“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”

savitribai phuleஇந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம். இதனை 19 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் சாவித்ரி பாய் பூலே.

ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.

‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என  குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.

அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14.

சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.

சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.

கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று  எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.

அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை  தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.

இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும்  உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

 கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து  போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது. இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட  பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில்  புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.

- சுதேசி தோழன்

Pin It