சிவகாசி குழந்தைகளையும்
மறக்க வைத்து
என்னை முதன் முதலில்
தீபாவளி அன்று
பட்டாசு
வெடிக்க வைத்தாய்
நீர் வாழ்க!

இரண்டாயிரம் ஆண்டுகளாய்
சுத்தமற்றிருப்பதால்
நீ தீண்டாத
நந்தனின் குமாரர்களுக்கு
பூணூல்களில் பூசியுள்ள
காம நெய்யின்
துர் நாற்றத்தை
முகர வைத்தாய்
நீர் வாழ்க!

கணவனை
இழந்த, பிரிந்த
பெண் பாலினர்
மடங்களுக்கு வருதல்
மடத்தனமென
‘உஷா’ர் படுத்தினாய்
நீர் வாழ்க!

எங்கள்
ஈரோட்டுக் கிழவனின்
மூச்சுக் காற்றிற்கும் கூட
‘அபச்சாரம்’ அருளிய
நாவுகளிலும்
நாத்திகம் நுழைத்தாய்
நீர் வாழ்க!

என்றும் கொல்லாத
கடவுள்கள் மத்தியில்
நின்று கொன்ற
அரசுக்கும்...
நினது செல்லிடப்பேசிக்கும்...
ஒரு வாழ்க!

ஒரு வழியாய்
கடவுள்களை
அநாதை இல்லத்திற்கு
அனுப்பிவைத்தாய்
நீர் வாழ்க...
இனி மடத்தில்
தண்டத்துடன்
தண்டமாக.

பூங்காற்று தனசேகர்
Pin It