லை. இந்த மசோதாவின் பிரதான ஷரத்துக்கள் மூன்று. முதலாவதாக, போர்க்காயங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுப்பதை இந்த மசோதா சாத்தியமாக்குகிறது. இரண்டாவது இத்தகைய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலாளிகளைச் சேர்ந்தது என இந்த மசோதா நிர்ணயித்துக் கூறுகிறது; மூன்றாவது, தங்கள் மீது சுமத்தப்படும் இந்தப் பொறுப்புக்கு ஈடுசெய்ய முதலாளிகளை காப்பீடு செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறது இந்த மசோதா.

     இப்பொழுது, இழப்பீட்டு பிரச்சினையை எடுத்துக் கொண்டால், அவையின் கவனத்தை ஈர்க்க நான் விரும்பிய விஷயம் என்னவெனில், இந்த மசோதா ஒரு இணைக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐயா, போர்க்காயங்கள் அவசரச் சட்டத்திற்கும் இந்த மசோதாவுக்கும் இடையேயுள்ள சம்பந்தம் பற்றி ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருப்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் ஞாபகப்படுத்திக் கொண்டால், 1941 ஆம் வருட போர்க்காயங்கள் அவசரச்சட்டம், இழப்பீட்டுத் தகுதிபெறும் காயங்கள் எவை என்று வரையறுத்துக் கூறியிருப்பது தெரியவரும். அத்தகைய காயங்கள் அவசரச் சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய மசோதா செய்வது என்னவெனில், போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தில் தகுதிபெறும் காயங்கள் என்று விவரிக்கப்பட்டவற்றின் இலக்கையும் எல்லையையும் பிரதானமாக அங்கீகரிப்பதுதான். இந்த மசோதாவுக்கும் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்திற்குமுள்ள சம்பந்தம் பற்றிய பிரச்சினையைப் பொறுத்தவரை, போர்க்காயங்களால் பாதிப்பிற்குள்ளானவருக்கு இந்த மசோதாவில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களை கிட்டத்தட்ட பின்பற்றுகிறது என்ற உண்மையிலிருந்து மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்குத் தெளிவாகியிருக்கும்.

     ஐயா, மசோதாவைக் கொண்டுவருவதன் நோக்கம் இதுதான்: போர்க் காயங்கள் அவசரச் சட்டம் 1941ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது, ஒரு கேள்வி எழுந்தது; அந்தக் கேள்வி, சாரமுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்; துரதிருஷ்டவசமாக இந்த அவசரச் சட்டத்தின்படி தகுதிபெறும் காயங்களை ஒரு தொழிலாளி பெற்றால், அவருக்குக் கொடுக்கப்படும் தொகை, துயர் துடைப்பு உதவியா அல்லது இழப்பீட்டுத் தொகையா என்பதுதான் கேள்வி. துயர்துடைப்பு உதவிக்கும் இழப்பீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. துயர் துடைப்பு என்பது ஒரு போர்க்காயத்தின் காரணமாக எற்பட்ட இயலாமையால் வழக்கமாகப் பெறும் சம்பளத்தை பெறுவதிலிருந்து தடுக்கப்படுவதால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து வெளிவர உதவி செய்வது மட்டுமே. இழப்பீடு என்பது, தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின்படி, அவர் அடையும் நஷ்டத்தை முற்றிலுமாக ஈடுசெய்வதற்கு கொடுக்கப்படும் தொகையை நிர்ணயிப்பதை குறிக்கிறது. இந்தக்கேள்வி எழுப்பப்பட்ட போது, இங்கிலாந்தில் நிலவிய நிலைமைகளைப் பற்றி விசாரிக்கப்பட்டது; அப்பொழுது பல்வேறு வகை போர்க் காயங்கள் சட்டம், 1936 என்று அழைக்கப்பட்ட சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் இயற்றியுள்ளது பற்றி தெரியவந்தது. இந்த பிரிட்டிஷ் சட்டத்தின் ஷரத்துக்களை ஆராய்ந்தபொழுது, இந்தச் சட்டம் இடர்காப்பு உதவி மட்டுமல்லாமல் இழப்பீட்டு தொகையைக் கொடுப்பதையும் அனுமதிக்கிறது என்று தெரிந்தது. பிரிட்டிஷ் சட்டத் தொகுப்பில் வகுக்கப்பட்டுள்ள இந்தக் கோட்பாட்டை இந்திய சர்க்கார் பின்பற்றுவது விரும்பத்தக்கதல்லவா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இரண்டாவதாக, போர்க்காயங்கள் அவசரச் சட்ட ஷரத்துக்கள் போதுமானவை அல்ல என்றும், யுத்தக்கால அமைதிக்குலைவு ஏற்பட்டுள்ள வட்டாரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்கள் பணியில் ஸ்திரத்தன்மையுடன் வேலைசெய்வதற்காக இழப்பீட்டு தொகை அவசியம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த இரு கண்ணோட்டங்களிலிருந்து முதலில் கருதிய துயர்துடைப்பு என்னும் கோட்பாட்டிற்குப் பதில் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுதொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற கோட்பாட்டை இந்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டது.

     போர்க்காயங்கள் அவசரச் சட்ட ஷரத்துக்களை பரிசீலித்தபேது, ரூ.24 மட்டத்தில் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட தொகை துயர்துடைப்பு மட்டுமல்லாமல் இழப்பீட்டுத் தொகையுமாகும் என்று தெரிந்தது. எனவே ரூபாய் 24க்கு மேல் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு அதிகப்படியான தொகை கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது; இந்த அதிகப்படியான தொகை இழப்பீட்டுத் தொகையாகும்; அதாவது, அவசரச் சட்டத்தின்கீழ் பெறும் தொகையுடன் இந்த அதிகப்படி தொகையுடன் சேர்ந்து இழப்பீட்டுத் தொகையாகவும் ஆகிறது. இந்தச் சட்டம் ஒரு துணை நடவடிக்கையாகும்; போர்க் காயங்கள், அவசரச் சட்டத்துக்குத் துணையான நடவடிக்கை இது; 1941 ஆம் வருடப் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் ஷரத்துக்களை இது வளப்படுத்துகிறது.

     இந்த மசோதா எவ்வாறு போர்க்காயங்கள் அவசரச் சட்டத்துடனும் தொழிலாளர் ஈட்டூதியச் சட்டத்துடனும் இணைக்கப்பட்டது என்பதை அவைக்கு விளக்கியபின், இந்த துணைச் சட்டத்தை இந்திய சர்க்கார் கொண்டு வருவதற்கான காரணத்தை விளக்கியபின், இந்த மசோதாவின் இரண்டாவது பிரதான அம்சத்தை விளக்க முற்படுகிறேன்; அதாவது, இந்த இழப்பீடுக்கு முதலாளிகளைப் பொறுப்பாக்குவதாகும். போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ், துயர்துடைப்புத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட சர்க்கார், இந்த மசோதா பொருந்தக் கூடியவர்களுக்கு இழப்பீடுத் தொகைக்கும் இத்தகைய பொறுப்பை அது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படலாம். இந்தப் பொறுப்பைச் சர்க்கார் ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல என்பது தெளிவு; இந்த விஷயத்தின் சூழ்நிலையில் அது எதுவாகவேணும் ஆகலாம்; இந்தியா இப்பொழுது இருப்பதுபோல் இருந்தால், இதனால் எந்தப் பொறுப்பும் ஏற்படாமல் இருக்கலாம் அல்லது நிலைமை மேலும் மோசமடைந்தால், பொறுப்பு திட்டவட்டமில்லாது போகும்; இந்திய சர்க்காரின் ஆற்றல் திறனைப் பொறுத்த வரை, அத்தகைய வரைமுறையற்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி சர்க்காரை கோர முடியாது என்பது தெளிவு. இரண்டாவதாக, இந்த விஷயத்தில் சர்க்கார் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பெரிதாக்கிக் கொள்ளமுடியும் என்று நான் கருதவில்லை; எந்த இழப்பீடு தொகை கொடுக்க வேண்டுமென முதலாளி கோரப்படுகிறாரோ, அதாவது நாம் அவர்மீது சுமத்தப்படும்தொகை, இ.பி.டி- ன் கீழ் இது வருவாய் செலவாகச் சந்தேகமின்றி அனுமதிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும்; இதன்விளைவாக, இதன் பிரதான பளு முடிவில் கஜானாவின் மீதுதான் விழும்.

     முதலாளிகள் மீது இந்தச் சுமையைத் திணிக்க இந்திய சர்க்கார் வழி செய்யும்பொழுதே, தனது சிப்பந்திகள்பால் தனக்குள்ள சொந்த கடமையை அது மறந்துவிடவில்லை. இந்த மசோதாவில் உள்ள ஒரு ஷரத்து, மாட்சிமைதங்கிய மன்னர்பிரானின் ஊழியர்களுக்கும் பெடரல் ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தாது என்று கூறுவதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் காண்பார்கள். ஆனால் அதன் பொருள், இந்த மசோதாவால் மற்றவர்கள் பயனடைவது போல் மேற்சொன்ன சிப்பந்திகள் பயன் அடைய மாட்டார்கள் என்பதல்ல. பொதுத்துறைப் பணியாளர் விதிமுறைகளிலும் ரயில்வே தொழிலாளர்களுக்கான சட்டப்படியான விதிகளிலும் கண்டுள்ள அதிகப்படியான பென்ஷன் தொகைகளை வழங்க தயாராக இருப்பதாக பெடரல் ரயில்வேயும் இந்திய சர்க்காரும் தங்களுடைய ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளனர் என்பதை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

     ஐயா, முதலாளி மீது சுமத்தப்பட்ட பளுவை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் மூன்றாவது ஷரத்து மிக அவசியமானதும் சட்டப்படி மிகவும் கட்டுப்படுத்தும் ஒன்றுமாகும் என்பது எனது திட்டவட்டமான கருத்து. இந்த ஷரத்தின்நோக்கம், இந்த மசோதா வழிவகுக்கின்ற இழப்பீடு தொகையை எல்லா சந்தர்ப்பத்திலும் பெறுவதை உத்திரவாதம் செய்வதுதான். ஒரு தொழிற்சாலை குண்டுவீச்சுக்கு உட்பட்டால் அல்லது இடித்து நாசம் செய்யப்பட்டால், நலன்கள் வழங்கும் இந்த மசோதாவின் ஷரத்து அமுலில் இருந்தபோதிலும், இறுதியாகப் பார்த்தால் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையைப் பார்த்தால் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையைப்பெறும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம். எனவே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தொழிலாளிக்கு இந்த மசோதா வழங்கியிருக்கும் அனுகூலங்கள் போர்க்காயம் பெறும் துரதிருஷ்டவசமான நிலை ஏற்பட்டால் அவை அவருக்குக் கிடைப்பதைக் காப்பீடு உத்திரவாதம் செய்கிறது. இந்த மசோதாவின் விதிகளின்படி முதலாவதாக முதலாளியால் தொழிலாளிக்கு வழங்கப்படும், சர்க்காரால் நிர்வகிக்கப்படும் காப்பீட்டிலிருந்து முதலாளிக்கு அது ஈடுசெய்யப்படும். யுத்த முடிவுக்குப்பின் மொத்தச் சுமை எவ்வளவு என்று முடிசெய்யப்படும் காப்பீட்டு நிதிக்கு முதலாளி காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.

யுத்த முடிவுக்குப்பின் நிர்ணயிக்கப்படும் இறுதி காப்பீட்டுக் கட்டணத்திற்கு எதிராக முன்பணத்தை முதலாளிகளிடமிருந்து சர்க்கார் வசூலிக்கும். செலுத்த வேண்டிய முன்பணம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடிவு செய்யப்படும். முதல் மூன்று மாதத்தில், முன்பணம் சம்பளப் பட்டியலில் ரூ.100க்கு எட்டு அணாவுக்கு மேல் இருக்காது. அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குப் பாக்கியுள்ள பொறுப்பு தொகைக்கு ஏற்ப அதுமாறும். முந்தின மூன்று மாதங்களில் எந்தக் காயங்களும் ஏற்படாமல் இருக்கலாம். அது அப்படியாயின், முதலாளியிடமிருந்து எந்த முன்பணமும் வசூலிக்கப்படாது என்பது தெளிவு. நான் கூறியபடி இந்தக் காப்பீடுத் திட்டத்தின் நற்பயன் என்னவெனில், அது தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை உத்திரவாதம் செய்கிறது; இரண்டாவதாக, நஷ்டம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது; தாக்குதல் அபாயத்திற்கு உட்படாத பிரதேசங்களில் வாழும் தொழிலாளர்களும் தாக்குதலுக்குட்பட்ட பிரதேசங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் காப்பீடுநிதிக்கு ஒருபங்கைச் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, இந்தப் பளு விகித விதிப்படி பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முதலாளியின் சம்பளப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது அது.

     ஐயா!! எனவே இந்த மசோதா ஒரு எளிமையான நடவடிக்கை என்பதைக் காணமுடியும். வாத-பிரதிவாதத்திற்கு உட்படாத நடவடிக்கை என்றும் கூறுவேன். இந்த மசோதாவுக்கான கருத்து 1942 துவக்கத்தில் பம்பாய் மில்முதலாளிகள் சங்கத்திலிருந்து வந்தது என்பதை அவை தெரிந்துகொள்ள விரும்பும்; இந்த ஆலோசனை இந்திய சர்க்காருக்கு அனுப்பப்பட்டபின், தொழிலாளர் இலாகாச் செயலாளர் சர் ஹென்றி ரிச்சர்ட்சன், சர் பிரடெரிக் ஜேம்ஸ், திரு.ஹட்டோ, திரு.குவில்ட், திரு.ஹூசேன்பாய் லால்ஜி ஆகியோரைக் கொண்ட ஒரு பூர்வாங்க மாநாடு 1942 ஏப்ரலில் நடைபெற்றது. அவர்களின் ஆலோசனைப்படி தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இரு தொழிலதிபர்களின் அமைப்புகள் அணுகப்பட்டன; இரு அகில இந்தியத் தொழில் அதிபர்களின் அமைப்புகள் இந்த நடவடிக்கையை முழுமையாக ஆதரித்தன. தொழிலதிபர்களின் சம்மேளனத்தைப் பொறுத்தவரை, துரதிருஷ்டவசமாக அந்த அமைப்பு ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒரு பகுதி சாதகமாக இருந்தது, மற்றொன்று சாதகமாக இல்லை. தொழிலாளர் பிரதிநிதித்துவம் பொறுத்தவரை, தொழிலாளர் நிலைக் குழு ஏகமனதாக இந்த நடவடிக்கைக்கு சிபாரிசு செய்தது. இந்த மசோதாவின் ஷரத்துக்களை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள வேறு அதிகமாக எதுவும் தேவை என்று நான் நினைக்கவில்லை. ஐயா, இந்தக் கருத்துரையுடன் இம்மசோதாவைப் பிரேரேபிக்கிறேன்.

*     *     *

     1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! இன்று காலை நான் பிரேரேபித்த மசோதாவுக்கு இத்தகைய ஒரு பொதுவான ஆதரவு அளிக்கப்பட்டது அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மசோதாவிற்கு எதிரான விமர்சனங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் சிலவையே; அவற்றில் பெரும்பாலானவை எனது மதிப்பிற்குரிய நண்பர்கள் திரு.மில்லரிடமிருந்தும் திரு.ஜோஷியிடமிருந்தும் வேண்டியது அவசியம் என்று திரு.மில்லர் சொன்னார். எந்த விஷயங்கள் அவர் மனதை வருத்திக்கொண்டிருக்கின்றன என்பதை தயவுசெய்து அவர் எனக்குத் தெரிவித்தால், அவர் விரும்பும் எந்தவிதத் தகவலையும் வழங்க எப்பொழுதும் நான் மகிழ்ச்சியடைவேன். அவர் எழுப்பிய மற்ற விஷயத்தைப் பொறுத்தவரை, அதாவது போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் நாம் வழங்கிவரும் விகிதங்களுக்கும் இந்த மசோதாவின் கீழ் நாம் கொடுக்கவிருக்கும் விகிதத்திற்கும் இடையே பாகுபாடு உள்ளதாக அவர் மனதில் தோன்றியதைப் பொறுத்தவரை, அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என நான் அஞ்சுகிறேன்; ஏனெனில் நான் எடுத்துரைக்க முற்பட்டது போல, இந்த மசோதாவின் நோக்கம் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வருகிறவர்கள் நிலையையும் இந்த மசோதாவின் கீழ் வருகிறவர்கள் நிலையையும் உண்மையில் சமநிலைப்படுத்துவதே. நான் சுட்டிக்காட்டியபடி போர்க்காயங்களால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நாம் கொடுத்துவந்த விகிதங்களை பரிசீலித்ததில், ரூ.24ம், அதற்கு மேலும் சம்பளம் பெற்றவர்கள் துயர் துடைப்புத் தொகை மட்டுமே பெற்றனர் என்பதையும் ரூ.24/- க்குக் கீழ் சம்பளம் பெற்றவர்கள் இழப்பீடு தொகை மட்டுமே பெற்றனர் என்பதையும் காணமுடிந்தது.

இப்பொழுது இந்தச்சட்டப்படி நாம் செய்யவிருப்பது, ரூ.24க்கு மேல் இருப்பவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாகும். பாகுபடுத்தும் நிலையை ஏற்படுத்துவதற்கு மாறாக, இந்த இரு சட்டங்களின் கீழ் தகுதிபெறும் எல்லாத் தொழிலாளர்களின் நிலையை சமநிலைப்படுத்துகிறோம் என்பதை எனது மதிப்பிற்குரிய நண்பர் காணமுடியும். என் நண்பர் திரு.மில்லர் எழுப்பிய விஷயத்தை நான் பாராட்டுகிறேன்; அதாவது 5வது ஷரத்து வகுக்கும் சிலவகைத் தொழிலாளர்கள் அல்லது சில பிரிவுத் தொழிலாளர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தால் பயன்பெறுவர்; இந்த சட்டத்தின் விதிமுறைகளிலிருந்து அது மிகத் தெளிவாகிறது. ஆனால் நான் சுட்டிக்காட்டியபடி இரு சந்தர்ப்பங்களைப் பொறுத்தவரை முதலாவதாக, எல்லாத் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு கொடுக்கும் சுமையைச் சர்க்கார் ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல; இரண்டாவதாக சர்க்கார் முன்வைக்கக்கூடிய எந்தக் காப்பீட்டுத் திட்டத்தையும் பொறுத்தவரை, அது நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். எல்லா வகைப்பட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்துமாறு அதனை நடைமுறைப்படுத்தினால் சர்க்காருக்கு அது அதிக சுமையாக இருக்கும்; நிர்வாக ரீதியில் செயல்படுத்த முடியாததாகி விடும். பொறுப்பை நாம் நிச்சயம் சுமத்தக்கூடிய, காப்பீடு கட்டணத்தை செலுத்த ஒரு முதலாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பொது மக்களைப் பொறுத்தவரை, இந்தப் பொறுப்பைச் சுமக்கக்கூடிய, காப்பீட்டுக் கட்டணத்தை தரும்படி கோரமுடிகிற ஒருவரை கண்டுபிடிப்பது சாத்தியமல்ல. விதி 5 விவரிக்கிற சில பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் என இந்தத் திட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்படி தேவைப்பட்டதற்கான நிச்சயமான காரணம் இதுதான். விதி 5 விவரித்த பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமென கட்டுப்படுத்திக் கொண்டதற்கான நியாயம் எதையும் நாங்கள் கூறவில்லை என்று மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.மில்லர் கூறினார். நான் அவருக்குக் கொடுத்திருக்கக்கூடிய பதில்கள் சிலவற்றை மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.ஜோஷி கொடுத்துள்ளார்; அவற்றைத் திருப்பிக் கூற நான் விரும்பவில்லை. நோக்கங்கள் – காரணங்கள் அறிக்கையிலேயே பதிலை உண்மையில் கண்டுபிடிக்கலாம். நோக்கங்கள் – காரணங்கள் பற்றிய (பாரா. 2) இந்த சட்டத்தை, அதில் விவரிக்கப்பட்ட பிரிவுத் தொழிலாளர்களுக்கு மட்டுமாகக் கட்டுப்படுத்திக் கொண்டது நாம் கொடுக்கக்கூடிய நல்ல பதிலாகும். தொழிற்சாலைகளிலும் தொழிற்கூடங்களிலும் அவர்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை நோக்கங்களும் – காரணங்களும் என்ற அறிக்கை (பாரா 2) தெளிவாக்குகிறது. அதில் விவரிக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினருக்கு மட்டும் இந்தச் சட்டம் என்று மட்டுப்படுத்திக் கொள்வதற்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு நல்ல காரணம் எனக் கூறினேன். தொழிற்சாலைகளும் தொழிற்கூடங்களும் எதிரியின் தாக்குதலுக்கு சுலபமான இலக்குகள் என்பதை மறுக்க முடியாது. எனவே, பொதுமக்களை விட, இந்த இடங்களில் வேலை செய்வோர் ஆபத்திற்கு அதிகமாக உட்படுத்தப்படுகிறார்கள்.

     மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி எழுப்பிய கேள்வியைப் பொறுத்தவரை, இந்த மசோதா எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொருந்தாது என்பது; இரண்டு குறிப்பிடத்தக்க பிரிவினருக்கு இந்தச் சட்டத்தின் சிறப்பு சட்டப் பிரிவு விரிவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார், அதாவது அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கப்பல் மாலுமிகளுக்கும்; இந்த பிரிவினர் விஷயத்தில் குறிப்பான பதில் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஐயா, இனி இந்த இரு குறிப்பிட்ட பகுதியினர் பற்றி திரு.ஜோஷியின் விமர்சனத்திற்கு எனது பொதுவான பதில் என்னவெனில், அவர் கூறியுள்ளது பற்றி சர்க்காருக்குத் தெரியும்; இதனால்தான், விதி 5ல் உபவிதி (C) ஐ சர்க்கார் உட்படுத்தியுள்ளது; இதன்படி இந்த மசோதாவின் விதிகளை எந்தத் தொழிலிலும் பணியாற்றும் மற்ற தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தும் அதிகாரத்தை சர்க்கார் தன்னிடம் வைத்துள்ளது. மசோதாவில் வரையறுக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினர்கள் இறுதியானது என்றோ மற்றவர்களைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் எதுவும் இராதென்றோ சர்க்கார் கருதவில்லை.

     டாக்டர் பி.என்.பானர்ஜி: இது முடிவானதல்ல.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நீங்கள் குறிப்பிட்டது போல் இது முடிவானதல்ல; எனவே ஒரு நிலைமை எழுந்தால், இந்த மசோதாவின் விதிகள் மற்ற தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று சர்க்காருக்குத் தெளிவானால், அந்த விஷயத்தை சந்தேகமின்றி சர்க்கார் பரிசீலிக்கும்.

     அஸ்ஸாம் பிரச்சினையைப் பொறுத்தவரை, நான் குறிப்பிடுவது என்னவெனில், நான் கூறியபடி அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள இடங்கள் என்று கூறப்படும் இடங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த மசோதாவை எல்லைப்படுத்தியுள்ளோம். தற்சமயம் எங்களிடம் உள்ள தகவலின்படி, தேயிலைத் தோட்டங்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மையங்கள் எனக் கூற முடியாது எனக் கருத தோன்றுகிறது. எந்த சமயத்திலும் தேயிலைத் தோட்டங்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்படும் அபாய மையங்களாக மாறினால் திரு.ஜோஷி இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சர்க்கார் தனது கவனத்திற்கு கொண்டுவந்து இந்த மசோதாவின் நலன்கள் அஸ்ஸாமிலுள்ள தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

     மாலுமிகள் சம்பந்தப்பட்டவரை, வர்த்தகத்துறை இந்த விஷயத்தை முன்கொண்டுவந்தது என்று நினைக்கிறேன்; ஒரு ஏற்பாடு ஏற்கெனவே அமுலில் இருக்கிறது என்று அறிகிறேன்; அதன்படி அதே அளவில் இல்லாவிடினும், எப்படியாயினும், நாம் கொண்டுள்ள திட்டத்திற்கு ஒத்ததான நிரந்தரக்குழு இதைப் பரிசீலித்து, ஏதாவது ஏற்பாடு – அது இந்த மசோதாவின் பிரதான அம்சங்களுக்கு முரணில்லாதிருந்தால் – செய்வது விரும்பத்தக்கது என்று எனது நண்பர் திரு.ஜோஷி கருதினால், நிரந்தரக் குழுவில் இந்த விஷயத்தை பரிசீலிப்பதற்கு எந்த ஆட்சேபனையையும் நிச்சயமாக எழுப்ப மாட்டேன்.

     மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.மில்லர் இந்த மசோதாவின் ஒன்று அல்லது இரண்டு பிரிவுகள் பற்றிக் குறிப்பிட்டார். முதலாவதாக உப-பிரிவு 5(3). இந்த உப பிரிவை எச்சரிக்கை உணர்வுடன் சர்க்கார் வேண்டுமென்றே அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறினார். ஏனெனில் பொருத்தமான நிலைமை எழலாம் என்றும் அப்பொழுது இந்த மசோதாவின் பிரிவுகள் விரிவுபடுத்தப்பட வேண்டி வரலாம் என்றும் சர்க்கார் நினைக்கிறது என்றார்.

     அவர் குறிப்பிட்ட மற்றபிரிவு, பிரிவு 10, உப பிரிவு (3). அவரது விமர்சனம் என்னவெனில், இந்தப்பிரிவின்படி, நிதியில் ஏதாவது மீதித் தொகை விடப்பட்டிருந்தால் அந்த அதிகப்படியான தொகை பொதுவருவாய் நிதிக்கு கொடுக்கப்படும் என்பது. இந்த விஷயத்தின் சூழ்நிலையில், இந்திய சர்க்காரின் கொள்ளையை நியாயப்படுத்த முடியாதது என திரு.மில்லர் ஏன் கூறுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்ட உண்மையை திரு.மில்லர் கவனத்தில் கொண்டால், அதாவது முதலாளிகளால் இந்த நிதிக்கு காப்பீட்டு தவணைகளாக கொடுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி இருந்து வருகிறது என்பதாகும்; அப்படியாயின் இந்த மிச்சத் தொகையின் சட்டப்படியான உரிமையாளராக சர்க்கார் இருக்கவேண்டுமென்பது சரியானதே. இதற்குமேல் நான் கூற எதுவுமில்லை.

     திரு.ஈ.எல்.ஸி.குவில்ட் (பம்பாய்: ஐரோப்பியர்): மாண்புமிகு உறுப்பினரிடமிருந்து ஒரு கேள்வி நான் கேட்கலாமா? மில் தொழிலதிபர்கள் சங்கம் முன்முயற்சி எடுத்த திட்டம் என்று தமது துவக்க உரையில் அவர் கூறியது ஏன்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவர்கள் ஒரு யோசனையை முன்வைத்தனர்.

     திரு.ஈ.எல்.ஸி.குவில்ட்: காப்பீட்டுத் தொகை முழுவதுமாக கொடுக்கப்பட்டபின் மீதமுள்ள தொகை தொழில்துறை ஆய்வுக்காக பயன்படுத்தப்படவேண்டுமென்று ஒரு யோசனையையும் அவர்கள் முன்வைக்கவில்லையா? அப்படியாயின் மாண்புமிகு நண்பர் அந்த யோசனையைப் பரிசீலிப்பாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இந்த விஷயத்தைக் கவனிக்கிறேன்.

     திரு.தலைவர் (சையது குலாம் பிக் நைராங்): தீர்மானம் வருமாறு:

“போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும் அதை ஈடுசெய்ய முதலாளிகளைக் காப்பீட்டிற்கு வகை செய்யவுமான மசோதா கீழ்கண்டவர்களைக் கொண்ட தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது: சர் வித்தல் சந்திரவர்க்கர், திரு.என்.எம்.ஜோஷி, திரு.ஜம்னாதாஸ் மேத்தா, திரு.ஹூசேன்பாய், ஏ.லால்ஜி, கான்பகதூர் மியான் குலாம் கதிர் முகமது சபன், திரு.ஸி.ஸி.மில்லர், திரு.ஈ.ஐ.ஸி, குவில்ட், மௌலானா ஜாபர் அலிகான், திரு. யூசுப் அப்துலா ஹருன், ஹாஜி சௌதுரி முகமது இஸ்மாயில் ஹருன், திரு.எச்.ஏ.சத்தார் எச்.எஸ்ஸாக் சேட், திரு.அமேந்திரநாத் சட்டோபாத்யாயா, திரு.ஆர்.ஆர்.குப்தா, மற்றும் தீர்மானத்தை முன்மொழிபவர்; இந்த குழுக் கூட்டம் நடைபெற, அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்க வேண்டும்; இந்தக்குழு சிம்லாவில் கூடுவதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It