அண்ணாவின் பகுத்தறிவு - பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனைகளின் தொகுப்பு இது. ஆழமான கேள்விக் கணைகளால் வைதீகத்தை அண்ணா எப்படி துளைத்தெடுத்திருக்கிறார் என்பதற்கு இந்த எழுத்துகளே சாட்சியங்கள்.

anna 326இலட்சார்ச்சனை : நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்க நாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி?

இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

...பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண் பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தை யும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?

‘திராவிட நாடு’ 5.3.1942

இந்து இட்லரிசம் : ...கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நம் தோழர்களின் ஆடையைக் கண்டீரோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சம் அன்றோ அது! ஏழை மக்களின் வயிற்றிலே சதா மூண்டிருக்கும் பசித் தீயை என்னென்று கூறுவது? அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாலான பஞ்சை மக்களின் உணவு, காற்று தானே பரதா! வாயுவின் வாஞ்சனை அல்லவோ அது! தரித்திரத்தில் புரளும் மக்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்தியட்சம் அல்லவோ அது! இதுபோல அந்த தேவாதிகள் காட்சி தருவதால்தான் நான் அந்தத் தேவாதிகளைக் குறை கூறாதீர் என்று உரைத்தேன் என்று முடித்தான் நக்கீரன்.

....பசிக்குதே பசிக்குதே என்று உரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார்...

...வினை, எழுத்து விதி, சோதனை இவை தூளாயின தெரியுமோ? சம்மட்டியும், அரிவாளும், ஆளும் ரஷ்ய நாட்டிலே, அன்று எழுதியதை இலெனின் அழித்து எழுதிக் காட்டினார். அவதியுற்றோரை வாழச் செய்தார், அருள்மொழியாலல்ல, தேவாலயம் சுற்றியல்ல, தம் தீரத்தால், வீரத்தால் நெஞ்சு உறுதியால்!

பாதிக்குதே பசி என்று உரைப் போரும் அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்தில் ஏறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே? ஆம்! வைதிகப் பீடத்திற்கு நீங்கள் இங்குப் பலியானீர்கள்! வாழ்வெனும் கடலைக் கடக்க மதமெனும் ஓடம் ஏறினீர்! பார்ப்பனியம் எனும் சண்ட மாருதம் அந்த ஓடத்தை வைதிகம் எனும் பாறை மீது மோதச் செய்து, இந்தப் பலி பீடத்தில் சாய்ந்தீர். அந்த இரத்தம் தோய்ந்த பலி பீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலி பீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கில் அடங்காது.

‘திராவிட நாடு’ , 29.3.1942

சங்கராச்சாரி பதவித் தற்கொலை: ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம், துறவு நிலை பூண்டு உள்ளவரால், இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி! ஆனால், சுவாமிகளின் நிலைமை என்ன? அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது, பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்ல வில்லையே, பக்த கோடிகள், மேலும் மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே, மணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர, வேறு கவலையற்றுப் பாதத்தைப் பலர் தடவிக் கண்களில் ஒற்றிக் கொள்ள பகவானின் பிரதிநிதி நான் என்று கூறிக்கொண்டு கரி, பரி, காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரி யாருடையது! முதல் இல்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு மிராசுதார், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்குக் கீதை உபதேசம் புரிவது, ஏதேனும் பொருளுடையதாகுமா? கன்னக்கோலன் - கள்வன் கேடு பற்றியும், காமவண்ணத்தான் ஒழுக்க போதனையும், கசடன் கற்றதனால் ஆன பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ!

சாமரம் வீச, சல்லாபிக்க, சோபித வாழ்வுக்குச் சொத்து தர, பரிவாரம் பெற்றுள்ள சங்கராச்சாரியார் வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக, மீதியை ஏழைக்கு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஏட்டுச் சுரைக்காயை எவரே போற்றுவார்! யாரை ஏய்த்துவிட முடியுமென்று இவர் கனவு காண்கிறார் என்று கேட்கிறோம்.

இல்லறவாசிகள் நியாயமான செலவு போக, மீந்த பணத்தை (விஷம்) நஞ்சு எனக் கருதவேண்டும் என்கிறார் வேத விற்பன்னர். வெகு நன்கு. நாம் இல்லறவாசிகள் இன்ன இன்னவற்றையே நியாயமான செலவாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடத் தயார்! விஷம் அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார்!

ஆனால், சுவாமிகள்! தங்கள் விஷயம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை என்ற தத்துவ ஆசிரியருக்கு, துறவிக்கு மடம் ஏன்? சொத்து சுகம் எதுக்கு? பணம் பரிவாரம் ஆகுமா? விஷமென்று எந்தப் பணத்தைக் குறிப்பிடு கிறீரோ அதனைத் தாங்கள் பருகியபடி தானே இருக்கிறீர்! மற்றவர்களாவது ஓரளவுக்கேனும் உழைத்து தமது திறமையைக் காட்டிப் பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பது உண்டா? உடலில் உழைப்பு தரும் ஒய்ச்சல் என்ற அனுபவம் தங்களுக்குத் தெரியுமா? உழைத்துப் பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்கு உண்டா? பசியை நீர் அறிவீரா? பஞ்சத்தில் அடிபட்டது உண்டா? இல்லையே! உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்கள் வாழ்க்கையின் வசீகரம் தங்கள் திறமையால் கிடைத்ததும் இல்லை! பிறரின் மடத்தனத்தால் தங்களுக்குக் கிடைப்பது, இத்தகைய வாழ்விலே இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்று உரைக்க முடியுமா? என்று சங்கராச்சாரியாரை நாம் அறைகூவி அழைத்துக் கேட்கிறோம். அவரோ, அவரது அதிகாரம் பெற்ற வேறு யாரேனுமோ விடை கூறட்டும்; கேட்போம். வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக மிகுவதை ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று இவர் மொழிகிறார். இவர் துறவியினுடைய நியாயமான செலவு போக, மேலும் பணம் குவிப்பானேன்! இவரது இன்றைய வாழ்க்கை நியாயமான செலவினங்கள் கொண்டதுதானா?

மற்றொன்று கூறுகிறார்: ஆஸ்திகமும், அறியாமையும் ஒன்றே என்று கூறுவது போன்றுள்ளது அஃது. யுத்தம் முடியும் வரையிலாவது (இரண்டாவது உலகப் போர்) பகவான் நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்கிறார்.

இதிலிருந்து இரண்டு எண்ணங்கள் எழும். ஒன்று இதுவரை பகவானைத் தொழவில்லை என்பது. மற்றொன்று இடருற்ற போது ஈசனைத் தொழுதால் போதும் என்பது. இரண்டும் எத்துணை மடமையின் சிகரம் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. மக்கள் இன்றுவரை பகவானை மட்டுமல்ல, அவரது பிரதிநிதி என்றுரைக்கும் பரபிரம்ம சொரூபிகளையும் தொழுது வந்தனர். வருகின்றனர். கண்ட பலன் என்ன? இதோ குண்டுவீச்சு! கடலில் கொந்தளிப்பு! உள்ளத்திலே பதைபதைப்பு! இதுவரை தொழாதவர் போலவும், இன்றேனும் தொழுது பாருங்கள் என்று கெஞ்சும் முறையிலும் சங்கராச்சாரியார் பேசுவதன் சூதை என்னவென்பது? சண்டை நேரத்திலே மக்கள் உயிரையும், உடைமைகளையும், ஊரையும், உற்றாரையும் காப்பாற்றும் வேலையில் இருந்து விட்டுக் கோயில் பெருச்சாளிக்குக் கொழுப் பேற்றும் வேலையைச் செய்ய மறந்துவிட்டால், ஆரிய இனம் இளைக்குமே என்றெண்ணி போர் முடியுமட்டேனும் ஆண்டவனைத் தொழுவீராக என்று கூறினார்.

இத்தகைய பேச்சு பாமரரை மேலும் மடத்தனத்தில் ஆழ்த்தும் சூது என்று நாம் கூறு கிறோம். இவரது உபதேசத்தின்படி முதலிலே இவர் தமது சொத்து, சுகத்தைத் துறந்து, பாடுபட்டு உழைத்து, பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து வாழும் வாழ்க்கையை மேற் கொள்ளட்டும். பார்ப்போம். சங்கராச்சாரியார் என்ற பதவியைத் துறக்கத் தயாரா? என்று கேட்கிறோம். உண்டா பதில்? ஊரார் கேட்பாரா? சங்கராச்சாரி பதவித் தற்கொலை!

 ‘திராவிட நாடு’ 19.4.1942

இந்து மதமும், தமிழரும் : மலடி மைந்தன், முயல் கொம்பை ஏணியாக அமைத்து வான்வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போல, தொடக்கமோ, முடிவோ அற்ற ஒரு முழு முதல்பொருளை மத நூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்று இல்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள்; முயல்கொம்பு போன்றது மத நூல்கள் கூறும் நெறி; வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இதுகாறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும்.

'திராவிட நாடு' - (17.5.1942)

சோதிடப் பரீட்சை : தியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லா விட்டாலும் இருவரும் மிகுந்த நட்புக் கொண் டிருந்தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேத மிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத்தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான். அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம் நவீன சோதிட சாத்திரியார் எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு. எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின் பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரிவிக்கவும்.

  1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குண மாகுமா?
  2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?
  3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

புஷ்பம் - கனகாம்பரம்

தங்களன்புள்ள,

தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரியார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரி யாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்த தாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன் அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரியாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

திராவிட நாடு 5.7.1942

களிமண்ணும் கையுமாக: “வீரர் வாளும் கையுமாக இருந்து நாட்டையும், வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்.”

“தர்ப்பையும் கையுமாக இருந்துகொண்டு வஞ்சகர்கள் மன உறுதியற்றவர்களை மயக்கியும், மிரட்டியும், அடக்கி வருகின்றனர்.”

“பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன?” என்று வீரன் சலித்துக் கொண்டு கேட்டான்.

“திடீரென்று உனக்கு ஏனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்து விட்டது?” என்று வீரனை நான் கேட்டேன்.

“கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான்” என்றான் வீரன்.

“உண்மைதான்! கருத்து இருக்கும் விதத்திற்கு ஏற்றபடிதான் கையின் நிலையும் இருக்கும். ஆனால், இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்?” என்று மேலும் கேட்டேன்.

“அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாங்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கிகளைப் பேச வைக்கின்றன. துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்கின்றன; சுதந்திரக் கொடியைத் தாங்குகின்றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச் சுடரை ஏந்தி உள்ளன; ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள், மற்றவை மரங்கள்!” என்றான் வீரன் ஆர்வத் தோடு.

“வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா வீரா? நம்நாட்டுக் கரங்கள் இலேசா?” என்றேன் நான்.

“கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற்றைப் பிசையும் கரம்!” என்று வருணித்தான் வீரன் வெறுப்புக் கலந்த குரலுடன்.

“அதற்கு என்ன செய்யலாம்?” என்று நான் கூறினேன். வீரன் திருப்தி அடையவில்லை.

“பரதா! கப்பல் ஓட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங்கும் கரம்; பாட்டு மொழி ஏட்டைத் தாங்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான் மீது மட்டும் பழி சுமத்தினால் போதாது. களிமண்ணும் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றி இருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா பணித்தான்? வீணருக்கு உழைக்கும்படி அவனா ஏவுகிறான்?” என்று வீரன் கேட்க,

“எனக்கு ஒன்றும் புரியவில்லையே. களி மண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?” என்று நான் வீரனைக் கேட்டேன்.

“கைவண்ணம் காணத்தானே போகிறாய்! திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா - அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர். யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேஸ்வரன் மைந்தனை ஈரக்களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு விநாயக சதுர்த்தி பூஜை செய்வர்” என்று வீரன் விளக்கிய பிறகே,

“அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான்! களிமண்ணும், கையுமாகத்தான் இருப்பர்” என்று கூறிக்கொண்டே நான் சிரித்தேன்.

“கையில் மட்டுமல்ல களிமண்! மண்டை யிலும் அதுவேதான்” என்றான் நண்பன் கோபத்தோடு.

“திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே! ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது” என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்?

“வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் - நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப்பார்! நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன்தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டை யோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணைபொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு. பக்கத்தில் பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுளின் காட்சி எனும் கூத்திலே கணபதி ஒரு விதூஷகரராகவே பாவிக்கப்படுவார்” என்று வீரன் உரைத்தான்.

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது? களிமண்ணும் கையுமாக இருக்கும் தோழர்களே, கசடர் புனைந்துரைகளைக் கடவுள் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில் நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவற்றை விட்டுவிடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்! அந்த நாள் என்று வரும் என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது. வீரனின் பேச்சுக்கேட்டு, இதனைத் தான் உங்கட்கும் உரைத்தேன்/ உள்ளத்தில் கோபமின்றி. யோசித்துணர்க!

‘திராவிட நாடு’, 12.9.1942

அடுத்த வீட்டு அகிலாண்டம் :

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக்கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார்.

கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால்? எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்று கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்ததும் கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இல்லையே! வழியிலே குடியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக் கூறினாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

‘திராவிட நாடு’ 10.1.1943

(டாக்டர் அண்ணா பரிமளம் தொகுத்த ‘அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்’ நூலிலிருந்து)

Pin It