கடந்த 27.10.2018 அன்று சென்னை பெரியார் திடலில் பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் அறிமுக கூட்டம் மற்றும் “உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர், பேராசிரியர். வீ.அரசு, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரும் குடியாத்தம் அரசு கலைகல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப. சிவக்குமார், பாளையங்கோட்டை செயின் சேவியர்ஸ் கல்லூரி பொருளியியல் துறை பேராசிரியர் அமலநாதன், பொருளாளரும் சென்னைப் பல்கலைக் கழக உயிரிவேதியியல் துறை பேராசிரியர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு உயர்கல்வி எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால்களான ஊழல், இந்துத்துவ திணிப்பு, தனியார்மயம் ஆகியவற்றை பற்றி பேராசிரியர்கள் உரையாற்றினர். இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் என மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.

சமீப காலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடுகளும் அதற்கு முந்ததையதை விட அளவில் மிகப்பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல் மயமானதாகவும் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக பாலியல் முறைகேடு, அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மற்றும் தகுதி இல்லாதவர்களை பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்களாக பணிநியமனம் செய்தது போன்றவை சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுதான் நிலை. தரமான உயர்கல்வி வழங்குவதை கண்காணிக்க / உறுதிப்படுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் தனியார் கல்வி முதலாளிகளுக்காக UGC-ன் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை காலில் போட்டு மிதிக்கின்றனர். கவர்னர் முதல் பேராசிரியர்கள் வரை உள்ள உயர் கல்வித்துறையின் நிர்வாகிகளே இம்முறைகேடுகளின் சூத்திரதாரிகளாகவும் அதனை முன்னின்று நடத்துபவர்களாகவும் உள்ளனர்.

இந்த ஊழல் முறைகேடுகளின் அடிப்படையே தனியார்மய கொள்கைகள் தான். கடந்த இருபது ஆண்டுகாலமாக மத்திய – மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் தனியார்மய -தாராளமய கொள்கைகளின் காரணமாக கல்வியில் அரசின் பங்களிப்பு கணிசமான அளவு குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மொத்த கல்லூரிகளில் 66 சதவிகித கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். குறிப்பாக தமிழ் நாட்டில் 75 % சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.

மேலும் கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அத்தோடு மட்டுமில்லாது ஒட்டுமொத்த உயர் கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதற்கு பதிலாக கடன் வழங்குகிறேன் என மோடி கூறுகிறார்; இக்கடனை வட்டியோடு 10 வருடத்திற்குள் கட்ட வேண்டும் என மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. கட்டிடம் கூட இல்லாத ’ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது.

‘உயர்கல்வியின் தரத்தை உயர்துகிறோம்’ என்ற பெயரிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களின் உணமையான நோக்கமோ, 1990 களின் ஆரம்பத்திலிருந்து உயர் கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை முடித்து வைப்பதும், இந்திய உயர் கல்வி சந்தையை உலக கல்விச் சந்தையோடு இணைப்பதும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிதி மூலதன நிறுவனங்கள் எவ்வித தடைகளுமின்றி கல்விச் சேவை என்ற பெயரில் இந்தியாவில் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும் தான்.

இந்த உலகமயமாக்கல் நடவடிக்கைகளின் வாயிலாக வெளிநாட்டு கல்விக் கொள்ளையர்கள் மட்டுமில்லாது அம்பானி, சுனில் மிட்டல், அனில் அகர்வால், சிவ் நாடார், ஜின்டால் போன்ற இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் தங்களுக்கான பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதும் அதனை இந்தியாவின் சிறந்த கல்லூரிகளாக அறிவிப்பதும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தரமற்றவைகளாக அறிவித்து அவைகளை படிபடியாக மூடுவிழா நடத்துவதற்கான திட்டத்தோடு மோடி அரசு செயல்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தை விட சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தரம் வாய்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப் படுத்துவதற்காகவே இந்திய மருத்துவக் குழு (Medical council of India) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(University grant commission) இரண்டையும் ஒழித்து அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம்(National Medical Comission) மற்றும் இந்திய உயர்கல்வி ஆணையம்(Higher Education Comission of India) என்ற புதிய அமைப்பை மோடி அரசு உருவாக்குகிறது. இது முதலாளிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளால் நிர்வகிக்க கூடிய அமைப்பாகும்.

இதன் விளைவாக பலமடங்கு கல்விக்கட்டண உயர்வு, கல்வி உதவித்தொகைகள் பறிப்பு, இடஒதுக்கீட்டை பறிப்பது போன்றவை நடந்து வருகின்றன. இது இந்நாட்டின் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமுகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை எதார்த்தமாக்க தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தி-சமஸ்கிருத திணிப்பு, உயர்கல்வி மற்றும் பள்ளிகல்வியில் பல்வேறு வழிகளில் பார்பனிய - வேத- இந்துத்துவ சார்பான விசயங்களை திணிப்பது, புராண கட்டுக் கதைகளை அறிவியல் உண்மையாக கூறுவது போன்ற நடவடிக்கைகளால் பார்பனிய மேலாண்மையை கல்வியின் வாயிலாக கொண்டு வருவதற்கு மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. 

இச்சூழலில் கல்வி மீதான நமக்குள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் தரமான இலவச கல்வியை உத்திரவாதப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமான தேவையாகும்.

இதற்கு கல்வித்துறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் கல்வித் துறையில் நடக்கும் சீரழிவுகள், இதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாக்குவது மிக அவசியமாகும். அதற்கானதொரு முயற்சியாகவே பேராசிரியர்கள், மற்றும் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களை கொண்டு “பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு உருவாக்கியுள்ளோம். தனியார்மய கல்வியை அடியோடி ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம்.

- பொதுகல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

Pin It