அதிகாலை குளிருக்கு
பயந்து
முந்தினநாள் இரவே
போடப்பட்டு விடுகின்றன
மார்கழிக் கோலங்கள்

நைட் ஷிஃப்ட் முடித்து வரும்
என் தொய்வடைந்த
கண்களுக்கு
அவை ஒளிதரத்தக்கவை

நின்று ரசிக்கவிடாமல்
துரத்தும்
தெரு நாய்களுக்குத்
தெரிவதில்லை
வண்ணங்களின் சிறப்பு

இரண்டாமட்டம்
முடிந்து வருபவர்களது
விமர்சனமும்
இங்குதான் கிறுக்கப்படும்

எஞ்சியவற்றைக் காப்பாற்ற
சைக்கிள் தூக்கிச் செல்வேன்
உழைத்த விரல்களை
நசுக்காத உணர்வோடு. 

மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து) 
Pin It