கென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த சாதி’ என்றுகட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலைபார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் சாதியைக் கடைப்பிடிக் கிறார்கள் என்றுபுள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்த கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் 3-இல் இரண்டு பட்டியலின சாதியினர் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்; ஏனைய சாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும் கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் சாதி இந்துக்கள், சாதியை-தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார். நிறவேற்றுமை பிரச்சனையில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப் பிடிக்கும் “பாஸ்ஸிங் (passing)” என்று அழைக்கப்படும், மறைந்து வாழும் முறையையே, இங்கு வசிக்கும் பட்டியலின மக்களும் கடைப்பிடிக்கின்றனர்: அதாவது, சாதி இந்துக்களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் சாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள பட்டியலின மக்கள், சாதி இந்துக்களை விட அதிகம் படித்து இருந்தாலும் கூட ஒடுக்குமுறைக்கு தப்ப முடியவில்லை என்கிறார். ஒப்பீட்டளவில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் சாதி இந்துக்களைவிட, பட்டியலின மக்கள் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார் கென்னத்ஜே கூப்பர், இதுதான் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலும் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்து வந்தனர். அதைத் தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியா வில் அளிப்பது போல இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கச் சட்டத்தில் சாதியப் பாரபட்சம் குறித்தான வரையறையோ, அதற்கு எதிரான சட்டங்களோ இல்லை. ஆனால், இந்தியர்கள் தங்களின் சாதியப் பாகுபாட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு வந்துள்ளதால், அமெரிக்காவிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தின் அவசியத்தை இக்கட்டுரை மூலம் கென்னத் ஜே கூப்பர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

Pin It