கலை உலகிலும் இலக்கியத்திலும் புகழ்பெற்ற மனிதர்களை இருவகையினராக பிரிக்கலாம்

நட்சத்திரங்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலம் ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்து வாழுங்காலத்திலேயே புகழையும் பெருமையையும் அடைந்துவிடுவர். ஆனால் ஆளுமைகள் என்பவர்கள் வேறு.

 

இவர்கள் தாங்கள் மேற்கொண்ட கலையை தங்களது உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் . அதற்காக தொடர்ந்து போராடி அதனை அடுத்தக் கட்டத்துக்கு முன்னெடுத்து செல்பவர்கள். அதனால் வாழும் காலத்தின் வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள்மேல் விழுவதில்லை. அதே சமயத்தில் இவர்களும் காலத்திள் மைல்கற்களாக நிற்கவே விரும்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்களது சமகாலத்திய ரசனைகளுக்கு எதிர்திசையிலேயே பயணிப்பர். அத்தகைய ஆளுமைகள்தான் குறிப்பிட்ட கலை, தேங்கிய குட்டையாகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றனர். மேலும் தொடர் ஓட்டவீரர்களை போல பொறுப்பை இன்னொருவருக்கு கைமாற்றி அக்கலை வளர தொடர்ந்து பாடுபடுகின்றனர்

 

அப்படியாக சினிமா எனும் கலைவடிவத்தின் அதன் மொழியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த ஆளுமைகளுள் எடிசன், லூமியர், ஜார்ஜ் மிலி, டி .டபிள்யூ.கிரிபித், ஐன்ஸ்டைன், ஜான் போர்ட் ஆர்சன் வெல்ஸ், அகிராகுரசோவா ஆகியோர் மைல்கற்களாக இன்றும் காலங்களால் மேலும் மேலும் புகழை அடைந்துவருகின்றனர். அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகளுள் இத்தாலியின் இரு இயக்குனர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.அதுவும் ஒரே காலகட்டத்தில் ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்த ஒரே தேசத்தைசேர்ந்த இருவர் ஒரேசமயத்தில் உலகசினிமாவை தம் பக்கம் திரும்பிப்பார்க்கசெய்ததும் அதிசயமான ஒன்றுதான். அவர்கள் தங்களது கவித்துவமான சினிமாமொழியால் அழுத்தமான தடங்களை உலகசினிமாவில் பதித்துக் கொண்டனர். ஃபெட்ரிக்கோ பெலினி, மற்றும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி ஆகிய இருவர்தான் அந்த குறிப்பிடதகுந்த இயக்குனர்கள்.

 

உலகசினிமா வரலாற்றின் இரண்டு முக்கிய கால கட்டங்களான நியோரியலிஸம் மற்றும் பிரெஞ்சு நியூவேவ் ஆகிய இரண்டு அலைகளுக்குமிடையே பாலமாக இருந்தவர்கள் .

 

பெட்ரிக்கோ பெலினி Federico Fellini

 

உலக சினிமாவுக்குள் கவித்துவமான வெளிப்பாட்டை கொண்டுவந்த இயக்குனர் பெலினி இத்தாலியில் ரெமினி எனும் சிற்றூரில் 1920ல் ரோமன் கத்தோலிக்க பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தவர். பெலினியை பால்யத்தில் பெரிதும் கவர்ந்தவை கார்ளன் புத்தகங்கள். அதில்வரும் சாகசவீரர்களும் கோமாளிகளும் தேவதைகளும் அவரது மூளையின் கற்பனைபிரதேசத்தை சிறுவயதிலேயே அபகரித்துக்கொண்டனர். தொடர்ந்து அவ்ற்றை ஓவியங்களாக தீட்டிப்பழகிய பெலினியின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை உருவாக்கியது அவர்கள் ஊருக்குள் திடீரென முளைத்த ஒரு சர்க்கஸ் கூடாரம்.சர்க்கஸ் அவருக்குள் புதியகதவுகளை திறந்துவிட்டது .கனவுகளில் கோமாளிகள் அவரை சுற்றி வாழ்ந்தனர் .திடுமென ஒருநாள் அவருக்கு அதிர்ச்சி.சர்க்கஸ் ஆட்கள் கூடாரத்தை காலிசெய்துகொண்டு புறப்பட்டு வரிசையாக வண்டிகளுடன் சென்றனர். சிறுவன் பெலினிக்கு தன்கனவுகள் தன்னிடமிருந்து முழுவதுமாய் பிடுங்கப்பட்டு பாரவண்டியாக ஊர்ந்துசெல்வது போன்ற வேதனை. அந்தச் சோகத்துடன் வண்டியை பின் தொடர்ந்தான். அவர்கள் சென்ற ஊரிலேயே இவனும் அவர்களுடன் இரண்டுநாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பியதாக அவரை பற்றி ஒரு பால்யகதை கூறுகிறது.பெலினியின் படங்களைப் பார்ப்பவர்கள் அவரை சிறுவயதில் பாதித்த அந்தச் சர்க்கஸ் உலகத்தின் மிச்ச சொச்சங்களை உணரமுடியும்.அந்தச் சிறுவயது நிகழ்வுக்கு பின் அந்த ஏக்கத்தோடு கோமாளிகளையும் தேவதைகளையும் சித்திரங்களாக வரையத்துவங்கிய பெலினி மெல்ல ஓவியராக மாறினார்.

 

பிற்பாடு பெலினி பதினாறம் வயதில் ரோம் நகருக்கு சென்றபோது அவரது வாழ்க்கையும் அகன்ற திரைக்கு மாறத்துவங்கியது.பத்திரிகைகளுக்கு கார்ட்டூன்களை வரைந்து கொடுத்துக்கொண்டிருந்த பெலினிக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதில்தான் ஆர்வம் மிகுந்திருந்தது. இச்சமயத்தில் ஒரு பத்திரிகை சந்திப்பு நிமித்தமாக பெலினி நியோரியலிஸத்தின் முக்கிய பிதாமகரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், பைசைக்கிள் தீவ்ஸ் உட்பட பல படங்களின் திரைக்கதையாசிரியருமான ஜவாட்டினியை சந்திக்க சென்ற போதுதான் பெலினியின் வாழ்க்கை சினிமாவுக்குள் நுழையத் துவங்கியது. தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதைகளை எழுதத் துவங்கியவர் கிட்டதட்ட 20படங்களில் இணை திரைக்கதையாளராக பணிபுரிந்தபின் முதல் நியோரியலிஸ படமாக கருதப்படும் ‘ரோம் ஓபன் தி சிட்டி’ படத்தில் அதன் இயக்குனர் ரோபர்ட்டா ரோஸலினியிடம் இணைஇயக்குனராகவும் இணை திரைக்கதையாசிரிய ராகவும் பணிபுரிந்தார்.அவரது முதல் வெற்றி என்று சொல்லும் வகையில் இப்படம் ஆஸ்கார் விருதில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் பரிந்துரைக்ககப்பட்டது. இதே இயக்குனரிடம்தான் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனியும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன்பிறகு வேரிட்டி லைட்ஸ் Variety Lights (1950),, படத்தின் மூலமாகஇயக்குனராக தன்னை தகவமைத்துக்கொண்டாலும் பெலினிக்கு இரண்டாவது படமான The White Sheik  தான் அவரை இயக்குனராக அங்கீகரித்தது. ஆண்டோனியோனி எழுதியக் கதையை வைத்துக்கொண்டு தனது நண்பர் Tullio Pinelli யுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ ஆண்டனியோனிக்கு அவர்கள் எழுதிய திரைக்கதையில் திருப்தியில்லை. அத்திரைப்ப்டம் The White Sheik பிற்பாடு வெளியாகி வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக் அங்கீகரிக்கப்பட்டு பெலினிக்கு உலக அந்தஸ்தை உருவாக்கித்தந்தது.ஆனால் அதனைக்காட்டிலும் பெரும்புகழையும் அழுத்தமான அவரது முத்திரையையும் தக்கவைத்த திரைப்படம் லா ஸ்ட்ராடா.

 

பெலினியிடம் ஒரு திரைப்படவிழாவின்போது நிருபர் ஒருவர் இப்படிக்கேட்டார்

 

மனித குணங்களில் சிறந்த ஒன்றாக எதை மதிப்பிடுவீர்கள் ?

 

பெலினியின் பதில்

 

சக மனிதனின் மீதான அவனது நேசம்

 

உடனடியாக அடுத்த் கேள்வியும் வந்தது

 

அப்படியானால் மனிதனின் பிரச்சனையாக நீங்கள் கருதுவது

 

அவனுடைய ஈகோ

 

லா ஸ்ட்ராடா வில இந்த இரண்டு கூறுகளும் எதிரெதிர் புள்ளியில் இருந்து கதையை நகர்த்துவதை நம்மால் சுலபமாக உணரமுடிகிறது. இந்த இரு கூறுகளை வைத்து அவரது மொத்த திரைப்படங்களையும் கூட மதிப்பிட முடியும்.ஒரு நாடோடி வித்தைக்காட்டு பவனுக்கும் ஒரு தற்குறி அபலைபெண்ணுக்குமிடையிலான உறவை இப்படம் சித்தரித்தது. ஆண்டனி க்வின் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாசினா. பிற்பாடு தொடர்ந்து அவரது படங்களில் நாயகியாக நடித்த மாசினா அவரது மனைவியாகவும் வாழ்க்கையில் பங்கேற்று இறுதிவரை உடனிருந்தார்.இது போலவே இப்படத்தின் இசையமைப்பாளரான நினோ ரோட்டா பெலினியின் திரைப்படங்கள் அனைத்திலும் தொடர்ந்து பங்களிப்புச் செய்தார்.

 

சர்க்கஸை போலவே பெலினியை மிகவும் வசீகரித்த இன்னொரு விஷயம் அமெரிக்க சினிமாவில் அப்போது அதிகம் வந்த பரபரப்பு பத்திரிகையாளர்களை நாயகனாக கொண்ட படங்கள். அதில் அவர்கள் அணியும் கோட்டு தொப்பி ஆகியவை பெலினியை மிகவும் வசீகரித்தன அதன் வெளிப்பாடுதான் 1956ல் வெளியான லா டோல்சே விட்டா La Dolce Vita (1960).). இப்படத்தில் நாயகனாகநடித்தவர் பெலினியின் ஆஸ்தான நாயகனான மார்சலோ மாஸ்ட்ரியானி. Marcello Mastroianni .

 

நியோரியலிஸ அலையின் கடைசிப்படமாககூட கூறலாம். இப்படம் வெளியான சமயங்களில் இத்தாலியின் வறுமைநிலை முழுவதுமாக மாறி மீண்டும் தன் பகட்டான கோட்டை அணியத்துவங்கிய கால கட்டமாக இருந்ததால் மக்களின் ரசனையிலும் மாற்றம் வரத்துவங்கியது. சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கலைமனம் பெலினியினுள்ளும் கவித்துவ ஊற்றை அவரது அதீத கற்பனைகளை திரைப்படமாக மாற்ற முயற்சிக்கத் துவங்கியது. பிற்பாடு இதுவே அவரது முத்திரையுமாக மாற துவங்கியது.

 

தொடர்ந்து அந்த புதியபாணியில் அவர் எடுத்தபடம் 8லு - இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது.ஒரு இயக்குனர் தனது அடுத்தப்படத்திற்கு என்ன கதை என தெரியாமல் குழம்புவதுதான் கதை.

 

தன் படங்கள் அனைத்துமே ஒருவகையில் தன் சுய சரிதைதான் என பெலினி சொல்வதை இப்படம் அப்பட்டமாக நமக்கு நிரூபிக்கிறது. தொடர்ந்து இதே பணியில் வெளியான் படங்கள் Juliet of the Spirits (1965), Satyricon (1969), Casanova (1976),மற்றும் City of Women (1980).33 மூலம் பெலினிபடங்கள் என்றாலே அவை கனவுத்தன்மை நிரம்பியவை எனும் அழுத்தமான முத்திரையை அவருக்குபெற்றுதந்தன. இந்த அவரது கனவுலக பயணம் அவரது "VOICE OF THE MOON" 1990 எனும் இறுதிபடத்துடன் முடிவுக்குவந்தது.

 

வாழ்நாள் சாதனையாளராக அவரை அங்கீகரித்த ஆஸ்கார் விருது கமிட்டி அவரை 1993ல் கவுரவித்தது. அடுத்த சிலநாட்களில் மரணம் அவரை அணைத்துக் கொண்டது. அவர் இறந்த ஆறவாது மாதத்திலேயே இறந்து போன அவரது மனைவியும் மிக்கச்சிறந்த நடிகையுமான மாசினா தன் இறப்பின் மூலம் தங்களுக் கிடையிலான உறவை உலகிற்கு முன்னுதாரணமாக விட்டுச்சென்றார் அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டில் மறைந்த மாசினா சிறந்த நடிப்புக்காக ஆஸ்காவிருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

நம் வாழ்வின் மிகப்பெரிய தடைகளே நமக்குநாமே போட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒழுக்கவிதிகள்தான். நம்மை சுற்றி அறிவியல், பொருளாதரம் அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிற போது வாழ்க்கை மட்டும் பழைய கட்டுக்களில் உழல்வது நம்மை கோழைத்தனத்திற்கும் அசமந்தத்துக்குமே இட்டுச் செல்கிறது என கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குனருக்கான உரையில் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனி தன் படங்கள் குறித்த அபிப்ராயத்தை கூறினார்.அவர் மட்டுமல்ல இந்த இருத்தலியல் பிரச்சனைதான் இரண்டாம் உலகப்போருக்குபின் ஐரோப்பாவையே உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் காம்யூவும் சார்த்தரும் இலக்கியத்தில் இந்தப்பிரச்சனைகளை அலசிக்கொண்டிருக்க தன் படங்களின் மூலம் சத்தமில்லாமல் கலையாக மாற்றிக் கொண்டிருந்தார் ஆண்டோனியோனி. இத்தாலியின் பெராரா நகரில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆண்டோனியோனிக்கு அவரது பணக்காரவாழ்க்கை உருவாக்கிய தடைகள்தான் அவரை கலைஞனாக மாற்றியது. பிரம்மாண்டமான அவரதுவீட்டு இரும்பு வாயில்கதவுகள் அவரது குழந்தமையின் ஏக்கத்தை ஜன்னல் வழியாக ஒருபிஞ்சுக் கைபோல நீளச்செய்தன. அந்த ஏக்கம் வீட்டினுள்ளேயே விளையாட்டுபொருட்கள் மூலம் கட்டிடங்களையும் வீதிகளையும் சமைக்க வைத்து தனக்கு பிடித்தமான வகையில் கட்டிடங்களை மாற்றி மாற்றி கட்டியதன் மூலம் படைப்பு மனோநிலை தூண்டப்பெற்ற ஆண்டோனியோனி தொடர்ந்து ஓவியத்திலும் இசையிலும் தன் கவனத்தை குவித்தார்.அது அவரை பதினோராவது வயதில் வயலின் இசைக்கலைஞராக மாற்றி தந்தது.

 

தொடர்ந்து 1940ல் ரோம் நகருக்கு சென்ற ஆண்டோனியோனியும் பெலினியைப் போலவே துவக்கத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்தார்.பின் ரோபட்டா ரோஸலினியிடம் உதவி இயக்குனராக இணைந்து கொண்ட ஆண்டோனியோனி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படம் Cronaca di un amore (Chronicle of a Love, 1950)

 

பெலினியை போலவே நியோரியலிசத்திலிருந்துதான் ஆண்டோனியோனி தன் கணக்கை துவக்கினார்.ஆனாலும் அடுத்த பத்து வருடங்கள் வரை அவருக்கு அந்தப் பாணி கைக்கொடுக்கவில்லை. பின் மெல்ல தடம் மாறினார் 1960ல் வெளியான அவரது லாஅவெஞ்சுரா L'avventura (1960), கேன்ஸ் விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்து இப்படம் எதார்த்தத்திலிருந்து விலகி அழுத்தமான உணர்வுகளை காட்சிபடிமங்களாக மாற்றும் மிகு அழகியல் தன்மையுடன் தன் உணர்வுகளை சினிமாவாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அவரது நீளமான டேக்குகள் உலகசினிமாவில் அதுவரையில்லாத ஓர் அழகை கூட்டித்தந்தன. இதன் வெற்றியைத் தொடர்ந்து தன் பாணியைகண்டுகொண்ட ஆண்டோனியோனி. La notte (1961), L'eclisse (1962) என அடுத்தடுத்தப் படங்கள் மூலம் இப்பாணியை கைக்கொண்டார். இதில் மார்சிலோ மாஸ்திரியானி நடித்த லா நோட்டி படம் 11வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. லா எக்ளிஸ் திரைப்படத்தில்தான் அவர் காலத்தால் மாறாத ஓர் அழகுபெட்டகத்தை நாயகியாக கண்டெடுத்தார். மோனிகா விட்டி எனும் அந்த நடிகை தொடர்ந்து அவரது பல படங்களில் நாயகியாக நடித்தார்.

 

தொடர்ந்து கார்லோ புயண்டி எனும் தயாரிப்பாளர் அவரை அவர் இஷ்டத்துக்கு பூரண சுதந்திரத்துடன் இயக்கித்தருமாறு அழைப்புவிடுக்க ஆண்டோனி யோனிக்கு தன் மனதிலிருந்த இலக்கியவாதியை உசுப்பிவிட்டார். அர்ஜெண்டைனா எழுத்தாளரான ஜூலியா கொத்தஸார் எழுதிய ப்ளோ அப் எனும் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு ப்ளோ அப் எனும் பெயரிலேயே ஒருபடத்தை இயக்கினார். உண்மையில் திரைப்படமாக்கலுக்கு சவாலான ஆழ்ந்த மொழிச்செறிவும் இலக்கிய புலமையும் கொண்ட கதையை முழுக்கவும் தன்பாணியில் எடுத்து அறிவுலகுக்கு தன் திறமையை எடுத்துக்கூறினார்.

 

திரைப்பட மொழியில் கவித்துவம் எப்படி சாத்தியம் என்பதற்கு இப்பபடம் ஒரு நல்ல உதாரணம் . 1972ல் இவரது மார்க்ஸிய ஈடுபாடுகாரணமாக சீனா இவரைதன் நாட்டிற்கு அழைத்து தங்களது நாட்டைப்பற்றி சிலீuஸீரீ ரிuஷீ சிவீஸீணீ,எனும் டாக்குமெண்டரிப் படத்தை எடுத்து தருமாறு பணித்தது. உடன் .தங்களது நாட்டில் திரைப்படத்துக்கான சரியான பாதையை போட்டுத்தரு மாறு அழைத்தது.ஆனால் அந்தப் படத்தை பார்த்ததும் இது சீனாவின் கம்யூனிஸ கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி அப்படத்தை முடக்கி வைத்தது.

 

பிறகு 2004ல்தான் அவரது படத்தின் பெருமையை தாமதமாக உணர்ந்த சீனா அவருக்காக ஒரு விழாவை எடுத்து அதில் அப்படத்தை முதல்முறையாக காட்சிப்படுத்தியது.

 

பிறகு ழான் காக்டோ எனும் பிரெஞ்சு நாவலாசிரியரின் The Eagle With Two Heads. எனும் கதையை அடிப்படையாக கொண்டு மோனிக்காவிட்டி நடிக்க The Mystery of Oberwald ல் எனும் படத்தை இயக்கினார். 1985ல் பக்கவாதத்தால் மூளை பாதிக்கப்பட்டு செயலிழந்த ஆண்டோனியோனி மீண்டும் 1995ல் ஒருபடத்தை இயக்கினார் Beyond the Clouds  (1995) எனும் அப்படத்தை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை உடல் நலம் உழைக்க மறுத்தது. இதனால் ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸிடம் மீதிபடத்தை இயக்குமாறு பணித்தார். ஆனால் அவர் எடுத்த ஷாட்டுகள் பிடிக்கவில்லை என பலவற்றை எடிட்டிங்கில் ஆண்டோனியோனி வெட்டித்தள்ளினார்.வெனிஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறந்த படத்துக்காக தேர்ந்தெடுத்து பரிசை இருவருக்கும் பகிர்ந்தளித்தது. 1994ல் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்து கவுரவித்தது.

 

ஆனாலும் அவரது திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என சக உலகசினிமா சிற்பியான ஸ்வீடன் இயக்குனர் பெர்க்மன் ஒரு முறை ஆதங்கப்பட்டார். ஆச்சர்யப்படும்படியாக பெர்க்மனும் ஆண்டோனியோனியும் ஒரேநாளில் 2007 ஜூலை 30ல் தங்களது உடலைவிட்டு பிரிந்து உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். 

-அஜயன் பாலா

(புத்தகம் பேசுது மார்ச் 2010 இதழில் வெளியானது)

Pin It