பின் முற்றத்தில் வந்து சேர்ந்த புலுனிகள்
ஒன்றை ஒன்று முந்தித்
தாவிக்களிக்கின்றன சில நிமிடங்களை

சில வேளை கூட்டமாய்
சில வேளை தனியன்களாய்
நிலத்தில் வயிறமர்த்திப் பறவாது
அவை இறக்கையடிப்பதைப் பார்ப்பது
அற்புதமெனக்கு

நானே புலுனிகளாகி
சுற்றிச் சுற்றிப் பறந்தேன் உலகை
காற்றானது துளி வாழ்வு

புலுனிகள் நடந்தால்,சிரித்தால்
முகம் சிவந்தால் என
எதுவானலும்
எனது முகத்தையே
அவை சூடிக்கொள்வதாய் உணர்ந்தேன்
ஆயினும்
எனது அழைப்பை
புலுனிகள் விரோதிகளைப்போலவே
நிராகரிக்கின்றன

யாவற்றிலும் பயம் கொண்ட
புலுனிகள் துணிச்சலாகச் செய்ததெல்லாம
நான் ரசித்துப் பார்த்திருக்கும் போதே
கால்களை உந்தி
ஆகாயத்தில் லாவகமாகப் பறந்ததுதான்
இன்னும் தூசாயிருக்கிறது
பின் முற்றத்தில் புலுனிகள் பறந்த காற்று

(சி.ஜெயசங்கருக்கு)

Pin It