மகாத்மா காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதர்களுக்கு என அழைப்பு விடுத்தார்! ஆம் பெண்களும் அதிக அளவில் கள்ளுக்கடை மறியல் , அன்னியத் துணிக் கடைகள் முன்பு மறியல், நூல் நூற்றல் வேள்வி, முதலியவற்றில் ஈடுபட வேண்டுமென்று, ‘யங் இந்தியா'இதழ் மூலம் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பு வெளியாகு முன்னரே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ‘பெண் போராளி’ ருக்மணி லட்சுமிபதி !

rukmani lakshmipathyசீனிவாசராவ் -சூடாமணி தம்பதியினருக்கு , மகளாக ருக்மணி 06.12.11892 ஆம் நாள் பிறந்தார். அக்காலத்தில் பால்ய விவாகம் எனும் குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ருக்மணியின் தந்தையும் தமது மகளுக்கு பால்ய விவாகம் செய்திட மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, வீரேசலிங்கம் பந்தலு, ருக்மணியின் தந்தையிடம் பால்ய விவாகத்தினால் ஏற்படும் சமூகத்தீமைகளை எடுத்துக் கூறியதுடன். ருக்மணியை, தமது மருமகள் ராஜாமணியுடன் பள்ளிக்கு அனுப்பினார். இதனால் இவருடைய உறவினர்கள் இவரது குடும்பத்தை 'ஒதுக்கி' வைத்தனர்!

பின்னாளில் , ருக்மணி லட்சுமிபதி விடுதலைப் போராட்ட வீராங்கனையாக உருவாவதற்கு அடித்தளமிட்டவர் வீரேசலிங்கம் பந்தலு என்பது குறிப்பிடத்தக்கது.

ருக்மணி நோய்வாய்பட்டிருந்த போது, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் லட்சுமிபதிக்கும், ருக்மணிக்கும் காதல் உருவானது. இவர்களது காதலுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்து 1911 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். டாக்டர் லட்சுமிபதி , தமது மனைவி ருக்மணியின் விருப்பப்படி கல்லூரியில் சேர்த்தார்.

ருக்மணி-லட்சுமிபதி தம்பதியினரின் காதல் திருமணம் ஏற்படுத்திய பரபரப்பின் விளைவாகத் தெலுங்குக் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். கோதாவரியைச் சேர்ந்த சத்தியநாராய கவி என்பவர் ‘ருக்மணி சுயம்வரம்’ என்கிற நவீன நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், குழந்தை பிறந்ததால் மருத்துவப் படிப்பு பயில இயலவில்லை.

ருக்மணி இந்திய விடுதலையில் நாட்டம் கொண்டார். தாமும், தமது குழந்தைகளும், கணவரும் கதராடையே அணிந்தனர். இவரது மகள் இந்திரா. மகள் இந்திராவை நரம்பியல் நிபுணர் டார்டர் ராமமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்.

மார்க்ரெட் சமிகாதிரிகள் ராதாபாய் சுப்பராயன், கமலாபாய் சட்டோபாத்தியாயா முதலியவர்களுடன் இணைந்து சமூகத் தொண்டில் ஈடுபட்டார். இவர்கள் இணைந்து அமைத்த 'பாரதி மகளிர் மகா மண்டல்' எனும் அமைப்பின் சென்னைக் கிளையின் செயலாராக ருக்மிணி பணியாற்றினார்.

சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் ருக்மணி, முற்போக்கு எண்ணங்கள் கொண்டவராகத் திகழ்ந்தார். இஸ்லாமியப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். குடிகாரக் கணவன்மார்களால் பெண்களுக்கு விளையும் தொல்லைகள் இவரது மனதை பெரிதும் பாதித்தது. இதனால், மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ருக்மணி ஈடுபட்டார். கடவுளின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுள் ஒன்றான 'தேவதாசி' முறைக்கு எதிராக பரப்புரைகளில் ஈடுபட்டார். மேலும், பால்யத் திருமணம் ஓழிக்கப்பட வேண்டும். பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடினார். சாதிவேறுபாடுகளை ஓழிப்பதிலும் முன்னின்று செயல்பட்டார்.

பாரீசில் நடைபெற்ற அனைத்துலகப் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் ருக்மணி !

“நாட்டுப்பணி என்பது நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருதல் மட்டுமன்று ; நாட்டு மக்களுடைய மேம்பாட்டுக்கும் பாடுபடுவதாகும்" என்பதை மனதில் கொண்டு செயல்பட்டார்.

வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவர் உப்புக் குவியலின் மீது படுத்துக் கொண்டு இம்மியளவு கூட அசையாமல் செய்த அறப்போர் அனைவரையும் வியப்படையச் செய்தது. உப்புச் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணி ருக்மணியே!

மேலும், ருக்மணி அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்த்திலும் கலந்து கொண்டு சிறைத்தண்டனையும் பெற்றார். அபராதமும் செலுத்தினார்.

காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டு சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, ருக்மணி தமது நகைகளை அரிசன சேவா நிதிக்காகக் காந்தியடிகள் ஆச்சரியத்தில் மூழ்கினார்!

ருக்மணி, சென்னை, மகாஐன சபைக்குத் துணைத் தலைவராக 1934 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்துக்கு 1936 ஆம் ஆண்டு தலைவராக விளங்கினார். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக 1937 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி, ருக்மணி ‘முதல்பெண்மணி’ என்று போற்றத்தக்க பல பதவிகள் வகித்து சிறப்பாகப் பணியாற்றினார்.

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இவர் செயலாற்றிய போது நகர சுத்தித் தொழிலாளர்கள் அடிக்கடி காலதாமதமாக வருவதைக் கவனித்தார். ஒரு நாள் நீண்ட தென்னந்துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தாமே துப்புரவு பணியில் இறங்கிவிட்டார். இதையறிந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் . ருக்மணி அம்மையாரிடம் மன்னிப்புக் கோரியதுடன், அன்றிலிருந்தே நேரந்தவறாமல் பணிக்கு வந்தனர்.

ஐப்பானுக்கு , 1938 ஆம் ஆண்டு சென்ற அமைதிக் குழுவில் ருக்மணியும் இடம் பெற்றிருந்தார். தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் 1940 ஆம் ஆண்டு கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டங்குமூரி பிரகாசம் தலைமையில் 1946 ஆம் ஆண்டு அமைந்த சென்னை ராஜதானியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்தப் பதவியையும் முதல் முதலாக வகித்த பெண்மணி ருக்மணியே ஆவார்!

அரசின் உயர் பதிவிகளில் வெள்ளையர்களையே அமர்த்துவது என்பது கர்ஸன் பிரபு காலத்திலிருந்தே நிலவி வந்தது. ருக்மணி, அமைச்சராக பதவியேற்றதும் இந்திய அரசுப்பணிகளில் , இந்தியர்கள் தான் பணி அமர்த்தப்படவேண்டுமென்பதைக் காங்கிரசின் கொள்கையாக மாற்றினார். மேலும், சர்ஜன் ஜெனரலாக இருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் இந்தியர் ஒருவரை நியமித்தார். இப்பிரச்கனையில், இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தத சென்னையே!

சென்னை ராஜதானி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ‘ராகுகாலம்’ பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, ருக்மணி, "ராகுகாலமாவது . கேதுகாலமாவது? எது வந்தால் என்ன? அது தான் நம் நாட்டையே சனியனே பிடித்திருக்கிறதே! அப்புறமென்ன?" என்று கூறி அனைவரையும் நகைக்க வைத்தார் ருக்மணி!

'முதல் பெண்மணி' என்கிற பட்டத்துக்குரிய பதவிகளை நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே பெற்ற பெருமைக்குரியவர் ருக்மணி! விடுதலைப் போரின் போது இந்தியாவின் பல்வேறு சமூக இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் தோன்றி வளர்ந்தன. இவ்வியக்கங்களுடனும் ருக்மணி தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

ஐவஹர்லால் நேரு வேண்டு கோளுக்கிணங்க ருக்மணி லட்சுமிபதி தமிழகத்தில் 'வானரப்படை' என்றழைக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசபக்த அமைப்பை 1931 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கினார்.

பெண்விடுதலைப் போராளியாக விளங்கி, இந்திய நாட்டுப் பெண் விடுதலைக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ருக்மணி லட்சுமிபதி 07-08-1951 அம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தொண்டும், தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் !

- பி.தயாளன்

Pin It