Pillaiyarதூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டுவிட்டு வரவும் துணிவில்லை
நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை
ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை.
என்னதான் செய்வது...!?
கடற்கரைக்கு வந்த பின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளயாரை.


கவலை

விளக்கு வைக்கும் முன்
வீட்டுக் கிணற்றில் விழுந்த அவரும்
அவரது ஒரு ரூபாயும் -
இதோடு அடுத்த ஆண்டு தான்...
அவருக்கான பொரிவிளங்கா நாலு
பொரி அவல் கொஞ்சம்
முந்தானையில் முடிந்து கொண்டு
முந்தானை முடிச்சுக்கு
கிளம்பிய அம்மாவுக்கும், சித்திக்கும்
நிச்சயம் இருந்ததில்லை
பிள்ளயாரைக் கரைக்க
தண்ணீர் உள்ள
கிணற்றைத் தேடும் கவலை.



பத்மப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It