கியூபாவுக்கு வெளியே FOCO கிளர்ச்சிக் குழுக்களைத் துவக்கியதன் மூலம் குவேராயிசம் செல்வாக்கு பெற்றிருந்தது. கியூபாவுக்குள் அது சோஷலிசக் கட்டுமானத்தின் மூலம் ஒரு மார்க்சீய லெனினியக் கட்சியின் முன் மாதிரியாக இருந்தது. போக்கோ கிளர்ச்சி குழுக்களின் வாரிசு என்ற முறையில் கட்சியின் முன்னணி போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது. சாராம்சத்தில் குவேராயிசம் இரண்டு கட்டமான ஆனால் தொடர்ச்சியான புரட்சிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. அதில் போக்கொ கிளர்ச்சிக் குழுக்கள் முதல் கட்டத்தின் முன்கையெடுக்கும் செயற்பாட்டுடனும், இரண்டாம் கட்டத்தில் மார்க்சீய லெனினிய கட்சியின் முன்னணி செயற்பாட்டுடனும் இயங்கின.
Cheஇருந்த போதிலும், ‘தொடர்ச்சியான புரட்சி’ என்ற இரட்டைப்பணியை ஒரு ஒற்றை அமைப்பு செய்யக்கூடிய சாத்தியத்தை சே- திறப்பாகவே விட்டிருந்தார். ‘மார்க்சீய லெனினியகட்சி ’ (1963) என்ற கட்டுரையில், கட்சியின் முன்னணிப் படையான போக்கொ புரட்சி மையங்களுக்கு மாற்று என அவர் கருதவில்லை. ஆனால் அதுவே தன்னளவில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்_இராணுவ முன்னணி என்றார். ஒவ்வொரு அரசியல் இராணுவப் புரட்சி மையங்களும் மார்க்சீய லெனினிய கட்சியாகத் தகுதி அடையாது என்ற போதிலும் ஆயுதப் புரட்சி மூலம் தனது தகுதியை வென்றெடுத்தால் ஒழிய எந்தவொரு கட்சியும் முன்னணிப்படை (vanguard) ஆகாது எனவும் கருதினார்.

தேசீய விடுதலை என்கிற கட்டத்தினைக் கடக்கு முன்னரே மக்களின் முன்னணிப்படையாக ஆக முடியும் என்றால் அந்தக் கட்சி சோஷலிசத்தைக்கட்டும் பணியை எதிர்கொள்ளும்போது அதிக தீவிரத்துடனும் மக்கள் மத்தியில் அதிக மதிப்போடும் இருக்கும் எனச் சொன்னார். அத்தகைய சந்தர்ப்பத்தில் முன்னணிக் கட்சியானது போரின் மூலம் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திடமிருந்தும் எகாதிபத்தியத்திடமிருந்தும் மக்களை விடுவிக்கும் வரலாற்றுக்.கடமையை நிறைவேற்றி இருக்கும், பழைய சமூக அமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு புதிய சமூக அமைப்பை உருவாக்கி இருக்கும்” என்றார்.

எப்படி புரட்சிகர மையத்தை மார்க்சீய லெனினிய கட்சியுடன் இணைப்பது என்பது குறித்து வாங்குயின் ஜியாப்பின் மக்கள் யுத்தம் -மக்கள் ராணுவம் (Genaral Vonguyen Giap’s - People’s war- People’s Army) என்ற நூலின் கியூப மொழிப்பதிப்பிற்கான தனது முன்னுரையில் கோடிகாட்டுகிறார். வியத்நாமிய முன்மாதிரியில் கொரில்லாக்களும் மக்கள் படையும் ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கி வழிகாட்டும் மார்க்சீய லெனினிய கட்சியின் முஷ்டிகளாக இருந்தன. புரட்சிகரப் படையானது ஆயுதந்தாங்கிய மக்கள் திரளை மட்டுமல்ல, ஆயுதந்தாங்கிய கட்சியையும் கொண்டிருந்தது. வியத்நாமிய முன் மாதிரியானது கியூபாவை விட அனைத்தும் உள்ளடக்கியதாக இருந்தது.ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது.

மார்க்சீய லெனினிய கட்சியின் சரியான வரலாறு பற்றிய அவரது கோட்பாடு ‘கட்சியைக் கட்டுவது பற்றி ‘ (1963) என்ற அவரது கட்டுரையில் தரப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் அவர் மார்க்சீய லெனினிய கட்சியின் இரண்டு பிரதான கடமைகளாவன அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதும் வளர்த்தெடுப்பதும் என வரையறுத்து உள்ளார். இந்தத் தத்துவம் ‘சோஷலிசமும் கியூப மனிதனும்’ (1963)என்ற கட்டுரையில் மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் கம்யூனிசத்தைக் கட்டுவதற்கு பொருளாதார அடிப்படையோடு கூடவே ஒரு புதிய வகையிலான மனிதனும் உருவாக்கப்பட வேண்டும் என்றார். இவை ஒரே சமயத்தில்-இணையானவயாக உருவாக்கப்பட வேண்டும்.. கியூபாவின் பொருளாதார கலாச்சாரப் புரட்சியின் பின் விளைவாக அல்ல என்றார். இந்தக் கொள்கையானது கிளர்ச்சி மையங்கள் பற்றிய அவரது முதல் நிலைப்பாட்டுக்கு நெருக்கமான ஒப்புமை கொண்டுள்ளது. இவ்வாறாக ஒரு முறையான ராணுவத்தை முறியடிக்க புரட்சிகரக்கட்சி அவசியம் இல்லையென்றபோதிலும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளைக் கடந்து செல்ல கட்சி அவசியம் ஆகிறது.

அதே சொற்பொழிவில்தான் கம்யூனிசத்துக்கான மாற்றத்தைத் துவக்குவதில் கட்சியின் மூன்னணியானது பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருக்க அவசியம் இல்லையென்று சொன்னார். போதுமான அளவு குறைந்த பட்ச வளர்ச்சி இருக்கும் போது புறவயமான நிலைகள் தூண்டிவிடப்பட முடியும் எனவும், அவர் ‘கிரியா ஊக்கிகள்’ என அழைத்த செயற்பாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கான கால அவகாசம் குறைக்கப்பட முடியும் எனவும் சொன்னார். இந்த வழியில் சோஷலிசத்தை உறுதிப்படுத்துமுன் இடையிடையே வரும் கட்டங்களைத் தவிர்த்து கம்யூனிசத்துக்கான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றார்.

சோஷலிசமும் கம்யூனிசமும் அடிநாதமாக உறையும் எதிர் நிலைகளின் விளைவு மட்டுமல்ல, கட்சியின் முன்னணி, சமூக மாற்றத்தை வழிகாட்டி ஊக்குவித்தலின் விளைவும் ஆகும் என்றார். ‘மார்க்சீய லெனினியக் கட்சி ’ என்ற நூலின் குறிப்புகளில் சே- குறிப்பிடுவது போல; புறவயமான அகவயமான எல்லா நிலைகளும் கூடிவரும் வரை புதிய சமூக அமைப்பினைக் கட்டுமானம் செய்யக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் முன்னணிப்படை இவற்றை உருவாக்க முடியும் என்றார். கிளர்ச்சி மையங்கள் பற்றிய சேயின் பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் ஒரு வெளிப்படையான ஒப்புமை இருக்கிறது. கட்சியின் முன்னணித் தத்துவம் வேண்டுமென்றே பின்னதன் மேல் முன்மாதிரிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் கிளர்ச்சி மையம் என்பது மார்க்சீய லெனினிய கட்சி அரசியல் கருவின் சிந்தனை ஆகும்.

அத்தகையதொரு கட்சியின் கவர்ச்சி பொருத்தப்பாடு உழவர்களைவிட திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத்துக்கானது. இந்த வெளிச்சத்தில் பார்த்தால் சேயின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதற்குறிப்பு ‘கட்சி கட்டுதல்’ பற்றிய அவரது கட்டுரையில் வெளிவந்தது குறிப்பிடத் தகுந்தது. போக்கோ புரட்சி மையம் புரட்சிக்கான எழுச்சியில் அரசியல் முன்னணிப்படையாகத் தொண்டாற்றியது என்பதுடன் நிலச்சீர்திருத்தத்துக்கும் பிரதான முகவராகச் செயல்பட்டது. சோஷலிசக் கட்டுமானத்தின் போது முன்னணிப்படையாகச் செயல்பட்ட கட்சியானது கியூபாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் முகவராகச் செயல்பட்டது.

‘பாட்டாளி வர்க்கமும் கியூபாவின் தொழில்மயமாதலும் (1960)’ என்ற கட்டுரையில் சே- குறிப்பிடுவது போல் : முந்தைய புரட்சிகர நோக்கமான நிலச்சீர்திருத்தத்தின் மூலமாக உழவர்களைத் திரட்டுவது என்பது பின்னர் கட்டுமான கட்டத்தில் தொழில்மயமாக்கலின் மூலம் தொழிலாளரைத் திரட்டுவது என மாற்றம் பெற்றது. புரட்சிகர மையம் பற்றிய சே - யின் மூன்றாவது பொதுமைப்படுத்தலுக்கும் இதற்கும் வெளிப்படையான ஒப்புமை இருக்கின்றது. புரட்சிகர மையத்தின் இலட்சியத்தின் உச்சம் கிராமப்புரம் எனின் கட்சியின் பிரதான குவிமையம் நகரத்தில் இருக்கிறது.

சே-யின்பிரதான பொருளாதாரக் கட்டுரைகளில் கட்சியின் முன்னணிப் படையுடைய திட்டவட்டமான கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன என்பதுடன் ‘சோஷலிசத்திட்டமிடலும் அதன் முக்கியத்துவமும்’ (ஜூன் 1964) என்ற கட்டுரையில் சுருக்கித் தரப்பட்டுள்ளது .சர்வதேச முதலாளித்துவத்தின் புறவயமான பிணைப்புகள் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மிகவும் பலவீனமாக உள்ளன. அங்கு நிலவும் ஏகாதிபத்தியத்தின் அகவயமான பவீனமான கன்னிகளை உடைத்தெரிய , பாட்டாளி வர்க்கத்துக்கு உதவுவதாக அமைந்துள்ளன என்கிற லெனினியக் கோட்பாட்டினை இந்தக் கட்டுரை மறு உறுதி செய்கிறது. பொருளாதார சார்பு நிலையைக் கடந்து செல்வதில் சே- பரிந்துரைக்கும் போர்த்தந்திரம், தொழில் நுட்ப பொருளாதார அடிப்படையை நிர்மானிப்பதும் புதிய மனிதனை உருவாக்குவதும் இணையானதும் உடனடியானதும் என்பது ஆகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏகாதிபத்தியத்தால் காலனியாக்கப்பட்ட தனக்கென சொந்த தொழில் ஏதுமில்லாத தனிப்பட்டதொரு சந்தையை நம்பியிருக்கும் நாட்டில் சோஷலிசத்தைக் கட்டுமானம் செய்வது எப்படி என்ற கேள்விக்கு இது தான் விடையாகும்.

வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குப் பொருத்தமான சோஷலிசத் திட்டமிடலின் நிதி ஒதுக்கீட்டு மாதிரி அதே தலைப்பிலான அவரது கட்டுரையில் கோடிகாட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்கான இந்த மாதிரியானது ஸ்டாலினிய _ ஸ்டாலினிய சித்தாந்தத்துக்குப் பிறகான திட்டங்களப் புறமொதுக்கி மார்க்ஸின் ‘கோதா வேலைத்திட்டம் பற்றி ‘ (மே 1878) என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்டதும் , லெனினின் ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலில் மறு உறுதி செய்யப்பட்டதுமான மாதிரியைப் பின் பற்றுகிறது. சோவியத் நாட்டில் முதலாளித்துவ பொருளாதார செயல்பாட்டிற்கு பணிபுரியும் தனிச்சொத்துடைமை, தனிப்பட்ட முறையில் லாபம் , டிவிடெண்டுகள் வட்டி வாடகை ஆகியவற்றை ஒழித்ததன் மூலம் கடந்து செல்லப்பட்டன என சே- வாதிட்டார்.

இவை சோஷலிசத்துக்கு ஏற்புடையன ஆனால் சந்தை உறவுகளைக் கடந்து கம்யூனிசத்துக்கு மாறுவதான நிபந்தனை என்பதற்குக் குறைவானவை எனவும் வாதிட்டார். ஏற்கனவே சொல்லப்பட்ட கோதா வேலைத்திட்டம் பற்றிய கட்டுரையில், கம்யூனிசத்தின் அடிமட்ட கட்டத்திலேயே சந்தை உறவுகளையும், தரப்படுத்தப்பட்ட மனித உழைப்புக் காலத்தின் அடிப்படையில் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் செலுத்தும் சந்தை உறவுகளையும் பணத்தின் பாத்திரத்தையும் அகற்றி விடுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் முன்கூட்டியே வரவு செலவு திட்டமிடல் என்பது உற்பத்தி உறவுகளை முதலாளித்துவத்துவ இருந்து கம்யூனிச முறைக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது..அதே வேளையில் சே- யின் கோட்பாடான விருப்ப (தன்னார்வ) உழைப்பு என்பதோ முதலாளித்துவ மனித உறவுகளை கம்யூனிச மனித உறவுகளாய் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1964 இல் அவர் ஆற்றிய உறையில் விருப்ப உழைப்பின் நோக்கத்தில் பலவிதமான வெளிப்பாடுகள் உண்டு எனவும், முதலாவதாக சலிப்பான வேலைச்சுமையை சமூகப்பங்கேற்பான புரட்சிகரமான கடமையாய் மாற்றுவது., இரண்டாவதாக மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வித்தியாசங்களைக் கடந்து செல்வது, மூன்றாவதாக செலவினம்/உற்பத்தி செலவு பற்றிய அக்கறை உள்ள மக்களுக்கு உழைப்பின் மதிப்பு தெரியுமாதலால் வீண் சேதாரங்களைக் குறைப்பது, விருப்ப உழைப்பு என்பது. கம்யூனிச சமுதாயத்தில் எந்த பொருளாதார ஆதாயத்தையும் (ஊக்கத்தொகை) எதிர்பாராமல் அல்லது பொருளாதார சலுகைகளை மிகையாகப் பெறாமல் செலுத்தப்படும் உழைப்பு எனவும் சொன்னார். ஒன்றிணைந்த பொருளாதார மற்றும் கல்விப்பணிகள் சே-யின் ‘ திட்டமிட்ட வரவு செலவு வாயிலாக நிதி ஒதுக்குதல் மற்றும் விருப்ப(தன்னார்வ) உழைப்பு வழங்குதல் இவற்றின் மூலம் கட்சியின் முன்னணிப்படையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

கட்சி முன்னணிப்படையின் பொருளாதார மற்றும் கல்வி புகட்டும் பணிகள், விருப்ப (தன்னார்வ) உழைப்பு மற்றும் நிதி ஒதுக்கலில் வரவு செலவினை முன்கூட்டியே திட்டமிடல் என்ற சே-யின் வழிகாட்டலின்படி நிறைவேற்றப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் செலவினங்களைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குதல் என்றபோதிலும் அது பொருளாதார ஊக்கத்தொகையின் பரப்பு எல்லையைக் குறைத்து புதிய மனிதனுக்கு கல்வி புகட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. விருப்ப (தன்னார்வ) உழைப்புத் திட்டம் புதிய மனிதனுக்குக் கல்வி புகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் நோக்கம் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதாக இருந்தது. வளர்ச்சிக்குறைவை சமாளிக்கும் இந்த இரு எதிர் வினைகளும், கியூப புரட்சியினுள் குவேராயிசத்தை தெளிவாக வரையறுக்கும் நீரோட்டமாக இருந்ததுடன் ஒருகாலகட்டத்தில் பிடலின் ஆதரவையும் பெற்றிருந்தது. இருந்த போதிலும் 70-களில், வரவு செலவைத்திட்டமிடல் கைவிடப்பட்டு பொருளாயத ஊக்கச் சலுகைகளை அதிகரித்ததானது, பிற்பாடு கியூபப்புரட்சி தனக்கென சொந்த வழியை வகுத்துக் கொண்டதைக் காட்டுகிறது.

ஆங்கில மூலம் DONALD C. HEDGES - LEGACY OF CHE GUEVARA

தமிழாக்கம் : புதுவை ஞானம். - புதுவை ஞானம்

(குறிப்பு: இந்த மொழிபெயற்பு மறைந்த தோழர். திருவொற்றியூர் இராகவன் அவர்களது விருப்பத்தை நிறைவேற்று முகத்தான் செய்யப்பட்டது. இதன் முற்பகுதி அதாவது ‘கிளர்ச்சிக்கு முந்தைய கட்டம்’ - திண்ணை இணைய தளத்தில் www.thinnai.com வெளியிடப்பட்டது. அடுத்த பகுதி இப்போது வெளியாகிறது. ஒரு விபத்து - தலையில் நடந்த அறுவைச் சிகிச்சை அதன் பின் விளைவுகள் எனது மொழியாக்கப் பணியைத் தடுத்து விட்ட போதிலும் இனி முடிந்தவரை தொடருவேன்.)

Pin It