திடும்மென வந்த கீற்று வெளிச்சத்தில் தான் அந்த யோசனை தோன்றியிருக்க வேண்டும்.

வெயில் சுட்டெரிக்கும் வேதாந்தம் முதல் முறை சுளீர் என்று ஆழ்மனம் சுண்டி இழுத்தது. நான் ஒரு விட்டேத்தியின் மனநிலையில் வரையறுக்கும் வெற்றுக் கோடுகளாக நடக்கத் துவங்கினேன்.

கண்கள் தேடும் முன்பே மனம் கண்டு பிடிக்கும் காட்டின் திரையில் நங்கூரமிடும் கழுகொன்றின் வால் பிடித்து தான் நடக்கிறேன். கற்பனைக்கு காற்றுக் குருவி மூச்சிரைக்கும் சொல்லோடு நிர்க்கதியான தவிப்பின் சாயலை அப்படித்தான் தேட வேண்டி இருந்தது. யாரோ தொலைத்தது தான். அதை நானும் தொலைத்து தான் என்ற ஞானத்தின் காலடியில் சிறு பூச்சிக்கு நெளியும் முதுகு வளைந்திருந்தது. நன்றாக நினைவிருக்கிறது. நினைவு மட்டும் தான் இருக்கிறது என்பது போல....அந்தப் பாதையில் நான் வளைந்து நடந்தேன்.

நடக்க நடக்க கிடைக்கும் காலடியில் நானும் காலமும் இருந்தோம் என்று நம்பலாம். இந்த வழியில்தான் முன்பெல்லாம் கிடைத்திருந்தது இப்போது நான் தேடுவது. இதே வழிதான். வழி நெடுக வாய் சிமிட்டும் கோடுகளின் சுவாசத்தை நான் எப்படி எப்படியோ கண்டுபிடித்து விடுவதாக நம்பினேன். ஆச்சரியம் தாளாமல் அழுது விடவும் முயன்றேன். தவிப்புகளின் கரம் என்னை முதுகில் குத்தி குத்தி வெறித்தனமாய் தேடு என்றது.

காட்டைத் தேடும் கண்களில் கண்ணீர் சுலபமாக வந்து விடும். காற்றைத் தேடும் கண்ணீரில் சுலபமாக காலமும் கிடைத்து விடும். எதைத் தேடினால் தேடுவது கிடைக்கும் எனும் போது நான் கால்கள் குழற இன்னும் இன்னும் காட்டுக்குள் உள் நோக்கி நடந்தேன். இங்கெல்லாம் வரத் தேவையில்லை. நான் ஆரம்பித்த இடத்திலேயே தேடியது கிடைத்திருக்க வேண்டியது.

என்னாச்சு. இத்தனை தூரம் இழுத்துக் கொண்டு செல்கிறது.. நமநமக்கும் மூளைக்குள் கோடைப்பூச்சிகள் பளபளத்து சிமிண்டின.

முகம் கருத்த சிந்தனையோடு நான் அவிழ்த்து விடப்பட்ட அரூபமாக அலைந்தேன். கருப்பொருளின் கனக்கச்சிதக் கூட்டின் சுவடைக் காணமுடியாத துக்கத்தின் தோளில் செத்து வீழட்டும் என் பட்டாம்பூச்சிகள் என்று தானாக முணுமுணுத்தபோது குறுகுறுவென அவ்வழியே வந்து கொண்டிருந்த ஓடையைக் கண்டு பிடித்திருந்தேன். ஆறு குறுகி அது ஓடையாகி அதுவும் சுருங்கி இதோடு நின்று விட்டு மீதி வழியாகி விட்டதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்.

அதற்கு முன் கை கூட்டி எடுத்து வாய் நிறைய இந்த காட்டு நீரை அள்ளி அள்ளி தின்ன வேண்டும். பிறகு அச்சிறு ஓடைக்குள் ஒரு அநாதி காலமென புரண்டு உருள வேண்டும்...

- கவிஜி

Pin It