சுடுகாட்டை கடந்து போகும் போதெல்லாம்
காண்கிறேன்
எரியூட்டு மேடைச்சாம்பலில்
பிறவி நிறங்களைத்துறந்து
புரண்டு விளையாடும்
இரண்டு சாம்பல்  நிற நாய்களை

பாதி எரிந்து கவிழ்ந்து கிடக்கும்
மண்டையோட்டை
கிளர்த்திப்போட முயற்சிப்பதும்
பிறகு பிச்சைப்பாத்திரமென
வாயில் கௌவிக்கொண்டு ஓடுவதும்
அவைகளுக்கு ஒரு  வேடிக்கை

ஒரு தொடர் மழைக்காலத்தில்
சாலை விபத்தில் மாண்டுபோன
தன் துணையின் உடல் கிடத்தி
ஊளையிட்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்
அதில் ஒன்று கருப்பு
இறந்தது வெள்ளையென்று

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It