பிசாசுகள் கையில்
காயமுற்று பிய்க்கப்பட்டு
தொங்கிய நீ
அசைவற்று
நின்றது எப்படியம்மா?

சீருடை மிருகங்களின்
தகர முகாம்களில்
உன் விசும்பல்
தேய்ந்து கரைந்ததா?

அதிஉயர் பாதுகாப்பு
வளையத்தின்
முள் வேலிகளுக்குள்
எந்தப் பாதுகாப்புமின்றி
நீ
பதை பதைத்திருப்பாயே!

கரை மோதும் கடல்
அலைகளின் பேரிரைச்சலில்
அபலை உன்
தீனக்குரல் க்ஷீணித்துப்
போனதாக நினைத்தாயா?

ஊழியின் ஓங்காரக்
குரலின் முரசறைப்பு
கடல் தாண்டி
நெஞ்சம் அதிரும்

ஓ... தொலைந்துவிட்ட பூவே!
குதறப்பட்ட அற்புதமே!
நீ எம் குடைராட்டினங்களில்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்

புங்குடுதீவில் தவழ்ந்த அழகே!
உன் உதிர்வு
மலர் உதிர்தல் அல்ல
மேருமலையின் அசைவு
இறுதி நாளின்
எச்சரிக்கை


நவஜோதி ஜோகரட்னம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It