உடலெல்லாம் பூசப்பட்ட மாய நறுமணப்பொடிகள்

நாறத்தொடங்கிய பின்

எந்தக் கூச்சமோ அருவருப்போவின்றி

கதைகள் வாசிக்கப்படுகின்றன தெருக்களில்

 

கதைகளில் உறங்குபவனின் தேகத்தில்

அச்சிடப்பட்டிருக்கின்றன எண்ணற்ற கதைகள்
உடல் பொசியும் மணத்துடன்

அலையும் கதைகளின் வியாபாரி

“கடனில்லை” என்ற அட்டையைக்

தூக்கிக் கொண்டு திரிகின்றான்

 

வாசிக்கப்படாத கதைகளுக்காய்

வாசித்தவற்றை மறந்துபோன மனிதர்கள்

மிதக்கும் ஓரிரு உரையாடல்களையும்

கதையென நம்பிக் கவ்வித் தின்கிறார்கள்

 

கணம் பிந்தி வந்த புதிய வியாபாரி

கதைகளை அவிழ்க்கிறான்

முண்டியடிக்கும் மனிதர்களிடையே

தன்குறியை உயர்த்திக் காட்டுகின்றான்

 

ஊனமும் சிதழும் வழியப் புழுக்கள் நெளியும்

அவன் குறி வழி பெருகும் கதைகளை

அவசர அவசரமாக் அள்ளிக் கொண்டு

கலைகின்றனர் மனிதர்

 

மேலும் ஒருவன் கதைகளைக் கூவி விற்றபடி

தெருவில் வருகின்றான்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.