"அவ உடம்பு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு..." மீனாவைப் பற்றி அப்படித்தான் பேசிக் கொண்டார்கள்.

மீனா தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இட்லி கடை ஒன்று வைத்திருக்கிறாள். அவளுக்கு நல்ல அழகு. கடுமையான உழைப்பினால் வடிவான தேகம் கொண்டவள். 38 வயது என்றால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். நெற்றியில் விபூதியும், தலையில் கொண்டையும், இடுப்பில் தூக்கிச் செருகிய சேலையும் தான் அவளின் அடையாளம்.

பதினைந்து வருடங்களுக்கு முன் கணவன் இல்லாமல் கையில் ஐந்து வயது குழந்தையோடு இதே பழைய பஸ் ஸ்டாண்டில் சிறியதொரு தள்ளுவண்டியில் மீனா இட்லி விற்க ஆரம்பித்தாள். வயிற்றுப் பிழைப்புக்காக ஆரம்பித்த கடை என்றாலும், அவளுடைய உழைப்பும் நேர்மையும் பழைய பஸ் ஸ்டாண்டின் பிரபல கடையாக மாற்றி, கூட்டம் அதிகம் மொய்க்கும் கடையாக மாறி, இன்று அவளுடைய இட்லிக் கடையை உரு மாறியிருக்கிறது.

மீனா காலை நான்கு மணிக்கெல்லாம் கடையைத் திறந்து விடுவாள். ஆறு ஆறரை மணிக்கெல்லாம் சுடச்சுட இட்லி, சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளிச் சட்னி ரெடியாகிவிடும். இட்லி காலை 11 மணி வரை கிடைக்கும். அதற்குப் பிறகு கடையை மூடிவிடுவாள். பிறகு மீண்டும் மாலை ஆறு மணிக்கு வியாபாரம் தொடங்கி இரவு 11 மணி வரை நடக்கும்.

ஒரே நேரத்தில் 50 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவு கடை இருந்தாலும், கடைக்கு வெளியே எப்போதும் ஒரு கூட்டம் கையில் தட்டோடு இருக்கும். ஆறு பெண்கள் வேலைக்கு இருந்தாலும் சாம்பாரை மட்டும் மீனாவேதான் செய்வாள். அந்தச் சாம்பாரின் சுவைக்காகவே தினமும் அங்கு வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பேருந்து நிறுத்தங்கள் அருகே இருக்கும் உணவுக் கடைகளில் தரமும் சுவையும் இருக்காது என்ற கூற்றுக்கு முற்றிலும் முரணாக மீனாவின் இட்லி கடை இருந்தது.

தனியாக இருக்கும் பெண் தானே என்று எந்த ஆணும் மீனாவிடம் சீண்டி விட முடியாது. எப்போதும் கோபமாகவே இருப்பாள். அனைவரிடமும் கடுமையாகவும் தட்டையான குரலிலும் மட்டுமே பேசுவாள். இதனால் அவளை யாருக்கும் பிடிக்காது. என்றாலும் சாம்பாரின் சுவைக்காகவே மீண்டும் மீண்டும் கடைக்கு வந்தார்கள்.

திடீரென சில நாள்களாக சாம்பாரின் சுவை குன்றிப்போனது. முன்னைப் போல் இல்லை. துறுதுறுவென கடையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் மீனாவையும் பல சமயங்களில் கடையில் பார்க்க முடிவதில்லை. சாம்பார் சமைக்க புதிதாக ஒரு மாஸ்டரை மீனா வேலைக்கு அமர்த்திவிட்டாள் என்ற செய்தி வாடிக்கையாளர்களுக்குப் பேரிடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் மீனாவின் நடவடிக்கையைத் துருவ…

"மீனா வீட்டிற்கு புதிதாக ஒரு ஆண் வந்திருக்கிறார்..."

"அவரைப் பார்த்தால் மீனாவின் சொந்தக்காரர் போலத் தெரியலியே. முஸ்லிம் பாயாம்…"

"மகனை படிப்புக்காக சென்னையில் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு இவள் கடையை கூடப் பார்க்காமல் இப்படி கூத்து அடிக்கிறாள்.."

“பாய்க்கு 60 வயதாம்…”

"60 வயதைக் கடந்தவர் என்றால் என்ன? அவரும் ஆம்பிளை தானே... "

"அவ உடம்பு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு..."

அக்கம்பக்கத்தில் மீனாவைப் பற்றி இறக்கைக் கட்டிப் பறந்தன வதந்திகள். அவையாவும் மீனாவின் காதிலும் வந்து விழுந்தன. ஆனால் அவள் எதற்கும் வாயைத் திறக்கவில்லை. பதில் அளிக்கவில்லை.

-*-

ரஹீம் பாய் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர். தஞ்சாவூரில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த ஊரில் காய்ச்சல் தலைவலிக்கு எல்லாம் அவர்தான் மருந்து தருவார். சிலருக்கு மாதாமாதம் இலவச மருந்துகள் அவரிடமிருந்துதான் செல்லும்.

"சம்பாதிக்கிற காசை எல்லாம் ஏன் இப்படி தானம் பண்ணியே முடிக்கிற..?" என்று யாராவது கேட்டால், "எனக்கென்ன பிள்ளையா குட்டியா..." என்று சொல்லிவிடுவார்.

இருபது வருடங்களாக குழந்தை இல்லாத போதும் மனைவியிடத்தில் ஒருமுறை கூட அவர் குறைப்பட்டுக் கொண்டதில்லை. 40 வயதில் கூட பேண்ட் சட்டை அணிந்து கொண்டு அவர் வேலைக்கு செல்லும் அழகை அந்த ஊர் கன்னிப்பெண்கள் கூட ரசித்தார்கள். ஆறடி உயரமும் கருத்த சுருள் சுருளான தலை முடியும் தாடியும் பெண்களுக்கு அவர் மீது கவர்ச்சியை அளித்தது.

மனைவி இருந்தவரையில் திடமாக இருந்த மனிதர். மனைவி இறந்த ஒரு வருடத்தில் நொடித்துப் போனார். அவரது உதவியில் வளர்ந்து ஆளான உறவினர்கள் கூட அவரைக் கைவிட்டனர். அவருடைய மனைவியின் தம்பி வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு. அவரை திருச்சியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தான். அன்றோடு சென்றவன்தான். அதன்பின் அவனைப் பார்க்க முடியவில்லை.

ஒருநாள் மீனா தன் மகனின் பிறந்த நாளுக்காக அன்னதானம் செய்ய திருச்சி முதியோர் இல்லம் சென்றபோதுதான் அங்கே ரஹீம் பாயை பார்த்தாள். அவரைப் பார்த்தவுடன் அவள் கண்களில் நீர் பொலபொலவென பொங்கி வழிந்தத. பதினைந்து வருடங்களுக்கு பிறகு அன்றுதான் அவளின் கன்னங்கள் கண்ணீரால் நனைந்தன.

அவளது வாழ்வில் மறக்க முடியாத மனிதர் அல்லவா ரஹீம் பாய்!

-*-

25 வருடங்களுக்கு முன்னால் தன் கிராமத்திற்கு பள்ளி ஆசிரியராக வந்தவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள் மீனா. வெவ்வேறு சாதி என்பதால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் மீனாவும் அவளின் கணவரும் ஊரில் இருக்க முடியாமல் உயிருக்கு பயந்து தஞ்சையில் வந்து குடியேறினர். அங்கு ஒரு தனியார் பள்ளியில் மாதச் சம்பளம் 4000 ரூபாய்க்கு அவருக்கு வேலை கிடைத்தது. அவர்களது மகிழ்ச்சியான வாழ்விற்குப் பரிசாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் ஒருநாள் பேரிடியாக அந்த விபத்து நிகழ்ந்தது. கணவரை இழந்து கைம்பெண் ஆனாள் மீனா. கையில் இருந்த பணம் அனைத்தும் செலவான பின், குழந்தையின் பாலுக்குக் கூட காசில்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தஞ்சை தெருக்களில் குழந்தையோடு அழைந்தாள். அந்த பராரி நிலையிலும் மீனாவை அடையாளம் கண்டு பிடித்துவிட்டார் ரஹீம் பாய்.

"முருகேசன் மகள்தானே நீ...? என்னம்மா இப்படி ஆயிட்டே..." என்று கேட்டு வருந்தினார்.

அவளை ஊருக்கு அழைத்து வந்து அவளுடைய வீட்டில் சமாதானம் செய்து வைக்க பல முயற்சிகள் செய்தார். சாதி வெறி பிடித்த அவளது அண்ணன்கள் அவளை ஏற்க மறுத்தனர். அவள் ஊரில் இருந்தால் அவளைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

வேறு வழி இல்லாமல் அவளை மீண்டும் தஞ்சைக்கு அழைத்து வந்து கீழவாசலில் ஒரு வீடு பிடித்துக் கொடுத்தார் ரஹீம் பாய். முன்பணம் கட்டி தள்ளுவண்டி ஒன்று வாங்கிக் கொடுத்து, இட்லி கடை ஒன்று வைத்துக் கொள்ளும்படி ஊக்கப்படுத்தினார். அப்படித் தொடங்கிய அவளது தள்ளுவண்டி கடை நன்றாக ஓட்டமெடுத்தது. சாப்பிட்டால் காசு வாங்க மறுக்கிறாள் என்பதற்காக மீனாவின் கடைக்குச் செல்வதை வெகுவாக குறைத்துக் கொண்டார் ரஹீம் பாய்.

ஓரளவு வணம் சேர்ந்ததும் தள்ளுவண்டிக்கு அவர் முன்பணமாக கட்டிய 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீனா ஒருமுறை அவர்முன் சென்று நின்றாள். பணத்தை பார்த்த ரஹீம் பாய் மிகக் கடுமையாகக் கோபப்பட்டார்.

"பணம் வந்த உடனே ரொம்ப மாறிட்டே மீனா... நான் உன்ன மகளா நினைச்சுத்தான் செஞ்சேன்..." என்றார் ரஹீம் பாய்.

அதன் பிறகு பத்து வருடங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் மீனா மனதில் ரஹீம் பாயை நன்றியோடு நினைத்துக் கொண்டேதான் இருந்தாள். அப்படியான நிலையில் ரஹீம் பாயை அந்த முதியோர் இல்லத்தில் பார்த்ததும் எழுந்த சோகத்தில் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரது கால்களில் போய் விழுந்தாள்.

பதறிப்போன ரஹீம் பாய் துடித்து நகர்ந்தார். "என்னம்மா பண்ற? எந்திரிம்மா முதல்ல... இதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் கிடையாது.. பெத்த தாய் காலில் கூட நாங்கள் விழமாட்டோம்... எந்திரிம்மா..." என்று பதறினார்.

தன்னோடு வந்து தன் வீட்டில் தங்கும்படி மீனா அவரை வற்புறுத்தினாள். ரஹீம் பாய் எவ்வளவோ மறுத்தும், பிடிவாதம் பிடித்து, ரஹீம் பாயைச் சம்மதிக்க வைத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். ரஹீம் பாயை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடை வேலைகளில் இருந்து தன்னைக் கொஞ்சம் விடுவித்துக் கொண்டாள். ஆனால், அதற்குள் ஊர் வதந்தி பேரன் பேத்தி எடுத்து விட்டது.

விடுமுறைக்காக வந்திருந்த மீனாவின் மகனின் காதிலும் இந்த வதந்திகள் விழுந்து அவனுக்கு அவை மனக்கஷ்டத்தை ஏற்படுத்தின. அவனும் தன் தாயைத் தவறாக நினைக்கும் அளவிற்கு அவை கொண்டு சென்றுவிட்டன.

"அம்மா நீ வேணும்னா இரண்டாவது ஒரு கல்யாணம் பண்ணிக்கம்மா..." என்று ஒருநாள் அவன் சொன்னபோது. "பளார்" என்று அவன் கன்னம் பழுக்க அறைந்தாள் மீனா. அதன்பின் அன்று இரவு முழுவதும் மீனா அழுது கொண்டே இருந்தாள்.

மறுநாள் காலை எப்பொழுதும் போல் நான்கு மணிக்கு கடைக்குச் சென்றுவிட்டு ஏழு மணி போல் ரஹீம் பாய்க்காக இட்டிலி எடுத்து வந்தபோது. கட்டிலில் ரஹீம் பாய் இல்லை. எங்கெங்கு தேடியும் ரஹீம் பாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சில நாள்களுக்குப் பிறகு மீனாவின் இட்டிலி கடை காலை மூடி இருந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பசியோடு போனார்கள்.

மீனாவின் வீட்டிலும் Tolet போர்ட் போடப்பட்டிருந்தது.

“மீனாவும் முஸ்லிம் கிழவனும் கல்யாணம் பண்ணிக்கொண்டார்களாம்…”

"அவ உடம்பு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு..."

மீண்டும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It