பதப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகள், இறந்த உயிரினங்களின் உள்ளீடற்ற உடல் எச்சங்கள் போன்றவற்றால் நிறைந்த வழக்கமான அருங்காட்சியகங்கள் அமைதியுடன்தான் காணப்படும். ஆனால் இங்கு கதையே வேறு. பயப்படவேண்டாம்! செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றத்தால் இறந்த உயிரினங்கள் இங்கு புது வாழ்வு பெற்றுள்ளன.

அழிந்த உயிரினங்கள் பேசினால்?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அழிந்த உயிரினங்கள் புவி வாழ்வை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றன. அவை இறப்பிற்கு பிந்தைய வாழ்வின் அனுபவங்களை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. யு கே கேம்ம்ரிட்ஜ் பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் மொபைல் போன் மூலம் குரல் மற்றும் எழுத்து வடிவில் தங்கள் கதைகளை சொல்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால அமெரிக்க கரப்பான் பூச்சி, வேட்டையாடியே மனிதன் அழித்த டோடோ (Dodo) பறவை, பதப்படுத்தப்பட்ட சிவப்பு பாண்டா, ஒரு துடுப்பு திமிங்கலத்தின் எலும்புக்கூடு போன்றவை உயிர் பெற்றுள்ளன. தனிநபர் ஆளுமை மற்றும் இயல்பான உச்சரிப்புடன் கூடிய பேசும் பாணியில் அமைந்துள்ள இந்த உயிரினங்கள் மற்றும் அவற்றின் மாதிரிகள் எழுத்து மற்றும் உரையாடல் வடிவில் வருகையாளர்களின் மொபைல் போன் மூலம் பேசும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் பூமியில் வாழ்ந்த காலம், அப்போது அவை எதிர்கொண்ட சவால்கள், மக்களுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது இன்று நிலவும் அக்கறையின்மையை அகற்ற வலியுறுத்த வருகையாளர்களிடம் இங்குள்ள மாதிரிகள் கலந்துரையாடுகின்றன. “அருங்காட்சியகங்கள் இன்று பல வழிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

ஆனால் பொருட்களின் நிலையில் இருந்துகொண்டு காட்சிப்படுத்துபவர்கள் மூலம் அழிந்து போன விலங்குகள் தம் கருத்துக்களை வருகையாளர்களுடன் பேசவைப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்.

இவ்வகையான முதல் முயற்சி இது. உலகில் இன்று உயிருடன் இல்லாத விலங்குகளை அவற்றின் சொந்தக் குரலில் பேசவைத்தால் அவை குறித்து மக்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணங்களை மாற்றி அவை பற்றி வித்தியாசமாக சிந்திப்பார்களா?

ஒரு கரப்பான் பூச்சிக்கு குரல் கொடுத்து பேசச் சொன்னால் பொதுமக்களின் கருத்து மாறுமா? இதை பரிசோதிப்பதே இந்த சோதனை முயற்சியின் நோக்கம்” என்று அருங்காட்சியகத்தின் துணை இயக்குனர் ஜாக் ஆஷ்பி (Jack Ashby) கூறுகிறார். மக்களுக்கும் இயற்கை உலகிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை வலுப்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்கும் நேச்சர் பெர்ஸ்பெக்டிவ்ஸ் (Nature Perspectives) என்ற நிறுவனம் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது.

கேள்வி கேட்பது எப்படி?

காட்சிக்கூடத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு மாதிரியும் அந்த குறிப்பிட்ட உயிரினம் பற்றி இதுவரை கிடைத்துள்ள அணைத்து தரவுகளுடன் அது எங்கு வாழ்ந்தது, அதன் இயற்கைச் சூழல், அது எவ்வாறு காட்சிக்கூட சேகரத்திற்கு வந்துசேர்ந்தது போன்றவை அடங்கிய எல்லா விவரங்களையும் அழிந்து போன அந்த உயிரினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பம் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. பேசுபவர்களின் வயதுக்கேற்ப காட்சிப் பொருட்கள் தங்கள் குரல் மற்றும் பேசும் பாணியை மாற்றிக் கொள்கின்றன.

இந்த காட்சிப்பொருட்கள் ஸ்பானிய மொழி, ஜப்பானிய மொழி உட்பட இருபது உலக மொழிகளில் பேசும் திறன் பெற்றவை. அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு நீராளி ஆஸ்திரேலியாவில் மக்கள் பேசும் பாணியில் பேசுகிறது. சிவப்பு பாண்டா இமயமலை பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் பாணியில் உரையாடுகிறது. சிவப்பு தலை, கழுத்தைச் சுற்றி வளையத்துடன் நடுத்தர அல்லது பெரிய வடிவத்துடன் காணப்படும் மலார்டு (mallard) என்ற வாத்து பிரிட்டிஷ் மக்கள் பேசுவது போல பேசுகிறது.

இந்த உரையாடல்கள் உயிரோட்டத்துடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இவை பார்ப்பவர்களுக்கு வெறும் காட்சிப்பொருட்களாக தோன்றாது. வருகையாளர்கள் அவை பற்றி மேலும் ஆழமாக கற்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. விலங்கு மாதிரிகளுடன் பார்வையாளர்கள் நடத்தும் உரையாடல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் அவை பற்றி மக்கள் குறிப்பாக எதிர்பார்க்கும் விவரங்கள் சேர்க்கப்படும் என்று ஆஷ்பி கூறுகிறார்.

மாதிரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு துடுப்பு திமிங்கலத்திடம் “கரைக்கு அப்பால் உள்ள கடல்வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?” போன்ற வினாக்களை கேட்பதற்கு உதவும் வகையில் ஆலோசனை கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகையாளர்கள் காட்சிப் பொருட்களிடம் அவர்கள் விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்.

“இந்த விலங்குகளிடம் பேசும்போது நாம் ஒரு தனி நபர் ஆளுமையுடன் பேசுவது போன்ற வித்தியாசமான உணர்வும் அனுபவமும் ஏற்படும். “நீ எங்கு வாழ்ந்தாய்? எவ்வாறு அழிந்தாய்?” போன்ற கேள்விகளைக் கேட்கத் தொடங்கி ஆனால் கடைசியில் ஒரு மனிதனைப் போல வினாக்களை காட்சிப்பொருட்களிடம் கேட்க ஆரம்பித்தேன்” என்று ஆஷ்பி கூறுகிறார்.

டோடோவும் திமிங்கலமும் சொன்னது என்ன?

உலகில் உள்ள அழிந்த டோடோ பறவையின் ஒரு சில புதைபடிமங்களில் ஒன்று இந்த காட்சிக்கூடத்தில் உள்ளது. அதனிடம் “வழக்கமாக நீ என்ன சாப்பிடுவாய்?” என்று கேட்டபோது அது மொரீஷியஸில் கிடைக்கும் பழங்கள், வித்துகள் மற்றும் எப்போதேனும் சாப்பிடும் முதுகெலும்பற்ற இரைகள் பற்றி கூறியது.

டாம்பலாக்கோக் (tambalacoque) மரத்தின் கொட்டைகளை உடைக்கும் அளவிற்கு வலிமையுள்ள தன் கூர்மையான, வளைந்த அலகு பற்றி விவரித்தது. பார்வையாளர்களுக்கு க்ளோனிங் முறையில் அழிந்த உயிரினங்களை மனிதர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமா என்பது பற்றி கருத்து கூற உதவும் வகையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“டோடோ பறவையை மீட்க வேண்டுமென்றால் அதற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள், நம் டி என் ஏ ஆகியவை மட்டும் போதாது. இந்த உயிரினம் மொரீஷியஸில் வாழ்ந்த காலத்தில் நிலவிய சுற்றுப்புறச் சூழலும் அவசியம்” என்று தொழில்நுட்பம் பதில் கூறியது. மரபணு குறியீடுகளுக்கு அப்பால் எந்த ஒரு உயிரினத்தின் வாழ்வும் அதன் சிக்கலான இயற்கைச் சூழலுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற உறுதியான உண்மையையே இது வலியுறுத்துகிறது.

காட்சிக்கூடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள திமிங்கலத்தின் எலும்புக்கூட்டிடம், “வாழ்ந்த காலத்தில் நீ சந்தித்த மிகப் புகழ்பெற்ற மனிதர் யார்?” என்று கேட்டபோது “மனிதர்கள் பார்ப்பதைப் போல அப்போது நான் எவரையும் பார்க்கவில்லை. என்றாலும்” நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசிய அது “இங்கே எனக்கு கீழ் நிற்கும் எவர் ஒருவர் இயற்கையுலகின் மீது மதிப்பு மரியாதை அன்பை காட்டுகிறாரோ அவர் எனக்கு மிக நெருக்கமானவர்” என்று பதில் கூறியது!

அழிந்த உயிரினங்களை மீட்கும் பெருமுயற்சியில் வின்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில் இது போன்ற அருங்காட்சியகங்கள் உயிரினங்களை காக்க மனிதர்களுக்கு தேவையான உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/oct/14/ai-gives-voice-to-dead-animals-in-cambridge-exhibition?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.