நம்முடைய தலைமுறையிலே வாழ்ந்த, 20 ஆம் நூற்றாண்டிலே நாம் அறிந்த மாமேதைகளில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். 1956 ஆவது ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் மறைந்து நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனால் அவருடைய புகழும், அவருடைய அறிவுத் திறனும் ஏறத்தாழ 1990-க்குப் பிறகுதான் மிக அழுத்தமாக வெளிப்பட்டது என்று சொல்ல வேண்டும்.

ambedkar_2411989-இல் அவருடைய நூற்றாண்டு வந்தது. அப்போதுதான் அவரைப்பற்றிய நூல்கள், விவாதங்கள் எல்லாம் அரங்கிற்கு வந்தன. அவர் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடி வாழ்ந்தார். தன்னுடைய தூக்கத்தைத் தொலைத்து தன் மக்களுக்காகப் படித்து வந்த ஒரு மாமேதை அவர். அவருடைய படிப்பு என்பது மிகுந்த வியப்புக்குரியது. படிப்பிலே அப்படி என்ன வியப்பு என்று கேட்டால், படிக்கவே கூடாது என்று ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு வைரம், உலகமே வியக்கும் அளவுக்குப் படித்து முடித்திருக்கிறார் என்றால் அந்தப் படிப்பு என்பது வியப்புக்குரியதுதானே.

வெளிநாடுகளுக்குப் போய்த் திரும்புகிறபோது, கப்பலில் பெட்டி பெட்டியாக அவருக்குப் பின்னால் அவர் வாங்கி வந்த பொருள்கள் இறங்கின. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை பெட்டிகளா? என்னென்ன பொருள்களையெல்லாம் வாங்கி வந்திருப்பார் என்று பார்த்தால் ஒரு பெட்டியில் அவருடைய துணிகள் இருந்தன. அந்த ஒரே ஒரு பெட்டியைத் தவிர மற்ற அத்தனை பெட்டிகளும் புத்தகங்களாகவே இருந்தன என்பது நமக்கு இப்போதும் ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது. லண்டலில் இருக்கிற நூலகத்திலே மிகுதியாகப் படித்தவர்கள், மிகுதியான நேரத்தைச் செலவிட்டவர்கள் என்று இரண்டு பேரைத்தான் சொல்கிறார்கள். ஒருவர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் அம்பேத்கர்.

உலகமே வியக்கிற அளவுக்கு ஏராளமாகப் படித்த பெருமகன் அவர். சாதி ஒழிப்பு (Anihilation of caste) என்று அவர் எழுதியிருக்கிற அந்தப் புத்தகம் இன்றைக்கும் கூட பல்வேறு புதிய சிந்தனைகளை, அழுத்தமான எண்ணங்களை நம்மிடத்திலே உருவாக்குகிறது. சாதியைப் பற்றிய மிக விரிவான ஆய்வை அவர்தான் மேற்கொண்டார். அதைத் தந்தை பெரியார் அவர்கள் தான் சாதி ஒழிப்பு என்கிற பெயரில் முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து குடியரசு பதிப்பகத்தின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கரும் தந்தை பெரியாரும் காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்புடையவர்களாகவும், ஒருவரையொருவர் பின்பற்றக்கூடியவர்களாகவும், பாராட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். தந்தை பெரியார் யாரையும் தன்னுடைய தலைவர் என்று சொல்லவில்லை. நான்தான் தலைவர் என்று சொல்லுவார். ஆனால் அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களே 1967-ஆவது ஆண்டு மயிலாடுதுறையிலே நடைபெற்ற ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று சொன்னார். அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவராகத் தந்தை பெரியார் இருந்தார். அதைப்போலவே மிசோராம் மாநிலத்திலே ஆளுநராக இருந்த பத்மநாபன் அவர்கள் தன்னுடைய நூலிலே ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார். அம்பேத்கரை, 1944-ஆவது ஆண்டு சென்னைக்கு வந்திருந்தபோது அன்று கல்லூரி மாணவராக இருந்த பத்மநாபன் உள்பட ஏராளமான இளைஞர்கள் சந்திக்கிறார்கள். நாங்கள் உங்களைப் பின்பற்றி இங்கே ஓர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டபோது அம்பேத்கர் சொன்னாராம், மற்ற மாநிலங்களில் எல்லாம் இளைஞர்கள் வருகிறபோது அதை நான் ஏற்றுக் கொண்டு அவர்களை இயக்க நெறிகளிலே வழிப்படுத்துகிறேன். ஆனால் தமிழ்நாட்டிலே அதற்குத் தேவையில்லை. ஏற்கனவே இங்கே இருக்கிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் நான் என்ன காரியங்கள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ, எதைச் சொல்கிறேனோ அதைத்தான் அவரும் செய்து கொண்டிருக்கிறார். எனவே நீங்கள் என்னைத் தேடி வரவேண்டியதில்லை. ராமசாமி நாயக்கரைப் பின்பற்றினாலே போதும் என்று சொன்னார் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இரண்டு பேரும் ஒருவரையொருவர் பின்பற்றுவதற்கான காரணம் வேறொன்றுமில்லை. இரண்டுபேருமே சமூக நீதிப் போராளிகளாக இருந்தார்கள் என்பதுதான். ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு உள்ள சமூகமாக இருக்கிறது. அது தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, இந்தியச் சமூகமாக இருந்தாலும் சரி, .இன்றைக்கு இந்தச் சமூகம் ஒரு சாதியச் சமூகமாக இருக்கிறது. சாதியம் என்றால் ஏற்றத்தாழ்வுகளைத் தன்னோடு வைத்திருப்பது என்று பொருள் அதுதான் சாதி.

ஏற்றத்தாழ்வுகளை நீக்கிச் சமப்படுத்துவது என்பதுதான், இந்தச் சமூகத்தைச் சமப்படுத்துகிற முயற்சிதான் சமூக நீதி. அந்தச் சமூக நீதிக்காகத்தான் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பெரியாரும், அம்பேத்கரும் கழித்தார்கள் என்று சொல்லவேண்டும்.

ஒருமுறை அம்பேத்கர் வீட்டிலே முகச்சவரம் செய்து கொண்டிருக்கிற போது, பக்கத்திலே நின்று கொண்டிருந்த ஒரு நண்பர், அண்ணலைப் பார்த்துக் கேட்கிறார். “மிக மென்மையான மனிதர் நீங்கள்.. மிகுந்த அறிவாளி நீங்கள்... ஆனால் சில இடங்களில் சில ஆதிக்கக் கோட்பாடுகளை, ஆதிக்கப் பிரிவினைரை எதிர்த்துப் பேசுகிறபோது, மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறீர்களே, மிகக் கடுமையாகத் தாக்கித் தகர்க்க முயற்சிக்கிறீர்களே... என்ன காரணம்” என்று கேட்டபோது, அம்பேத்கர் சொன்னார், “சில வேளைகளில் நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமோ அதைத்தான் பயன்படுத்த வேண்டும். முகச்சவரம் செய்து கொள்ள இந்தக் கத்தி போதுமானதாக இருக்கிறது. எனது முகத்திலிருகிற முடியை மழிப்பதற்கு இந்தக் கத்தி போதுமானதாக இருக்கிறது என்ற காரணத்தினாலே நாளைக்கு என் தோட்டத்திலே ஒரு நச்சு மரம் வளருமானால், அதை இந்தக் கத்தியை வைத்துக்கொண்டே சாய்த்து விடலாம் என்று கருத முடியுமா? அதைக் கோடரி கொண்டுதான் வெட்டட முடியும். எனவே இதற்கு இதுபோதும் அதற்கு அது வேண்டும். சில நேரங்களில் அழுத்தமாக வேரூன்றியிருக்கிற ஆதிக்கக் குணங்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிறபோது நான் மிகக் கடுமையான சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது” என்று அம்பேத்கர் சொன்னார். ஆகையினாலே அவர் சில இடங்களில் ஒடுக்கபட்ட மக்களிடம் மிக மென்மையாக இருந்தார். ஆதிக்கச் சக்தியிடத்திலே மிக வன்மையானவராக இருந்தார்.

அவர் ஒருமுறை இரவெல்லாம் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறபோது, செய்தியாளர்கள் அவரைப் பார்த்துக் கேட்கிறார்கள், அண்ணல் காந்தியடிகளை நாங்கள் பார்க்கச் சென்றிருந்தோம். அவரும் கடுமையாக உழைக்கக்கூடிய மனிதர். ஆனால் அவர்கூட இந்த நேரத்திலே உறங்கி விட்டார். நீங்கள் இன்னமும் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது அம்பேத்கர் சொன்னார், அது ஒன்றும் பிழை இல்லை. அவருடைய மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர் உறங்கலாம். என்னுடைய மக்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், எனவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவிலேயெ மிகப்பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்தவர். இநத்தியாவில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவினுடைய தலைவர். ஆனால் அம்பேத்கரின் பெருமை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் இல்லை. இந்தச் சாதிய சமூக அமைப்பை எதிர்த்துப் போராடி, சமூகத்தை சமதளத்திலே கொண்டுவர முயற்சித்த அந்தச் சமூகநீதிப் போராட்டத்திலே தானிருக்கிறது.

(ஒன்றே சொல் நன்றே சொல் நூலிலிருந்து)

Pin It