நாகரிக உலகத்தில்
நாங்கள் பிறக்கும் வரை...

எங்கள் பசிக்கு
உன் பழங்களை தந்தாய்.
எங்கள் நிர்வாணத்துக்கு
உன் இழை,தழைகளையிம்
மரப்பட்டைகளையிம்
உடையாக கொடுத்தாய்.
நிம்மதியாய் நாங்கள்
உறங்க உன் அடியிலேயே
மரப் பொந்துகளை கொடுத்தாய்.
உன்மையில் அது ஒன்றும்
கற்காலம் இல்லை.
உன் கருவறையில்
நாங்கள் வாழ்ந்த காலம்.
***
நாகரிக உலகத்தில்
நாங்கள் பிறந்தபோதும்
தொட்டிலாக எமை தொடர்ந்தாய்.
படுக்கை முதல் பாடை வரை
எங்களுடனே நீ இருந்தாய்.
எங்கள் சிதை எரியும் போது
நீயும் சேர்ந்தல்லவா எரிந்தாய்.
***
எங்கள் கம்பன்
கவிதை எழுதும் போது
பனை ஓலைகளை கொடுத்தாய்.
அடியேன் கவிதை
எழுதும் போதோ
வெள்ளை காகிதத்தை நீட்டுகிறாய்.
எங்கள் வள்ளுவன்
காதலிக்கு அனிச்சமலரை
பரிசளித்தாய்.
இன்று என் காதலிக்கும்
வாஞ்சையுடன் நீட்டுகிறாய்
ஒரு சிவப்பு ரோஜா.
***
எங்கள் குழந்தைகள்
இப்பொழுதெல்லாம்
ப்ளாஸ்டிக் தொட்டிலில்தான்
பிறக்கின்றன
எங்கள் கட்டில்களோ
உலோகங்களால் செய்யப்பட்டுவிட்டன.
எங்களில் சிலர் இப்பொழுதே
கணிப்பொறியில்தான் எழுத
கற்றுக்கொள்கிறார்கள்.
ஜீன்ஸ் அணிந்த எங்கள் பெண்கள்
தலை முடிப்பதே இல்லை.
பிறகெங்கே பூச்சூடுவது.
***
ஏ மரமே!
என் முன்னோர்கள்
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
நான் என் சந்ததியினருக்கு
உன்னை அறிமுகப் படுத்துவேனா?

அருண்மொழித்தேவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It