இயற்கையைக் காக்க பூமியின் 1.2% நிலப்பரப்பை பாதுகாத்தால் போதும். இதன் மூலம் உலகின் அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. நிலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட நிலங்களை இலக்குடன் விரிவடையச் செய்தால் பூமியில் இருந்து முற்றிலும் மறையும் அபாயத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், இரு வாழ்விகள், தாவரங்களை அழியாமல் பாதுகாக்கலாம்.
அர்ஜெண்டினா முதல் பாப்புவா நியூ கினி வரை உள்ள 16,825 இடங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர். வேறெங்கும் காணப்படாத தாவரங்கள், விலங்குகள் வாழும் இந்த இடங்களை வரும் ஐந்தாண்டுகளில் திட்டமிட்டு பாதுகாத்தால் அவை அழிவதில் இருந்து அவற்றை மீட்கலாம். “வட அமெரிக்காவில் உள்ள சிவாவன் பாலைவனத்தில் காணப்படும் பேயோடு கேப்டஸ் (peyote cactus) என்ற பூக்கும் தாவரம் வாழிடம் சுருங்கிய நிலையில் வாழ்கிறது. வாழிடப் பரப்பின் குறைவு, அல்லது எண்ணிக்கை குறைவு போன்றவற்றால் பூமியில் இன்று காணப்படும் பெரும்பாலான உயிரினங்களும் மிக அரிதானவையே” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் ரிசால்வ் (Resolve) என்ற சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளருமான டாக்டர் எரிக் டைனஸ்ட்டைன் (Dr Eric Dinerstein) கூறுகிறார்.
இயற்கையின் எல்லா அம்சங்களையும் மனிதர்கள் பாதுகாக்க வேண்டியதில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் சூழல் மண்டலங்களை மேலாண்மை செய்தல், உயிர் பன்மயத் தன்மையை அழியாமல் காப்பது மனிதன் வாழ இன்றியமையாதது. இது பூமியில் உள்ள பாதி நிலப்பகுதியை பாதுகாத்தால் உயிர் பன்மயத்தன்மை அழிவை தடுத்து நிறுத்தலாம். பூமி மீண்டும் வளம் பெறும்.
கார்பன் சேமிப்பு அதிகமாகும் என்று 2020ல் நடந்த ஆய்வுகள் கூறின. இத்தகைய பகுதிகள் கண்டிப்பாக சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் (Conservation imperatives) என்று சூழலியலாளர்கள் அழைக்கின்றனர். இத்தகைய 38% இடங்கள் இப்போடுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட இடங்களின் விரிவாக்கம்
இவற்றில் பாதி பிலிப்பைன்ஸ், பிரேசில், இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் கொலம்பியாவில் உள்ளன என்று அந்த ஆய்வு கூறியது. உலகின் 16.6% நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர்வழிகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த பத்தாண்டிற்குள் இயற்கையின் அழிவை பெருமளவு குறைக்க முடியும் என்று ஐநா சூழல் அமைப்பு கூறுகிறது. 7% பாதுகாக்கப்பட்ட இடங்களை முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால் மிக ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் வாழிடம் அழிவில் இருந்து தப்பிக்கும்.
குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வரும் ஐந்தாண்டில் 29 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணித்துள்ளனர். இந்த இடங்களின் மொத்த பரப்பு 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர். நிலப்பகுதிகளை வாங்குதல், ஆதிவாசிகளின் உரிமைகளை விரிவாக்குதல், அரசுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாக்கப்பட்ட இடங்களை உருவாக்குதல் போன்ற பல கூட்டு நடவடிக்கைகள் மூலம் இந்த இலட்சியத்தை அடையலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செயற்கைக்கோள் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இரு வாழ்விகள், தாவரங்களின் உலகளாவிய தரவுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் வெப்ப மண்டல பகுதிகள், புல்வெளிப் பிரதேசங்கள், மித வெப்ப மண்டல பகுதிகள், அகண்ட இலையுள்ள மரக் காடுகள் மற்றும் துந்திரப் பகுதிகளில் உள்ளன.
“இந்த ஆய்வு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பற்றி அறிய பெரிதும் உதவும். 30% நிலப்பகுதியை பாதுகாத்தால் மட்டும் போதாது. அப்பகுதிகளின் தரம், இருக்கும் இடம் போன்றவையும் முக்கியமானது” என்று உலகளவில் பாதுகாக்கப்பட்ட இடங்களின் கண்காணிப்புக்கு பொறுப்பான ஐநா சூழல் திட்டத்தின் உலகளாவிய சூழல் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் நீல் பெர்ஜஸ் (Prof Neil Burgess) கூறுகிறார்.
நம்மை வாழ வைக்கும் உயிரினங்களை பாதுகாப்போம். பூமியை காப்போம். அதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்